18

18

சாதிய ரீதியான பாரபட்சத்தால் கோயிலில் தேவாரம் பாட மாணவனுக்கு அனுமதி மறுப்பு !

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது ஆலய நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளியும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த ஆலயத்தில்  காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசைஇடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கு செல்லும் சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர்.

இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டுசென்றால் அதனை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமிக்கு அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த பாரபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம்பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர் தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலயநிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் எனடபதும் குறிப்பிடத்தக்கது.

விடயம் தொடர்பான பிரச்சினைக்கு அப்பால் இங்கு இதுபோன்ற சாதிய பிரச்சினைகள் இன்னமும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றன. பாடசாலை மாணவனிடம் தேவாரம் படிக்காதே எனத்தடுக்குளமளவிற்கு இந்தச்சமூகம் தரம்தாழ்ந்து போயுள்ளது என்பதே உண்மை. வெளிப்படையாக சாதிய ரீதியான தாழ்வுகள் பிரச்சினைகள் இல்லை என ஆளாளுக்கு மார்தட்டிக்கொண்டாலும் கூட இன்னமும் இது போன்ற பிரச்சினைகள் சமூகத்தின் ஆழத்தில் இது போன்ற எத்தனையோ மாணவர்களை உளவியல் சார்ந்து ஒடுக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

மாற்றத்துக்காக ஒவ்வொருவரும் முன்வராத வரை இந்தச்சாதிய பிரச்சினையும் புற்றுநோய் போலத்தான் நமது சமூகத்தை எரித்துக்கொண்டேயிருக்கும்.

“அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு” – பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது ,

“19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். ”  எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்கக்கூடும்” – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா

“ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும்“ என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது ,

ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்படவேண்டும், அவர் அங்கம் வகிக்கும் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவுடனேயே அவர் கலந்துரையாடியும் உள்ளார். எனவே, ரிஷாட் இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியும். கூடியவிரைவில் ரிஷாட்டை ஒப்படைக்குமாறு கோருகின்றோம். 20 ஐ நிறைவேற்றுவதற்கு ரிஷாட்டின் ஒத்துழைப்பு தேவையில்லை, ஏனெனில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, 22 ஆம் திகதி இரவு ´20´ ஆவது திருத்தச்சட்டமூலம் நிச்சயம் நிறைவேறும். 20 நிறைவேற்றப்படும் என்பது நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய உறுதிமொழியாகும் அந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

ரிஷாட் பதியுதீன் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் ஒருவரின் வீட்டில் மறைந்திருக்ககூடும் என்றே நாம் சந்தேகிக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு“ – அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

“19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு – 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது. 20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்திற்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

எவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தினால் நான் மாத்திரம் தற்துணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன். 19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவிற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

நல்லாட்சி அரசாங்கத்தின்  வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூலக்காரணியாகும். இத்திருத்ததை இரத்து செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. இந்த  20ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது. எனவே 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா அபத்தமும் – சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களமும் !

ஐக்கிய அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில்  விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் இந்தத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்தத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்று உலகநாடுகள் ஒவ்வொன்றும்  எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் வேட்ப்பாளராக களமிறங்கும் ஆசிய-அமெரிக்கப்பெண் | lankapuri

இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.  அதேபோல் துணை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி உள்ள மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

வழமையான ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தவருட தேர்தலில் கொரோனா பரவல் தொடர்பான விடயங்களே அமெரிக்க தேர்தலின் அதீத பேசு பொருளாகியுள்ள நிலையில் வேகமாக அமெரிக்காவில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டமையே அவர் மீது முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொதுத்தேர்தலை நடாத்துவது என்பதே கடினமான ஒரு செயலாக காணப்பட்ட போதிலும் கூட அதை வெற்றிகரமாக நடாத்திய ஒரு சில நாடுகளில் கொரோனா பரவலை முறையாக கட்டுப்படுத்திய தலைவர்களை மீள மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளமையை காணமுடிகின்றது. இலங்கை , நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதனை மிக நன்றாக காணமுடிந்தது. அது மட்டுமன்றி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய தலைவர்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுவடைந்து வருவதையும் சமகால அரசியல் தெளிவாக காட்டிநிற்கின்றது.

