20

20

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: யேசுநாதர் – சிவபெருமான் – அல்லாஹ் உடன் சூம் மீற்றிங் பிரித்தானியர்கள் முட்டாள்களா அல்லது அவர்களது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களை முட்டாள்கள் எனக் கருதுகின்றாரா?

பிரித்தானியா மீண்டும் ஒரு லொக் டவுனுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று சனிக்கிழமை மாலை பிரித்தானியப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக புதன்கிழமை டிசம்பர் 16 அன்று ‘மேரி லிற்றில் கிறிஸ்மஸ்’ என்ற பிரித்தானிய பிரதமர், ‘விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் வராது. லொக்டவுன் கொண்டு வருவது மனிதாபிமானமற்ற செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தார். ‘கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தையொட்டி சமூக இடைவெளியயைப் பேணும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு’ என்றும் ‘கொரோனா வைரஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்றெல்லாம் அரசினுடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதனையும் செவிமடுக்கவில்லை.

தனது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பிரிதானிய மக்களும் பிரித்தானிய பொருளாதாரமும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைதொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது கொன்சவேடிவ் கட்சியும் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெறும் வெற்று வாரத்தைகளின் சோடினையாலும் ‘பஞ்ஜ் டயலக்’ பேசியும் மக்களை வசீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அவரது பேச்சுக்களில் ஒரு போதும் உள்ளடக்கம் இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களை அப்புறப்படுத்தி உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ‘பஞ்ஜ் டயலக்’ தான் எஞ்சியிருக்கும்.

கிரீன்விச் பாடசாலை மீளத் திறப்பு – கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை:
டிசம்பர் 19ம் திகதி புதிய லொக் டவுன் அறிவிற்ப்பிற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக கிறீவிச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 14ம் திகதி விடுமுறையயை அறிவித்தது. அதாவது 17ம் 18ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கால தவணை விடுமுறையயை, வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக திங்கட் கிழமையே விடுமுறையயை வழங்கியது. அதற்குக் காரணம் லண்டனின் பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால், குறிப்பாக பாடசாலை மட்டத்தில் பல ஆசிரியர்கள் அரச விதிமுறைப்படி தனிமைப்படுத்தலுக்குச் சென்றனர். பாடசாலை வகுப்புகளை நடாத்த ஆசியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கிறின்விச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளை மூடுவதாக அறிவித்தது. பாடசாலைகள் பலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் டிசம்பர் மாத ஆரம்பம் முதலே பாடசாலைகளில் மாணவர், ஆசிரயர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலைகள் சீராக இயங்கவில்லை.

ஆனால் அரசு என்ன செய்தது? தொழிற்கட்சியின் அதகாரத்தில் இருந்த உள்ளுராட்சி சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, மறுநாள் மூடிய பாடசாலைகளை மீளத் திறக்க வைத்தது. மக்களுக்கு எதிரும் புதிருமான தகவல்கள் வழங்கப்பட்டு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டனர். கிறின்விச் கவுன்சில் தலைவர் தனது முடிவு சரியானது தான் என்றாலும், அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நிலையில் கிரின்விச் கவுன்சிலின் நிதியயை விரயமாக்க விரும்பவில்லை என்பதால், அரசின் வேண்டுகோளின்படி பாடசாலைகளை மீளத் திறக்குமாறு அறிவித்தார்.

டிசம்பர் 20 இன்று ‘ஜனவரியில் பாடசாலைகள் வழமைபோல் ஜனவரி 4இல் திறக்கப்படமாட்டாது’ என்றும் ‘இரு வாரங்களின் பின்னதாகவே பாடசாலைகள் திறக்கப்படும்’ எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரசின் கோமாளித் தனம் தமிழ்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையளவுக்கு மலிந்துவிட்டது.

ஒரு படத்தில் வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்தவரை ‘பிச்சை தர முடியாது’ என்று செந்தில் விரட்டியடித்துவிட்டடார். அப்போது அங்கு வரும் கவுண்டமணி, அதே பிச்சைக்காரரை திருப்பிக் கூட்டி வந்து பிச்சை கேட்கும்படி சொல்வார். அந்தப் பிச்சைக்காரரும் அதன்படி ‘பிச்சை போடுங்க தாயே ஐயா’ என்று இரந்து நிற்பார். உடனே கவுண்ட மணி ‘பிச்சை தரமுடியாது நாயே! வெளியே போ!’ என்று திட்டி துரத்திவிடுவார். இந்த நகைச்சுவைக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செய்யும் கோமாளி அரசியலுக்கும் ஏதும் வித்தியாசம் தெரிகின்றதா? பள்ளிக் கூடத்தை நீ பூட்டக் கூடாது நான்தான் பூட்டுவேன் என்ற மாதிரித்தான் கிரின்விச் விவகாரம் அமைந்தது.

