14

14

“நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்.” – எம்.ஏ.சுமந்திரன் உறுதி !

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திட்டமிட்டு உடைக்கப்பட்டமை அநாகரிகத்தின் உச்சகட்டமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுத்தூபி உடைப்புக்கு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த மிலேச்சத்தனமான சம்பவத்தினைக் கண்டித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இச்செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை; இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது.

மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும் பொலிஸும் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்ட பின்னர் தான் இதுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம் என்றார்.

“கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை.” – அமெரிக்காவில் அறிவிப்பு !

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது:

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம். இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல்  இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 80.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் !

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் நேற்று (13.05.2021) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி இறுதி வாரத்திலிருந்து கொரோனா தொற்றுத் தடுப்பூசி பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிஷீல்ட் தடுப்பூசி சுகாதார துறை மற்றும் முப்படையினருக்கு முதற்கட்டமாக வழங்கிய இலங்கை அரசாங்கம், இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கும் அளித்திருக்கின்றது.

எனினும் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி இரண்டாம் கட்டத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து பெற்றக்கொள்ளப்பட்ட ஒருதொகை தடுப்பூசிகள் மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தினமும் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்காக உலக வங்கியிடம் இலங்கை அரசாங்கம் நிதியுதவி கோரிய நிலையில் சுமார் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகின்றது. அந்த அறிக்கையின் படி, கொரோனா தொற்றுத் தடுப்பூசி உதவி மறறும் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துகின்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற இரண்டாவது நிதியுதவியாக இது அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம் உட்பட மேல் மாகாணத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பட்டம் விடும்போது ஏற்பட்ட விபத்து – 5 வயது குழந்தை உட்பட மூவர் பலி !

காலி – மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் காயமடைந்த நிலையில் இருந்த யானையினை காப்பாற்ற பிரித் ஓதி சிகிச்சை !

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் இருந்த யானையினை காக்கும் நோக்கோடு இன்று வவுனியா பௌத்த துறவிகளால் பிரித்தோதல் இடம்பெற்றுள்ளது.

வவுனியா – புளியங்குளம் – புதூர் காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் குறித்த பகுதியிலுள்ள காட்டில் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கின்றது.

IMG 20210514 184421

 

12 வயது மதிக்கத்தக்க குறித்த யானைக்கு இராணுவத்தினர், வனவிலங்கு துறையினர், கிராம மக்களின் உதவியுடன் வனவிலங்கு துறையின் வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பற்றும் நோக்கோடு இன்றைய தினம் பௌத்த துறவிகளினால் பிரித்தோதல் வழிபாடும் குறித்த இடத்தில் இடம்பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை அமெரிக்கா பல காலம் கழித்து ஏற்றதை போல முள்ளிவாய்க்காலில் நடந்ததும் இனப்படுகொலை என்பதை ஏற்கும் நாள் வரும்.” – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்ததுடன் மட்டும் நின்றுவிடாமல், துயிலும் இல்லங்களை உழவு இயந்திரம் கொண்டு உழுது அழித்திருந்தார்கள். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தகைய
கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையில் செயற்படும் இந்த அரசாங்கம் தனது தலையில் தானே மண்ணை அள்ளி வாரிக்கொட்டிக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 12 ஆம் திகதி இரவு அடித்து உடைக்கப்பட்டு, புதிதாக நடப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் மேற்கெண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.,

