19

19

“இலங்கை அரசுக்கு எதற்காக காலக்கேடு அளிக்க முன்வந்துள்ளீர்கள் ? ” – சுமந்திரனிடம் சீ.வி.விக்கினேஸ்வரன் கேள்வி !

“சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்’ என நீதியரசர் க.வி.விக்னேஸ்வர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றிலேயே அவர்  அனுப்பி குறித்தவிடயத்தை அறிவித்துள்ளார்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திரு.சுமந்திரன் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,

அன்புள்ள சுமந்திரன் அறிவது,

எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.

அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா? அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா? என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.

எது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமானமாக முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

மீண்டும் காலக்கேடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? உண்மையில் மேலும் காலக்கெடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா? அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள் .

‘தற்போது அவர்கள் குடியியல் பதவிகளுக்கு படையினரைத் தொடர்ந்து நியமித்து வருகின்றார்கள், தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வருகின்றார்கள், தொல்லியல் மேலாண்மை என்ற பெயரில் கிழக்கிலங்கையில் காணிப் பங்கீட்டை நடாத்த பௌத்த மதவாளர்களை நியமித்துள்ளார்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரைக் கண்காணிக்கவும் பயமுறுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். மேலும் முஸ்லீம் சமூகத்தவரின் மதம் சார்ந்த நல்லடக்கச் சடங்குகளைத் தடைபோட்டுத் தடுத்து வருகின்றார்கள்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிக்க செல்வாக்குள்ள அங்கத்தவராக மாறிவரும் சீனாவானது 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடங்கிய உலக ஸ்தாபனங்களில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கியும் பாதுகாப்பையும் வழங்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது’

இவ்வாறெல்லாம் நடக்கின்றன என்று கூறும் நீங்கள் எதற்காக இலங்கைக்கு மேலும் காலக்கேடு அளிக்க முன்வந்துள்ளீர்கள்? “இலங்கை அரசுக்கு எதற்காக காலக்கேடு அளிக்க முன்வந்துள்ளீர்கள் ? ” – சுமந்திரனிடம் சீ.வி.விக்கினேஸ்வரன் கேள்வி !

நீங்களே உங்கள் பரிந்துரையொன்றில் காலக்கேடு அளிப்பதால் ஆவதொன்றில்லை என்ற கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளீர்கள்.

‘தாமதமானது மேலும் நீடித்தால் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள்.

இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் மேலும் காலக்கேடு இலங்கைக்கு வழங்க நீங்கள் முன்வருவது எனக்கு மலைப்பை ஏற்படுத்துகின்றது.

உங்கள் பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும்? அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

ஐங்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் இருந்து தள்ளி நின்று அதற்கு எமது பகைமையை வெளிக்காட்டுவது சரியானதா என்ற கேள்வி உங்கள் மனதில் பூதாகாரமாக எழுந்துள்ளதை நான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திற்கோ இலங்கையைக் கொண்டு செல்ல தமிழர் தரப்பார் இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டுத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றோ பேரவையை பகிஷ்கரியுங்கள் என்றோ நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் பேரவையின் கூட்டுத்தீர்மானத்தை மேலும் பலப்படுத்த மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆகவே இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினரிடமோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினரிடமோ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகளினால் விசேடமாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு ஆயத்திற்கோ பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் நாம் கேட்கலாம்.

அதே நேரத்தில் சமாந்திரமாக நாம் இலங்கையை சர்வதேச நீதி மன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்பான பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாகும். இவற்றைச் செய்ய முடியுமா முடியாதா? என்று மயங்கி நிற்கக் கூடாது. எமது மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் இவற்றைச் செய்வது எமது கடமையும் கடப்பாடாகவும் அமைகின்றது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவையிடம் கோரிக்கை விடலாம். அதாவது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஒரு ஆய்வாளரை நியமிக்கக் கோரலாம். அத்துடன் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்ப்பாடுகளையும் ஆராயுமாறு கோரலாம்.

இவற்றை முழுமனதுடன் நடைமுறைப் படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒரு கடிதத்தை வரைந்து தமிழ்க் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு அதனைப் பாரப்படுத்தலாம். நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இவற்றைச் செய்ய ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

நாம் ஒன்று சேர்ந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போமாக!

எனது கட்சி இதற்காக உங்களுக்கு முழு ஆதரவையும் நல்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி.