இந்நிலையில் இந்த வருட அமெரிக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் கொரோனா பரவலை ட்ரம்ப் கட்டுப்படுத்தவில்லை என்ற தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறார் ட்ரம்ப். குறிப்பாக மக்கள் மத்தியில் பிரசன்னமாகுகின்ற போதோ அல்லது கூட்டத்தொடர்களின் போதோ கூட முகக்கவசம் அணியாது அவர் கலந்து கொண்டமையானது எந்தளவு தூரம் இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டார் என்பதை காட்டுகின்றது. இன்றைய திகதிக்கு 83 இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் இறந்துபோயுள்ளமையானது தேர்தல் வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அது மட்டுமன்றி ஜோர்ஜ்பிளைட் எனும் கறுப்பினத்தவர்  கொலைசெய்யப்பட்டமையும் – அது நிறவெறிவாத போராட்டமாக வெடித்த பின்னணியும் ட்ரம்பினுடைய தேர்தல் வெற்றியை பாதித்துள்ளமையை மறுத்து விட முடியாது. இதனை மிகச்சரியாக கையாண்ட ஜனநாயகக்கட்சியினர் தங்களுடைய கட்சியின் துணைஜனாதிபதி வேட்பாளராக ஆபிரிக்க – இந்திய வம்சாவழி அமெரிக்கரான கமலாஹாரிஸை நியமித்துள்ளமை ஜனநாயகக்கட்சிக்கு இன்னும் வலுச்சேர்ப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் அமெரிக்காவாழ் ஆபிரிக்க வம்சாவழியினரின் வாக்குகள் என்ற விடயத்துடன் அமெரிக்கா வாழ் இந்தியவம்சாவழியினரின் வாக்குகளும் ஜனநாயயகக்கட்சியின் பக்கம் குவிவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளது. இதனை மிக தந்திரோபாயமாக ஜனநாயககட்சியினர் அணுகுவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தலின் வேட்பாளர்கள் இந்தியாவில் நவராத்தரி தினத்துக்கும் – விநாயகர் சதுர்த்திக்கும் போட்டி போட்டு  வாழ்த்து தெரிவிக்குமளவிற்கு இந்த தேர்தல் அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்களின் வாக்குகளை எதிர்பார்த்து நிற்பதை காட்டுகின்றது.

நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள் பலருடைய ஆதரவும் கூட ஜோபைடன் பக்கமே இருப்பதையும் காணமுடிகின்றது. பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி காட்டார், அதேபோன்று முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பொவல், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கிலாரிகிளின்டன்  ஆகியோரும் தமது ஆதரவை ஜோபைடனுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்தப்பட்டியலில் புதிதாக “அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பென்சில்வேனியாவில் ஜோ பைடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்” என்ற செய்தியும் உத்தயோக பூர்வமாக வெளியாகியுள்ளமையானது ஜனநாயகக்கட்சியின் பக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது. அண்மையில் பிரித்தானிய அரசும் ஜோபைடனுக்கு சார்பான போக்கினை கடைப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தமையானது ஜனநாயகக்கட்சி வலிமையாக இருப்பதை காட்டுகின்றது.

இதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய பக்கத்தை,  தேர்தலில் தன்னுடைய வகிபாகத்தை மிகச்சரியாக நகர்த்துவது போலவே படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் டொனால்ட் ட்ரம்பிற்கும் அவருடைய அமைதி ஒப்பந்தத்திற்கும் கிடைத்த வெற்றியானது ட்ரம்பின் வெளிநாட்டுக்கொள்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். குறிப்பாக இஸ்ரேல் – பக்ரைன், இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ட்ரம்பின் நகர்வுகள் ட்ரம்பை சமாதானப்பிரியராக அடையாளம் காட்டியுள்ளமையானது ட்ரம்பின் தேர்தல் நகர்வுகளில் கனிசமான செல்வாக்கு செலுத்தவுள்ளது.

