January

January

“எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” – மயானங்களில் புதைக்க இடமில்லாமல் அமெரிக்காவில் காத்துக்கிடக்கும் மனித உடல்கள் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கலிபோர்னியாவில் உள்ள கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் இடமில்லாமல் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் சோகம் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் பரவ ஆரம்பித்ததாக கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ், உலக நாடுகளை இன்னும் உலுக்கிவருகிறது. இதில் உலக நாடுகளிலேயே மோசமாக பாதிக்கப்பட்டது அமெரி்க்காதான். இதுவரை 3.50 லட்சம் மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழந்துள்ளனர், 2 கோடி மக்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு மேல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்க்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கில் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரி்க்காவில் நேற்று 2.32லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,107 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள தெற்குப்பகுதி நகரங்களில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாட்கணக்கில் காத்திருக்கின்றன.

லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கான்டினென்டல் ஃபனரல் ஹோம் உரிமையாளர் மாக்டா மால்டோனாடோ கூறுகையில் “ நான் கடந்த 20 ஆண்டுகளாக இறுதிச்சடங்கு செய்யும் பணியில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழலை நான் பார்த்தது இல்லை, நடந்ததும் இல்லை.

கொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை என்னால் புதைக்க முடியாத அளவுக்கு தொடரந்து வந்து கொண்டே இருக்கின்றன. பலரிடம் உடலை எடுத்துச் செல்லுங்கள் கல்லறையில் இடமில்லை, உங்கள் குடும்ப உறுப்பினரை புதைக்க இடமில்லை எனச் சொல்வதற்கு மன்னிக்கவும் எனச் சொல்லிவிட்டேன்.

சராசரியாக நாள்தோறும் 30 உடல்களை கல்லறை அடுக்குகளில் இருந்து எடுத்து புதிய உடல்களை வைக்கிறேன். வழக்கமாக செய்யும் பணியைவிடஇது 6 மடங்கு அதிகமாகும். எங்களுக்கு வழி தெரியாமல் மனிதஉடல்களை குளிர்பதனப் பெட்டியில் காத்திருப்பில் வைத்திருக்கிறோம். இதற்காக கூடுதலாக 15 மீட்டர் குளிர்பதனப்பெட்டியை வாடகைக்கு எடுத்திருக்கிறேன்” எனத் தெரிவி்த்தார்.

california-funeral-homes-run-out-of-space-as-covid-19-rages

கலிபோர்னியா ஃபனரல் டைரக்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் இயக்குநர் பாப் ஆச்சர்மான் கூறுகையில் “ கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காரணமாக, உடல்களை புதைக்கும், எரிக்கும் பணி தொடர்ந்து மெதுவாகியுள்ளது. வழக்கமாக ஒருவர் இறந்துவிட்டால் 2 நாட்களில் உடல்அடக்கம் நடந்துவிடும், ஆனால், இப்போது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது.

எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

லாஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மட்டும் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள்தோறும் 2,500 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

அர்கனாஸ், லூசியானா, டெக்சாஸ், அரிசோனா, ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சராசரியாக 3 ஆயிரம் பேருக்கும் மேல் புதிதாககரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இன்னும் விடுமுறைக் காலம் முடியாததால், மக்கள் கூடும்போது, இன்னும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றில் முதல்முறையாக நிராகரிக்கப்பட்டது ட்ரம்பின் வீட்டோ அதிகாரம் !

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இதனிடையே டொனால்ட் டரம்ப் இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்: நிதி மசோதா நிறைவேற்றம்!அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான, 740 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் “தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2021” என்கிற பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.

இதனை தொடர்ந்து அந்த மசோதா ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, ட்ரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

இந்த மசோதாவின் 230-ம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லாதது என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் மசோதாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும். எனவே இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்க முடியும். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அங்கு 322 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 87 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 109 உறுப்பினர்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் அந்த தீர்மானம் பெருவாரியான வித்தியாசத்தில் நிறைவேறியது. இது, ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேசமயம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறாது என டிரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 81 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் மூலம் செனட் சபையிலும் இந்த மசோதா எளிமையாக நிறைவேறியது. டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அவரது வீட்டோ அதிகாரம் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சில தினங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது.

“மனிதர்களின் புதுவருட பட்டாசு கொண்டாட்டத்தில் செத்துமடிந்த நூற்றுக்கணக்கான பறவைகள்” – ரோமில் சம்பவம் !

இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்.

