May

May

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை !

யாழ். பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதி வழங்கியுள்ளதாகதெரிவிக்ககப்பட்டுள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை, 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை, 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகப் பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கேட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையம் திறப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஐம்பத்தி நான்கு கட்டில்களைக் கொண்டதான கொரோனா நோயாளிகளுக்கான கொரோனா விடுதி அமைக்கப்பட்டு பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.அன்சார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சனி, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

“சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு 70 மில்லியன் டொலர்கள் மோசடி” – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனாத் தடுப்பூசித் திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- .

சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என்ற அடிப்படையில் 14 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொண்டுள்ள போதிலும் பங்களாதேஷ் குறித்த தடுப்பூசியை 10 டொலர்களுக்குப் பெற்று கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசி கொள்வனவின்போது 70 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளது. நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் முதலே ஒழுங்காக முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டில் 60 வீதமானவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமானால் நாட்டுக்கு மொத்தமாக 30 மில்லியன் (3 கோடி ) கொரோனாத் தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் நிலையில், அரசு கடந்த 5 மாதங்களில் 3 மில்லியன் (30 இலட்சம்) தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி நாட்டுக்கு மேலும் 27 மில்லியன் (இரண்டு கோடி 70 இலட்சம்) தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கும் சிறிய அளவு தடுப்பூசிகளையும் அரசில் உள்ள சிலர் தமது பதவிப் பலத்தைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துவரும் நிலையில் பொதுமக்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களிடையே 10 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும், இலங்கையில் அந்தப் பரிந்துரை மீறப்பட்டுள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் இன்று நாடு முழுவதும் தடுப்பூசி தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தடுப்பூசி வழங்கும் கோட்பாடுகளை மீறி அரசு செயற்பட்டு வருகின்றது. மக்களின் உயிரை விசேடமானவர்கள் மற்றும் முக்கியமற்றவர்கள் எனத் தரம் பிரிக்க வேண்டாம் – என்றுள்ளது.

“இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து செயற்படுங்கள்.” – சீன அரச நிறுவனத்துக்கு கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவுறுத்தல் !

இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

துறைமுகநகர வேலைத்திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக உத்தியோகப்பூர்வமாக சீனா அரச நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மொழி பெயர்ப்பலகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது அதிகமாகியுள்ள நிலையில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள்  பலரும் இது தொடர்பில் தங்களுடைய விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து குறித்த நிறுவனத்துக்கு சீன தூதரகமும் மொழிக்கொள்கை தொடர்பில் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்று இலங்கை வீரர்கள் !

கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மூவரை தெரிவு செய்துள்ளனர்.

இவர்களில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து அண்மையில் விலகிய திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க ஆகிய மூவரும் ஆவர்.

Caribbean Premier League 2018: Teams, Squads And Change in Rules |  CricketTimes.com

அண்மையில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் திசர பெரேராவை பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி நிர்வாகமும், இசுரு உதானவை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் , வனிந்து ஹசரங்கவை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி நிர்வாகமும் எடுத்திருந்தன. இவர்கள் மூவருமே சகலதுறை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் தீவில் நடைபெறவுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபிரியன் பிரீமியர் லீக்கில் கிரென் பொல்லார்டின் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானதுடன், அந்த அணி நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் !

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தடுப்பூசிகளைப் பணம் செலுத்திப் பெறாதீர்கள் – இலங்கையில் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் !

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், இவ்வாறு பெற்றுக்கொள்வது ஆபத்தானது எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அவ்வாறு தடுப்பூசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கும்படியும் அதன் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்கி வரும் நிலையில், அதனை நாட்டில் எவருக்கும் விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறு வழங்குபவர்களுக்கு எதிராக கொரோனாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓரிரு மாதங்களில் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பதற்றம் அடைந்து உறுதிப்படுத்தப்படாத தடுப்பூசிகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

“என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது. ”- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்தியப்பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மம்தாவுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மம்தாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்காள தலைமைச் செயலாளரை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இதில், எங்கள் தவறு என்ன இருக்கிறது? பிரதமருடனான கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது.
மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக பிரதமர் தன் காலில் விழும்படி கூறினால், நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் அதுபோன்று நடந்து கொள்கிறீர்களா? நீங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும் தோல்வி அடைந்துள்ளீர்கள். எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்?  வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டம் பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது பாஜக தலைவர்களும் கவர்னரும் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏன் அழைக்கப்பட்டனர்?
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்தியும் கொரோனா நோயாளர்களை நேரடியாக பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் !

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை உச்சம் பெற்றுள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இதன் அலை இன்னும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Image
கோவையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், உணவு வழங்கும் முறை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
இது தொடர்பில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை  பி.பி.இ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! என பதிவிட்டுள்ளார்.

‘யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்துங்கள்.” – சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தல் !

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை  அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு ஆகிய  இடங்களிலும்  அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

ஆகையினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்தத் தடுப்பூசிகளை,  விரைவாக மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டினை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காவிடின் அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

ஆகவே தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுங்கள்” என  சுகாதார அதிகாரிகளுக்கு,  அமைச்சர் நாமல் பணிப்புரை விடுத்துள்ளார்.