27

27

உயிருடன் இருக்கும் தன் மக்களையே பரலோகம் அனுப்புகிறது அமெரிக்க அரசு! அப்படியிருக்க, உயிருடன் இல்லாதவர்களை பொம்பயோ எப்பிடி கண்டுபிடிப்பார்?

சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை தாங்க முடியாத அமெரிக்கா!
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ இலங்கை வருகை!!!

உலக பொருளாதார ஆதிக்கத்தை தன் பக்கம் சுவீகரித்துக்கொள்ளும் சீனாவின் வளர்ச்சியயைத் தடுக்க அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதில் ஒரு கட்டமாக இலங்கைக்கும் வருகின்றார் இன்று. மைக்கல் பொம்பயோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க இலங்கைக்கு வரவில்லை. அது பற்றி கரிசணையுடையவரோ அல்ல. அடுத்த இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கின்ற போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் ஆசிய விஜயம் ஒரு பொருட்டாகவே அமையப் போவதில்லை. தனது சொந்த நாட்டில் 225,000 பேர் கொல்லப்பட்டதையே பொருட்படுத்தாத ஒரு இராஜாங்க அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அதிகாரம் அந்த நாட்டிடம் உள்ளது என்று உளறும் முட்டாள்தனத்தை என்ன செய்வது.

இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் உயிரோடு இல்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். உயிருடன் இருப்பவர்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பரலோகம் அனுப்பிக்கொண்டுள்ளார். அவருடைய ராஜாங்க அமைச்சர் இல்லாதவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஈராக், அப்கானிஸ்தான், லிபியா இன்று சிரியா இப்படியே இந்த மேற்குலகம் கொலைக்களமாக்கிய நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!! யார், யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்துத் தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் அரசியல் ஈனமாகிப் போய்க் கிடக்கின்றது.

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகள் வன்னியில் உள்ள மக்களை மீட்கப் போவதாக ஒரு செய்தி அந்நேரத்தில் கசிந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இச்செய்தி வெளியானதும் அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற தமிழர் அமைப்பு வன்னி எங்களின் சொந்த மண் அந்த மண்ணில் இருந்து மக்களை மீட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதற்குக் காரணம் வன்னி யுத்தகளத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டால் – போராட்டத்தின் மண் மூட்டைகள் – பாதுகாப்பு அரண் – அடுத்த சில மணிநேரங்களிலேயே யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். போராட்டத்தை வைத்து சர்வதேச நாடுகளில் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. அதற்காகவே இந்த வெளிநாட்டு சரகு புலிகள் குரல்கொடுத்து வந்தனர். அன்று வன்னிமக்களை கொல்லக்கொடுத்து சூறையாடிய பணத்தில் இன்று பகட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் கொஞ்சத்தை வீசியெறிந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கின்றோம் என்று உலாவிக்கொண்டு திரிகின்றனர்.

இலங்கையின் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கண்டித்து ஜே.வி.பி போராட்டம் !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோவின் வருகையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று (27.10.2020) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோ இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த விடயம் தொடர்பாக கடிதமொன்றையும் மக்கள் விடுதலை முன்னணியினர் அமெரிக்க தூதரகத்தில் கையளித்துள்ளனர்.

“20ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“20ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தம் தொடர்பாக நீதி அமைச்சர் மேலும் குறிப்பிடும் போது ,

அரசாங்கத்திற்கு வலுவானதொரு நிர்வாகத்தை முன்னெடுக்க 20ஆவது திருத்தம் வழியமைத்துள்ளது. இதனால் அரச இயந்திரத்தை சிறப்பாக இயங்க வைக்க முடியும். தேர்தல்கள், பொது சேவை, மனித உரிமைகள் மற்றும் ஊழல் விசாரணைக்கு பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் ஜனாதிபதிக்கு நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் முடியும்.பொதுத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்

இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டத்தின் பல பிரிவுகள் ஜனாதிபதி அதிகாரத்தை பலப்படுத்தும். உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்தார்.

