06

06

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்நாயகமுமான  சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சர் அலிசப்ரியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் கோரிக்கையை வரவேற்கின்றேன்.ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பினை பேணுகின்ற  ஒருவரே முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன். அவர் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் அவரை நாடாளுமன்றத்தில்  அமர்த்தியுள்ளனர்.

அவர் கூறுவது  அரசாங்கத்தின் கோரிக்கையாகவும் இருக்க கூடும். பல வருடங்களாக சிறையில் வாழுகின்றவர்களை விடுதலை செய்து தமிழர்களின் மனங்களை தங்களது பக்கம் திருப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இத்தனை  வருடங்களாக சிறையில் வாழ்க்கையை கழித்த தமிழ் உறவுகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த அரசாங்கம் நிச்சயம்  எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மேலும், சிறைக்கைதிகளின் விடுதலையை அரசியல் மயமாக்கியமையால் தான் இதுவரைகாலமும் எந்ததொரு நன்மையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கூடிய குற்றங்களை செய்தவர்கள் இன்று வெளியில் திரிவதுடன் செல்வாக்கானவர்களுடன் கூட  அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு கீழே மிகவும் அடிமட்டத்தில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த பலர் 18 வருடங்களுக்கு மேலாக சிறையிலுள்ளனர். நாம் கோருவதை விட முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கோருவதை அரசாங்கம் செய்யக்கூடும். கைதிகளின் விடுதலையையும் அரசியலாக்கி உள்ளமையினால், அரசாங்கத்தில் உள்ள ஒருவரை இவ்விடயம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர்களே இதற்கு தீர்வை வழங்க முனையக்கூடும்” எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகளை விடுதலை செய்து, மாவீரர்தின அனுஸ்டிப்புக்கு ஜனாதிபதியிடம் அனுமதி பெற்றுத்தந்தால் சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்” – செல்வம் அடைக்கலநாதன்

“அரசியல் கைதிகளை விடுதலை செய்து, மாவீரர்தின அனுஸ்டிப்புக்கு ஜனாதிபதியிடம் அனுமதி பெற்றுத்தந்தால் சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்” என வன்னி  பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“முன்னாள் வட.மாகாண ஆளுநரும் தற்போதைய  பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், கருத்தொன்றை குறிப்பிட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம் போல் இருப்பதாக தற்போது தெரிகின்றது. சுரேன் ராகவன் சுதந்திர கட்சியோடு தற்போதும் இருப்பவர். அக்கட்சியின் தலைவரான மைத்திரிபால, ஜனாதிபதியாக இருக்கின்றபோது கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலை சம்பந்தமாக வாக்குறுதி அளித்து சென்றிருந்தார். ஆனால் தற்போது வரைக்கும் அந்த விடுதலையும் நடக்கவில்லை. இதன்போது சுரேன் ராகவன் எங்கிருந்தார்? அவர் அப்போதே ஜனாதிபதியோடு பேசி, தாயை இழந்த அந்த குழந்தைகளின் தந்தையை விடுதலை செய்திருக்க முடியும்.

தற்போதும் கூட அந்த கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது. அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் நீதி அமைச்சருக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரமில்லை. ஆகவே அவருக்கு கடிதம் எழுதுவதை விட ஜனாதிபதியிடம் தற்போது அதிகாரம் குவிந்து கிடக்கின்றது. அந்த அதிகாரத்தினை குவித்து கொடுப்பதில் சுரேன் ராகவனும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே அவர் ஜனாதிபதியுடன் பேசி அவர்களின் விடுதலையை பெற்றுத்தந்தால் நாங்கள் வரவேற்போம்.

அரசியல் நோக்கத்திற்காக நீதி அமைச்சரிடம் நியாயம் கேட்பது அர்த்தமற்றது. எனவே ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அரசியல் கைதிகளின் விடுதலையை பெற முனைப்பு காட்ட வேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு,  பாராளுமன்றத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக விவாதத்தினை மேற்கொண்டிருக்கின்றது. அப்போது இதே அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென்றே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிகாரமில்லாத நீதி அமைச்சரிடம் சுரேன் ராகவன், எமது இளைஞர்களின் விடுதலை தொடர்பில் கேட்பதை விட ஜனாதிபதியிடம் பேசி விடுதலையை பெற்று தந்தால் நாங்களும் எங்கள் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு நன்றி சொல்ல கடமைப்படுவோம்.