மத்தியகிழக்கு நாடுகளில் அமைதியான முகத்தை காட்டிவரும் ட்ரம்ப், அமெரிக்கா என்னும் வல்லாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்துவது போன்றதான விம்பம் ஒன்றையும்  தன்னுடைய தேர்தல் அரசியலில் நகர்த்துகின்றார். ஜோபைடனை அமெரிக்காவின் கைக்கூலியாக காட்டிவரும் ட்ரம்ப் சீனாவிற்கு எதிரான பல பொருளாதாரத்தடைகளை விதித்தமையினையும் சீனாவை கட்டுப்படுத்துவதையும் தன்னுடைய பெரிய சாதனையாக அடையாளப்படுத்த தவறவில்லை. தன் மீது சுமத்தப்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மிக இலாவகமாக சீனாவின் திட்டமிட்ட சதிதான் கொரோனா என்ற மாயவலையால் மூடிவிட்டார் ட்ரம்ப் என்பது போலவே ஒரு பக்கம் தோன்றுகின்றது.

trump-announces-peace-deal-between-bahrain-and-israel

வடகொரியாவுடனான அணுஆயுதப்பிரச்சினையை முறையாக கையாண்டு அமைதி ஒப்பந்தம் ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டமை, மத்தியகிழக்கு நாடுகளில் சமாதானத்தூதுவனாக பணியாற்றியமை,   இந்தியாவுடனான அரசியல் நகர்வுகளிலும் ஓரளவுக்கு தன்னை நிலைநிறுத்திக்கொண்டமை என பல வெளிநாட்டு நகர்வுகளில் ட்ரம்ப் மகத்தான வெற்றிகளை பதிவுசெய்துள்ளமை அவருடைய தேர்தல் வெற்றியிலும் தாக்கம் செலுத்தும்.

“அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே சொந்தமானது” என தீவிர பிரச்சாரத்தை இந்த தேர்தலிலும் ட்ரம்ப் முழுமூச்சாக கையிலெடுத்துள்ளார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தொடங்கி அனைத்திலும் முன்னுரிமை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை ட்ரம்ப் முன்வைத்து வருவது அவருடைய பக்கம் கனிசமான அமெரிக்கர்கர்களை ஈர்த்து வைத்திருக்கும் என்பதை காட்டுகின்றது.  மேலும் வழமை போல கொமினியூச எதிர்ப்பையும் தன்னுடைய கையில் எடுத்துள்ள ட்ரம்ப் “ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டையும் தீவிரமாக முன்வைத்து வருகின்றமையும் முதலாளித்துவ கோட்பாட்டை விரும்பும் ஒருதொகை  அமெரிக்கர்களை திருப்திப்படுத்த முனைவதை தெளிவாக காட்டுகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் பற்றி குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் “ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன் ‘ என குறிப்பிட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் ஜனநாயகக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள கொரோனா தொடர்பான பழியிலிருந்து மீண்டு ட்ரம்ப் மீள ஆட்சியமைப்பாரா..? அல்லது ஜோபைடனின் நகர்வுகளும் அரசியல் அனுபவங்களும் வெற்றி பெறப்போகின்றனவா என்று….!

 

நான்கு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அமெரிக்காவில் 83 இலட்சமாக அதிகரித்தது !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது . தற்போது உலகின் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.99 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.98 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதே நேரத்தில் அமெரிக்காவில் மேலும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தைக் கடந்துள்ளது.

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி – இரண்டாம் முறையாக பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்!

நியூசிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பாராளுமன்ற பொதுதேர்தல் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்தல்  அக்டோபர் 17 ஆம் தேதி (நேற்று) நடைபெற்றிருந்தது.
இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.
அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.  பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.
வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது,“ அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்ய நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை மீண்டும் நாம் சிறப்பாக கட்டமைப்போம். கொரோனாவில் மீள்தல், செயல்களை வேகப்படுத்துதளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என கூறி உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் ஆர்டெர்னின் ஜெசிந்தா நியூசிலாந்தில் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தி உலக நாடுகளின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை உள்ளடக்கிய விசேடவர்த்தமானியில் கூறப்பட்டுள்ள விடயங்கள்..!

