2021

2021

சில நாட்களுக்குள் இந்த அரசு வெடித்துச்சிதறும் – இராஜாங்க அமைச்சர் ஆருடம் !

அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கிலாந்தில் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமிக்ரோன் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் என்று புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி வருகின்றன.  இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஒமிக்ரோன் முந்தியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமிக்ரோன் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ரோசன்னா பர்னார்ட் தெரிவித்துள்ளார்.  முக கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டன. திங்கட்கிழமை முதல், அரசின் மற்றொரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட சாத்தியமான வழிகாட்டுதல்கள் தொடங்குகிறது. அடுத்த வாரம் முதல், பெரும்பாலான இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்ய முன்பு யோசியுங்கள் – அனுரகுமார எச்சரிக்கை !

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தால், சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு விதிக்கும் நிபந்தனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதிக் கட்டுப்பாட்டை நீக்கவும், அரசாங்கத்தின் உள்ளுணர்வுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை வழிநடத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் நிலைமையை மீளாய்வு செய்த பின்னரே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் தேவையில்லாதது. மஹிந்தவின் வழிக்கு வாருங்கள் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

“பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருகின்றனர்.” என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று (11.12.2021) மாலை 3 மணியளவில் சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் “தமிழர் தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் படித்த ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆனால் அது வேட்புமனுவில் காணப்படவில்லை. 2022ஆம் ஆண்டு தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கலாம் . சாணக்கியன் போன்ற ஐந்தாறு இளைஞர்களை நாங்கள் களமிறக்கியிருந்தால் நாட்டையே தலைகீழாக மாற்றி இருப்போம் மாறுகின்ற உலகத்திலேயே நாங்கள் நிறைய மாற்றங்களை உள்வாங்க வேண்டும்.

சமஷ்டி என்ற சொல் அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. ஆனால் சமஷ்டிக்கான விளக்கம் தற்போது மாறிவிட்டது. சம்பந்தன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பொழுது பிரித்தானியாவில் அன்றிருந்ததைப் போன்று இலங்கையிலும் யாப்பை அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் இன்று உங்கள் நாடு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால் எமது நாடோ பின்னோக்கி சென்றுவிட்டது என்றார்.

சம்பந்தன் அன்றைய சிந்தனையோடு இருக்கவில்லை. புதியதையும் உள்வாங்குகிறார். அதனாலேயே இன்றும் அவர் எமக்கு தலைவராக இருக்கின்றார்.

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போதைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13க்கு அப்பால் சென்று அர்த்தபுஷ்டியான தீர்வைத் தருவோம் என்கிறார். ஆனால் சில தமிழ் கட்சித் தலைவர்களோ 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருகின்றனர்.

13ஆம் திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது அதனை திருத்த முடியாது என இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறுகின்றார். 13ஆம் திருத்தத்தின் சில முக்கியமான நல்ல விடயங்கள் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டு அதையும் தாண்டிய அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்றார்.

அனைத்து அநியாயங்களுக்கும் பின்னிருப்பது லாபம் ஒன்றே! கொரோனா உயிரிழப்புகளும் இந்த லாபத்தினால் தான்!!!

இந்த கொரோனா பரவல் என்னவோ இயற்கைக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவு என்றே ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இன்று ஈராண்டுகள் கடந்தும் கொரோனாவை மருத்துவ உலகம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது இயற்கையை மீறிய சக்தியால் அல்ல. சில மனிதர்களை அல்ல பண முதலைகளை ஆட்டி வைக்கின்ற லாபம் என்கின்ற போதையால். இதனை விளக்குவது ‘குவான்டம் மக்கனிக்ஸ்’ அளவுக்கு ஒன்றும் பெரிய விசயம் அல்ல. பாலர் வகுப்புக்குச் செல்லும் பிள்ளைக்கும் விளங்கப்படுத்தக் கூடிய அடிப்படைக் கணிதம். ஆனால் என்னவோ பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமையில் உள்ள பிரித்தானிய கொன்சவேடிவ் அரசுக்கு மட்டும் ஏறுதில்லை.