அன்புடன்,
நாடாளுமன்ற உறுப்பினர்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

இறைச்சித் தொழிற்சாலை திறக்கப்படுமாயின் முதலாவது விலங்குக்கு பதிலாக எனது கழுத்தை அறுத்துக்கொள்ள முன்வருவேன் ! – முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா காட்டம் !

கட்டுநாயக்க பிரதேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இறைச்சித் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள அந்த தொழிற்சாலையானது ஆசியாவின் மிகப் பெரிய இறைச்சித் தொழிற்சாலையாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது எதிர்ப்பினை வெளியிட்டார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

புத்த பகவான் வந்து சென்ற இலங்கையில் இப்படியானவற்றை செய்வது தவறு. எனது எதிர்ப்பை மீறி இறைச்சித் தொழிற்சாலை திறக்கப்படுமாயின் முதலாவது விலங்குக்கு பதிலாக எனது கழுத்தை அறுத்துக்கொள்ள முன்வருவேன் என்றார்.

“வவுனியா வடக்கில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் கிபிள் ஓயாத்திட்டத்துக்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்களா ? ”- ஆளுநரிடம் சார்ள்ஸ்நிர்மலாநாதன் கேள்வி !

“கிபிள்ஓயா” திட்டம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ள விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், ஆளுநர் எம்.சாள்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு. திலீபன் ஆகியோரது இணைத்தலைமையில் நேற்று (18.12.2020) மாலை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், “வவுனியா வடக்கில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் கிபிள் ஓயாத்திட்டம் என்ற அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்களா ? என்று இணைத்தலைவரான ஆளுநரிடம் கேட்டிருந்தார்.

இதன்போது பதிலளித்த ஆளுநர், இல்லை என்று தெரிவித்தநிலையில் குறித்த திட்டத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று மாவட்டசெயலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

IMG 5548 1

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த திட்டத்திற்காக வரவுசெலவுத்திட்டத்தில் 7ஆயிரம் மில்லியன் ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் இந்த திட்டத்தின் அறிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 2500 ஏக்கர் காடுகளை அழித்து விவசாய நிலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி கொடுக்காமல் அதனை செய்யமுடியுமா? எனவே ஒருங்கிணைப்பு குழு அனுமதி அழிக்காமல் இதனைசெய்ய கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், இது தொடர்பான திட்ட அறிக்கை எமக்கும் வந்தது. நாம் சில ஆட்சேபனைகளை அனுப்பியிருந்தோம். அந்த திட்டத்தின்படி 62 அடி உயரத்திற்கு நீரைதேக்கி, நான்கு கிலோமீற்றர் நீளமான அணைக்கட்டும் அமைக்கப்படவுள்ளது. அதன் அணைக்கட்டு மற்றும் நீரேந்து பகுதி வவுனியா மாவட்டத்திலும் பயனாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர மற்றும் போகஸ்வெவ (சிங்கள குடியேற்றம் செய்த மக்கள்) பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதாக கூறி சுமந்திரனின் முன்மொழிவு யோசனையை நிராகரித்தனர் விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும்! 

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2021 மாரச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்காவென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடியோடு நிராகரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ம.ஆ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட ஜெனிவாவுக்கான முன்மொழிவு யோசனையை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அடியோடு நிராகரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஜெனிவா அமர்வு தொடர்பில் கூட்டாக செயற்படுவதற்கான முன்மொழிவு யோசனை ஒன்றை தயாரித்து, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய இருவருக்கும் அவர்கள் தரப்பு கருத்துகளை அறியும் வகையில் சுமந்திரனால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு அனுப்பிய பதிலில் குறித்த திட்ட யோசனை இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டி அடியோடு நிராகரித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது ஐ.நா.வினால் விசேடமாக உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் ஆயத்திற்கு இலங்கை விடயத்தைக் கொண்டு செல்லுமாறு ஐ.நா.பொதுச் சபையையும், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலையும் கோருமாறு தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஏன் கோரக்கூடாது என்றும் அதற்கு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் அனைதது தமிழ்க் கட்சிகளது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பதில் வழங்குவதாக தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனை நிராகரிப்பதாக சுமந்திரனுக்கு பதிலளித்திருப்பதாக அறியமுடிகின்றது.

சுமந்திரனின் குறித்த திட்ட வரைபில், இருதரப்பு போர்க்குற்றம் என்ற விடயத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டிருப்பது, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வதேசத்தை கையாள்வது என்ற பெயரில் மறைமுகமாக இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதுடன் சார்வதேச ஆதரவையும் தொடர்ந்து வழங்கவைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதே, அதனை இரு தரப்பும் அடியோடு நிராகரிக்கக் காரணம் என அறியமுடிந்தது.