அரசியலமைப்பை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு இல்லை என்றாலும், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

“அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை வருகை நாட்டுக்கு பேராபத்தானது ” – எச்சரிக்கின்றது தேசிய புத்திஜீவிகள் அமைப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27.10.2020) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில்,  அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயம் நாட்டுக்குப் பேராபத்தானது என தேசிய புத்திஜீவிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் யாருடன் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்பதை இலங்கை தீர்மானிக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை எதிர்காலம் தொடர்பாக பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோளை இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் நிராகரிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி ‘நியூஸ் இன் ஏசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச்செய்தியில் மேலும் குறிப்பிடும் போது  “28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை தலைவர்களிடம் முகத்திற்கு நேரே சீனாவுடனான உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளார். அமெரிக்கா முன்வைக்கின்ற சாத்தியப்பாடுகளை பரிசீலிக்குமாறும் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கின்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக் பொம்பியோ இலங்கை தலைவர்களை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இலங்கையின் தீர்மானங்களும் கொள்கைகளும் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும், சட்டம் மற்றும் அரசமைப்பு நாட்டின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என மைக் பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர்.

அதேவேளை, உலகிலும் பிராந்திய அளவிலும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் எனவும் அவர்கள் மைக் பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர். இலங்கையை எப்படி ஆட்சிசெய்யவேண்டும் என்பதை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை என இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் மைக் பொம்பியோவுக்குத் தெரிவிக்கவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கையைக் கேட்டுக்கொள்ளவுள்ள மைக் பொம்பியோ இரு தரப்பு இணக்கத்துடனான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக வேறு எந்த நாட்டையோ அல்லது ஸ்தாபனத்தையோ முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

480 மில்லியன் டொலர் எம்.சி.சி. உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக் பொம்பியோ இலங்கையின் அரச தலைவர்களைக் கேட்டு கொள்ளவுள்ளார். எம்.சி.சி. உடன்படிக்கையை இலங்கை முற்றாக நிராகரிக்கவேண்டும் அல்லது மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சோபா உடன்படிக்கை இலங்கையின் அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணானது என்பதால் சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை குறித்து ஆராயப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராகக் கூட்டணியான குவாட்டுக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, 30 வருட போரிலிருந்து சமீபத்திலேயே விடுதலையாகியுள்ள இலங்கை இன்னொரு சர்வதேச மோதலின் களமாக மாறுவதை விரும்பவில்லை என மைக் பொம்பியோவிடம் நாங்கள் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளும் சுதந்திரமான நடமாட்டம் உறுதிசெய்யப்படுவதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் இலங்கைத் தலைவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் முதலீடுகளை இலங்கை ஏற்றுக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவுள்ளது என்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கையில்

முதலீடுவது வரவேற்கப்படுகின்றது. அமெரிக்கா சீனாவின் முதலீடுகளின் அளவுக்கு முதலீடு செய்யுமென்றால் அதனை வரவேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.

நாடு பொது முடக்கம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு விடுத்துள்ள செய்தி !

இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் பல தரப்பினரும் நாடு பொதுமுடக்கத்துக்கு வருவது சிறந்தது என நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில்லை என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி இது குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த முறையை விட இம்முறை கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவுகின்றது எனவும் அமைச்சரவையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாழ்வதே சிறந்த தீர்வு எனவும் அமைச்சரவை  வலியுறுத்தியுள்ளது.

“இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது”- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு மின்னஞ்சல் !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் , காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் வரை எங்கள் உண்ணாவிரதம் தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை தடுப்புக்காவல் மற்றும் பிற மறைவிடங்களிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு இலங்கை தவறிவிட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. துன்பப்படும் இந்த தமிழ் தாய்மார்களுக்கு உதவ உங்கள் நல்ல அலுவலகத்தைப் பயன்படுத்துமாறு செயலாளரை நாங்கள் தயவாக கேட்கிறோம். என தெரிவித்தார்.