பிரித்தானிய மண்ணில் உலகப் பிரசித்திபெற்ற ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அனுசரணையோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அஸ்ராசெனிக்கா – AztaZeneca வால் தயாரிக்கப்பட்ட வக்சினே முதன் முதலில் மேற்கு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட வக்சீன். இந்த வக்சீன் தயாரிப்பில் பொதுப்பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பலரும் இந்த பரீட்சார்த்த பரிசோதணைகளுக்கு மனமுவந்து தங்களை ஒப்படைத்தனர். அதே போல் அமெரிக்க நிறுவனமான பைசர் – Pfizer ஜேர்மனியின் பயோன்ரெக் BioNTech நிறுவனத்தோடு சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான வக்சீனை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டது. ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் கணிசமான அளவு பொதுப்பணத்தை குவித்திருந்தன.

அஸ்ராசெனிகா பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கவும் சில வாரங்களிலேயே பைசர் வக்சீனை அங்கீகரித்தது. பிரித்தானியாவும் பைசர் வக்சீனை அங்கீகரித்தது. ஆனால் இன்று வரை அமெரிக்கா அஸ்ராசெனிக்கா வக்சீனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரித்தானியாவோ பைசருடைய பூஸ்ரர் – booster வக்சீனைத் துரிதப்படுத்தி வருகின்றது.

மருத்துவ செலவீனங்களின் அடிப்படையில் இந்த வக்சீன்களின் அடிப்படையான எம்ஆர்என்ஏ வக்சீனை உருவாக்குவதற்கு அடிப்படையான செலவு 76 பென்ஸ் – 76 pence (£0.76) (ஒரு வக்சீனைத் தயாரிக்க ஒரு பவுண்டிலும் பார்க்க குறைவான செலவு) என செல்பீல் பல்கலைக்கழக மருத்துவ வக்சீன் ஆய்வாளர் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இதனை அஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. இதன் விலை மிகவும் கண்ணியமானது. இவ்வாறான வக்சீன்களை உருவாக்குவதற்கு நீண்டகால ஆய்வுகள் பரிசோதணைகள் மற்றும் அவற்றை சேமிப்பது, பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வது போன்ற போக்குவரத்து என அதற்கு மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனங்கள் இருக்கும். தயாரிக்கும் வக்சீன்களின் எண்ணிக்கை கூடக் கூட ஒரு வக்சீனுக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறைந்து செல்லும். இதனையே எக்ககொமிஸ் ஒப் ஸ்கேல் என்பார்கள். ஒரு பொருளை பெரும்தொகையில் உற்பத்தி செய்கின்ற போது மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறையும்.

ஆஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்யும் வக்சீனை பைசர் கடந்த ஆண்டு எட்டுப் பவுண்களுக்கு விற்பனை செய்தது. இந்த ஆண்டு இந்த பூஸ்ரர் வக்சீனை 22 பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. முன்னைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பைசர் தனது வருமானத்தை 7 பில்லியன் அமெரிக்க டொலராக 134 வீதத்தால் அதிகரித்து இருக்கின்றது. செல்வந்த நாடுகளுக்கு மட்டும் தனது வக்சீன்களை விற்பனை செய்து லாபமீட்டும் பைசர் நிறுவனம் உலகின் ஏனைய பாகங்களுக்கு வெறும் கண்துடைப்பிற்கு ஒரு சில மில்லியன் வக்சீன்களையே வழங்க முன்வந்திருந்தது. அதுவும் உடனடியாக வழங்கப்படவில்லை.

மேலும் உலக சுகாதார நிறுவனம் ஆரம்பம் முதல் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றது. அதாவது எல்லா நாடுகளிலும் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒரு கொரோனாவில் இருந்து தப்ப முடியாது. தற்போது பரவி வருகின்ற ‘ஒமிகுரொன் – Omicron கொரோனா அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, உலகிலேயே மிகக் கூடுதலான வக்சீன் போடப்பட்ட சனத்தொகையுடைய, ஒரு தீவுமான பிரித்தானியாவில் ஒமிகுரோன் வேகமாகப் பரவி வருகின்றது. காரணம் உலகின் ஏனைய பாகங்களில் மக்கள் தொகையில் ஓரிருவீதமானோருக்கு கூட வக்சீன் கிடைக்கவில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மருத்துவ முதலைகளான இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனை எப்படி தயாரிப்பது என்ற தொழில்நுட்பத்தை வழங்க மறுக்கின்றன.