பிரதமர் பொறிஸ் என் முகநூலையாவது படித்திருக்கலாம்:
தனக்கு கிடைத்த விஞ்ஞானபூர்வமான தகவலின் அடிப்படையில் தான், தனது முடிவை தான் மாற்றியதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது செயலை நேற்று நியாயப்படுத்தினார். ஒக்ரோபர் 31ம் திகதி எனது முகநூல் பதிவு இது: பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! – கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு விடுத்த இந்த எச்சரிக்கையயை பிரதமர் எங்கு சொருகி வைத்தார்? அன்று அனைவரும் கேட்டுக்கொண்டது இடைத் தவணை விடுமுறையயை இரு வாரங்கள் மேலும் நீடித்து முழுமையான லொக் டவுணைக் கொண்டு வந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, ரெஸ்ற் அன் ரேஸ் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இருந்தால், இந்த கிஸ்மஸ் கால விடுமுறையயை மக்கள் ஓரளவு சந்தோசமாக களித்திருப்பார்கள். பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான வாரமான இந்த வாரத்தில் பல நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கும். ஏற்கனவே விளிம்புக்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் தடுத்திருக்க முடியும். தேவைப்பட்டால் ஜனவரி முதல் ஒரு லொக்டவுணைக் கொண்டு வந்திருக்க முடியும். இது எவ்வித திடமிடலும் இன்றி எழுந்தமானமாக அவ்வப்போது வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு கணவன் மனைவியர் எடுக்கும் கடுகதி எதிர்வினைகள் போல் தான் பிரித்தானியா பிரதமரின் ஆட்சி நகர்கிறது. விஞ்ஞானத்தை பின்பற்றுகின்றேன் பொருளாதாரத்தை காப்பாற்றுகின்றேன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி அவற்றை அரசு சீரழித்து வருகின்றது.

அரசின் பொய்யும் புரட்டும்:
அரசின் விஞ்ஞான மருத்துவக்குழுவின் ஆலோசணைகளை அரசு உதாசீனப் படுத்தியது மட்டுமல்ல அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; இதுவெல்லாம் கற்பனைக் கதைகள் என்றெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். பிரித்தானிய பிரதமரும் கொன்சவேடிவ் கட்சியும் அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளான சன் மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களும்; 1980களில் தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்று தமிழ் இயக்கங்கள் ரீல் விட்டது போல கிறிஸ்மஸ் இற்குள் வைரஸ்யை வென்றுவிடுவோம் என்றெல்லாம் ரீல் விட்டன. புதிய வக்சினுக்கு விழுந்துகட்டி அனுமதியயை வழங்கிவிட்டு தாங்கள் தான் உலகத்திலேயே முதல் முதல் வக்சீன் போடுவதாக பீலாவிட்டனர். சினா, கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் வைரஸ்யை முழுமையாக கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வரும் நிலையில் பிரித்தானிய அரசு இன்றும் ‘வாய்ச் சொல் வீரன்’ என்ற நிலையில் தப்பட்டம் அடிப்பவர்களாகவே உள்ளனர்.

சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் புதிய வக்சீனை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் வக்சீன் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளாலும் நோயயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் ரஸ்யாவின் ஸ்புட்னிக்-5 வக்சீனை பரீட்சித்துப் பார்க்க அஸ்ராசெனிக்கா என்ற பெரும் பார்மஸிட்டிகல் நிறுவனமும் முன்வந்துள்ளது. ஸ்புட்னிக் – 5 வக்சீனுக்கு பயன்படுத்திய கூறுகள் வைரஸ்ற்கு எதிராக கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் கூறுகள் இயற்கையான வைரஸ் கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டதால் அந்த வக்சீன் நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் பிரித்தானிய ஊடகங்கள் மூச்சுவிடுவதில்லை. நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக பிரித்தானியாவின் கோவிட்-19 மரணங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் 70,000 தை தாண்டிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