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 12 ஆம் திகதி இரவு அடித்து உடைக்கப்பட்டு, புதிதாக நடப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டமை அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான, நாகரிகம் அற்றசெயற்பாடாகும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் இதயங்களை மிகவும் சலனப்படுத்தி இருந்தாலும், எமக்கு இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனென்றால், கடந்த காலங்களில் இத்தகைய பல மிலேச்சத்தனமான நடவடிவடிக்கைகளை தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உலகம் வெகு விரைவில் ஏற்றுக்கொள்ளத்தான் போகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய முட்டாள்த்தனமான செயற்பாடுகளினால் இந்த உண்மையை இப்போதும் மறைக்க முடியாது. ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை இத்தனை காலம் கடந்த பின்னர் அமெரிக்கா இப்போது தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அரச படைகள் இதனைச் செய்யவில்லை என்று அறிக்கை விட்டிருக்கின்றார்கள். அப்படியானால் குறித்த நினைவுத்தூபி முள்ளிவாய்க்காலில் தொடர்ந்து நிரந்தரமாக இருப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள் போல் தெரிகின்றது. “ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை அமெரிக்கா பல காலம் கழித்து ஏற்றதை போல முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதும் இனப்படுகொலை என்பதை ஏற்கும் நாள் வரும்.”

விரைவில் எமது மக்கள் புதிய நினைவுத்தூபியை அதே இடத்தில் தாபிக்க அரசாங்கமும் படைகளும் இடமளிப்பார்கள் என்பதா இதன் அர்த்தம்? அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே
18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி கொவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர இப்பொழுதே தயாராகுவோம் என குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சரின் மனைவி !

துறைமுக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவின் மனைவி கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மத்தியில் வரிசையில் காத்திருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பிணையில் விடுதலை | தினகரன்அவர் கொழும்பு – மாளிகாவத்தை சிறிசேன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி நிலையத்தில் காத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை அவர் சதொச நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்றும் தினமும் பொதுமக்களுடன் இணைந்தே ரயிலில் பயணம் செய்கின்றார் எனவும் தெரியவருகின்றது.

யாழில் அம்மன் ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்வு – சுற்றி வளைத்த பொலிஸார் !

யாழ்ப்பாணம்- மல்லாகத்திலுள்ள அம்மன் ஆலயமொன்றில்,  இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட இருந்த  அன்னதான நிகழ்வினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர்  தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட 25க்கும் மேற்பட்டவர்களை குடும்பத்துடன் தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினர் உட்படுத்தியுள்ளனர்.

இன்று காலை குறித்த ஆலயத்தில், அன்னதானம் வழங்குவதற்கான சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள், அன்னதான நிகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன் அதில் பங்குகொண்டிருந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானது .” – சிவசக்தி ஆனந்தன்

“முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைப்பு இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானது .” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் மரணித்தவர்களை நினைவு கூருவது என்பது அடிப்படை உரிமையாகும் என இலங்கை அரசியலமைப்பில் மட்டுமன்றி  ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனாலும் அடிப்படை உரிமையை  தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளே தற்போது அரங்கேறுகின்றது.

இதேவேளை ஜனநாயகத்திற்கான அனைத்து வழிகளையும் முடக்கும் செயற்பட்டை இராணுவ நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் தற்போது யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான வழியை முடக்கியுள்ளதன் ஊடாக  தமிழ் இனத்தின் மீது கடுமையான அடக்கு முறையை அரசாங்கம் பிரயோகிக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும் தமிழர்கள் தங்களுக்கான உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டுதான் உள்ளார்கள் என்பதனை சர்வதேச நாடுகள் இதனூடாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளமையானது இன்னுமொரு இன அழிப்பிற்கான முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து அரசியல் செய்வதை வடக்கு, கிழக்கு மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் உடன் நிறுத்தவேண்டும்.” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

“முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவத்தினர் இடித்தழித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றேன்.” என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில், நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இராணுவமே பொறுப்பு என்று தெரிவிக்கப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நீங்கள் சொல்வதைப் போன்று நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டதற்கும் இராணுவத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இராணுவத்தினர் மீது எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமுடியாது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதால் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. பயணக் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தநிலையில், இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து அரசியல் செய்வதை வடக்கு, கிழக்கு மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் உடன் நிறுத்தவேண்டும். இறந்தவர்களை அஞ்சலிக்கவேண்டும் என்றால் வீடுகளிலிருந்து அஞ்சலியுங்கள்- – என்றார்.