பொதுமக்களின் வரிப்பணத்தை வழங்கி அரசுகள் ஆய்வுகளை மேற்கொள்ள உதவின, மக்கள் தங்களை பரிசோதணைகளுக்கு ஒப்படைத்திருந்தனர். ஆனால் லாபத்தை சுரட்டுவதற்காக பைசர் போன்ற நிறுவனங்கள் கொரோனாவை முற்றாக அழிந்து போகவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது என பிரித்தானியாவின் நம்பகமான தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 channel 4, டிசம்பர் 10 டிஸ்பச்சஸ் – dispatches என்ற ஆவணப்படத்தினூடாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் பைசர் ஏனைய வக்சீன்களின் தரத்தை குறிப்பாக அஸ்ராசெனிக்காவின் தரத்தை திட்டமிட்டமுறையில் மழுங்கடிக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு துணை நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றது. அஸ்ராசெனிகா பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தொனியிலும் புற்றுநோயை உருவாக்கும் என்ற தொனியிலும் இந்த பிரச்சாரங்கள் சுகாதார அமைப்புகள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த பிரச்சாரங்களினால் நான் வக்சீன் போடச் சென்றபோது அஸ்ராசெனிக்காவை போடுவதில் என்னையும் அறியாதவொரு பயம் இருந்தது. ஆனால் பல லட்சம் மில்லியன் பேர் தற்போது அஸ்ராசெனிக்கா வக்சீனைப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் பைசர் நிறுவனம் பரிசோதணை காலத்தில் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதுடன் அவற்றை வெளிக்கொணர்ந்த ஒருவரை வேலை நீக்கம் செய்திருந்தது. தற்போதைய நிலையில் இவ்விரு வக்சீன்களுமே விலையைத் தவிர நோய்த்தடுப்பை பொறுத்தவரை ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளன.

மேலும் பைசருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பைசருக்கு எதிராக வழக்குகள் வந்தால் அவை பிரித்தானியாவில் நடத்தப்பட முடியாது என்றும் அவைபற்றி வெளியே தெரியப்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதையும் சனல் 4 அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறான மோசமான உடன்படிக்கைகள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ்ஜோன்ஸனின் ஆட்சியில் மட்டுமே நடக்கின்றது. வேறு எந்தவொரு நாடும் இவ்வான அதிகூடிய விலையில் வக்சீனை வாங்கவோ மோசமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடவோ இல்லை.

இந்த லாபம் மீதான காதல் ஒன்றும் பல்தேசியக் கொம்பனிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல. கண் மருத்துவப் பரிசோதகராக இருக்கின்ற இங்கிலாந்தில் வாழும் மௌலியா செல்வராஜா இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாமை நடாத்தி வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச கண்ணாடியை வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். இவ்வாறான ஒரு சிகிச்சை முகாம் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முல்லைத்தீவில் இறுதியில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஒரு முகாமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டை போட்டது வேறு யாரும் அல்ல யாழ்ப்பாணத்தில் தனியார் கண் சிகிச்சை நிலையங்களை நடாத்தி வந்த தமிழ் கண்மருத்துவர்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலுமே லாபமே நோக்கமாகின்ற போது அவை பல்வேறு அநியாயங்களுக்கும் இட்டுச்செல்கின்றது.

இன்று புற்றுநோய் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தப் புற்றுநோயை ஏற்படுத்துவதில் புகைத்தல் முக்கிய காரணியாக இருக்கின்றது. சிகரெட் பாவனைக்கு வந்த காலங்களிலேயே அது உணரப்பட்டும் இருந்தது. ஆனால் அது உயிராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் அதன் விற்பனை முடக்கிவிடப்பட்டு பல லட்சம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக்கப்பட்டனர். லாபத்திற்காக.