அதனை விடுத்து எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்போகின்றேன் என பாசாங்கு காட்டக்கூடாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.எமது அரசியல் கைதிகள் தொடர்பாக உளமார சுரேன் ராகவன் நினைத்திருந்தால், நல்ல விடயமாக இருக்கும். அத்துடன் ஒரு கோரிக்கையை சுரேன் ராகவனிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது, அரசியல் கைதிகள் எமது விடுதலைப்போராட்டத்தில் ஏதோ ஒரு தியாகத்தினை செய்தே இன்று சிறையில் வாடுகின்றனர். அந்தவகையில் தமது உயிரை இந்த மண்ணுக்காக தியாகம் செய்த போராளிகளது நினைவு நாள் நவம்பர் 27 ஆம் திகதி வரவுள்ளது. எனவே எமது மக்கள், தமது உளக்கிடக்கைகளையும் சோகத்தினையும் வெளிப்படுத்தும் நாளினை அனுஸ்டிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தந்தால் நாங்கள் உங்களுக்கு பின்னால் அணி திரள தயாராகவுள்ளோம். அத்துடன் இவ்விரு செயற்பாட்டையும் ஜனாதிபதியுடன் பேசி செயற்படுத்தி தந்தால், சுரேன் ராகவனின் அனைத்து செயற்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்” எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பை பழிக்குப்பழி வாங்கிய 17 வயதுச்சிறுமி !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதால் டிரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அவர் டுவீட் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், டிரம்பிற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள கருத்து அனைவராலும் பேசப்படுகிறது.
கிரேட்டா வெளியிட்டு உள்ள டுவிட்டில், ‘இது அபத்தமானது. டிரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றை பார்க்க வேண்டும். பொறுமையாக இருங்கள் டொனால்ட்’ என பதிவிட்டுள்ளார்.
இதே வார்த்தைகளை கடந்த 11 மாதங்களுக்கு முன்பு டிரம்ப், கிரேட்டாவுக்கு எதிராக பயன்படுத்தி இருந்தார். டைம்ஸ் இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு விமர்சனம் செய்திருந்தார். தற்போது தேர்தல் பரபரப்பு சூழலில், டிரம்ப்பை பழிவாங்கும் வகையில் அவரது வார்த்தைகளையே அவருக்கு எதிராக கிரேட்டா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க்  தொடங்கிய “பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பலர் இவருடன் சேர்ந்து போராடிவருகிறார்கள். ஆகஸ்டு 2018இல், ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவருடைய தனிப்பட்ட ஈடுபாடு தொடங்கியது. ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு எதிரில் சுற்றுச்சூழல் பாதிப்பினை எதிர்த்து, தன் பள்ளி நாள்களை, போராட்டம் மூலம் தொடங்கினார். பருவநிலையைக்காக்க பள்ளிப்போராட்டம் (School strike for the climate) என்ற பதாகையுடன், எதிர்காலத்திற்கான வெள்ளி என்ற பெயருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது நாளடைவில் உலகம் முழுவதும் பரவலடைய ஆரம்பித்த பின்னணியில் மிகப்பிரபலமானார்.
உலகளவில் பிரபலமான நிலையில் அனைவருடைய கவனமும் அவரை நோக்கித் திரும்பியது.மே 2019 இல் டைம் இதழின் அட்டைப்படத்தில், அடுத்த தலைமுறைக்கான தலைவர் என்ற குறிப்போடு இடம்பெற்றார். அவரை பலர் முன்மாதிரியாகக் கொள்கின்றனர்அவ்விதழ் அவரை “உலகின் நபர் 2019” என தேர்ந்தெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடைபெற்ற கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் – வலுக்கும் எதிர்ப்புக்கள் !

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டன.

1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு,
2. வாழ்வாதார மேம்பாட்டு குழு,
3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு,
4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு,

இதில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டமே யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இன்று இடம்பெறுகிறது.

நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் உள்ளடங்களாக இராஜாங்க அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.

அவர்களின் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் தரவுகளை முன்வைப்பர்.

இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்று நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அலுவலகர்கள் உள்பட பலர் தென்பகுதியிலிருந்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்களுடைய மரணச்சடங்குகளிலும், திருமண நிகழ்வுகளிலும் வெறும் 25-30 பேரை மட்டுமே பங்கு கொள்ளச் சொல்லி இறுக்கமான நடைமுறைகளை விதித்துவிட்டு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியோரே இவ்வாறு செயற்படுவது எந்த வகையில் நியாயமானது ? என சமூக வலைத்தளங்களில் அனைவரும் விமர்சனங்களை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடுகதியில் பரவும் கொரோனாவைரஸ் – தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பு ஏறக்குறைய ஒரு கோடியை எட்ட உள்ளது. அங்கு தொடர்ந்து 3-வது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனாவைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும், முகக்கவசம் அணியாமல் சுற்றுவதாலும் கொரோனாவைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களைச் சமாளிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இல்லினாய்ஸ், டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டது. இது தவிர நெப்ரஸ்கா, இன்டியானா, ஐயோவா, மின்னசோட்டோ, மிசவுரி, நார்த் டகோடா, ஒஹியோ, விஸ்கான்சின், அர்கானோஸ், கொலராடோ, மைனி, கென்டகி, ஓரிகன், நியூ ஹெமிஸ்பயர், ஒக்லஹோமா, ஹோட் ஐலாந்து, உத்தா, வெஸ்ட் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த திடீர் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாண அரசுகள் மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடும் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன. அமெரிக்க மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 204 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,125 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பு 99 லட்சத்து 19 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி: ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில்!!!

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட உள்ளது. 270 எலக்ரோரல் கொலிஜ் வாக்குகளை வெல்லப்பட வேண்டிய சிலையில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு 264யையும் டொனால்ட் ட்ரம் – மைக் பென்ஸ் கூட்டு 214யையும் வென்றுள்ளனர். ஆனால் இன்னும் பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோநா, நோர்த் கரலினா, நவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பென்சில்வேனியா ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துகொண்டுள்ளது. இங்கு எண்ணப்பட்டு வரும் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.

அமெரிக்காவில் மிக இறுக்கமான போட்டியாக அமைந்துள்ள 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை சில ஆயிரத்திலேயே வேறுபடுகின்றது. அதனால் மீள எண்ணப்பட வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைகள் இரு தரப்பிலும் முடக்கி விடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது தபால் மூலமான வாக்கள் சட்டப்படியானவையல்ல என்று டொனால்ட் ட்ரம் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சி – ரிப்பப்பிளிக்கன் பார்ட்டி தேர்தல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம் இன் குற்றச்சாட்டில் இருந்து தம்மை ஓரம்கட்டி உள்ளனர்.

டொனால்ட் ட்ரம் தபால் மூலமான வாக்குகளுக்கு பயப்படுவதற்கும் அவை எண்ணப்படக் கூடபது என்று கோருவதற்கும் காரணம் பெரும்பாலும் தபால் மூலமான வாக்குகள் டெமோகிரட் கட்சிக்கு சாதகமாக அமைவதே வழமை. அதனால் தபால் மூலமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்பது அவரது சரியான கணிப்பே. வழமைக்கு மாறாக கோவி-19 போன்ற காரணங்களினாலும் தபால் மூலமான வாக்குகள் பத்து மடங்கிற்கும் அதிகமாக எகிறி இருந்தது. மேலும் 68 வீதமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலமாகவும் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்து இருந்தனர். அதற்கு முந்திய தேர்தலில் 2016இல் 34 வீதமானவர்களே அவ்வாறு வாக்களித்து இருந்தனர்.

ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தலில் தெரிவான ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி 21ம் திகதியே அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கடமைகளையாற்ற ஆரம்பிப்பிப்பார். இந்த இடைவெளியில் டொனால்ட் ட்ரம் இன் வெள்ளை மாளிகை நாடகம் மிக சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும்“ – மங்கள சமரவீர

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மதநம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் சமூக வலைத்தளங்களில் பெரிய விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டடிருந்தது.

இதன்காரணமாக அதுகுறித்து அவர் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில்  அவருடைய செயற்பாடு குறித்து விளக்கமளித்ததுடன், அதன்போது தனது உயிரை தியாகம் செய்வதனூடாக கொரோனா வைரஸை இல்லாதொழிக்க முடியுமென்றால், அதற்கும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர “கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும். மாறாக தனது உயிரைத் தியாகமாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறத்தேவையில்லை. உயிர்த்தியாகம் அல்லது தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின்  செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது“ எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

“ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” – நளின் பண்டார குற்றச்சாட்டு !

“ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” என  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசின் மீது குற்றஞ்சுமத்தியுள்ளர்.

கொழும்பில் நேற்று (05.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நளின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகிய பலர் உயிரிழந்துள்ள போதிலும், பிரேத பரிசோதனைகளின் பின்னரே அவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.

இது போன்ற அச்சுறுத்தலான நிலைமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முழு நாடும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்திற்கு இது வசந்த காலமாக மாறியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களை, நாட்டுக்கு அழைத்த வருவது குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றது.