இந்தநிலையில் புது வருட நாளன்று அதிகாலையில் ரோம் நகரில் காரில் சென்று கொண்டிருந்த ஒருவர், சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ரோம் இறந்த பறவைகள் வீழ்ச்சி: இத்தாலி இறந்த பறவைகள் ரோம் தெருவில்  புத்தாண்டுக்கான பொகாலிப்டிக் சகுனம்: இத்தாலியில் புத்தாண்டு இறந்த ...பின்னர் அவர் அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த பதிவில் “நண்பர்களே, நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்து கிடக்கின்றன. இதை பார்ப்பதற்கு சங்கடமாகவும், நம்ப முடியாததுமாக உள்ளது. நாம் வெடித்த பட்டாசுகளே இதற்கு காரணம்” என அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு, பறவைகள் சாவுக்கு பட்டாசுகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லோரொடானா டிக்லியோ கூறுகையில் “பறவைகள் அதிக பட்டாசு சத்தத்தால் பயந்து இறந்திருக்கலாம். திடீரென்று பட்டாசு வெடிக்கும்போது பறந்து கொண்டிருக்கும் பறவைகள் சத்தத்தில் நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்; சுவர்கள், ஜன்னல்கள், மின் இணைப்புகளில் மோதிவிடும்; மாரடைப்பால் கூட இறந்து போகக்கூடும்” என்றார்.

“ஜோபைடன் அரசு சீன – அமெரிக்க நட்பை இயல்பு நிகை்கு கொண்டு வரும்” – சீனா நம்பிக்கை !

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதி வருகின்றன. ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. வர்த்தகம், மனித உரிமை மீறல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருகிறது.

Joe Biden remporte la primaire démocrate de l'Alaska - Le Point

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன்  வருகிற 20-ந் திகதி பதவியேற்கிறார். அவர் பதவிக்கு வந்ததும் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறியதாவது:-

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா- சீனா உறவுகள் முன்னோடி இல்லாத வகையில் சிக்கல்களில் சிக்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. புதிய நிர்வாகம் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பும்; சீனாவுடனான உரையாடலை மீண்டும் தொடங்கும்; இருதரப்பு உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்கும்; ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 90 வாகன விபத்துக்கள் – 09 பேர் பலி !

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 90 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2,045 பேர் குடிபோதையில் வாகன செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்

“கொரோனா இறந்த உடல்களால் பரவுவதற்கான ஆதாரங்கள் இல்லை. இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம்.”  – இறந்த உடல்களை அடக்கம் செய்ய இலங்கை மருத்துவ சங்கம் சம்மதம் !

“தாம் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்” என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை மருத்துவ சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் சமீபகாலங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களிற்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது . இலங்கையின் கலாச்சார பன்முகதன்மையை கருத்தில் கொள்ளும்போது கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான கொள்கையொன்று அவசியம்.

ஆரம்ப கட்டத்தில் அவ்வேளை காணப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடல்களை தகனம் செய்வதற்கான முடிவை எடுத்தார்.

இதன் பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு உடல்களை கட்டாயமாக தகனம் செய்வவதை பின்பற்றுவது என்ற அரசாங்கத்தின் முடிவு காரணமாக சில சமூகங்களின் மத்தியில் அமைதியின்மை உருவாகியுள்ளது. இதனால் சிவில் அமைதியின்மை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.  இதன் காரணமாக மக்கள் உடல்களை தகனம செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க மறுப்பதும் தெரியவந்துள்ளது .

பலர் மருத்துவர்களை பார்ப்பதை தவிர்க்கின்றனர்,இதன் காரணமாக மருத்துவகிசிச்சைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பவர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரணங்களால் நாங்கள் நிலைமை குறித்து அவசரமாக ஆராய்ந்தோம், கொரோனா வைரஸ் தொடர்பாக கிடைக்கின்ற சில தரவுகளை பயன்படுத்தினோம்.

31ம் திகதி அனைத்துபிரிவு மருத்துவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டநிலையில் கொவிட் சுவாசம் மூலமாக மாத்திரம் பரவுகின்றது. ஏனைய வழிமுறைகள் மூலம் பரவியமை குறித்த தகவல்கள் இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம். உயிரிழந்த ஒருவரின் உடலில் வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழாது. பிரேதப்பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் மூலம் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானமைக்காக உயிரிழந்தவரின் உடலில் தொற்றுள்ளது என்ற முடிவிற்கு வரமுடியாது எனவும் இலங்கை மருத்து சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் உடல்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை விட கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிரம்பிக்காணப்படும் கழிவுநீரினால் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“கொரோனாவினால் இறந்தோரின் உடலை தகனம் செய்வதற்கு எதிரான சில முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டம் அரசியல் நோக்கிலானது” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

“கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன்” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “

ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை உலக சுகாதார ஸ்தாபனமே முதலில் எடுத்தது இந்த விதிமுறைகள் எங்கள் நாட்டிற்கும் பொருந்தும்,கொரோனா வைரசிரனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக நாங்கள் மாறினோம்.

உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தவேளை எவரும் அதற்கு எதிராக கரிசனைகளை வெளியிடவில்லை.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் -அது பிழை என தெரிவிப்பார்கள் என்றால் கத்தோலிக்க மக்களும் அது குறித்த கரிசனையை வெளியிடலாம். அவர்களுடைய மதத்திலும் உடல்களை தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லை.

இது ஒரு இனத்திற்கு மாத்திரம் உரிய விடயமில்லை. சிலவங்குரோத்து நிலையிலுள்ள அரசியல்கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர். பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் உடல்களை தகனம் செய்யவேண்டுமா? அடக்கம் செய்யவேண்டுமா? என ஆராய்வதை விட நாங்கள் பொதுமக்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

தற்போது முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தங்கள் வங்குரோத்து அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பல அறிக்கைகளை வெளியிடுகின்றது. கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் இறுதிசடங்குகள் குறித்து ஜனாதிபதியோ? அரசாங்கமோ? தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சுகாதார அதிகாரிகளே இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பர்.  ஒரு குழுவினர் இந்த விவகாரத்தினை இனரீதியிலானதாக மாற்றுகின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

“பிறந்த சிசுவை குழிதோண்டி புதைத்த திருமணமாகாத தாயும் , அவரது பாட்டியும் ” – யாழில் சோகம் !

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களான இரண்டு பெண்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாககாவல்துறையினர் கூறினர்.

புதைக்கப்பட்ட சிசுவின் தாயும், பாட்டியுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கணக்கர்கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பிறந்த சிசு புதைக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார். பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அதிக குருதிப்போக்கு காரணமாக குறித்த தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கொண்டு குழந்தை பிறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது, பின்னர் சிசுவை கொன்று புதைத்ததாக கண்டறியப்பட்டது என தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேகத்தில் பெண்ணின் தாயை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

“2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.ம.சக்தியின் வேட்பாளர் சஜித்பிரேமதாஸ தான் ” – எரான் விக்கிரமரத்ன

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தகவலை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அரசியல் எதிரிகளே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, முரண்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் எந்தவொரு போட்டியும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு என்பது ஜனநாயக அம்சம் கொண்டது. தலைவர் பதவிக்கு வருவதற்கு எவருக்கும் தடை இல்லை.

எனினும், பதுளையில் நடைபெற்ற சம்மேளனத்தின்போது சஜித்தைத் தலைவராக நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் தலைமையில் முன்னோக்கிப் பயணிப்போம் – என்றார்.

“ ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். ” –  ‘உதயன்’ பத்திரிகை மீதான வழக்குத்தாக்கலுக்கு மைத்திரிபால சிறீசேன கண்டனம் !

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்.காவற்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் “மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். ” என தன்னுடைய கண்டனங்களை  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சியில் எமக்கு முதுகெலும்பு இருந்தபடியாலேயே விமர்சனங்களை எதிர்கொண்டோம். ஊடகங்களை முழுச்சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தோம்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து சில நாட்களுக்கு மட்டும் சமூக ஊடகங்ளை முடக்கி வைத்திருந்தோம். இன ரீதியான – மத ரீதியான முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையிலேயே இந்த முடக்கல் நிலையை அன்று விதித்திருந்தோம். ஜனாதிபதி என்ற வகையில் – அரசு என்ற வகையில் விமர்சனங்களுக்குப் பயந்து அன்று சமூக ஊடகங்களை நாம் முடக்கவில்லை. எனினும், அன்றைய நாட்களில் பத்திரிகைகளும், வானொலிகளும், தொலைக்காட்சிகளும் சுதந்திரமாக இயங்கின.

நான் அன்று ஜனாதிபதி. இன்று முன்னாள் ஜனாதிபதி. அன்றும் சரி – இன்று சரி ஊடகங்களை மதிக்கின்றேன். விமர்சனங்களை ஏற்கின்றேன். ஆட்சிப்பீடத்தில் இருந்த ஜனாதிபதிகளில் நான் வித்தியாசமானவன். என்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்குக்கூட நான் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தேன். மூவின மக்களின் மனதையும் நான் வென்றிருந்தேன்.

அதனால் சில ஊடகங்கள் என்னை வாழ்த்தின. சில ஊடகங்கள் என்னைத் தூற்றின. ஆனால், நான் அமைதியாக வாழ்த்துதலையும், தூற்றுதலையும் ஏற்றேன்.

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். அந்தவகையில் ‘உதயன்’ மீதான வழக்குத் தாக்கலைக் கண்டிக்கின்றேன் என்றுள்ளது.