18

18

“இனவாதத்தை நான் அல்ல நீங்கள் தான் தூண்டுகின்றீர்கள்.” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறினால் நான் இனவாதியா ..? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு மாகாணத்தில் 1000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 500 மாதிரிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 2200 கொரோனா நோயாளிகள் உள்ளனர்கள். 52 பேர் உயிரிழந்துள்ளார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒட்சிசன் வழங்குவதற்கான வசதிகள் இல்லை. நோயாளர் காவு வண்டிக்காக 194 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஏன் நீங்கள் வேற்றுமை காட்டுகின்றீர்கள்? என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இன்று அரசாங்கத்தினால் கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நிதி வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுள்ளோம். பரிசோதனைக் கூடங்களை அதிகரிக்கவும், 24 மணித்தியாலங்கள் வரை சேவையில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம்.

கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றோம்.’ எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கிய சாணக்கியன், ‘பிரதமர் கூறிய வார்த்தையை கூட நீங்கள் கேட்கவில்லை. Cath lab என்று கூறியவுடன் என்னை இனவாதி என்றார். பிரதமருக்கு வழங்கிய அறிக்கையினை கூட நீங்கள் நிறைவேற்றவில்லை. இனவாதத்தை நான் அல்ல நீங்கள் தான் தூண்டுகின்றீர்கள்.’ எனக் குறிப்பிட்டார்.

“நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதியுங்கள்.” – நாடாளுமன்றில் ரிஷாட் பதியுதீன் !

நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் இன்று நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அங்கு அவர் பேசிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தான் கைது செய்யப்பட்டு 22 நாட்களுக்கு மேல் சென்றுள்ளபோதும் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத தன்னை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இவ்வாறு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

“அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.” – க.வி.விக்னேஸ்வரன்

“அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.” என முன்னாள் நீதியரசர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2009ம் ஆண்டின் ஒரு பரிதாபகரமான தினத்தையே நாங்கள் இன்று நினைவு கூருகின்றோம். வடகிழக்குத் தமிழர்கள் பலவிதமான நெருக்கடிகளை இன்றும் சந்தித்த வண்ணமே இருக்கின்றனர். கொவிட் 19 நெருக்கடியை ஒருபுறத்திலும் அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை மறுபுறத்திலும் எதிர்கொண்டவர்களாக நாம் இன்றுள்ளோம்.

என்னைப் பொறுத்த வரையில் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவியல் குற்றச் சாட்டுகள் சிலவற்றிற்கு நான் பதில் கூற வேண்டியுள்ளது. நான் கூறியவை உண்மையாக இருந்தாலும் அவை குற்றச்சாட்டுக்களாக என் மீது சுமத்தப்பட்டுள்ளன. நான் கீழ்க் கண்டவாறு பேசிவை தேசிய ரீதியாகவும் இன ரீதியாகவும் வன்முறையை எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளன என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளேன் – அவையாவன –

  1. இலங்கையின் பூர்வீகக் குடிகள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பது
  2. மகாவம்சம் ஒரு சரித்திர வலுக்கொண்ட ஆவணம் அல்ல என்பது
  3. இலங்கை அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான தமிழ் மக்களுக்கு எதிரான
    நடவடிக்கைகளே விடுதலைப் புலிகளை ஆயுதம் ஏந்த வைத்தன என்பது
  4. போரின் முடிவின் போது முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்பது
  5. வடக்கில் சிவில் நடவடிக்கைகளை இராணுவத்தினரே பாரமேற்றிருக்கின்றனர் என்றும் வடக்கானது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றது என்பதும்

ஆகவே இன்று நாம் இங்கு வடக்கிலும் கிழக்கிலும் அடக்கு முறைகளுக்கும் அரசின் குற்றஞ்சாட்டத்தகு நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றோம். இவற்றின் நடுவே தான் நாம் முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் உயிர் நீத்த எமது உறவுகளை நினைவு கூருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்களே இலங்கையின் வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையினர். ஆனால் நாம் இதுகாலமும் பேணிவந்த தனித்துவத்திற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. வேறு பலவற்றிற்கும் மத்தியில் எமது பாரம்பரிய காணிகளைக் கையேற்று உள்ளார்கள். பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த மதத்தை இராணுவ துணை கொண்டு திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் வெளியில் இருந்து சிங்களக் குடியேற்றவாசிகள் வருவிக்கப்பட்டு அரச குடியேற்றங்களில் நிலை நிறுத்தி வரப்படுகின்றனர். குடிப்பரம்பல் நிலை மாற்றப்பட்டு வருகின்றது. நினைவுத் தூபிகள் அழிக்கப்பட்டு
வருகின்றன.

