April

April

“யாழ். மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லை.” – வி.மணிவண்ணன்

“யாழ். மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லை.” என மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காக மாநகர காவல் படை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவின் சீருடை வடிவம் என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று (08.04.2021) ஏற்பாடு  செய்திருந்த வி.மணிவண்ணன் ஊடக சந்திப்பின் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

மாநகர காவல்படையின் சீருடையில்  எந்தவொரு முன்னிலைப்படுத்தலோ அல்லது உள்நோக்கமோ கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய காவல் படையானது, ஏற்கனவே மாநகர சபையில் பணிபரியும் ஐந்து ஊழியர்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் வடக்கில் உள்ள ஒரேயொரு மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்காக, குப்பைகளைக் கண்டபடி போடுபவர்கள் மற்றும் நகரை அசுத்தமாக்கும் பிற செயற்பாடுகளைச் செய்பவர்களைக் கண்டறிந்து அந்தச் செயற்பாடுகளைத் தடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தச் செயற்பாடு கொழும்பு மாநகர சபையின் செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பரப்பப்பட்டுவரும் செய்திகளுக்கு மாநகரசபை பொறுப்பேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் தம்மிடம் விளக்கம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மாநகர முதல்வர் மணிவண்ணன், மேற்படி விடயங்களைச் சுட்டிக்காட்டியதாகவும், விளக்கமளிப்பதற்காக அவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட சீருடையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்து கடமையில் ஈடுபட்ட யாழ் மாநகர காவல் படை – பொலிஸ் விசாரணை ஆரம்பம் !

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் மீண்டும் விடுதலைப்புலிகளின் காவல்துறை; அசத்திய மணி! – ATHIRVU.COM

அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

இதனால் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக மாநகரகாவல் படை உருவாக்கம் !

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், நேற்று (07.04.2021) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதிய காவல் படையில் பணிபுரியும் ஒருவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபையின் காவல் படையின் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் வீதியில் இந்தப் பணியை ஆரம்பித்தோம். வாகனம் ஒன்றிலிருந்து கழிவு எண்ணெய் வீதியில் ஊற்றப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் நாம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். எமது பணி சிறப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.” – ரிசாட் பதியுதீன்

“உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07.04.2021)  உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இலங்கையில் கடந்த 10 வருடங்களாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் அளுத்கம், திகண, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது சஹ்ரானின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அதேபோன்று அந்த விடயத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை விடுதலை செய்யவேண்டும்.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத் தான் வீழ்ச்சி ஏற்படும். அது அழிவிற்கே வழிவகுக்கும் என அரசை கேட்டுக்கொண்டார்  ரிசாட் பதியுதீன்.

“மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள்.” – நாடாளுமன்றில் நீதியமைச்சர் !

“மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள்.” நீதிஅமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிஅமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்ததாக்குதலை தடுக்கக் கூடியதாக இருந்தாலும் பொறுப்பானவர்கள் தவறிவிட்டதாக அறிக்கைசுட்டிக்காட்டுகிறது. இரத்த தாகம் கொண்டகுழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முழு முஸ்லிம் சமூகமும் கண்டித்துள்ளது.

1,100 வருடங்களான ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழும் மக்களை அடிப்படைவாதத்தின் பால் தள்ளுவதாக அமையக் கூடாது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரிவினையை வளர்ப்பதாக இந்த அறிக்கை இருக்கக்கூடாது.

சுயலாப அரசியலுக்காக இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இனங்களுக்கிடையில் நல்லிணகத்தை குழப்பும் வகையில் இந்த அறிக்கையை பயன்படுத்தக்கூடாது. இலங்கையில் வாழும் மொத்த முஸ்லிம்களும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாதென அறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வாறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சமூகவலைத் தளங்களின் வாயிலாக பரப்பப்படுகிறது. சாய்ந்தமருதில் இயங்கிய பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள வீடு அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்தே பிடிபட்டதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்றே குர்ஆன் குறிப்பிடுகிறது. கொடை வழங்குதல்,தொழுதல் என்பவற்றைவிட மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள்.

குரோதத்தினால் மேலும் குரோதம் வளரும் என்று புத்தபிரான் போதித்திருக்கிறார். பிரிவு,சந்தேகம், குரோதம், வெறுப்பு என்பவற்றை ஒதுக்கி ஒவ்வொருவர்களுக்குமிடையில் நல்லுறவை வளர்க்கவும், ஒற்றுமையை பேணவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

பொதுவான முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்கவில்லை.ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இனவாதம்,அடிப்படைவாதம் என்பவற்றை பரப்பி மக்களை தூரமாக்காது மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும். சந்தேகத்தை ஒதுக்கி கௌரவமான சமூகமாக வாழ்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது” எனவும் நீதிஅமைச்சர் குறிப்பிட்டார்.

“எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை.” – வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் தெரிவிப்பு !

உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது.

ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது.

இந்த நிலையில் இப்போது வரை எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார்,

கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் திகதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. கடந்த மார்ச் 26-ந் திகதி முதல் ஏப்ரல் 1-ந் திகதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.

இதனிடையே தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக கவலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..‌

“ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.” – ரவூப் ஹக்கீம்

“ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.” என  நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(07.04.2021) விவாதிக்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் Pakkam Bin-abu என்ற நபர் குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனக்கூறிய அவர், ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா? என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்ராமநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.
சபாநாயகர் இதனை இன்றைய நாடாளுமன்றில் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ரஞசன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என நாடாளுமன்ற செயலாளர்நாயகம் தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ரஞசன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.

“விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

“விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.” என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(07.04.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறைக்கவோ முற்படவில்லை என குறிப்பிட்ட அவர் சட்டமா அதிபரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.பயங்கராவத செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டத்திட்டங்களை கொண்டுவர வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் அதிரடி தடை !

ஐ.ஸ், அல் குவைதா உட்பட பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் இன்று அதிரடி தடை உத்தரவை அறிவித்துள்ளது.

இவைகளில் 11 அமைப்புக்கள் இருப்பதோடு அதிக அமைப்புக்கள் இலங்கைக்குள் செயற்படுவதாக காணப்படுகின்றன.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ) , சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) , ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ), ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM), தாருல் அதர் @ ஜம் உல் அதர், இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM), ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS) , அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு, சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls), சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim) ஆகிய அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களாகும்.

ஏற்கனவே புலம்பெயர்ந்த 7 தமிழர் அமைப்புக்களும் 338 தனிநபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.