07

07

“புதிய வகை கொரோனாவையும் எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளது” – புதிய ஆய்வில் உறுதி !

கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவை எதிர்க்கும் செயல்திறனுள்வையாக காணப்படுமா..? என்பது பலருடைய சந்தேகமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய மாறுபாடு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஒக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தென்னாபிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி முழுவீச்சில் செயற்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக, பிரித்தானியாவின் தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரராக ஜோரூட் சாதனை !

இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தலைவராக ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ஓட்டங்கள் குவித்தார்.

ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-

* 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ஓட்டங்கள் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ஓட்டங்களா இருந்தது.

* 218 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ஓட்டங்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.

* ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

* தலைவர் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து தலைவரும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.

* கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ஓட்டங்களும்  (228+1), 2-வது டெஸ்டில் 197 ஓட்டங்களும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ஓட்டங்கள்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.

* 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ஓட்டங்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.

3 டெஸ்டிலும் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார்.

அலெக்சி நவால்னி ஆதரவான சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாகக் கூறி 3 நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா !

ரஷ்ய ஜனாதிபதி புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார்.
இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17-ம் திகதி ஜெர்மனியில் இருந்து ரஷ்யா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறி ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கண்டித்தன. மேலும் நவால்னியை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பொருளாதார தடைகள் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுப்பினர்கள் எச்சரித்தனா்.
அலெக்சி நவால்னியை விடுதலை செய்யக்கோரி கடந்த மாதம் 23 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ரஷ்யாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, 23-ந் திகதி நடைபெற்ற போராட்டத்தில் ஜெர்மனி, சுவீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்றதாக அண்மையில் தகவல் வெளியானது.‌ இதனை ரஷியா வன்மையாக கண்டித்தது.
இந்நிலையில், சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாகக் கூறி மேற்கூறிய 3 நாடுகளின் தூதர்களையும் ரஷ்யா நேற்று வெளியேற்றியது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட 3 நாடுகள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது” – பிரதீப மகநாமகேவ

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது” என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீப மகநாமகேவ தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களிற்கு எதிராக இடைக்கால யோசனையொன்றை முன்வைக்கலாம் .
அவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியமானது . ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை எதிர்ப்பதை தானும் விரும்புவதாக முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு முரணானது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை முன்வைத்தால் அதனை எதிர்கொள்வதற்கான திட்டம் அவசியம்.
இலங்கையில் மனித உரிமை நிலவரத்தை முன்னேற்றுவதற்கான திட்டமும் அவசியம். மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்து சர்வதேச அமைப்புகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இதனை முன்னெடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்” – சி.சிறிதரன்

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்மக்களின் தேசிய விடுதலை வரலாற்றிலே இது ஒரு முக்கியமான மைல்கல்.
ஆயுதவிடுதலை போராட்டத்திற்கு பிற்பாடு நிறைந்த நெருக்கடிகள்,அடக்குமுறைகள் தமிழ் மக்களிற்கு எதிரான வன்முறை கொடுமைகள் இவற்றையெல்லாம் தாண்டி பல்வேறு பட்டபோராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் கூட,வரலாற்றுரீதியாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற, வடக்குகிழக்கு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலே முன்னிலைப்படுத்தப்படுகின்ற இந்த போராட்டம் முக்கியபாத்திரத்தை வகித்திருக்கின்றது குறிப்பாக வடக்குகிழக்கில் வாழ்கின்ற தமி;ழ் மக்களினதும் தேசிய எழுச்சியையும் தேசிய இருப்பையும் இது முன்னிலைப்படுத்தியிருக்கின்றது.
இந்த போராட்டம் இந்த அடிப்படையில் இன்னும் பல வளர்ச்சி காணும்.
இந்த போராட்டம் இத்துடன் முடிவுறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இன்னும் சில மாதங்களில் வேறு வடிவங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படுகின்ற பிரேரணைகளிற்கு சார்பாகவும் இ;ந்த இடத்திலே இன்னும் நடைபெறுகின்ற அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் உடைத்தெறியும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.