இவ்வாறான அரசாங்க இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் பூகோள அரசியலில் முற்றிலுந் திளைத்திருந்த வல்லரசு நாடுகள் முள்ளிவாய்க்காலில் எமது இளைஞர்களையும் அப்பாவி மக்களையும் 2009ல் கொன்று குவிக்க இடமளித்தார்கள். தமது உறவுகளை இழந்த எம் மக்களுக்கு இன்று வரையில் நீதி பெற்றுத்தரப்படவில்லை. ஆனால் எமது மக்களுக்கு கொடூரமான ஆற்றொணாத் துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்கும் அரசாங்க உயர் பதவிகளும், இராஜதந்திரப் பதவிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. 12 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த எம் மக்களின் நினைவுத்தூபிகளை அடித்து நொறுக்கும் மிலேச்சத்தனமான காரியங்களை நாம் இன்று பார்க்கின்றோம். சர்வதேச சமூகத்தால் அதுபற்றி ஒன்றுமே செய்ய முடியவில்லை.

நாட்டின் ஒருசாராரை அடித்துத் துன்புறுத்திப் பதவியில் இருக்கும் அரசாங்கம் பல்வேறு அநியாய நடவடிக்கைகளை எடுக்கும் போது சர்வதேச சமூகத்தால் எதுவுமே செய்ய முடியாதிருப்பது மனவருத்தத்தை அளிக்கின்றது. 2013ல் அப்போதைய பிரித்தானிய கன்சர்வேடிவ் பிரதம மந்திரி மதிப்பிற்குரிய டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அப்போது அவர் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றிற்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுத்தரப் போவதாகக் கூறினார். ஆனால் இன்று வரையில் எதுவும் நடந்தது போன்று தென்படவில்லை. தற்போது கூட பிரித்தானியாவில் கன்சர்வேடிவினரே ஆட்சியில் உள்ளார்கள்.

இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது சிங்களத் தலைவர்கள் கட்டாயமாக சிறுபான்மையினரை மனிதாபிமானத்துடன் நடத்தப் போவதாக பிரித்தானியர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் சுதந்திரம் அடைந்ததுமே மலையகத்தில் வாழ்ந்து வந்த பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள்.  அதன் பின்னர் காலத்திற்குக் காலம் தமிழ்ப் பேசும் மக்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் இடையூறு செய்யும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் சிறுபான்மையினர் பாதுகாப்புடனும் நியாயமான முறையிலும் வாழ உகந்த நடவடிக்கைகளை சுதந்திரம் வழங்கிய போது பிரித்தானியா எடுக்கத் தவறியது. பெரும்பான்மையினரின் மேலாதிக்கம் ஏற்படா வண்ணம் ஒரு சமஸ்டி அரசியல் யாப்பை அன்று உருவாக்கிக் கையளிக்காதது இன்றும் இலங்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே அன்று செய்யத் தவறியதை இன்று சரிசெய்ய பிரித்தானிய கன்சர்வேடிவ்
அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கருதுகின்றேன். இவ்வாறான
நடவடிக்கைகளினால் நீதியையும் நல்வாழ்வையும் நிலைநாட்டலாம் என்றும்
கருதுகின்றேன். மதிப்பிற்குரிய பிரதமர் க்ளெமன்ட் அட்லி காலத்தில் நடந்த
தவறிற்கு பிரித்தானியா இன்று பிராயச்சித்தம் செய்யலாம் என்பதே எம் மக்கள்
சார்பாக நான் முன்வைக்கும் பணிவான சமர்ப்பணம். அதே நேரம் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை ஐக்கிய நாடுகள் தாபனத்தில் கொண்டு வந்த ஜனநாயகக் கட்சி தற்போது மீண்டும் அமெரிக்காவில் பதவிக்கு வந்திருப்பது மகிழ்வை ஊட்டுகின்றது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பிரித்தானியாவுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில்
2009ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு நீதியைப்
பெற்றுத்தர முன்வர வேண்டும். எனவே தான் ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல்
நீதிமன்றுக்கு முன் கொண்டு செல்ல வேண்டியது ஜனநாயகத்தை விரும்பும்
அவ்விரு நாடுகளுக்கும் ஜனநாயகம் காக்கும் மற்றைய நாடுகளுக்கும்
முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு கடமையாக அமைகின்றது.