பாலம் கட்டும் பொறியியலாளர்கள் ஏன் கட்டுமானத்தில் ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவதில்லை? 2017இல் கிறீன்பெல் ரவர் – Greenfell Tower எரிந்து 80 வரையான குடியானவர்கள் கொல்லப்பட என்ன காரணம்? தீப்பிடிக்காத பொருட்களில் அமைக்கப்படவேண்டிய க்ளேடிங் – cladding கிங்கு பதிலாக இலகுவில் தீப்பற்றக்கூடிய க்ளேடிங் – cladding கை பயன்படுத்தியது. ஏன்? உணவுப் பொருட்களில் கலப்படம் எதற்கு? உற்பத்தியைக் கூட்டினால் சுற்றாடல் மாசடையும் என்று தெரிந்தும் ஏன் ஆடம்பரப் பொருட்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்கின்றோம்?

மதுபானத்திற்கு பல லட்சம் பேர் அடிமையாகின்றனர். குடும்ப வன்முறையில் இருந்து தன்னுணர்வு இழப்பு என்று மரணத்திற்கும் இட்டுச்செல்கின்றது. ஆனால் குடிக்கும் தண்ணீரின் விலையிலும் பியரின் விலை குறைவாக இருக்கின்றது. ஏன்?

அவ்வளவு ஏன் இந்த சிற்றின்பங்கள் எல்லாவற்றையும் திறந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம் என்று எம் பெருமானின் சன்நிதானத்துக்கு போனால் ஜயா அர்சினைக் ரிக்கற் கேட்கின்றார். ஏன்?

உலகின் மிகச் சிறந்த பொருளியல் சிந்தனையாளர்கள் அடம் சிமித் – கார்ள் மார்கஸ். முற்றிலும் முரண்பட்ட பொருளியல் சிந்தனைகள். கைத்தொழில் புரட்சிக்கு வித்திட்ட காலகட்டத்தில் பிறந்த அடம் சிமித் ஒவ்வொரு மனிதனும் மற்றையவர்களைப் பற்றி எண்ணாமல் தனது நலனின் அடிப்படையில் மட்டும் செயற்பட்டால் எம்மை அறியாமலேயே மறைத்திருக்கின்ற கைகள் சமூகத்தை நேர்வழியில் இட்டுச்செல்லும் என்கிறார். அவரின் கருதுகோள் என்னவென்றால் சந்தைக்கு பொருட்களை கொண்டுவருபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு என்ன விலையை நிர்ணயித்தாலும் இறுதியில் அங்கு இயற்கையான சமநிலையொன்று கொண்டு வரப்படும் என்கிறார். அதாவது அதீத லாபம் வைத்து பொருட்களை ஒருவர் விற்றால் அவரிடம் இருந்து யாரும் பொருட்களை கொள்வனவு செய்ய மாட்டார்கள். மாறாக பொருட்களை மிகக்குறைவான விலைக்கு விற்றால் அப்படி விற்பவரால் செலவை ஈடுசெய்ய முடியாது. ஆகவே சந்தை எப்போதும் ஒரு சமநிலையைப் பேணும். அதனை கட்டுப்படுத்த வேண்டியதில்லை.

அடம் சிமித் சொன்னதை இவ்வாறும் எமது மொழியில் சொல்லலாம்: யார் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, நான் லாபமீட்டினால் போதும் என்று ஒவ்வொருவரும் செயற்பட்டால் சந்தை இதையெல்லாம் சீராக்கி, சமநிலைக்கு கொண்டுவரும். நடக்கின்ற காரியமா?

