11

11

பங்களாதேஷின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் தாஷ்னுவ அனன் ஷிஷிர் !

பங்களாதேஷின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகக் கருதப்படும் தானுஷ்வ அனன் ஷிஷிர் தனது முதல் நிகழ்ச்சி முடிந்து கண்ணீர் விட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

to-cheers-from-colleagues-bangladesh-s-first-transgender-news-anchor-breaks-dow

தாஷ்னுவ அனன் ஷிஷிர் வங்க தேசத்தின் சமூகச் செயற்பாட்டாளராக அறியப்படுகிறார். குடிபெயர்ந்தவர்கள், திருநங்கைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தானுஷ்வ அனன் ஷிஷிர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மகளிர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் மூலம் வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

தனது முதல் நிகழ்ச்சியில் மூன்று நிமிடம் செய்தி வாசித்துவிட்டு அவர் கண்ணீர் விட்ட புகைப்படங்கள் வைரலாகின.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமானது குறித்து தானுஷ்வ அனன் ஷிஷிர் கூறும்போது,

“இது மக்களின் சிந்தனையில் புதிய வடிவத்தை ஏற்படுத்தும். மக்களின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், மக்கள் உணர்ச்சி வசப்படுவதில்லை. இந்த நிகழ்வு அவர்களை உணரச் செய்யும் என்று நம்புகிறேன். மேலும், அவர்களைச் சுற்றியுள்ள என்னைப் போன்ற தாஷ்னுவாக்களையும் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை !

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிட்சர்லாந்திலும் குறித்த ஆடை அணிய தடை விதிக்க மக்களுடைய ஆதரவு கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அம்மாதிரியான ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்து தடை விதிக்கும் சட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஐரோப்பிய நாடுகளில் முகத்தை மறைக்கும் புர்கா போன்ற ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய ஆடைகளுக்குத் தடை வேண்டி விவாதங்கள் பரவலாக நடத்தப்பட்டு வந்தன. இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராகப் பொதுமக்கள் வாக்களிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசே வலியுறுத்தியது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு எதிராக 14,26,992 பேர் வாக்களித்தனர். 13,59,621 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்தில் விரைவில் தடை அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடை அணிவது அடிப்படைவாதம் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

 

“உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் சீனா ஈடுபட்டுள்ளது” – அமெரிக்க நிபுணர் குழு உறுதி !

“உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் சீனா ஈடுபட்டுள்ளது” என்று அமெரிக்க நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில்,

“உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இன அழிப்பில் ஈடுபடுகிறது. அதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பான செய்தியை ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த நிலையில் அமெரிக்க நிபுணர் குழுவும் இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால், இதனை சீனா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் நிறவெறி கொண்ட குடும்பம் அல்ல” – பிரிட்டன் இளவரசர் வில்லியம்

“நாங்கள் நிறவெறி கொண்ட குடும்பம் அல்ல” என  பிரிட்டன் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மாகல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

ஹாரி – மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசிய ஆப்பிரிக்க அமெரிக்கரான மேகன் மார்கல், ”நான் கர்ப்பமாக இருந்த காலங்களில் என் மகன் பிறந்த பிறகு எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். அவனுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது, அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படாது’ என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. நிறைய முறை இனி உயிர் வாழக் கூடாது என்று நினைத்திருக்கிறேன்.

உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவரிடம் உதவி கோரினேன். அவர், ‘என்னால் உதவ முடியவில்லை. அது குடும்பத்துக்கு உகந்ததில்லை’ என்றார். தற்போது எங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறக்க இருக்கிறது” என்று மேகன் மார்கல் தெரிவித்தார்.

பா.ஜ.க வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் செந்தில் – ஊழலற்ற ஆட்சிக்காக இணைந்தேன் என விளக்கம் !

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்று வரைக்கும் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், ஜெயலலிதா மறைவை அடுத்து டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், “ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு !

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

இணையம் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 1,400 டொலர் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. உலக அளவில் கொரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டொலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.

இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதியாக ஜோ பைடன் கூறியதாவது:-

இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் (இலங்கை மதிப்பில் 2 இலட்சத்து 75000) வழங்கும் பணி தொடங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும், என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘அமெரிக்கர்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும். பின்னர் உபரி இருந்தால் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும்’ என்றார்.

கோட்டாபாயவுக்கு பின்னர் பொதுஜன பெரமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான் – பகிரங்கப்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி !

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவே களமிறங்குவார் என பொதுஜன முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிராகவே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சூழ்ச்சி செய்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் வித்தாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சஹான் பிரதீப் வித்தாரண,

கோவிட் நெருக்கடியை எமது நாடு வேறு நாடுகளை விட சிறப்பாக கையாண்டதன் பின்னணியில் மீண்டும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதில்லை என நினைத்தாலும் மக்கள் இறுதியாக அவரை கைவிடமாட்டார்கள். மீண்டும் போட்டியிடச் செய்யும் வகையிலான கோரிக்கைகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஒரு வருடத்திற்குள் கொரோனா தொற்றுடன் மோதி, ஊழல் மோசடி, போதைப்பொருளை அழித்து இளைஞர்களை வழிநடத்தியவர் ஜனாதிபதியே. சிலர் இதனை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியை களங்கப்படுத்தி அழிக்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நனவாகாது. அப்படியொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு மக்கள் வழங்கமாட்டார்கள். சில கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள்.

சில வருடங்கள் சென்று அரசாங்கத்தின் உறுதியைப் பேணாமல் பிரிந்து சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றார்கள். எமது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு பொதுஜன முன்னணிக்குள் தலைவர் ஒருவர் வருவார் என்கிற அச்சம் சிலருக்கு உள்ளது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடுத்தகட்டமாக பஸில் ராஜபக்ஷவே தெரிவுக்கு இருக்கின்றார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர். அவர் போட்டியிடுவதை எதிர்ப்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். அதனால்தான் சேறுபூசுகின்றார்கள். பொதுஜன முன்னணியையும், பஸில் ராஜபக்ஷவையும் வீழ்த்த எவருக்கும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது.” – அருந்திக்க பெர்னாண்டோ

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது.” என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற தெரிவுக்குழுதான் கண் துடைப்பு நாடகம். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை என்பது இறுதியானது அல்ல. அதில் நல்ல விடயங்களும் உள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாத சில விடயங்களும் உள்ளன. எது எப்படி இருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” – என்றார்.

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு, கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(10.03.2021) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அவர்தான் பிரதானி எனக் காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கூட தற்கொலை தாக்குதல் போராளி ஒருவரை உருவாக்குவதற்குப் பல வருடங்கள் எடுத்தன. எனவே, சஹ்ரான் திடீரென உருவான நபர் கிடையாது. 2005 காலப்பகுதியில் இருந்து அவர் கருத்தியலை விதைத்து வந்துள்ளார். 2014 வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தகவல் வெளியிடப்படவேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு என்பது நாடகம். எனவே, நாடகம் முடியும்போது நிச்சயம் உண்மை தெரியவரும்.

எமது ஆட்சியின்கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்படும். கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.