January

January

“வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப் பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – தமிழக மீனவர்கள் இறப்பிற்கு சுமந்திரன் கண்டனம் !

இலங்கை கடற்படையினரின் டோறாப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப் பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்குமாறும், ஊடுருவும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தாம் கோரி வந்தாலும், உயிரைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு காணாமல்போன இந்திய மீனவர்களின் படகுடன் இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை இருவரினது சடலங்களும், இன்று ஏனைய இருவரினது சடலங்களும் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் உறுதியான தகவலைக் கடற்படையினர் விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உறவுகளை இழந்து தவிக்கும் தமிழகச் சொந்தங்களுக்கும், மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“பிசிஆர் சோதனைகளுக்காக அதிக பணத்தினை தனியார் ஆய்வுகூடங்கள் அறவிடுகின்றன” – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிற்கு செல்வதற்கு தனியார் மருத்துவமனைகள் அனுமதித்துள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் பிசிஆர்சோதனைக்கு என வருபவர்களை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த தகவல்களை சுகாதார அதிகாரிகளிற்கு அறிவிக்காமல் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஆபத்தான விதத்தில் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் பிசிஆர் சோதனைகளுக்காக அதிக பணத்தினை தனியார் ஆய்வுகூடங்கள் அறவிடுகின்றன என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் ” – துரைராசா ரவிகரன்

“தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் ” என முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருந்தூர் ஆலய பகுதியில் அரசின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்து தொல்லியல் ஆய்வுக்கென ஆரம்ப நிகழ்வினை 18.01.2021 அன்று ஆரம்பித்து வைத்திருந்தார். இது தொடர்பாக கிராமத்தவர்கள் பலரும் தங்களுடைய விசனத்தை வௌியிட்டிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக குறிப்பிடும்போதே துரைராசா ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் இந்துமக்கள் வழிபட்டு வந்த தலமாகும். இந்த இந்து ஆலயத்தின் அடையாளங்கள் யாவும் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. அரசின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்து தொல்லியல் ஆய்வுக்கென ஆரம்ப நிகழ்வினை 18.01.2021 அன்று ஆரம்பித்து வைத்திருந்தார்.

எனினும் நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்டதைப் போல யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட மாணவர்களோ, அல்லது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களோ யாரும் அழைக்கப்படவில்லை. எல்லாமே சிங்களமயமாக காட்சியளித்திருந்தது. நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல.

சிங்கள இனவாதிகளுக்கு எதிராகவும், இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவுமே நாம் எமது கருத்துக்களை வெளியிடுகின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் ஆய்வு என்ற பெயரில் அடுத்தகட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

இதேவேளை கடந்த 2018.09.04 அன்று குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கும் நோக்கோடு இரு பௌத்த பிக்குகள் அடங்கலான 12 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்தனர். அவர்களின் வருகை  குமுழ முனைப்பகுதி மக்களோடு இணைந்து நாம் தடுத்திருந்தோம்.

அதன் பின்னர் இதுதொடர்பில் கடந்த 06.09.2018 அன்று காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் கடந்த 27.09.2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பிக்குமார் தலைமையிலான குழுவினருக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குழப்பங்களை விளைவித்ததாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். அதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை இங்கு பலரும் மீறியுள்ளனர். பெரும்பாலும் தமிழ் மக்கள் பொதுவிடயங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்களை மீறுவதில்லை.எனினும் தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் காணப்படுகின்றன. ஆனால் இங்கே வட இலங்கையிலே நீதிமன்றத் தீர்ப்புக்களை அவமதித்தவர்களுக்கு இவர்கள் என்ன பதிலை வழங்கவுள்ளார்கள்.

குறிப்பாக நீராவியடிப்பிள்ளையார் ஆலய விடயத்தின்போது, பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் முல்லைத்தீவு  நீதிமன்ற கட்டளைகளை மீறியிருந்தார். தற்போது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க உட்பட இராணுவம், காவல்துறையினர் உட்டப பலர் இந்த குருந்தூர் மலை விடயத்தில் நீதிமன்றத் தீர்பினை மீறியுள்ளனர்.

இதற்கு உரியவர்கள் இதற்கு என்ன பதிலை வழங்கப்போகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், படையினர், வெலிஓயா, மகாவலி என பல வழிகளிலும் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளும் சிங்களமயமாக்கல் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றது. இந் நிலையில் தற்போது குருந்தூர் மலை தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் சிங்களமயமாக்கும் செயற்பாடு ஆரம்பித்திருக்கின்றது. எனவே இதை சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வாகவே இதனைப் பார்க்கமுடிகிறது.

தேர்தல் காலங்களிலே அரசிற்கு ஆதரவளிப்பார்கள், அரசோடு இணைந்துள்ளவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர். குறிப்பாக எமது தமிழர்களின் நிலங்கள், ஆறுகள், குளங்கள், கடல் என அனைத்து வளங்களும் சொத்துக்களும் அபகரிக்கப்படுகின்றன.

இதற்கு பன்னாடுகள் என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளார்கள். நிச்சயமாக இந்த விடயத்தில் இந்தியா உட்பட பன்னாடுகள் தலையிட்டு எமது பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – கனடாவின் பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் அறிவிப்பு !

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை இலங்கைஅரசாங்கத்தின் கலாச்சார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி என தெரிவித்துள்ள அவர் எவரும் உயிரிழக்கவில்லை என காண்பிப்பதற்கும் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கும் இலங்கை அரசாங்கம் முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சொந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு பிரம்டன் மாநகர சபை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் தனது இரத்தக்கரை படிந்த வரலாற்றை வெள்ளையடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை நாங்கள் கனடாவில் அதற்கு எதிர்மாறானதை செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தமிழர் இனப்படுகொலையை மறக்கப்போவதில்லை பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவில் வைத்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்

நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி !

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

“இங்கு கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையைக்  கையாளவுமே அரசு முயற்சிக்கின்றது” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையைக்  கையாளவுமே முயற்சிக்கின்றது” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(20.01.2021) உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

குருந்தூர் மலை பிரதேச இடத்தை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது. எனினும், 1933ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தமிழர் பகுத்து என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் இந்த இடத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து ஆக்கிரமித்துள்ளது.

இதனால் தைபொங்கல் தினத்தில் எமது தமிழர்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியது. கேட்டால் தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தில் ஆய்வுகளைச் செய்வதாகக்  கூறியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் பெளத்த தேரர் ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைத்து பெளத்த விகாரையை அமைக்க முயற்சித்தார். பின்னர் நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்து அந்த நடவடிக்கையைத் தடுத்தது.

எனினும், மீண்டும் இதே இடத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொள்வதாகக் கூறி விகாரை ஒன்றை அமைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்னமும் பொருளாதார நிலைமையில் வறுமைக்கோட்டின் கீழ் நிலையிலேயே வாழ்கின்றனர். ஏனைய மாவட்டங்களில் மக்களுடன் போட்டிபோடக்கூடிய நிலைமையில் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் இல்லை.

எனவே, எமது மக்களை இலக்கு வைத்து நடத்தும் அடக்குமுறையை அரசு நிறுத்த வேண்டும்” – என்றார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார் ஜோபைடன் – பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என தெரிவிப்பு !

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர்.  இராணுவத்தால் இசை முழங்க ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதையடுத்து வெள்ளை மாளிகையில் தனது பணிகளை ஜோ பைடன் தொடங்கினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தனது பதவிக் காலத்தின் முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையிலிருந்து ஜோ பைடன் தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, துணை அமைச்சரவை அளவிலான பாத்திரங்களுக்கு முறைப்படுத்தினார். பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பைடன் கையெழுத்திட்டார்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐநா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில்  கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உள்பட பல நிர்வாக நடவடிக்கைகளில் அவர் பின்னர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களில், பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இலங்கையில் இராணுவமயப்படுத்தப்படும் ஜனநாயகம்” – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு பெருங்கண்டனம் !

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கையில் சிவில் சேவையில் பதவிகளைப் பொறுப்பெடுத்து வருகின்றனர். முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்சவாலேயே அண்மையில் 39 இராணுவ அதிகாரிகளுக்கு முக்கிய அரச பதவிகள் வழங்கப்பட்டன.

இதனைவிட ஜனாதிபதியின் கைகளை அதிகார மயமாக்கல், உறவினர் ஆதரவுக் கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் எதிராக அப்போதும் இருக்கையில் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையிலான ஆட்களை அரச பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது ஒரு திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.

விசுவசமான இராணுவ அதிகாரிகள் கொரோனாவுக்கான நடவடிக்கை, காவற்துறை, புலனாய்வு சேவைகள், சிறைகள், வெளிநாட்டுக் கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படைத் தேவைச் சேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு மற்றும் இறுதியாக இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றில் அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.

இது முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவமயமாக்கல் ஆகும். ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்கள். இது அரசின் சிவில் குணமாச்சத்தின் முடிவைத் தீர்க்கமாகக் குறிக்கும்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரமான குற்றங்களைப் புரிந்ததாக இராணுவத்தினர் மீது சரமாரியான குற்றச்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களை அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் தமது அதிகாரத்தை வலுப்படுத்த அனுமதித்தல் மீளமுடியாத ஒரு நிலைக்கு வழிவகுக்கும் என்றுள்ளது.

“நாட்டில் இராணுவப் பயிற்சி வழங்குவதற்காக தற்போதைய அரசுக்கு  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா? ”- பாராளுமன்றில் பொன்சேகா கேள்வி !

இலங்கையில் 18 வயதுக்குக் கூடிய அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்காக தற்போதைய அரசுக்கு  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

18 வயதுக்குக் கூடிய அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்திருந்தார். இவ்வாறு பயிற்சி வழங்கப்படுவோர் 18 – 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வைத்துக்கொண்டாலும், இந்த வயதெல்லைக்குள் மூன்று அல்லது நான்கு மில்லியன் பேர் இருப்பார்கள்.

அத்துடன், இவர்களுக்கு ஆறு மாத கால பயிற்சி என்றாலும் கூட ஒரு நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாய்கள் செலவாகும்.

ஒரு இலட்சம் பேருக்குப் பயிற்சிகளை வழங்குவதென்றால் 75 பில்லியன் ரூபாய் செலவாகும். இந்நிலையில், தற்போதைய அரசுக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா?

இவ்வாறான பொய்யான காரணிகளைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.

இதேவேளை, எந்தவொரு சர்வதேச நாடும் எமது நாட்டில் சுயாதீனத்தில் தலையிட அனுமதிக்க முடியாது என அரசு வீர வசனங்களைப் பேசிக்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வெளிநாட்டுக்குக் கொடுத்து மண்டியிடும் நிலைமை உருவாகப் போகின்றது ” என்றார்

தாய்லாந்தில்‌ மன்னராட்சி எதிர்ப்பு பற்றி பேசிய பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

தாய்லாந்தில்‌ முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் பெண் ஒருவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறைமுன்னாள் அரசு ஊழியரான இந்தப்பெண், மன்னரை அவமதிக்கும் விதமாக பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக கூறி கடந்த 2015 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இவர் மீதான வழக்கை விசாரித்து வந்த தாய்லாந்து ராணுவ கோர்ட்டு இந்த வழக்கை பாங்காக் குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றியது. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாங்காக் குற்றவியல் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

இந்த சிறை தண்டனை மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர் அமைப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.