ஆடம் சிமித் வாழ்ந்த காலத்துக்கு நூறாண்டுகளுக்குப் பின் கைத்தொழில் புரட்சி முடிவுக் காலகட்டத்தில் பிறந்த கார்ள் மார்க்ஸ் லாபத்தின் கொடுமைகளை உணர்கின்றார். வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வறுமையில் இறந்தவர் அதன் கொடுமையை துல்லியமாக எதிர்வு கூறியும் உள்ளார். அடம் சிமித் இன் மாயக் கைகள் எதையும் வழிநடத்தாது என்பதையும் லாபம் தனிநபர்களை நோக்கி குவியும் என்பதையும் அந்த லாபம் உற்பத்தி சாதனங்களை பெருக்கி அந்த சந்தையையே கட்டுப்படுத்தும் எனபதையும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியை முளையிலேயே அறிந்து இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கார்ள் மார்ஸ் அன்றே பைசர் போன்ற நிறுவனங்களின் கேடித்தனங்களைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வாறான நிறுவனங்கள் லாபத்திற்காக எதனையும் செய்யும் என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். இன்று பைசர் தனது லாபத்திற்காக உலக மக்களின் உயிர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. பைசர் மட்டுமல்ல சில குட்டி ஜம்பவான்களும் தான்.

ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதியே முழு பொறுப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு என தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ தனது வாதத்தை முன்வைக்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க தெரிவித்தமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் ஜூட் கிரிசாந்த குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளார். இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டால் தனக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் வெளியிடத் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலை – வீதியில் இறங்கி போராடிய மக்கள் !

அம்பாரை பொத்துவில் பிரதேச செயலாளரின் நிருவாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில் அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி அருகில் இரவோடு இரவாக புத்தர் சிலை வைப்பு மக்கள் பிரதிநிதிகள் பொது மக்கள் என ஓன்றுதிரண்டு வீதியில் அமர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர் .

இவ் சம்பவத்தினைத் அடுத்து தாண்டியடி மற்றும் சங்கமன்கண்டி கிராம பொது மக்கள் அணிதிரண்டு புத்தர் சிலை வைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தர் சிலையை உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றக் கூறி வீதியில் ஒன்றுகூடி இருந்தனர்.

இதனை அறிந்து உடனடியாக திருக்கோவில் பொத்துவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டு கலவரங்கள் ஏற்படாதவாறு பொலிசார் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனையறிந்து திருக்கோவில் பொத்துவில் காரைதீவு பிரதேச சபைகளில் தவிசாளர்கள் உதவி தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கணக்காளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.

இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் பௌத்த துறவியுடன் புத்தர் சிலையை அகற்றுமாறு தெரிவித்து கலந்தரையாடல்களில் ஈடுபட்டு இருந்தபோது பௌத்த துறவி இவ்விடம் தமக்கு உரியது என தெரிவித்து பொது மக்களின் கோரிக்கையை மறுத்து இருந்தனர்.

இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிராம பொது மக்கள் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பின்னர் இரண்டு நாட்களில் புத்தர் சிலை அகற்றப்படும் என போலீசார் வாக்குறுதியை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

“வடக்கு – கிழக்கு டயஸ்போராக்களின் ஆசைக்காக சாணக்கியன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.” – அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும். இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இன்று(11) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது ,

சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது என தமிழ் பேசும் மக்கள் கூறியிருந்தால் அதில் உண்மை இருக்கும்.எனெனில் இன்று அவருக்கு பேச்சு திறமை இருக்கலாம் .அதற்காக எல்லாவற்றையும் பேசி தன்னை ஒரு திறமைசாலியாக காட்ட முயற்சிக்கின்றார்.ஆனால் அவருக்கு வரலாறுகள் தெரியாது.ஆனால் அவரது வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்.கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்தவர்.வடக்கு தொடர்பாக வரலாறு இன்னும் அவருக்கு தெரியாது.

ஏனெனில் அவருக்கு வயது போதாது.தற்போது 30 வயதினை தான் தாண்டியிருப்பார் என்று நினைக்கின்றேன்.வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எதுவும் அவருக்கு தெரியும் என்பதை நாம் நம்பவில்லை.அதனால் அவருக்கு அந்த அனுபவம் காணாது என்பதே எமதும் மக்களினதும் கருத்தாகும்.அவர் இப்பொழுது வெளிநாட்டு சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.இவரது செயற்பாடு ஆடு நனைகின்றது ஓநாய் அழுதது என்ற செயலில் தான் உள்ளது.இன்று முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்று கூறி திரிகின்ற இந்த வார்த்தைகள் இந்த பழமொழிக்கு ஒப்பானது என்பதை மக்கள் எல்லோரும் அறிவார்கள்.