 

யாழ் தீவுப்பகுதிகளில் எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனங்களிற்கு இலங்கை அனுமதி – இந்தியா அதிருப்தி !

யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனங்களிற்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளமை குறித்து  இந்தியாதனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் கையளிப்பதில்லை என அமைச்சரவை தீர்மானிப்பதற்கு முன்னரே இந்தியா இது குறித்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா நிறுவனங்களிற்கு அனுமதியளிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து அரசதகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டதை தொடர்ந்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை அமைச்சரவை ஜனவரி 18ம் திகதி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனங்களிற்குஅனுமதி வழங்குகின்றமை பாதுகாப்பு கரிசனைகளை எழுப்பக்கூடும் என இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு ஆகிய தீவுகளிலேயே இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை சீன நிறுவனங்களிற்கு இலங்கை அரசாங்கம்அனுமதிவழங்கியுள்ளது.

 

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள்” – அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள்” என அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரடதொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடரடபில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை இரண்டு காரணங்களிற்காக நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த அறிக்கை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பாற்பட்டது. இரண்டரை பக்கங்கள் மாத்திரமே அவருக்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் காணப்படுகின்றன.

அவர் தனது அறிக்கையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இதன் காரணமாக இந்த இரண்டு காரணங்களிற்காக அரசாங்கம் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க தீர்மானித்தது. இலங்கையின் பதிலை ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்.

அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்குவது என்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் முடிவு காரணமாக இலங்கை பாதகமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளது.  இதன் காரணமாகவே இலங்கை அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இல்லாவிடில் இந்த நிலையேற்பட்டிருக்காது.

இது 1815 கண்டி பிரகடனத்தில் கைச்சாத்திட்டதை விட மோசமான விடயம் கண்டிபிரகடனம் எங்கள் இறைமையை பிரிட்டனிடம் மாத்திரம் ஒப்படைத்தது,மங்கள சமரவீர எங்கள் இறைமையை முழு தேசத்திடமும் ஒப்படைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள் எங்களால் கூட்டாக உள்நோக்கம் கொண்ட சக்திகளின் சவால்களை சந்திக்க முடியும்” என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

 

 

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி  சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்” – அமைச்சர் சரத் வீரசேகர

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி  சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையுடன் செயற்படும் அரசு நாட்டு மக்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

சிங்கள – பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்.

ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகம்தான் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டங்களை நடத்தி இன்று இரண்டு இனங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கின்றன என்று சர்வதேசத்துக்குப் பொய்ப்பித்தலாட்டம் ஆடுகின்றன.

இந்த நாட்டில் பிரச்சினை இருந்தால் அதனை அரசுதான் தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேசத்தால் அதனைத் தீர்க்க முடியாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் – என்றார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – ரிஷாத் பதியுதீன் அழைப்பு !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சிறுபான்மை இன மக்களை இலக்குவைத்து இந்த அரசு மோசமான அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இதற்கு எதிராகவும் ஐ.நாவிடம் நீதி வேண்டியும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆதரவு வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் இந்தப் பேரணியில் முஸ்லிம் மக்கள் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையூடாக நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்தநிலையில், எமது அழைப்புக்கிணங்கவும் அரசுக்கு எதிரான தங்கள் மனக்குமுறல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில்  பெருந்திரளான முஸ்லிம்கள் வீதியில் இறங்கி பேரணியில் பங்கேற்று தமது முழு ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழ் மக்களுடன் கைகோர்த்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எனது கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான இந்த எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது.

தமிழ் – முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பேரெழுச்சியைப் பார்த்தாவது இலங்கை அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு நீதியை வழங்க ஐ.நா. முன்வரவேண்டும். இது ஐ.நாவின் பிரதான கடமையாகும் என்றார்.