இலங்கையில் கொரோனாத்தொற்று வேகமான சமூகப்பரவலாக உருமாறியுள்ள நிலையில்  அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு..,

90.கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் பொது இடமொன்றில் உள்ள ஆட்கள் ஒவ்வொருவரும் அல்லது அத்தகைய ஆள் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்திலுள்ள ஆள் ஒவ்வொருவரும்-

(அ) எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருத்தல் வேண்டும்:
(ஆ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைப் பேணுதல் வேண்டும்.
91. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில்-
(அ) ஆட்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவது:
(ஆ) நோய்க்குட்பட்ட ஆளொருவரை அல்லது நோய்க்குட்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட ஆளொருவரைச் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தல் நோக்கத்துக்காக ஒரு வைத்தியசாலைக்கு, அவதானிப்பிடத்துக்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு செல்வது அல்லது கொண்டு செல்வதற்கு எவரேனுமாளைத் தேவைப்படுத்துவது, அல்லது
(இ) ஒரு நோய்க்குட்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட எவரேனும் ஒருவரை, இலங்கை முழுவதற்குமான முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான நோயரும்பற் காலப் பகுதியை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனி​மைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும் அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும், முறையான அதிகாரிக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.
92. (1) ஆளொவ்வொருவரும், 91 ஆம் பிரிவின் கீழ் ஆட்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படுவதன் மேல், கொரோனா வைரஸ் தொற்று நோய் 2019 (கொவிட்-19) பரவுவதனைத் தடுப்பதற்காக, முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறான அத்தகைய காலப் பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் தங்கியிருத்தல் வேண்டும்.
92. (2) உப ஒழுங்கு விதி (1) இன் கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியின் போது, ஆளொருவர்-
(அ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பிரவேசித்தலோ அல்லது இடப்பிரசேத்திலிருந்து விட்டு செல்லுதலோ ஆகாது:
அல்லது
(ஆ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் ஏதேனும் பொது இடத்திற்குப் பயணித்தலோ, கொண்டு செல்லுதலோ அல்லது அதனுட் பிரவேசித்தலோ ஆகாது,
அல்லது
(இ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பயணித்தலாகாது.
ஆளொருவர், முறையான அதிகாரியினால் அனுமதிக்கப்பட்டாலொழிய, உப ஒழுங்கு விதி (1) இன்கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்திலுள்ள ஏதேனும் நிறுவனத்தை, தொழிலிடத்தை அல்லது வேறேதேனும் ஒத்து வளவுகளைப் பொது மக்களுக்குத் திறந்து வைத்தலாகாது.
93. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பை அல்லது பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவைப்பட்ட அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனம், வேலைத் தளம், பல்பொருள் அங்காடி, கடை, விற்பனை நிலையம் அல்லது வேறேதேனும் தொழிலிடம் என்பன தொழிற்படுத்தப்படுவதனை அல்லது பணியாற்றுவதனை முறையான அதிகாரி அனுமதிக்கலாம்.
94. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பை, தேசிய பொருளாதாரத்தை, பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்கு அல்லது கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) பரவுவதைத் தடுப்பதற்குத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனத்தின் அல்லது வேலைத்தலத்தின் தொழில்தருநர் அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள ஆள்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களினதும் வேறு ஆட்களினதும் அதிக பட்ச எண்ணிக்கையை விஞ்சுதலாகாது:
(ஆ) அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்:
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(ஈ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கும் முன்னர் ஆள் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலை அளவிடப்படுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(உ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரம் அல்லது கிருமிநீக்கியுடன் போதிய கைகழுவும் வசதியை அளிக்க வேண்டுமென்பதுடன் அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கு முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும், அத்துடன்
(ஊ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கின்ற ஆள் ஒவ்வொருவரினதும் பெயர், ஆள் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு விபரங்கள் பற்றிய பதிவேட்டைப் பேணுதல் வேண்டும், அத்துடன்
(எ) முறையான அதிகாரியினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
95. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் அத்தியாவசிய அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஒரு பல்பொருள் அங்காடியின், கடையின் விற்பனை நிலையத்தின் அல்லது வேறேதேனும் தொழிலிடத்தின் சொந்தக்காரராகவுள்ள அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள ஆளொருவர்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஆட்களின் அதிக பட்ச எண்ணிக்கையை விஞ்சுதலாகாது,
(ஆ) அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்று அணிந்திருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(ஈ) வளவுகளினுள் பிரவேசிக்கு முன்னர் ஆள் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலை அளவிடப்படுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(உ) வளவுகளினுள் பிரவேசிக்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரம் அல்லது கிருமிநீக்கியுடன் போதிய கை கழுவும் வசதியை அளிக்க வேண்டுமென்பதுடன் அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்க முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும்,
(ஊ) முறையான அதிகாரியினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
96. எவரேனுமாளின் உடல் வெப்பநிலையானது, முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்ட உடல் வெப்பநிலையை விடக் கூடுதலாகவுள்ள விடத்து அத்தகைய ஆள், 94 ஆம், 95 ஆம் ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய வேலைத் தளத்தினுள் அல்லது வளவுகளினுள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுதலாகாது.
97. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் பொது மக்களை இடம்பெயர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மோட்டார் வாகனத்தின் சாரதி, நடத்துநர் மற்றும் சொந்தக்காரர் முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறாக இரு பயணிகளுக்கிடையே அத்தகைய சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டுமென்பதுடன் முறையான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதலும் வேண்டும்.
98. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் நடமாட்டத்தின் மீதான மட்டுப்பாடு முறையான அதிகாரியினால் தளர்த்தப்படுமிடத்து, ஒரு பொது இடத்தினுள் அல்லது ஆளொருவர் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்தினுள் பிரவேசிக்கின்ற ஒரு கூடத்தை, கருத்தரங்கை அல்லது வேறேதேனும் ஒத்த ஒன்றுகூடுதலை ஒழுங்கேற்பாடு செய்கின்ற அல்லது ஒழுங்குபடுத்துகின்ற அல்லது அத்தியாவசிய சேவைகளுக்குட்பட்ட எல்லாச் சேவைகளையும் பெற்றுக்கொள்கின்ற அத்தகைய ஆள் ஒவ்வொருவரும், முறையான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
ஆகிய சட்ட ஒழுங்கு விதிகளும் இந்த விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் பயணிக்க தீர்மானித்துள்ளோம்’ – மாவை சேனாதிராஜா !

