15

15

கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுக்கடை நீதிமன்ற வளாக தீ !

இன்று கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நான் கொச்சைப்படுத்தமாட்டேன்.

ஆனால், நாட்டின் சட்டத்தை மீறி அவர்கள் செய்த மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால்தான் அவர்களைப் பகிரங்கமாக நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக நாடாளுமன்றில் நான் உரையாற்றினேன்.

ஆயுதப் போராட்டத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களை நேரில் கண்டறிந்தவன் நான். போர் முடிவுக்கு வந்திராவிட்டால் அவர்களின் அவலங்கள் தொடர்ந்திருக்கும். மீண்டுமொரு போரை தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்குத் தந்த அமோக ஆதரவை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வைப் பகிரங்கமாக நடத்த அனுமதிக்க முடியாது என நான் வலியுறுத்திய காரணத்தால் என்னைத் தமிழ் மக்களுக்கு எதிரானவனாக வெளிக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயன்றுள்ளார்கள். ஆனால், நான் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. இன்றும் தமிழ் மக்களை நான் நேசிக்கின்றேன். அரசியல் தீர்வே அவர்களின் கனவாக இருக்கின்றது. எனவே, முழு நாடும் ஏற்கும் ஒரு தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும்.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாராளுமன்றில் பொன்சேகா மாவீரர் தினத்தன்று புரவி புயல் வடக்கில் வீசியிருந்தால் மகிழ்வடைந்திருப்பேன் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் புதிய உருவ அமைப்பை காட்டும் கொரோனா வைரஸ் – ஊரடங்கு மேலும் தீவிரம் !

பிரித்தானியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி மெட் ஹன்ஹாக் கூறியதாவது:-

லண்டன் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் 3 அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், மால்கள் மூடப்படும். பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும்.

சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு 2 மடங்காகி வருகிறது. மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளையும், நீண்ட கால பிரச்சனைகளையும் குறைக்க முடியும் என்பதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பைடன் தான் – ட்ரம்ப் தரப்பின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி !

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். பைடன் 306 வாக்குகளும், நடப்பு ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர்.
அரிசோனாவில் 11 பேர், ஜார்ஜியாவில் 16 பேர், நெவடாவில் 6 பேர், பென்சில்வேனியாவில் 20 பேர், விஸ்கான்சினில் 10 பேர் என தேர்வாளர்கள் குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தனர்.
அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து வாக்களித்து கையெழுத்திட்டனர்.
தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்பில்லை. மேலும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை. அமெரிக்காவில் அதிபராவதற்கு இவர்களது அங்கீகாரம் அவசியமானது.
இதன்படி,  கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன்  பெற்றார். இதன் காரணமாக  270 தேர்தல் வாக்குகளை பெற்று ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக  பதவியேற்பதற்கு இந்த நடைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனெனில், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகும். மேலும், தேர்தலை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பதில் சட்டரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.

குறைந்த வசதியுள்ள வீடுகளிலுள்ள குடும்பங்களுக்கு இலவச வீடு – பிரதமர் பணிப்புரை! 

நாட்டில் குறைந்த வசதிகளை கொண்ட வீடுகளில் வாழும் மக்களுக்காக 7500 வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடு அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இந்த மாத இறுதிக்கு முன்னர் குறித்த வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்படும் 7500 வீடுகளில் 4000 வீடுகள் குறைந்த வசதிகள் கொண்ட வீடுகளில் வாழ்வோரை மீள் குடியேற்றம் செய்யும் நோக்கில் நிர்மாணிக்கப்படுகின்றது. 3000 வீடுகள் மத்திய வர்க்கத்தினருக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது.

மத்திய வர்க்கத்தினருக்காக வீடு வழங்கும் போது குறைந்த அடிப்படை கொடுப்பனவை செலுத்தி வீட்டை உரிமையை வழங்கும் முறை ஒன்றை தயாரிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய மத்திய வர்க்கத்தினருக்கு 30 வருடங்களுக்கு 6.25 வீத வட்டி வீதத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் சென்ற இளைஞர்கள் இருவர் மாயம் ! 

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பி்ரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன், கதைத்துள்ளார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வாரமளவில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் மரணமடைந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணாமல் போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் உள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

LPL 2020 – தம்புள்ளையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது ஜஃப்னா! 

நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தம்புள்ள வைக்கிங் அணிக்கெதிரான இந்தப் போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துரிமாற்றங்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய சார்ளஸ் 76 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பதிலுக்கு 166 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, 19.1 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணிசார்பாக, உபுல் தரங்க 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் பந்துவீச்சில் வனின்டு கசரங்க மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சார்ளஸ் தெரிவானார்.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடன் வரும் 16ஆம் திகதி மோதவுள்ளது.

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகப்பேச்சுவார்த்தை மீள ஆரம்பம்! 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக நடைமுறைகள் வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்னர் தீர்வொன்றை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியா கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியிருந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறைசாரா உறுப்பினராக உள்ளது.

இந்நிலையில், பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை தொடர்கின்றமை குறிப்பிட்டதக்கது.

“பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது” – கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்த விடயம் தொடர்பாக சகல தரப்பினரிடமும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி நிறுவனங்களில் இளம் சமூகத்தினருக்கு வழங்கப்படும் கல்விக்கும், தொழில் வாய்ப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் குறைவு என்றும் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் இதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைப் பெற்று பாடத்திட்டங்களை முழுமையாக நவீன மயப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

8Shares

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மறைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்”அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மறைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் ‘ அமைச்சர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான குழப்பம் மற்றும் அதனை அறிவிப்பது தொடர்பான குழப்பம் என்பன மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு வைத்தியசாலை நிர்வாகமும் தத்தமது வைத்தியசாலையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அந்தந்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.

குறித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தத்தமது மாகாணங்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.

சுகாதார அமைச்சு, அனைத்து மாகாணங்களிலும் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கொரோனாத் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்துக்கும் அரச தகவல் திணைக்கள அலுவலகத்துக்கும் அறிவிக்கும். அதனடிப்படையில் ஒவ்வொரு இரவும் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறை வடக்கு மாகாணத்தில் மீறப்படுகின்றதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.