01

01

பிரித்தானியாவில் Covid – 19 தடுப்பூசியை பெற்றோர் தொகை  20 மில்லியனை தாாண்டியது !

அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 19.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இங்கிலாந்தில் 16.6 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் ஸ்கொட்லாந்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் வேல்ஸில் 916,336 பேரும் வடக்கு அயர்லாந்தில் 515,678 பேரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றவர்களின் எண்ணிக்கை 768,810 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 15 க்குள் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் அளவை வழங்கவுள்ளதாகவும் 16-64 வயதுடையவர்களுக்கும் சில அடிப்படை சுகாதார பிரச்சினைகள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2024 ல் மீள களம் காண்கிறார் டொனால்ட் ட்ரம்ப்! 

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலம் கூறுகையில்,

“புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம்.

அமெரிக்க சட்டங்களை அமுல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டார். நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும்.

ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். இதில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.

எனினும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் பதவியிலிருந்து நீங்கிச் சென்றார்.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு  மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை !

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (01.03.2021) அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில், 2014இல் ஒரு மூத்த நீதவான் ஊடாக சட்டவிரோதமாக இதுகுறித்த விசாரணைத் தகவல்களைப் பெற முயன்றார் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  இது தொடர்பாக நீதிபதிக்கு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக சார்க்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 நாட்கள் விசாரணையின்போது தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுத்திருந்தார்.

எனினும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 66 வயதான சார்க்கோசி, பிரான்சின் தற்கால வரலாற்றில் சிறைத்தண்டனை பெற்றுள்ள  முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை பாடசாலை மாணவியின் கோரிக்கையை உடனே தீர்த்து வைத்த ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ச! 

திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு கிட்டியுள்ளது.

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் (கிவுலேகடவல வித்தியாலயத்தில் ) இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சித்திட்டத்தின் போதே இந்த மாணவி மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் அந்த சந்தர்ப்பத்திலேயே விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு இரண்டு மணி நேரத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளது

“கிழக்கு மாகாண சபையை பொதுஜனபெரமுன கைப்பற்றும். சாணக்கியன் முதலமைச்சர் ஆவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும்” – பரமசிவம் சந்திரகுமார்

“கிழக்கு மாகாண சபையை பொதுஜனபெரமுன கைப்பற்றும். சாணக்கியன் முதலமைச்சர் ஆவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(28.02.2021) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும், அது நடைபெறாது. கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றது.
கொவிட் -19 கொரோனோ தொற்றுக்காலத்தில் மக்களுக்கு அரிசி வழங்கியும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு அங்கிகள் வழங்கியும், மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியும், நாடாளுமன்றம் சென்றது போல் இம்முறை சாணாக்கியனால் முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டல்கள், ஆலோசனையின் மூலம் கிழக்கு மாகாணசபையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றும்.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்களினதும், அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கையில் ஆட்சிக்கு வந்த எமது பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிஸ்டவசமாக ஆட்சி அதிகாரங்களை பற்றிக்கொண்டது. இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். எமது ஆளும்கட்சியில் இரண்டுபேரை நாடாளுமன்றம் அனுப்பியும், அமைச்சராக்கியும் தமிழர்களின் கைகளுக்கு இழந்த அபிவிருத்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எதிர்ப்பு போராட்டத்தை தமிழர்களுக்கான பல பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் என நம்பிய தமிழ்தேசிய கூட்டமைப்பால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையோ, அபிவிருத்தியையோ இதுவரையும் தீர்த்துக் கொடுக்கப்படவில்லை. மாறாக பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டத்தினால் மீண்டும் சிறுபான்மையின முஸ்ஸிம் மக்கள் நன்மை அடைந்தார்களே தவிர தமிழ் மக்கள் இதுவரையும் நன்மையடையவில்லை. இப்போராட்டத்தில் ஈடுபட்டு தான் வெற்றியடைந்துள்ளதாக நம்பிக்கை கொண்டுள்ள சாணாக்கியனால் இம்முறை மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளால் முதலமைச்சராக வரமுடியாது. காலம் காலமாக தமிழ்மக்களின் பிரச்சனையை பிச்சைக்காரனின் புண்ணாக பார்த்தைதவிர தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களின் வாக்குவங்கிகளை தமிழ்த்தலைமைகளால் சூறையாடி தாங்கள் மட்டும் வாழனும் எனும் நோக்கில் செயற்படுகின்றது. எமது அரசாங்கத்தினால் சுபீட்சம்மிக்க எதிர்கால அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது.
மாகாணசபைக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தின் சகல அதிகாரங்களையும் வழங்கி மாகாணசபை முறைமை சிறப்பாக கொண்டு செல்வதற்கு எமது அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டதோடு தென்னிலங்கை சிங்கள மக்களும் சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென நம்பிக்கை வைத்திருந்தது.
ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எதிர்ப்பு போராட்டத்தினால் மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிளவுபடும் என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பின் போராட்டத்தினால் தென்னிலங்கை மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனையானது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கத்தால் தீர்த்து வைக்க முடியுமேதவிர ஜெனிவால் ஒன்று நடக்காது. ஜெனிவாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பால் விதைத்த நெல்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