அவர்கள் நாட்டிற்கு வருவதற்காக பயணசீட்டை பெறுவதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிடவேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்தவுடன், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், தனிமைப்படுத்தல் நிலையங்களாக ஹோட்டல்கள் பயன்படுத்தப்படும் போது, ஹோட்டல் உரிமையாளர்கள் ஆளும் தரப்பினருடைய ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இலாபம் ஏற்படுத்தி கொடுக்கும் செயற்பாடாக அந்த முயற்சி அமைந்திருக்கின்றது.

சுகாதார அமைச்சர் மக்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதிப்பதாகவும், மந்திர நீர் நிரப்பப்பட்ட நீரை ஆற்றில் கலந்தும் நாட்டு மக்களுக்கு மூட நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார். ஆனால், இலங்கையில் சில பிரமுகர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள, தடுப்பூசிகளை 70 தொடக்கம் 140 டொலர்கள் செலவில் பெற்றுக்கொண்டு பயன்படுத்தி கொள்வதாக தெரியவந்துள்ளது. பிரமுகர்களின் குடும்பத்தினர் எந்த தடுப்பூசிகளை பயன்படுத்தினாலும் எமக்கு சிக்கல் இல்லை . மாறாக நாட்டு மக்களுக்கும் அந்த வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டும்.

ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தலில் ஊழல் நடந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை – அதற்கான ஆதராங்கள் எவையுமே இல்லை” – ட்ரம்புக்கு எதிராக திரும்பிய அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் !

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கடும் போட்டியளிக்கக் கூடிய மாகாணங்களில் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை நெருங்கியுள்ளார். ஆனால், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி ட்ரம்ப், இந்தத் தேர்தல் வெற்றியை ஏற்காமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தை ஜனநாயகக் கட்சியினர் திருடிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயககட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியாக முடியும்.

அந்த வகையில் ஜோ பைடன் இதுவரை வெற்றிக்கு அருகே 264 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் ஜோ பைடன் வெற்றிக்கு 7 பிரிதிநிதிகள் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேசமயம், ஜனாதிபதி ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.

ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத ஜனாதிபதி ட்ரம்ப்  பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். குறிப்பாக பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்சியா, நிவேடா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள ட்ரம்ப் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். பல்வேறு மாகாணங்களில் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கோரியுள்ளார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், டெலாவேர் நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. நானும், கமலா ஹாரிஸ் இருவரும்தான் வெற்றியாளர்கள். மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது, இன்னும் முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்  வெள்ளை மாளிகையில் கூறுகையில், “ஜனநாயகக் கட்சியினர் ஜனநாயகத்தைத் திருடிவிட்டனர். தேர்தலின் நேர்மையைப் பாதுகாப்பதுதான் எங்கள் குறிக்கோள். இந்த முக்கியமான தேர்தலில் ஊழலையும், திருட்டுத்தனத்தையும் அனுமதிக்கமாட்டோம். வாக்காளர்களை மௌனமாக்கி தேர்தல் வெற்றியைத் திருடுவதையும் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், தேர்தலில் ஊழல் நடந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு, புகழ்பெற்ற செய்தி சேனல்களான ஏபிசி, சிபிஎஸ், என்பிசி ஆகியவை தெரிவித்துள்ளன. ஊழல், திருட்டு நடந்திருப்தற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதை விடுத்து விட்டு ஜனாதிபதி,  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் ” – முஜிபுர் ரஹ்மான்

“கொரோனா ஊரடங்குகளினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதை விடுத்து விட்டு ஜனாதிபதி,  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் ” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், சுயதொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் வரும்போது வீதியோரங்களில் காணப்படும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக ஊடகங்களின் முன்னிலையில் தெரிவித்திருந்தார். ஊரடங்கு காரணமாகவே அவை மூடப்பட்டுள்ளன என்பதை அவர் மறந்து விட்டார் போல, கொழும்புக்குள் நாளாந்தம் ஊதியம் பெற்று வாழ்பவர்களே அதிகளவில் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் காரணமாக இவர்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.  அதற்கமைய ஜனாதிபதி இவர்கள் தொடர்பில் ஊடகங்களின் முன்னிலையில் கருத்துரைப்பதை விடுத்து, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.

அரிசியின் நிர்ணய விலை தொடர்பில் இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரையில் அரசிக்கான நிர்ணய விலை தொடர்பில் மாத்திரம் மூன்று வர்த்தமானிகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் நிர்ணய விலையை அறிவிக்க முடியவில்லை. இவ்வாறான நிலைமையில் எவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை இவர்கள் கட்டுப்படுத்துவார்கள். மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், மக்கள் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டார்கள். சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியையே எதிர்நோக்கி வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.