போர்க்காலத்தில் குற்றங்கள் பல புரிந்த படையினர் போர் முடிந்து கடந்த 12 வருட காலமாக தொடர்ந்து வடக்குக் கிழக்கில் நிலைபெற்றிருப்பதின் அவசியத்தை படைகள் பற்றிய சட்ட நிபுணர்களின் சர்வதேச அமைப்பொன்று ஆராய வேண்டிய தருணம் தற்போது உதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போதில்லை என்று அரசாங்கம் பகிரங்கமாகக் கூறியுள்ளது. வடகிழக்கில் அரசியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் இதுகாலமும் நிகழவில்லை என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. அப்படியானால் படையினர் தொடர்ந்து வடகிழக்கில் நிலைபெறக் காரணமென்ன? பாதுகாப்பே காரணம் என்று வெறுமனே கூறி விட முடியாது.
ஏனென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் அவ்வாறான கூற்றுக்குக் காரணங்கள்
காட்டப்பட வேண்டும்.

படையினர் தொடர்ந்து அரச காணிகள் 60000 ஏக்கர் வரையும் தனியார் காணிகள்
3000 ஏக்கர் வரையும் கையேற்றிருக்கின்றார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ
படையினர் பயிரிடுதல், மீன் பிடித்தல், வியாபாரங்களில் ஈடுபடல், வளங்களைச்
சூறையாடுதல் என்று பலவற்றில் ஈடுபட்டு வருவதைக் காணலாம்.

வெளி மாகாணங்களில் இருந்து வந்து வடகிழக்கு மாகாணங்களில் காணிகளை
அபகரிப்பவர்களுக்கு இவர்கள் துணைபுரிகின்றார்கள். பிறழ்வான வரலாற்றை
நிலைநாட்ட விரும்புவோருக்கு உற்ற துணையாக நிற்கின்றார்கள். மக்களின்,
முக்கியமாக இளைஞர்களின் வறுமையைப் பாவித்து அவர்களுக்கு மூளைச்
சலவை செய்யப் பார்க்கின்றார்கள். ஆகவே வடகிழக்கில் உள்ள எமது பாரம்பரிய பிரதேசங்களில் தொடர்ந்து 12 வருடங்களாகத் தரித்து நிற்பதற்கு பாதுகாப்பே காரணம் என்று கூறிவிட முடியாது. அவர்கள் தரித்து நிற்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். அக் காரணங்கள் சர்வதேச படையினர் சட்ட நிபுணர் குழாமால் ஆராயப்பட வேண்டும்.

கொழும்பிலும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் படையினர் அனைவரையும்
நிலை நிறுத்த இடம் போதாமல் இருந்தால் படையினர் தொகையை ஒன்பதாகப்
பிரித்து ஒவ்வொரு மாகாணத்திலும் 1/9 தொகை படையினரை இருத்த முடியும்
என்று நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் கூறியிருந்தேன்.
அதைவிட்டு வடகிழக்கில் மட்டும் மிகக் கூடிய படையினரை நிலை நிறுத்தும்
காரணம் என்ன? தொடர்ந்து எம் மக்களைக் கட்டுப்படுத்த, ஆணைக்குட்படுத்த,
செய்திகள் சேகரிப்பதாகக் கூறி உளவறிய படையினரை அரசாங்கங்கள் இங்கு
நிலை நிறுத்தியுள்ளமை மனவருத்தத்தைத் தருகின்றது.

எமது பாரம்பரிய மாகாணங்களில் நாம் சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் மற்றவர்கள் உள்ளீடும் தலையீடும் இன்றி வாழ முடியாதா? பாதுகாப்பு ஒரு கரிசனை என்றால் சமாதானக் காலத்தில் காவல்துறையினர் அதனைச் செய்யலாமே! வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் பெரும்பான்மையினரின் குறைகள் தீர வேண்டும் என்றால் சர்வதேச கண்காணிப்புடன் மக்கள் வாக்கெடுப்பு ஒன்று வடகிழக்கில் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் சமாதானத்தையும் சமரசத்தையும் உண்டுபண்ண சர்வதேச நாடுகள் எண்ணினால் வட கிழக்கில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதே ஒரேயொரு ஜனநாயக மார்க்கமாகும்.
இவ்வாறான மக்கள் தீர்ப்பை வடகிழக்கில் சாத்தியமாக்க அமெரிக்கா, பிரித்தானியா மட்டுமன்றி கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜனநாயகத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் மதிக்கும் நாடுகள் அனைத்தும் அதற்காகப் பாடுபட வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் நடத்தப்படும் மக்கள் தீர்ப்பு செயற்பாடானது ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்தில் மனித உரிமைகள்
நிலைநாட்டப்படவும் உதவிபுரியும்.

உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இன்றைய தினம் தடைகளைப் பொருட்படுத்தாது நாம் யாவரும் 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதியையும், பொறுப்புக் கூறலையும் பெற்றுத்தர ஒருமித்து செயற்படுவோமாக என்ற சபதமொன்றை இன்று எடுப்போமாக! என்றும் குறிப்பிட்டார்.

“பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறி குழந்தைகள் உட்பட்ட ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.” – நாடாளுமன்றில் சிவஞானம் சிறீதரன் !

“2009ஆம் ஆண்டு போரில் வெற்றிபெற்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அதன் பின்பு நாட்டை சமாதான பாதைக்கு கொண்டு செல்லாமை குறித்தும் அதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாமை குறித்தும் கூறவில்லை.” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(18.05.2021)  உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அலர்,

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை. அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை. எனினும் இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவேதான் நீதிகோரி சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

வரலாற்று ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் நடைமுறை அரசாங்கமும் தமிழ் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். சிறில் மெத்யு, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி உட்பட்டவர்களும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போன்றோரும் தமிழர்கள் ஒடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

2006ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் குழந்தைகள் உட்பட்ட ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானொலி மற்றும் ஊடகங்கள் ஊடாக கூறி அந்த இடத்தில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்று அவர்களை நினைவுகூரக்கூடுவதற்கு அனுமதியில்லை. அதனை விட முள்ளிவாய்க்காலின் நினைவேந்தல் இடம் இராணுவத்தினராலும் பொலிசாராலும் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட சப்பாத்து அடையாளங்கள் சாட்சிகளாக இருந்தன. இன்று நாடாளுமன்றத்தில் அதனைப் பற்றி பேசுவதற்கும் இடம் இல்லை. தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது இனஅழிப்பு இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயங்கவேண்டும். 2009ஆம் ஆண்டு போரில் வெற்றிபெற்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் பொய்யான அறிவித்தலை ஒன்றை விடுத்தார்.

எனினும் அந்த வெற்றியின் பின்னர் நாட்டை சமானதானத்துக்கு கொண்டு செல்லாமை குறித்த அவர் எதனையும் கூறவில்லை. எனவே சிங்களவர்களால் தமிழர்கள் எதிராக இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டமைக்கு சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

ஊரடங்கால் வெறிச்சோடிப்போன சாலைகளில் படுத்து ஓய்வெடுக்கும் சிங்கங்கள் !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25-ம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பூங்காவுக்கு செல்லும் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.  இந்நிலையில், சாலைகள் வாகனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகள் எந்த வித பதற்றமும் இன்றி சாலைகளில் அங்கும் இங்கும் செல்கின்றன.
அந்த வகையில்,நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பூங்காவில் உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுத்தன. இதை, அப்பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.
ஊரடங்கால் பூங்கா சாலைகள் எந்த வித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன

“அடுத்த 6 வாரங்களில் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளோம்.” – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ட்வீட் !

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைக் கடந்துள்ளது.அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.72 கோடியைத் தாண்டியுள்ளது. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.

சி.டி.சி.யின் இந்தப் பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்தில் மாஸ்க் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால் அமெரிக்காவில் விரைவில் இயல்பு நிலை திரும்ப உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று அடுத்த 6 வாரங்களில் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவேந்தல் !

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர்களை நினைவுவேந்தல் செய்யும் நிகழ்வு தமிழர்பகுதிகள் பலவற்றிலும் இடம்பெற்றுவருகின்றது.

இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த இறுதிக்கட்ட போரின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை இராணுவம் முற்றுகையிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.இதே நேரம் குறித்த துக்கததை வெளிப்படுத்தும் நோக்குடன்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுத்த நிற ஆடைகளுடன் பிரசன்னமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக ஒருவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதி போரின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலை நினைவு தினம் தமிழர்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்தவகையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 38 வயது ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை.” – எச்சரிக்கிறார் ஜெனரல் சவேந்திர சில்வா !

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை எனவும் நாட்டு மக்கள் இந்தக் காலப்பகுதியில் தேவைப்பட்டால் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கொரோனாத் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வீரியமாகப் பரவி வரும் நிலையில் சுகாதாரப் பிரிவினர் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் இல்லாத சந்தர்ப்பங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

பயணக் கட்டுப்பாட்டு நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறைக்கு அமைய  குறைந்தபட்ச ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும்.

நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்” – என்றார்.

இராணுவம் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – பல்கலைகழகத்தின் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது !

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

No description available.

12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.

இருப்பினும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கு தற்போதைய அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக நேற்றைய தினம் பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குறித்த தடைகளை மீறி மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதே நேரம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.