17 வயது சிறுவன் தாக்கி 07 வயது சிறுவன் பலி – தாக்கிய சிறுவன் தலைமறைவு – கிளிநொச்சியில் சம்பவம்! 

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்துவந்த குடும்பத்தில், சில நாட்களுக்கு முன்னர் தந்தை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

தன்னுடைய சகோதரனின் வீட்டிற்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு தந்தையார் வெளியேறியதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், குறித்த வீட்டில் மூத்த மற்றும் இளைய பிள்ளை ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நான்கு வயதுடைய இளைய மகன் படுகாயமடைந்ததுடன், கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த 17 வயதுடைய சிறுவன், குறித்த சிறார்களில் இரண்டாவது பிள்ளையாகிய ஏழு வயதுச் சிறுவனான அப்துல் ரஹ்மான் தயா என்பவரை குறித்த சிறுவர்களின் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், 17 வயதுச் சிறுவன் மட்டும் திரும்பிவந்த நிலையில், ஏழு வயதுச் சிறுவனைத் தேடிச் சென்றபோது, அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இந்நிலையில், உடனடியாக சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி பிறேம்குமார், சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தியதுடன், இரத்தம் உறைந்தே சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்ட 17 வயதுச் சிறுவன் தலைமறைவாகியுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் தேடி வருவதாகத் தெரியவருகிறது.

“யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது” – சிவஞானம் ஸ்ரீதரன்

“யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி. ஜனகா நீக்கிலாஸின் ‘நடுகை’ என்ற மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில் நேற்று (28.02.2021) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“இன்றைய காலகட்டம் என்பது இலங்கைக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டு அஞ்சவில்லை எனக்கூறிய அரசாங்கம் சர்வதேச அழுத்தத்திற்கு அச்சமடைந்துள்ளதை நாம் இப்போது உணரக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கத் தயாரென்கிறார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தற்போது இந்தியாவிடம் மன்றாடுவதுடன் நடுநிலை வகிப்பது முறையல்ல என்று கூறுகிறார்.

முஸ்லிம்களின் ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்துவந்த அரசாங்கம் தற்போது அனுமதித்திருக்கிறது. இவையெல்லாம் எப்படி, எதனால் நடக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இந்த அரசாங்கம் இவ்வாறு தனது சுருதியை மாற்றத் தொடங்கியிருப்பதற்கான பிரதான காரணம் இலங்கை அரசாங்கம்,  அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தவர்கள் தமிழர்கள். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது. சட்டங்கள் மூலம் தமிழர்களின் பேச்சுச் சுதந்திரத்தைக்கூட கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இந்நிலையில், இவ்வாறான இலக்கியங்கள் வெளிவருவது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாக கவிதைகள் உள்ளடங்கிய இந்தச் சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சஞ்சிகையின் கவிதைகளில் ஜெனீவா விடயங்கள் தொடர்பாகவும் இருக்கிறது.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு கவிஞர்களின் பங்கும் மிக அளப்பரியது. ஈழத்தின் கவிச்சக்கரவர்த்தி புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பல கவிஞர்களும் தங்களின் கவி வரிகள் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்தை வெகுஜனப் போராட்டமாக மாற்றி வலுச்சேர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரித்தானிய காலணித்துவத்தின் கீழ் இந்தியா இருந்தபோது மகாகவி பாரதியார் கவிதைகள் ஊடாக விடுதலை வேட்கையை உணர்த்தியவர். பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி மற்றும் கும்மிப்பாடல் போன்றவை அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய நாடுகள் சபையானது தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்கும்” – இரா.துரைரெத்தினம் நம்பிிக்கை !