பிரித்தானிய அரசின் ஊழல் மோசடி:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கையாள பிரித்தானிய அரசு 200 பில்லியன் பவுண்களை கடன் வாங்கியது. அதில் 10 வீதமான நிதி 20 பில்லியன் பவுண்கள் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவும் அது தொடர்பான எவ்வித முன் அனுபவங்களும் அற்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளில் பெரும்பாலானவை கொன்சவேடிவ் கட்சியுடன் nநெருக்கமானவர்களின் நிறுவனங்களாகவும் இருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதனிலும் அதனை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளன. ஒரு சில பெனிகளுக்கு சீனாவிடம் இருந்து பொருட்களைத் தருவித்து, அதனை ஐம்பது முதல் ஆயிரம் மடங்கு வரை விலைகளை உயர்த்தி பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். 20 பில்லியனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகளின் உண்மையான பெறுமதி 10 பில்லியன் பவுண்களே என மதிப்பிடப்படுகின்றது. உயிர்களைப் பணயம் வைத்து கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்வதில் பிரித்தானிய ஆளும் கட்சி – கொன்சவேடிவ் கட்சி ஈடுபட்டு இருந்தமை நியுயோர்க் ரைம்ஸ் புலனாய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ‘ரெஸ்ற் அன் ரேஸ்’ போன்ற கோவிட்-19 பரிசோதணை செயற்பாடுகள் கூடி அனுபவமிக்க பல்கலைக்கழகங்கள், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் எவ்வித அனுபவமுமற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறைகாலத்தில் மாணவர்களின் பட்டினியயைப் போக்க நான்கு மில்லியன் பவுண்களை ஒதுக்க மனமிரங்காத பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நெருங்கிய வட்டங்கள் 10 பில்லியனை சூறையாடுவதற்கு அனுமதித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக யுனிசெவ் பிரித்தானியச் சிறார்கள் பட்டினியயை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து விசேட் திட்டத்தை பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இவ்வாறாக பிரித்தானியச் சிறார்களை பட்டினியில் இருந்து காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து ஆண்டு கொன்சவேடிவ் ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டு உள்ளது.

பில்லியனெயர்களின் வருமானம் அதிகரிப்பு:
2020ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியான டேவிட் பெய்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய கணிப்பின் படி கோவிட்ட-19 இன் பாதிப்பினால் உலகெங்கும் 270 மில்லின் மக்கள் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பட்டினியயை நோக்கித் தளளப்பட்டு உள்ளனர். இவர்களை பட்டினியில் இருந்து மீட்க 15 முதல் 20 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஏப்ரல் முதல் யூலை வரையான நான்கு மாதங்களில் உலகில் உள்ள 2200 பில்லியனெயர்கள் – செல்வந்தர்கள் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். அதாவது 1000 பில்லியன் ஒரு ரில்லியன். 2.7 ரில்லியன் சம்பாதித்தவர்களுக்கு ஒரு 20 பில்லியன் வழங்கி 270 மில்லியன் மக்களை காப்பாற்ற முடியாத ஒரு விலங்கினக் கூட்டத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.

அதிஸ்ரவசமாக உழைத்த உழைக்காத அசையும் அசையாத சொத்துக்கள் எதையும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இன்னும் மனித இனம் இப்பூமியில் வாழ முடிகின்றது. தசம் ஒரு வீத சொத்தை பரலோகம் கொண்டு செல்ல முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால் இந்த 2200 செல்வந்தப் பிசாசுகளும் ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து, சொத்துக்களை பரலோகம் கொண்டு போயிருக்கும். இந்தப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாக்கள் சிவபெருமான், யேசுநாதர், அல்லா என்று இப்படி இன்னோரன்னவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் பதிவிடுங்கள் ஒரு சூம் மிற்றிங் போட்டு இதற்கான தீர்வு பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்!

“மக்களின் காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும்”  – பா.உ. வேலுகுமார்

“மக்களின் காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான அளவைப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இது பற்றி மக்களுக்கோ அல்லது உரிய தரப்புகளுக்கோ அறிவிக்காமல் மிகவும் சூட்சுமமான முறையிலேயே திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கண்டி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் உட்பட்டதாக குறித்த தோட்டம் இருந்து வருகின்றது. இவ்வாறான நயவஞ்சக நடவடிக்கைகளால் இப்பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சியின்போது பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கான காணிகள் ஒதுக்கப்பட்டு, மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், எஞ்சிய காணிகள் அம்மக்களுக்கே தலா 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எனினும், இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஆளுங்கட்சி அமைச்சர்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தனர். அவ்வாறு உறுதியளித்துவிட்டு இன்று காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பது பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லில் ஒன்றையும் செயலில் வேறொன்றையும் செய்யும் நயவஞ்சக ஆட்சியே இது என்பது தற்போது புரிந்துவிட்டது.

எமது மக்களுக்கான காணி உரிமையை தாரைவார்க்க முடியாது. எனவே, வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும் என்பதனையும் கூறிவைக்க விரும்புகின்றோம்” – என்றுள்ளது.

“நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வந்துள்ளது ” – சிவாஜிலிங்கம்

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று (20.12.2020) யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகங்களிடம் மேலும் அவர் கருத்து தெரிவித்த போது ,

எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக ஆலோசனை பெறுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டம் ஒன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் மூன்று விடயங்களை முக்கியமாக ஆராய்ந்து இருந்தோம் . ஜெனிவா கூட்டத்தொடரில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் . டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் தீர்வு யோசனையை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்திருந்தோம்.

இதில் குறிப்பாக ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக தமிழர் தரப்பிலிருந்து 3 தமிழ் தேசிய பிரதான அணிகளும் சேர்ந்து அதனுடைய 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு யோசனை சமர்ப்பித்தால் அதே யோசனையை இங்கு இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்கள் மதப் பெரியார்கள் அதேபோல பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் புலம்பெயர் அமைப்புகள் ஏற்றுகொண்டால் அது ஒரு சிறந்த நிலைப்பாடாக இருக்கும் என்ற கருத்திலே நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.

அதிலே குறிப்பாக கருத்தொற்றுமை வருகின்றபோது கால நீடிப்பை மறைமுகமாகவோ நேரடியாகவோ வலியுறுத்துவதாக அமையக்கூடாது என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

இனிமேல் எக்காரணம் கொண்டு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு வந்திருக்கின்றது.

நாங்கள் ஒரு யோசனை தயாரித்திருக்கின்றோம் இந்த யோசனை 3 தமிழ் தேசிய கட்சிகளிடமும் பிரஸ்தாபித்து எங்களுடைய கட்சியை தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் சமர்ப்பித்து எல்லோரும் இணைந்து ஒரு முடிவு எடுக்க கூடியவாறாக தீர்மானித்திருக்கிறோம்.

அதாவது முக்கியமாக இரண்டு கோரிக்கைகளை நாங்கள் வைத்திருக்கின்றோம் . அதேபோல தமிழ்தேசிய மக்கள் முன்னணி,கூட்டமைப்பு ஏதாவதுயோசனைகள் முன்வைப்பார்களாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு முடிவுகளை மாற்றலாம்.

ஆனால் எந்த விதத்திலும் எந்த காரணத்தைக் கொண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்குவதில்லை என்ற அடிப்படையில் கோரிக்கையை முன்வைக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“துறைமுகங்களை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டு தேவைக்காகவே எமது துறைமுகங்கள் ” – அமைச்சர் சி.பி. ரத்னாயக்க

“துறைமுகங்களை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டு தேவைக்காகவே எமது துறைமுகங்கள் ” என அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு இணையாக கொத்மலை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை இன்று (20.12.2020) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால் நாட்டுக்கு நஷ்டம் எனவும், கடன்களை பெறமுடியாது எனவும் விமர்சிக்கப்படுகின்றது. நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே இம்முறை வரவு – செலவுத்திட்டம்கூட தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டு தேவைக்காகவே துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம்தான் 99 வருடகால குத்தகைக்கு துறைமுகமொன்றை வழங்கியது. கடந்த ஆட்சியின்போதே பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இதனால்தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறமாட்டார் எனவும், அவருக்கு சிறுபான்மையின மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.இந்நிலைமையும் மாற்றியமைக்கப்பட்டது.

ராஜபக்சக்களுக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியாது என அன்று குறிப்பிட்டனர். ஆனால் ராஜபக்சக்கள் அதனை செய்துமுடித்தனர். நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது எனவும் சுட்டிக்காட்டினர். எனினும் அபிவிருத்தியையும் செய்து காட்டினர். அதுமட்டுமல்ல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்றனர். ஆனால் ராஜபக்சக்கள் வெற்றிநடைபோட்டனர்”  என அவர் குறிப்பிட்டு்ளார்.

“சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் திட்டம் விரைவில் ” –  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை குறைக்கும் நோக்கில் முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது. இதன் காரணமாகவே முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கழிவு நீர் கொண்டு போகும் யாழ்ப்பாணமும் மறைந்து போய்விட்ட பொது நல சிந்தனையும் ! – அருண்மொழிவர்மன்

இங்கு பதிவிடப்பட்டுள்ள படங்கள் யாவும் யாழ்ப்பாண மாநகர வடிகால் துப்புரவுப்பணியின் போது குவிந்த பிளாஸ்டிக் உட்பட்ட கழிவுகள் மட்டுமேயாகும். இது போல துப்புரவு செய்யப்பட்ட இடங்கள் யாவிலும் அளவுக்கு அதிகமாகவே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

