15

15

“வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.” – புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை !

“வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ” போன்ற அம்சங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்வாங்கப்பட வேண்டும்  என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனைகள் அரசாங்கத்தினால் அனைத்து தரப்புகளிடமிருந்தும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்சியின் அரசியல் குழுவால் கடந்த மாதம் அனுப்பிவைக்கப்பட்ட ஆலோசனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனை அறிக்கையில்,

“இந்த நாட்டின் நான்கு தேசிய இனங்களாக சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் ஆகியோரும் தேசிய சிறுபான்மையினராக பறங்கியர், மலாயர், வேடுவர், ஆபிரிக்கர் (கபீர்), பறதர், குறவர், கொழும்பு செட்டி, மலையாளிகள், தெலுங்கர் ஆகியோரும், சமயங்களாக பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களும் மொழிகளாக சிங்களம், தமிழ் ஆகியனவும் எவ்வித பாரபட்சமும் பாராட்டப்படாதவையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையின் தேசியக் கொடியானது இந்த அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரசானது பிராந்திய சுயாட்சி அமைப்புகளை உடையதாக உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே அதிகாரம் பகிரப்பட்ட இறையாண்மையும் தன்னாதிக்கமும் உடைய ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இலங்கையானது இன, மத, மொழி, கலாசார பல்வகைமை கொண்ட நாடு என்ற வகையில் வர்க்க, மத, சாதி, மொழி, பாலினம் மற்றும் அனைத்து வகை பாகுபாடுகளையும் நீக்குவதன் மூலமும் பங்குபற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் பொருளாதார சமத்துவத்துவமும் சமூக நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரமும் மக்களின் இறைமையும் மக்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் ஆட்சியமைப்பையும் கொண்டதாக இருப்பதுடன், அந்த இறைமை நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்கள், தேசிய சிறுபான்மையினர், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரித்தானதாகும்.

இத்தகைய மக்களின் இறைமை, நிர்வாகத் துறை, நீதித் துறை, சட்டவாக்கத் துறை ஆகியவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலமான மக்கள் தீர்ப்பு ஊடாக பங்குபற்றும் உரிமை, திருப்பி அழைக்கும் அதிகாரம், அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு, அதிகாரப் பரவலாக்கம், பொறுப்புக் கூறல் என்பவற்றை உள்ளடக்கியதாகத் தற்காலிகமாகக் கையளிக்கப்பட வேண்டும்.

தொடரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கையின் அனைத்து தேசிய இனங்களினதும் சிறுபான்மை தேசியங்களினதும் வளர்ச்சி, பாதுகாப்பு, இன அபிலாசைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் காணி, வீடமைப்பு போன்ற அடிப்படை உரிமைகள், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய இனங்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்கள் கலாசார விழுமியங்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் சுயாட்சி அதிகார அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தச்  சுயாட்சி அதிகார அலகுகள் மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் என அறியப்படலாம். இந்த அலகுகளின் எண்ணிக்கை இலங்கையின் சனத்தொகை செறிவிற்கு ஏற்ப நிர்வாக நடைமுறைகள் மக்களுக்கு இலகுவாக சென்றடையும் வகையில் வரையறுக்கபட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும். இங்கு வாழும் சிங்கள, முஸ்லிம், மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புகள் அவர்களின் சன செறிவிற்கேற்ப நிலத்தொடர்புகளை இணைத்தோ, தனித்தனியாகவோ உருவாக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒரு தேசிய இனமாக ஏற்று அதன் அடிப்படையில் அந்த மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழும் பிரதேசங்களையும் பரந்து வாழும் பிரதேசங்களையும் இணைத்தோ அல்லது தனித்தனியாகவோ கொண்ட சுயாட்சி அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சுமார் 200 வருடங்கள் வரலாற்றையும் தனித்துவமான சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்ட மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மலையக மக்கள் செறிந்து வாழும் நிலத்தொடர்புடைய பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களுக்கான சுயாட்சி அதிகார அலகுகள், சனத்தொகை செறிவிற்கேற்ப வரையறை செய்யப்பட வேண்டும். அவை அவற்றின் பாரம்பரிய அடையாளங்களுக்கு ஏற்ப பெயரிடப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சி பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை மக்களினதும் ஏனைய தேசிய சிறுபான்மையினரதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சுயாட்சி உள்ளமைப்புகளின் அதிகாரம் அவ்வமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு வரையறுக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களின் சுயாட்சி பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புகள் அவர்களின் வாழ்விட பிதேசங்களையும் சன செறிவையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும். ஏனைய தேசிய சிறுபான்மையினரின் சனத்தொகை பரம்பலுக்கேற்ப அவர்களின் விருப்புக்கேற்றவாறு அவர்களின் அடையாளம், பண்பாடு, பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தக்கூடிய இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