இவரது தற்போதைய தேவையானது வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும்.இந்த வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார்.நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.நீங்கள் சிங்கள மக்களுடன் வாழ முடியாது என்பதனால் தான் தனிநாடு கேட்டு போராடினீர்கள்.அதுமாத்திரமன்றி வடக்கில் நிம்மதியாக முஸ்லீம் மக்களை வாழ அனுமதித்தீர்களா?அங்குள்ள அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து கொடுத்துள்ளீர்களா? அம்மக்களை அங்கு இதுவரை ஒழுங்காக குடியேற்றப்படாமல் தடுத்துள்ளீர்களே இதற்கு என்ன கூறுவது என்று கேட்கின்றேன் என்றார்.

“நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது.” – ஜீவன் தொண்டமான்

“நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன்.”  என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” எதையும் செய்யவில்லை என சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். புதுமையாக நான் எதையாவது செய்வதாக இருந்தால் அரசியல் பழிவாங்கலில் தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அதை நான் செய்யவில்லை. குறைவாக முழுமைப்பெறாத நிலையில் இருந்த திட்டங்களை முழுமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினேன்.

நான் அமைச்சு பதவியை ஏற்கும்போது அந்த அமைச்சு 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா கடன் சுமையில் இருந்தது. நல்லாட்சியின்போது 4 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 699 வீடுகள்தான் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. நான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர்  ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இம்மாதத்துக்குள் கையளிக்கப்படும்.

அவர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியிருக்க முடியும். அதனை நாம் செய்யவில்லை. எனது அமைச்சின் புதிய வேலைத்திட்டங்கள் அடுத்தவருடம் முதல் ஆரம்பமாகும்.

அதேவேளை,  கூட்டு ஒப்பந்தம் மூலம் நாம் தொழிலாளர்களை பாதுகாத்தோம். ஆனால் அது தொடர்பில் போலி பரப்புரைகளை முன்னெடுத்து எம்மையும் தொழிலாளர்களையும் தூரப்படுத்த முற்பட்டனர். அன்று கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக செயற்பட்ட சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்று சந்தா பணத்துக்காக ஒப்பந்தம் வேண்டும் என்கின்றன. எனவே, சுயநல அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை சனத்தொகையில் 10 வீதமானோர் அரச சேவையில் உள்ளனர். கொரோனா நெருக்கடி நிலையால் இனி ஆட்சேர்ப்பு நடக்குமா என தெரியவில்லை. எனவே, நாம் சுயதொழில் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலர் வேலைதேடியே காலத்தை வீணடிக்கின்றனர். சொந்த முயற்சி மீதும் நம்பிக்கை செலுத்த வேண்டும்.

நாம் அபிவிருத்திகளை செய்தாலும் திறப்புவிழா நடத்தி பிரச்சாரம் செய்யவில்லை. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தைதேய நான் விரும்புகின்றேன்.” என்றார்.

“கடன் இல்லாத நாட்டையே நாங்கள் உங்களிடம் ஒப்படைப்போம்.” – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும் அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம். அதற்கான திட்டங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். அத்துடன் கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே எமது இலக்கு. கடன் இல்லாத நாட்டையே நாங்கள் அடுத்துவரும் அரசாங்கத்துக்கு ஒப்படைப்போம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக  பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே வரவு செலவு திட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றேன். தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பிரச்சினையில் இருக்கின்றது. என்றாலும்  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் தேவையான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

விசேடமாக வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும் அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம். ஜனவரி மாதம் 500 டொலர் மில்லியன் வழங்க இருக்கின்றது. ஜூலை மாதம் ஆயிரம் டொலர் மில்லியன் வழங்க இருக்கின்றோம். நாங்கள் பெற்றுக்கொண்ட கடன் தொகையும் இருக்கின்றது. அனைத்தையும் அடுத்த வருடத்தில் வழங்குவோம் என்றும் கூறினார்.