 

 

 

சரி விடயத்துக்கு வருவோம். இந்த படங்களை பதிவிட்டு பகிர்ந்து கேலி பேசிவரும் எம்மில் பலர் அதற்கு அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகர சபை மட்டுமே பொறுப்பு – ஒழுங்காக கழிவுகளை அகற்ற அவர்கள் தவறி விட்டார்கள் , Filter system அறிமுகம் செய்யப்படவில்லை என ஆளாளுக்கு அரசின் மீதும் ஏனையோர் மீதும் பழிகளை போட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ள பார்க்கிறோமே தவிர சரி இனிமேலாவது “குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட முயற்சிப்போம் ” என எந்தக்கருத்துக்களையும் யாரும் முன்வைப்பதாக தெரியவில்லை.
அவ்வளவு தூரம் சுயநல சிந்தனையுள்ளோராக நாம் குறுகிவிட்டோம் என்பதை இம்முறை அதிகரித்த மழை நாட்களினுடைய யாழ்ப்பாணத்தின் நிலை தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கின்றன.
முக்கியமாக யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறப்புறங்களில் போகவழியில்லாது மழைநீர் தேங்கி வீடுகளே குளம் போல காட்சியளித்தது. தெருக்கள் அனைத்திலும் நிறைந்த தண்ணீர் போக வழியில்லாது வைத்தியசாலையையும் நிறைத்ததது. அதன் போதும் அரசின் மீதே பழிபோட்டு நகர நாம் முற்படுகிறோமே தவிர முறையான கழிவகற்றல் முகாமைத்துவம் பற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணரத்தவறிவிடுகின்றோம்.
அதிலும் இம்முறை யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறங்கள் தொடங்கி நல்லூர் , மானிப்பாய், என பல இடங்களில் தேங்கிய நீர் நம்முடைய மனதும் பொதுநல சிந்தனையும் எவ்வளவு சுருங்கிப்போய்விட்டது என்பதை தெளிவாக காட்டியது. நகர கட்டமைப்பும்,  அதிக சனத்தொகையும் கொண்ட கொழும்பு, களுத்துறை, உள்ளிட்ட நகரங்களில் கூட இம்முறை பெரிதாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் கடல் பகுதி அண்மையிலுள்ள யாழ்ப்பாணத்தில் தண்ணீர் போக இடமில்லாத அளவுக்கு எங்களுடைய சுயநலம் தண்ணீரை மறித்து தேக்கி வீடுகளுக்குள் அனுப்பி விட்டது என்பதே உண்மை.
Image may contain: outdoor, nature and water
வாய்க்கால்கள் இருந்த – இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து நீண்டு கொண்டே செல்லும் எங்களுடைய கடைகள் மற்றும் கட்டிடங்களின் எல்லை , தண்ணீர் ஓட வழியே விடாது முழு நகரத்தினதும் சந்து பொந்துகளை கூட விடாது ஆக்கிரமித்து எழுப்பப்பட்டுள்ள மதில்கள், காணாமல் போன – போய்க் கொண்டிருக்கும் குளங்கள்,  குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போட இடம் கொடுக்காத மெத்தப்படித்த மேதாவித்தனம் என இப்படி எத்தனையோ காரணங்களின் சேர்க்கையே நாம் எதிர்கொண்ட இந்த வெள்ளப்பெருக்கின் பின்னணி.  அதிலும் கொடுமை பலர் இதற்கும் அரசை திட்டியது தான்.
யாழ்.நகரத்தின் எல்லா பகுதிகளிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு குப்பைகளை யார் இந்த வாய்க்கால்களுக்குள் கொட்டியது ..? நாம் ஒவ்வொருவரும் தான். அதிலும் பிளாஸ்டிக் போத்தல்களே அதிகம்.  யாரும் சமூக சிந்தனையோடு செயற்பட யோசிப்பதில்லை. நாம் சிறுக சிறுக வீசியெறிந்த போத்தல்களும் பொலித்தீன் பைகளுடைய சேர்க்கையுமே இந்த மழைநீர் தேக்கமும் அதன் மூலமான இடர்களும்.
Image may contain: outdoor
 நகரவடிகாலமைப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியதற்கு பொறுப்பாக உள்ளவர்களுடைய மெத்தனப்போக்கும் இதற்கான ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணமில்லை. முடியுமானவரை சூழல்பாதுகாப்பு தொடர்பாக கவனமாக இருப்போம்.
நீர் நிறைந்து வெளியேற வழியில்லாது உள்ளது என அலட்டிக்கொள்ளும் நாம் நம்முடைய வீடுகளை சுற்றிவர அடைத்துவிட்ட மதில்கள் பற்றி சிந்திப்பது கிடையாது. நம்மைப் போல ஒவ்வொருவரும் அடைத்து விட்ட இந்த மதில்களே பாதிக்காரணம் நீர்த்தேங்கி நின்று இடர் ஏற்பட. ஒருகாலம் வேலிகள் பயன்பாட்டில் இருந்த போது இப்படியான பிரச்சினைகள் எவையுமே ஏற்பட்டதில்லை. குளங்களை அழித்து விட்டோம். அது பற்றி சிந்திப்பதில்லை. குளத்து நிலங்கள் எல்லாம் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளன. நீர் ஓடாத படிக்கு வாய்க்கால்களை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாத  நம்முடைய மெத்தனத்தனத்தால் நிரப்பி விட்டோம். பிறகு என்ன..? நீர் வெளியேறவும் வழியிருக்காது. நீர் தேங்கவும் குளமிருக்காது.
சிந்திப்போம். அமெரிக்காவின் கமலாஹாரிஷ் தமிழர் என்று பாராட்டிக்கொண்டும் அமெரிக்காவில் உயர் பதவி வகிக்கும் யாழ்ப்பாணத்து தமிழர் என்றும் பெருமை பாடிக்கொண்டிருக்கும் நாம் தான் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது செயற்படுகின்றோம்.
சரி பிறவிடயங்களை விடுவோம் இந்த குப்பைகள் வாய்க்கால்களில் அடைத்துப்போய் விட்டால் அதனை அள்ள வேண்டிய பணியில் ஈடுபடுவோரும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
Image may contain: outdoor
ஈரான் – அமெரிக்க பகையை ஆருடம் கூறி முன்னெச்சரிக்கையாக வாகனங்களில் பெற்றோலை நிரப்பி வைத்துக்கொள்ளும் அளவிற்கு எதிர்காலம் பற்றி சிந்திக்க தெரிந்த நாம் , கல்வி கற்ற சமுதாயம் என நம்மை நாமே பெருமை பாராட்டிக்கொள்ளும் நாம்  இந்த கழிவகற்றல் முகாமைத்துவம் என்கிற விடயத்தில் அவ்வளவு சுயநலமாக நடந்துகொள்கிறோம் என்பது அவ்வளவு வேதனைப்பட வேண்டியதும் வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும்.
இனிவரும் காலங்களில் சரி சிந்தித்து செயலாற்றுவோம். இப்போதும் சிந்தித்து செயலாற்ற தவறுவோமாயின் கடல்கொண்டு போன மதுரை நகர் போல  கழிவுநீர் கொண்டு போன யாழ்ப்பாண நகர் என எதிர்கால சந்ததியினர் நகைக்க இடமுண்டு. எனவே நாம் சூழல் நேயமுள்ளோராக மாறுவதுடன் நம்மை சுற்றியுள்ளோரையும் சூழல்நேயமுள்ளோராக்க முயற்சிப்போம்…!