இலங்கை இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன்வைக்குமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இன்று (திங்கட்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தீவினுள் தமிழ் பேசும் மக்கள் பரந்துபட்டளவில் வாழ்ந்தாலும் வடகிழக்கிலேயே பெரும்பான்மையாக தமிழர்கள் வரலாற்று அடிச்சுவடுகளுடனும், ஒரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்துடனும் வாழ்ந்து வருவது வரலாறாகும்.

மாறிமாறி ஆட்சி புரிகின்ற சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளுகின்ற விரோதமான செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை. கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விரோதமான செயற்பாடுகள் ஊடாக ஓரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்தை இல்லாமலாக்குகின்ற செயல் திட்டமே.

இனவாத அரசால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கும், அபிவிருத்தி தொடர்பான புறக்கணிப்புக்களுக்கும், மனித உரிமை மீறல்கள்,உயிருக்கு உத்தர வாதமில்லாத சம்பவங்கள் அனைத்திற்கும் இலங்கை அரசு எந்தத் பதில்களும் கூறாத நிலையில் தமிழர்களாகிய நாங்கள் கடந்த காலச் சம்பவங்களுக்கும், எதிர் காலத்தில் ஒரு சம்பவமும் நிகழாமல் இருப்பதற்கும்,

குறிப்பாக, அதிகாரப்பங்கீடு மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை, காணாமல் போனோர் விடயம், கைதிகளின்விடுதலை, பௌத்த மயமாக்கல், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், காணி சுவீகரிப்பு போன்ற மனித சமூகம் ஏற்றுக் கொள்ளாத செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சமாதானமாக வாழ்வதற்கும்,

சர்வதேசத்தை நாட வைத்தது இலங்கை இனவாத அரசே. சர்வதேசம் தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு ஜெனிவாவின் கூட்டத்தொடர் ஒரு நியாயமான முடிவுகளை எடுக்கும் என்னும் நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு செயற்படுவது மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும், அயல் நாடான இந்தியாவையும், இலங்கையிலுள்ள தமிழர்களையும் வெறுத்துக் கொண்டு எந்தளவிற்கு நியாயமான ஆட்சியைப் கொண்டு செல்ல முடியுமென உலகத்தில் வாழ்கின்ற ஓட்டுமொத்த தமிழர்களும் கேள்வி கேட்குமளவிற்கு அரசை சந்தேகிக்கின்றனர்.

அருகிலுள்ள இந்தியாவையும் வெறுத்து இராஜதந்திரமான செயற்பாடுகளையும் வெறுக்குமளளவிற்கு நடந்து கொள்கின்றன.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நியாயமின்றி வாழமுடியாது என்னும் முடிவிற்கே வந்துள்ளனர்.

சமூகம் விழிப்படைந்து உள்நாடுகளிலும், வெளி நாடுகளிலும் நடாத்தப்படுகின்ற வெகுஜன ரீதியான போராட்டங்களுக்கு ஒவ்வொரு தமிழனும் உடந்தையாகவே இருக்க வேண்டும், இருப்பார்கள்.

உயிரைக் கூட விடுதலைக்காக துச்சமாக மதித்த எமது சமூகம் ஒரு படி இறங்கி அகிம்சை ரீதியான ஒரு வெகுஜன போராட்டத்தை தமிழ் மக்களின் எழுச்சியுடன் அணி திரள்வது அனைவரினதும் ஆரோக்கியமானதே. இதில் நாங்கள் பார்வையாளர்களாக இருந்து விடாமல் பங்காளர்களாக மாற வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

“யாழ்.உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை” – பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு !

“யாழ்ப்பாண மாவட்ட  உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை” என பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் மகளிர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுடன், இணைபங்குதாரராக “சேர்ச் போர் கொமன் கிறவுண்ட்”  நிறுவனம் ஆகியன இணைந்து “கற்றல் மற்றும் தலைமத்துவத்தில் பெண்கள்” எனும் நிகழ்ச்சி திட்டம் மற்றும் “அரசியலில் பெண்களை வலுப்படுத்துதல்” எனும் நிகழ்சி திட்டங்களின் கீழ் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான கழகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலும் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
அதன் போதே பெருமளவான பெண் உறுப்பினர்கள் தமக்கு சபைகளில் உரிய அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டினர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,  “உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களான தமக்கு சபைகளில் கருத்துக்களை முன்வைப்பதற்கு நேரம் ஒதுக்கப்படுவது போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சபையின் வேலை திட்டங்களின் போது , தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் , வட்டாரத்தில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தாம் நேரடி உறுப்பினர்கள் என கூறி தம்மை புறக்கணித்து வட்டாரங்களில் வேலை திட்டங்களை முன்னெடுப்பதாகவும், பல சமயங்களில் வட்டாரங்களில் தாம் முன்மொழிந்த வேலை திட்டங்களை கூட இவர்கள் நேரடியாக சென்று எம்மை
புறக்கணித்து வேலை திட்டங்களை முன்னெடுத்து அதற்கு உரிமை கோருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
இவை தொடர்பில் தவிசாளர்களுக்கோ , எமது கட்சி தலைமைகளுக்கோ தெரியப்படுத்தினால் , அவர்கள் அது தொடர்பில் கவனத்தில் எடுப்பதில்லை” எனவும் கவலையுடன் தெரிவித்தனர்.

“முள்ளிவாய்க்காலுடன் தமிழருக்கெதிரான யுத்தம் நின்றுவிடவில்லை. அது அரசாங்கத்தால் இன்று வரை சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகின்றது” – பொ.ஐங்கரநேசன்

“முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை எனவும், அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (01.03.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சமகால அரசியல் உரையரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்விர் ‘வனவள அரசியல்’ என்னும் தலைப்பில் பொ.ஐங்கரநேசன் உரையாற்றியபோதே இவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், “யுத்தம் முடிவடைந்த பின்னர் வனவளத் திணைக்களம் வடக்கில் ஐந்து இலட்சம் ஏக்கர் காடுகளைப் புதிய ஒதுக்குக் காடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஒரு இலட்சம் ஏக்கர் காடுகளைப் பேணல் காடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

யுத்தகால இடப்பெயர்வின்போது எமது மக்களால் கைவிடப்பட்ட பயிர்ச் செய்கை நிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் மரங்கள் வளர்ந்து துணைக்காடுகளாகியுள்ளன. இவற்றையும் உள்ளடக்கியே வனவளத் திணைக்களம் காடுகளின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதற்குள் நாம் நுழைவதைக் காடுகள் பேணல் கட்டளைச் சட்டம் தடை செய்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களம் தேசியப் பூங்காக்கள் என்ற பெயரில் மன்னாரிலும் சுண்டிக்குளத்திலும் நெடுந்தீவிலும் குடியிருப்புகளையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உள்வாங்கி இரண்டே முக்கால் இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பைத் தேசியப் பூங்காக்களாக அறிவித்துள்ளது.  நெடுந்தீவின் நான்கில் ஒருபாகம் இதற்குள் அடங்குகிறது.

இவை சரணாலயங்களாக இருந்தவரைக்கும் பிரச்சினைகள் இல்லை. ஆனால், தேசியப் பூங்காக்கள் ஆக்கப்பட்ட பின்னர் இந்த எல்லைகளினுள் மனித நடவடிக்கைகள் பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறிநுழைந்தால் தண்டிக்கப்படுவோம்.

வனஜீவராசிகள் திணைக்களம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயரில் நாகர் கோவிலிலும், நந்திக்கடலிலும், நாயாற்றிலும், விடத்தல் தீவிலும் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இவை மட்டுமல்லாமல், கண்டல்மரங்கள் எங்கெல்லாம் வளர்ந்துள்ளனவோ அந்தப்பகுதிகள் எல்லாம் தன்னுடையது என்ற அறிவிப்பையும் இப்போது வெளியிட்டுள்ளது.

இவை வெளிப்புறப் பார்வைக்கு சூழல் பாதுகாப்புக்குரிய நல்ல நடவடிக்கைகளாகவே தோன்றும். ஆனால், இவற்றின் பின்னால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் சூழல் அரசியல் உருமறைப்பாக உள்ளது.

அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களின் வாழ்விடங்கள் வந்தேறு குடிகளான ஐரோப்பியர்களால் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டே அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்கள்.

இதனைவிட இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் உத்தியாக தேசியப் பூங்காக்களை விரிவுபடுத்தி வருகிறது.

வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு அரசாங்கம் தொடுத்திருக்கும் இந்தப் பச்சை யுத்தத்தை நாம் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.