12

12

மைதானத்தில் அட்டகாசம் செய்த ஷாகிப் அல்ஹசன் – நடுவருடன் வாக்குவாதம் செய்து ஸ்டம்பை எட்டி உதைத்து சண்டித்தனம் !

டாக்கா பிரீமியர் லீக் பங்களாதேஷில் நடந்துவருகிறது. இதில் அண்மையில் நடந்த ஆட்டத்தில் பந்து வீசிய ஷாகிப், நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசினார். பின்னர் மீண்டும் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
டாக்கா பிரீமியர் லீக்- 3 போட்டிகளில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை
இந்த இரண்டு சம்பவங்களும் காணொலியாக இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டன. பலரும் ஷாகிப்பின் இந்த செயலை கண்டித்துள்ளனர். வங்கதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக அறியப்படும் ஷாகிப், தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் கலீத் மகமூத் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
அதன்பின்னர், தான் கோபப்பட்டது குறித்து ஷாகிப் மன்னிப்புக் கோரியுள்ளார். “அன்பார்ந்த ரசிகர்களே, எனது பொறுமையை இழந்து கோபப்பட்டு, ஆட்டத்தைப் பார்த்துவந்த அனைவரது அனுபவத்தையும் கெடுத்ததற்கு, முக்கியமாக வீட்டிலிருந்து ஆட்டத்தைப் பார்த்து இதனால் வருத்தமடைந்தவர்களிடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு அனுபவம் வாய்ந்த வீரனாக நான் அது போல நடந்திருக்கக் கூடாது. ஆனால் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் மீறி இப்படி நடந்துவிடும். அணிகளிடமும், அதன் நிர்வாகத்திடமும், தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகளிடமும் எனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போல மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன் என்று நம்புகிறேன். நன்றி” என்று ஷாகிப் அல் ஹசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் நிர்வாகம், டாக்கா பிரீமியர் லீக்கில் 3 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை விதித்தது. அத்துடன் 5 லட்சம் வங்காளதேச டாக்கா அபராதமும் விதித்தது.
கடந்த வருடம், ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமீறலுக்காக ஷாகிப் 12 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிரெஞ்சு ஓபின் டென்னிஸ் தொடர் 2021 – மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பார்போரா சாம்பியன் !

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபின் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின்  பார்போரா கிரெஜிகோவா ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் பார்போரா - அனஸ்டேசியா மோதல்:  முதல் முறை சாம்பியனாக முனைப்பு - Dinakaran
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-1, 2-6, 6-4 என்ற செட்கணக்கில் பார்போரா வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981ல் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள பார்போரா (வயது 25), டென்னிஸ் போட்டிகளில் இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ். மக்களே அவதானமாக இருங்கள் – மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில்  தற்பொழுது  கொரோனா தொற்று குறைந்த நிலைமை இல்லாது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது. நேற்று 139 பேருக்கும் இன்று காலை 19 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழில் இதுவரை 4 ஆயித்து 122 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 53 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 712 பேர்  சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

இதேவேளை நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளிலுள்ள இரு கிராம சேவகர்  பிரிவுகள் மாத்திரம் தற்பொழுது  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துச் செல்லும் போக்கே  அதிகளவு காணப்படுகின்றது. ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜோர்ஜ் பிளொய்ட்டின் கொலையை உலகுக்கு காட்டிய 18வயுது யுவதிக்கு உலகின் தலைசிறந்த  விருதான புலிட்சர் விருது !

சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கார் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது, அமெரிக்கா ஊடகவியலாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 ஆம் ஆண்டு முதல் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது. உலகின் தலைசிறந்த  விருதுகளுள் ஒன்றான இந்த விருது இவ்வருடம்  அமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளொய்ட் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கு அடையாளம் காட்டிய 18 வயது யுவதிக்கு 2021 ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்படவுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக  உயர்ந்த விருது அறிவிப்பு! - Tamil News - IndiaGlitz.com

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020 மே 25 ஆம் திகதி ஜோர்ஜ் பிளொய்ட் (46) என்ற கறுப்பினத்தவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்த டெர்ரக் சாவின் (44) என்ற காவல்துறை அதிகாரி, அவரை மண்டியிடச் செய்து கழுத்தில் முழங்காலை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளொய்ட் உயிரிழந்தார்.