“இணைய வழி வகுப்புகளில் கைபேசிகளை பாவிப்பதன் மூலம் மாணவர்களின் கண் பாதிப்பு , மூளைச் சோர்வு ஏற்படும் அபாயம்” – யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை !

“இணைய வழி வகுப்புகளில் கைபேசிகளை பாவிப்பதன் மூலம் மாணவர்களின் கண் பாதிக்கப்படும் அபாயம்”  என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

தற்பொழுது கொரொனா அச்ச நில காரணமாக தனியார் கல்வி நிலையங்கள் செயற்படாத நிலையில் இணையவழி மூலம் அதிகளவிலான கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்திற்கு பின்னர் இளம் பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . குறிப்பாக பாடசாலை கல்வியானது இடையிட்டு நடைபெறுவதும் பாடசாலை கல்வி செயற்பாட்டுக்கு தொடர்ச்சியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது இது குழந்தைகளின் கல்வியில் பாதிப்பையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தும்.

ஆனால் கல்வி நடவடிக்கைகளை கூட்டுவதற்காக ஆசிரிய சமூகமும் கல்விச் சமூகமும் தற்போது இணையவழி மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் இது ஓரளவுக்கு ஆரோக்கியமானது என்றாலும் நேரடியாக கல்வி கற்பித்தலுக்கும் இணையவழி மூலம் கல்வி கற்பிப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

அதாவது ஒரு ஆசிரியர் நேரடியாக கல்வி கற்பிப்பதிலும் கணினி மூலம் கல்வி கற்பிப்பதற்கும்வித்தியாசம் உண்டு . குறிப்பாக மாணவர்களை அருகில் வைத்து கற்பிக்கும்போது உடல் மொழி மூலமும் சில கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது இணையவழி மூலம் ஏற்படுகிற போது அது இடம்பெறாது.