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டம்  யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (17.10.2020) நடைபெற்றிருந்தது.

இந்தக்கூட்டத்தொடரினை அடுத்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பாக  ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  “தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது எனத் தீர்மானித்துள்ளோம்’ எனக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் மீண்டும் ஒன்றுகூடி இன்று ஆராய்ந்தோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் எனக் கலந்துகொண்ட அனைத்துப் பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் செயற்பட வேண்டும்? எவ்வாறு நாம் ஸ்தாபன ரீதியாக அமைய வேண்டும்? என அந்தக் குழு ஆராயவுள்ளது. அவர்கள் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளனர். அதன்பின்னர் நாம் அந்த அறிக்கை தொடர்பில் ஆராயவுள்ளோம்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும், நாம் தமிழ்த் தேசியப் பரப்பில் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசவுள்ளோம். குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக எந்த ஒரு பிரச்சினைகள் எழுந்தாலும் அனைத்துக் கட்சிகளும் உடனடியாக ஒன்றுகூடித் தீர்மானங்களை எடுத்து ஓரணியில் பயணிப்பது எனத் தீர்மானித்துள்ளோம்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தற்போது பேசுபொருளாக உள்ளது. அந்தத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைத்துக் கட்சியினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தில் அந்தந்தக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அதனை எதிர்ப்பார்கள் என நான் நம்புகின்றேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கட்டமைப்பு  ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தின் வருகைதருவதாக கூறியவுடன் ஈழத்­த­மிழர் சுயாட்சி கழ­கத்தின் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபையின்  உறுப்­பி­னரு­மான அனந்தி சசி­தரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததுடன் சுமந்திரன் வருகை காரணமாக முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் வாள்வெட்டு – 62வயது முதியவர் அவசர சிகிச்சை பிரிவில் !

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் நேற்று(17.10.2020) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் வடக்கில் வாள்வெட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் பலர் இதன் போது தாக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. பொலிஸார் பலரை கைது செய்து இதனை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்ற போதிலும் கூட இதனுடைய தீவிரத்தன்னை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர ஓய்ந்தபாடில்லை என்பதே வருத்தத்துக்குறிய உண்மையாகும். மேலும் இதே வாள்வெட்டுக்கலாச்சாரம் தொடருமாயின் எதிர்காலத்து தலைமுறையினுடைய வாழ்க்கை அம்சங்களும் பாதிக்கப்பட்டு விடும் என்பதே உண்மை..!

இது தொடர்பாக ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்பு உடையவர்களாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.