November

November

தாய் கொரோனா தொற்று பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டதால் 25 வயது மகன் தற்கொலை !

கோப்புப்படம்

கொழும்பில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தாயாரை சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய 25 வயதான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹோமாகம தோலவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாயார் மஹரகமவில் உள்ள மீன் கடையில் மீன் கொள்வனவு செய்திருக்கிறார்.அந்த மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பான பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பெண்ணும் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவரது விசேட தேவையுடைய மகன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகிறார் மாவை.சேனாதிராஜா !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிக்க பங்காளிக் கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று(31) யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர்.

இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இந்த கலந்துகொண்டனர்.

இதன்போது, தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம் கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்தே, பங்காளிக் கட்சிகள் மாவை சேனாதிராஸாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.

“வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.

“வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“சமூகப் பரவல் என்பது அதன் அர்த்தத்தின்படி என்னவென்றால் தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும். இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப் பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமூகப் பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா? இல்லையா? என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரனாத் தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் கொரொனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தமது பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

சுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக்கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்துடன் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் முக்கியமாகும். பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகின்றேன்.

வடக்கு மாகாண மக்கள் இந்தச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு எம்மால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையினர் தெளிவாக மக்களுக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். அந்த வழிகாட்டல்களை அனைவரும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயே இருக்கமாட்டாது” எனவும் அவர் தெரிவித்தார் .

“நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பினர் கோமாநிலையிலா?  அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள் ?” – இராஜாங்கஅமைச்சர் வியாழேந்திரன் கேள்வி !

நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பினர் கோமாநிலையிலா?  அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள் ? என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்திலெடுக்காமல் ஒளிந்து கொண்டிருந்தவர்கள்தான் என்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாறானவர்களால் மக்களுக்கு அபிவிருத்தியையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது.

அவர்கள்தான் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாத்தவர்கள். நாங்கள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்குரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.

இது தெரியாதவர்கள்தான் நான் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரே குடும்பமாக இருந்தபோதும்கூட இந்த காணிப்பிரச்சினை இருக்கத்தானே செய்தது. அப்போதே இந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கலாம். அப்போது அவர்கள் எங்கிருந்தார்கள்? அப்போது அவர்கள் கோமாநிலையிலா அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள். வெறுமனே வாயை மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எங்கள்மீது விசமத்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.

கடந்த காலத்தில் மக்களின் பிரச்சினை களை கவனத்திலெடுக்காமல் ஐக்கிய தேசியகட்சியுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் தேசியகூட்டமைப்பு இன்று தன்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்

எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கடந்த நல்லாட்சிக்கால அரசாங்கத்தில் தமிழ்தேசியகட்சி சார்பாக பாராளுமன்றம் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“டொனால்ட் டிரம்ப் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது” – ஜோபைடன்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஜோ பைடனுக்கு ஆதரவாகவே உள்ளன.
இந்நிலையில் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற இறுதிக்கட்ட வாகன பிரச்சாரத்தின்போது பேசிய ஜோ பிடன், கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்ப் தேசத்தை பிளவுபடுத்தி தோல்வி அடைந்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற அமெரிக்கர்கள் ஓட்டு போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘இந்த தேசத்தை பிளவுபடுத்திய ஜனாதிபதியின் பதவிக்கு நம்மால் மூன்று நாட்களில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். மூன்று நாட்களில், இந்த தேசத்தைப் பாதுகாக்கத் தவறிய ஜனாதிபதி பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மூன்று நாட்களில், இந்த நாடு முழுவதும் வெறுப்பின் தீப்பிழம்புகளைத் தூண்டிய ஒரு ஜனாதிபதி பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் மில்லியன் கணக்கானவர்கள் வாக்களிப்பார்கள். இந்த நாட்டை மாற்றும் சக்தி உங்கள் கைகளில் உள்ளது. டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்வது பற்றி எனக்கு கவலையில்லை. இதன்மூலம் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முடியாது. டொனால்ட் டிரம்ப் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது’ என்றும் ஜோ பிடன் பேசினார்.