மேலும் கணணி திரைகளின் மூலம் கற்பிக்கப்படுகிற போது ஒரு குறிப்பிட்ட பகுதியினை மாத்திரமே மாணவர்கள் பார்த்துக்கொள்வார்கள் தொடர்ச்சியாக கணனித் திரையை பார்க்கும் போது மூளைச் சோர்வு நிலை ஏற்படுகின்றது . இதனால் அவர்களது கிரகிக்கின்ற தன்மை குறையலாம் இதனால் இணைய வழி வகுப்புகளைநேரடி கல்வியுடன் ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.

அடுத்ததாக தொடர்ச்சியாக இணைய வழிக் கல்வியில் ஈடுபடும் போது அவர்களுடைய கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம் குறித்த ஒரு பகுதியை மாத்திரம் தொடர்ச்சியாக நோக்கும்போது கட்புலன் பாதிப்பு ஏற்படும் . தலையிடி,கண் நோ ஏற்படும்இதனால் மாணவர்கள் சிரத்தையுடன் கல்வியை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படும் நீண்ட நாட்களுக்கு பிறகு கண் பார்வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக ஒவ்வொருவருடைய பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப இணையவழி வகுப்பிற்கு தொலைபேசிகளை பாவிப்பார்கள்.

அதிகளவிலான இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்வோர் சிறிய தொலைபேசிகளை பாவிப்பதன் மூலம் அவர்களுடைய கண் பாதிக்கக் கூடிய நிலை காணப்படுகிறது இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அத்தோடு இணைய வகுப்புகளின் போது கட்டாயமாக அடிக்கடி இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் தொடர்ச்சியாக சில இணைய வழி வகுப்புகள் நடைபெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் இணையவழி வகுப்புகளின் போது இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுத்து வகுப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமான விடயமாகும். இணைய வழி மூல தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனுடன் மனிதன் தொடர்பு கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைகின்றது.

இது ஒருவித உளதாக்கத்தை ஏற்படுத்தலாம் குறிப்பாக மனச்சோர்வு நிலை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன இதற்கு நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.முக கவசம் போடுவது போல் கொரோனாவிற்காக மக்கள் மன கவசத்தையும் மக்கள் கையில் பற்ற வேண்டிய காலமிது எனவும் தெரிவித்தார்.

“கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்க யோசனை ” – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

“கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது” என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன ஆங்கில இணையத்தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேத அறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிசடங்குகள் முடிவடையும் வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீர்கொழும்பு கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

“வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்” – குருணாகலில் பிரதமர் மகிந்த !

“வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(19.12.2020) குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இதற்கு முன்னர் அரச நத்தார் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மன்னார் போன்ற நகரங்களை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. எனினும், இம்முறை  நத்தார் தின அரச நிகழ்வுகளை குருநாகலில் கொண்டாடுகின்றோம்.

நத்தார் தின அரச நிகழ்வுகளை குருநாகலில் கொண்டாடுவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் முதலில் ஆயர் சம்மேளனத்திற்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோன்று என்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்த மாவட்டத்தின் கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பு கிடைத்தமை குறித்தும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கத்தோலிக்க மக்கள் போன்று கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இதுபோன்ற நத்தார் தின அரச நிகழ்வொன்றை நடத்துவதற்கு கிடைத்தமை குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

சமாதானத்தின் செய்தியை உலகிற்கு தெரியப்படுத்துவதையே நாம் அனைவரும் செய்கின்றோம். இவ்வாறு நாம் அனைவரும் இணைந்து நத்தார் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் நாம் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம்.

இம்முறை நத்தார் பண்டிகையை கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு வழமைப்போன்று கொண்டாட முடியாது. வேறு நாட்களில் நத்தார் தின பிரார்த்தனைகளின்போது பெருந்தொகையானோர் கலந்து கொள்வர். அதேபோன்று உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமையாக, நட்பை பரிமாறிக் கொள்ளக் கூடியதாகவிருந்தது.