இச்சுயாட்சி அமைப்புகள் அப்பிராந்தியத்தின் விவசாயம் கைத்தொழில் உள்ளிட்ட ஏனைய தொழில் துறைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில், வேலைவாய்ப்பு, இயற்கை வனவள ஜிவராசிகள் மற்றும் கடல் வளப் பாதுகாப்பு, நிலப் பகிர்வு, நீர்ப்பாசனம், விவசாயம், வீதிப் போக்குவரத்து, குடியேற்றம், வீடமைப்பு அபிவிருத்தி, கல்வி, பண்பாடு, சுகாதாரம் என்பவற்றிற்கான தலையீடற்ற சுயாதீனமான கொள்கை வகுப்பினை கொண்டிருக்க வேண்டும்.

அத்துடன் இவை மத்திய அரசின் திட்டங்களை உரிய கலந்தாலோசனையின் அடிப்படையில் ஏற்கவோ அல்லது மறுக்கவோ பூரண அதிகாரம் உடையவையாக இருக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கைப் பேணல் உள்ளூர் பாதுகாப்பு என்பவற்றிற்கு பூரண வகை கூறலை கொண்டிருக்க வேண்டும்.

அந்நிய அச்சுறுத்தலோ ஆக்கிரமிப்போ இல்லாதவிடத்து இராணுவத் தளங்களை உருவாக்குதல் அல்லது விரிவாக்குதல் தொடர்பாக சுயாட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படல் வேண்டும். நீதி, நிதி, நிர்வாகம் ஆகியவற்றை அரசியல் அமைப்புக்கு அமைய அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்ப வளர்க்கவும் முன்னெடுக்கவும் முடியுமாய் இருத்தல் வேண்டும்” போன்ற பல விடயங்கள் குறித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு !

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை இனிமேல் தொடர மாட்டோம் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153 ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதோடு, அதனால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முறையானது சட்டத்திற்கு முரணானது என கடந்த ஒக்டோபர் மாதம் தீர்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராசசிங்கம் என்பவருடைய கொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுவிக்கப்பட்டமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

“மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தடுப்புமருந்து பற்றி யோசிக்காத அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதும் மருந்துக்காக கூடிய கவனம் செருலுத்துகின்றது” – இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

“மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தடுப்புமருந்து பற்றி யோசிக்காத அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதும் மருந்துக்காக கூடிய கவனம் செருலுத்துகின்றது” என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டவேளை கொரோனா வைரஸ் மருந்து குறித்து கருத்து தெரிவிக்காத அதிகாரிகள் தற்போது கொரோனா மருந்தினை வழங்குவது குறித்து கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் மருந்துகளை தயாரித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இலங்கை இந்த மருந்துகளை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தவில்லை புராணக்கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தீர்வுகளையே நாடியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளில் கவனம் செலுத்தியதால் அரசாங்கம் மருந்தினை இறக்குமதி செய்வதை தாமதப்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் மருந்துகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள்” – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த எச்சரிக்கை !

“மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள்” என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த எச்சரித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சிங்கங்களாக வேடமிட்டிருக்கும் அரசியல் நரிகளால், மக்களைக் குழப்பமுடியாது. அசாத்சாலி, சிங்கம்போல வேடமிட்டிருக்கும் நரி. தீர்மானிக்கும் பொறுப்பை, சுகாதார பிரிவின் நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சுகாதார பிரிவினரின் தீர்மானத்தை நாட்டுப் பிரஜைகள் என்றவகையில் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அசாத் சாலியை விட திமிர்பிடித்து இருந்தவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி, மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ குழுக்களுக்கோ அதே நிலைமையை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் பின்வாங்காது.

பலமிக்கம் தலைமைத்துவம் நாட்டை ஆட்சி செய்கிறது. ஆகையால், எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல்வாதிகள் மிகவும் புத்திசாதுரியத்துடன் செயற்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் போது, அன்று எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட நாம், அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, கலவரம் ஏற்படாத வகையில், சகல இன மக்களையும் வழிநடத்தி, பொறுப்புடன் செயற்பட்டோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ரஞ்சன்ராமநாயக்கவின் பிரஜாவுரிமை ரத்து”- சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அவருக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால், அவருக்கு மீண்டும் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 4 வருட சிறைத் தண்டனை மற்றும் 7 வருட பிரஜாவுரிமை இரத்து ஆகிய காலப் பகுதிகள் நிறைவடைந்ததன் பின்னரே அவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு அமைய சுமார் 11 வருடங்கள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது” – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இங்கிலாந்தில் புதியவகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவிவரும் வேளையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்தமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகள் புதியவகை வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை நாட்டிற்கு அழைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.