“யாழ் பல்ககைக்கழக வளாகம் உருவான போது, வளாகம் வேண்டாம் என எதிர்த்த அரசியல் வாதிகள், இப்போது அந்த பல்கலைக்கழகத்தை தமது சுயலாப போலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கற்கோவளம் கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பாலம், சரியான முறையில் அமைக்கப்படாமையினால் ஒரு வருடத்திற்குள் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கை்கு அமைய, குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதை தொடர்ந்து மேற்கண்டவாறு ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்று யாழ் பல்ககைக்கழக வளாகம் உருவான போது, வளாகம் வேண்டாம் என எதிர்த்த அரசியல் வாதிகள், இப்போது அந்த பல்கலைக்கழகத்தை தமது சுயலாப போலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
அதுபோலவே, யாழ் நோக்கி புகையிரதம் வந்தால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தடுப்போம் என சூளூரைத்தவர்கள் அதே புகையிரதத்தில் ஏறி பயணம் செய்வதற்கு முண்டியடிக்கின்றனர். தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள், துண்டு போட்டு இடம் பிடிக்கின்றனர். இதுவே போலித் தமிழ் தேசியம்.
இதுதான் எங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு. குறித்த வேறுபாட்டினை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்களாயின், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்பதுடன், இவ்வாறான வேலைத்திட்டங்களையும் காத்திரமானதாக உருவாக்கி நீண்ட காலத்திற்கு பலன் அடைந்திருக்க முடியும்.
போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்கும் .இதுபோன்றே கூட்டமைப்பினரின் கம்புரளிய திட்டங்களும் மக்களுக்கு பயனற்று போயுள்ளமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.