November

November

“கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதி” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பலர் இது தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.

இதன் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி,  “இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை  சரியானதே என கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் , ஒரு பௌத்தனாக பௌத்த சடங்குகளையும் போதனைகளையும் தான் பின்பற்றுவேன் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிர்ப்பலி – மேலும் இருவர் மரணம் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 68 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய உயிரிழப்புக்களுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளியின் மரணம் கொரோனாத்தொற்று வகை மரணத்துக்குள் உள்ளடங்காது என சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘பிரித்தானிய அரசே! புலிகள் மீதான தடையை நீக்காதே’ – மட்டக்களப்பில் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் எனக்கோரி போராட்டம் !

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு- ஏறாவூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பபட்டது.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் கே. வாஜித் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக நடைபெற்ற இப்போராட்டத்தில் குறைந்த தொகையினரே பங்கேற்றனர்.
‘பிரித்தானிய அரசே! புலிகள் மீதான தடையை நீக்காதே’ என்ற வாசகம் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாதையொன்றை கவனயீர்ப்புப் போராட்டக்காரர்கள் ஏந்திநின்றனர். இதையடுத்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஊடாக இலண்டன் உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கான மகஜர் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாறா மௌஜுதிடம் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கும் போது,
முழு மனித சமுதாயத்திற்கும் எதிராகச் செயற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகக்கருதி உலகிலுள்ள முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் தடைசெய்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இத்தடையை நீக்க மேற்கொள்ளும் முயற்சியானது சர்வதேச ரீதியில் பயங்கரவாத இயக்கம் மீதாக தடை வலுவிழந்துசெல்ல வாய்ப்பை ஏற்படுத்தும்.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக நட்டஈடு இதுவரை கிடைக்காத நிலையில் அவ்வமைப்பு மீதான தடை நீக்கப்பட்டால் அவ்வியக்கம் சாதாரண ஓர் அமைப்பாகவே கருதப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பிரித்தானியா புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த மீள்பரிசீலனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம் – பற்றி நீவ்ஸ்.கொம்

யாழ். பல்கலைகழகத்தின் இரண்டு துறைகளை பீடங்களாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதற்கான திட்ட முன்மொழிவுகள் நேற்று (01.11.2020)  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும்,  கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இப்பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தலைமையிலும், சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் சு. மோகனதாஸ் தலைமையிலும் பேரவையினால் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் துறையாக காணப்பட்ட இந்துநாகரிக கற்கைகள் துறையானது பீடமா தரமுயர்தத்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத விடயம்” – மேர்வின் சில்வா காட்டம் !

“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத விடயம்” என முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம்(02.11.2020) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தெருக்களில் நாய்கள் வெறிப்பிடித்தது போல முன்தீர்மானம் மற்றும் ஏற்பாடுகள் இன்றி அரசாங்கம் திடீரென 5 நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை மேல்மாகாணத்தில் அமுல்படுத்தியது. பின்னர் திடீரென அந்த ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. தினமும் தொழிலுக்குச் சென்று வருமானம் பெற்று உணவுகொண்டவர்கள் அநேகம்பேர் இருக்கின்றனர்.

இதன் காரணமாக இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொவிட்-19 தொற்றானது கடந்த வருட இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டதுடன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எமது நாட்டில் பரவத்தொடங்கியது.

அப்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தொற்றின் அபாயகரமான விடயங்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்திருந்தார். ஆனால் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை, ஏற்ற ஏற்பாடுகளை செய்யவுமில்லை. இன்று அதன் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளை அரசாங்கம் செய்தாலும் எத்தனையோ பேருக்கு இந்த உதவிகள் கிடைக்கவில்லை. முதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டே ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும் என்றார்.

“மக்களினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை, வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவேண்டும்” – கரு ஜெயசூரிய

“மக்களினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை, வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவேண்டும்” என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கரு ஜெயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். மேலும், 20வது திருத்தத்தின் ஊடாக இலங்கை மிகவும் வலுவான நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி, கொரேனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். மக்களினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை, வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தவேண்டும்.

இதேவேளை, அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுள்ள இளைஞர் வீட்டிலேயே தற்கொலை – இலங்கையில் கொரோனா பலி 22 ஆக உயர்வு !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல  குணவர்த்தன தெரிவித்துள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

“முகமது நபி குறித்த கேலிச்சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – இமானுவேல் மேக்ரான்

“முகமது நபி குறித்த கேலிச்சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ’ என்ற வார இதழில் முகமது நபிகள் குறித்த கேலிச்சித்திரம் கடந்த மாதம் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இது அங்குள்ள முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கடந்த மாதம் 17-ம் தேதி பாரிசில் உள்ள பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபிகளின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்து கருத்து சுதந்திரம் குறித்து பேசியதாக தெரிகிறது. இந்த தகவல் அங்கு காட்டுத் தீயாக பரவியதை அடுத்து, அன்றைய தினமே அந்த ஆசிரியரை ஒரு கும்பல் தலையை வெட்டிக் கொலை செய்தது. போலீஸ் விசாரணையில், அவர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பு தணியும் முன்பாகவே, பாரிஸின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த 3 பேரை கத்தியால் தாக்கினார். இதில் அவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொலையாளி, மருத்துவமனையில் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த அன்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இஸ்லாம் மதம் குறித்து சில கருத்துகள் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சிலும், மற்ற முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பாரிஸில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தை முன்வைத்து நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்..? கருத்துக்கணிப்புக்களின் விபரம் இதோ..!

அமெரிக்காவில் நாளை(03.10.2020) ஜனாதிபதி  தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார்.
கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட என்.பி.சி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், டிரம்பைவிட ஜோ பிடன் 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும், ஜோ பிடனுக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் அதிகம் கொண்ட அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, புதிய ஹாம்ப்ஷயர், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 12 மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஜோ பிடனுக்கு ஆதரவாக 51 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த மாநிலங்களில் ஜோ பிடன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தபால் மூலமாகவோ அல்லது நேரில் முன்கூட்டியே வாக்களித்த வாக்காளர்களிடையே பிடனுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. அதேசமயம், இன்னும் வாக்களிக்காத வாக்காளர்களிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.

யாழில் 23வயது வாலிபன் தூக்கிட்டு தற்கொலை !

யாழ்ப்பாணம் – மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று(01.11.2020)  காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

23 வயதான சி.வினோதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் இச் சம்பவம் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதிகளில் தற்கொலைகளும் வேகமாக பரவும் நோய்களை போல மலிந்து போய்விட்டது. காதல் தோல்வி, குடும்பப்பிரச்சினை, பெறுபேறுகள் போதாமை, கடன் பிரச்சினை என பல காரணங்கள் இந்தத்தற்கொலைகளின் பின்னணியாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் தொடரும் தற்கொலைகள் தொடர்பான பின்னணியை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையை காண இங்கே அழுத்தவும்

( http://thesamnet.co.uk/?p=65967 )