எனினும், இன்று அவ்வாறு செய்ய முடியாது. இன்று முகக்கவசம் அணிவது காரணமாக அயலவர்களுடன் புன்னகைப்பதற்கேனும் வாய்ப்பின்றியுள்ளது. அந்த வெளி நிகழ்வுகள் இல்லாத போதிலும், எவ்வாறான தடைகள் காணப்படினும், பிரச்சினைகள் இருப்பினும் அயலவர்கள் மீது உங்களது இதயத்தில் உள்ள அன்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை நான் அறிவேன்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையின் போதே கத்தோலிக்கர்களாகிய உங்களுக்குள் காணப்படும் பக்தி, அன்பு மற்றும்நம்பிக்கை உணர்வு என்பன இந்நாட்டிற்கு முக்கியமானதாக அமைகின்றது.

இன்று நமக்கு மாத்திரமின்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுகாதார பரிந்துரைகளுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை கத்தோலிக்க மக்கள் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவது தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவர்கள். தூர நோக்குடையவர்கள்.

தங்களது மதத்தின் சம்பிரதாயங்கள், சடங்குகளுக்கு மேலாக பொது மனித இனம் பற்றி இந்த நெருக்கடியான தருணத்தில் சிந்திக்க கத்தோலிக்க மக்கள் தூண்டப்படுவார்கள் என்று நான் அறிவேன். கத்தோலிக்க மக்கள் முழு உலகிற்கும் கூறும் முக்கியமான நத்தார் செய்தியே இந்த பொது மனிதன் குறித்த உணர்வாகும்.

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர். அதாவது 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, உங்களது பல முக்கியமான தேவாலயங்கள் போன்று கொழும்பின் முன்னணி ஹோட்டல்கள் மூன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.500இற்கும் அதிகமானோர் காணமடைந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதற்காக தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்களாவர்.

இது ஆசியாவில் மாத்திரமின்றி, சர்வதேச மட்டத்திலும் சிவில் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலாகும். பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய அனைவரும் அமைதியாக செயற்பட்டு உலகின் பாராட்டை பெற்றோம்.

வெறுப்பு வெறுப்பை தணிக்காது என்று புத்தபெருமான் கூறியுள்ளார். ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை திருப்பி காட்டுமாறு இயேசு கிறிஸ்து தெரிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முழுமையாக அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுமாறு நான் அறிவுறுத்தினேன். அதேபோன்று தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த வாரம் பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

நத்தார் தின அரச நிகழ்வை முன்னிட்டு இப்பிரதேச தேவாலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இச்சந்தர்ப்பத்தில் நான் கூற விரும்புகிறேன். எமக்கு மதச்சார்பற்ற நாடு தேவையில்லை.

அவ்வாறு மதம் வேண்டாம் என்பவர்களுக்கு கடந்த காலத்தில் சிறந்த பதில் கிடைத்தது. சமய ஒழுக்கவிதிகளுக்கு அமைய வாழும் சமூகமொன்றே எமக்கு வேண்டும். சமய விழுமியங்களுக்கு அமைய செயற்பட்டாலேயே அவ்வாறான சமூகமொன்றை உருவாக்க முடியும்.

அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராகவிருக்கின்றோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்நாட்டு மக்களை தேவாலயத்திற்கு, விகாரைக்கு, ஆலயத்திற்கு மிகுந்த நெருக்கமடைய செய்வதன் ஊடாக மதிப்பு நிறைந்த மக்கள் சமூகமொன்றை உருவாக்குவதே எமது முக்கிய நோக்கம். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் நீங்கள் முதலையாக மாறினாலும் அரசு பொறுப்பல்ல ” – பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ

உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ.
முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட போல்சோனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். அவருக்கு, 3 முறை கொரோனா பரிசோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது கொரோனா பரிசோதனையில் போல்சொனாரோவுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு
வந்ததையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார்.
இதற்கிடையில், கொரோனா வைரசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியாகியுள்ளது. இதனால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும், தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு பைசர் நிறுவனம் பல நாடுகளில் விண்ணப்பம் செய்துள்ளது. பிரேசில் நாட்டிலும் பைசர் நிறுவனம் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பத்துள்ளது.
ஆனால், பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் அதை போட்டுக்கொள்ளப்போவதில்லை என பிரேசில் ஜனாதிபதி போல்சோனாரோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். அது தனது தனிப்பட்ட உரிமை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்கள் முதலையாகவும் மாறலாம் போல்சேனாரோ தெரிவித்துள்ளார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் (பிரேசில் அரசு போட்டுள்ள ஒப்பந்தம்) மிகவும் தெளிவாக உள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் (பிரேசில் அரசு) எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் நீங்கள் முதலையாக மாறினாலும் அது உங்கள் பிரச்சனை எனக் குறிப்பிட்டுள்ளார்.