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக  உயர்ந்த விருது அறிவிப்பு! - Tamil News - IndiaGlitz.com

இந்த சம்பவத்தின் அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டம் வெடித்ததுடன், பல நாடுகளிலிருந்து கண்டனங்கள் வலுத்தன. சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையான வீடியோவை எடுத்த பெண்ணுக்கு கிடைத்த  உயரிய கவுரவம் | Pulitzer Honour For Teen Who Courageously Recorded George  Floyd Murder ...

இந்த கொலை சம்பவத்தை அப்போது 17 வயது யுவதியான டார்னெல்லா ஃபிரேசியர் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜோர்ஜ் பிளொய்டின் கொலை, வெளி உலகிற்கு தெரியவருவதற்கு அக்காணொளி மிக முக்கியமான காரணமானது.

உலகம் முழுவதும் பரவிய இந்த காணொளி, இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இளம்பெண் டார்னெல்லா பிரேஸரை பாராட்டும் விதமாக அவருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

“அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளின் இலங்கை மீதான தீர்மானம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.” – அமைச்சர் விமல் வீரவன்ச

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் 12 வருடப்பூர்த்தியையொட்டி அமெரிக்க காங்கிஸ் கட்சியின் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் ‘ பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் நோக்கிலான செயற்திறன்மிக்க சர்வதேசப் பொறிமுறை ‘ மற்றும் ‘ இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ‘ ஆகிய தலைப்புக்களில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது .

இலங்கையில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளமையையும் , இதன்போது முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் பாரிய மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையையும் அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொண்டிருந்தது . அதேவேளை இலங்கைவாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான யிரிழப்புக்களுக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் குறிப்பாக போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடம் தற்போது இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவவீரர் என்ற விகிதாசாரத்தில் மிகையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்றும் அத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தீர்மானம் தொடர்பான தமது நிலைப்பாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது .
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு :
பில் ஜோன்சன் , டேனி டேவிஸ் , பிரெட் ஷெர்மன் மற்றும் கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து டெபோரா கே.ரோஸினால் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் . இந்தத் தீர்மானம் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது . இந்தத் தீர்மானத்தின் நோக்கம் தொடர்பில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் , ஆதாரமற்றதும் நிறுவப்படாததுமான அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்களைக் குறித்த தீர்மானம் உள்ளடக்கியுள்ளது . இத்தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது . முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறானதும் பக்கச்சார்பானதும் ஒருதலைப்பட்சமானதுமான தன்மையைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது , இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல என்பது தெளிவாகின்றது .
 32நாடுகளில் பயங்கரவாத அமைப்பென்ற அடிப்படையில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானமாகவே இதனைக் கருதவேண்டியிருக்கிறது . இந்தத் தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பு மற்றும் நிலைப்பாடு என்பன அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை , ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .

இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக போராடின என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு நகர்த்த வேண்டாம் என்று கோரியிருந்தார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு நடவடிக்கை ஏன் இலங்கை அரசு அவசர அவசரமாக மேற்கொள்கின்றது என்று அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகங்கள் வினவியபோது,

“இலங்கை தொடர்பான விடயத்தைக் குறிப்பிட்டு அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியமையால்தான் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்தோம். கண்டனங்களையும் தெரிவித்தோம். எமது இந்த நடவடிக்கை அவர்களின் மீதான தீர்மானத்தின் அச்சத்தால் எடுக்கப்பட்டது என்று எவரும் அர்த்தம் கற்பிக்கக் கூடாது. அது தவறு.”இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளின் இலங்கை மீதான தீர்மானம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்கள் இந்தத் தீர்மானத்தில் உள்ளன. இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தீர்மானம் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு வொஷிங்டனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானம் போல் இலங்கை அரசை அடிபணிய வைக்கும் நோக்கில் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானமும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், இரு தீர்மானங்களையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம், இலங்கை மீதான தீர்மானம் என்றபடியாலேயே அமெரிக்க அதிகாரிகளை அரச தரப்பினர் நேரில் சந்தித்துப் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அச்சம் காரணமாகவே அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது என எவரும் அர்த்தம்கொள்ளக்கூடாது” – என்று பதிலளித்தார்.

ஒரு பக்கம் விலையேற்றப்பிரச்சினைகள்,  மறுபக்கத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு, இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 227 அதிசொகுசு வாகன பிரச்சினை வேறு !

ஒரு பக்கத்தில் இலங்கையில் விலையேற்றப்பிரச்சினைகள்,  மறுபக்கத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு, இதற்கிடையே பயணக்கட்டுப்பாடுகளால் மக்களிடையே அதிகரித்துள்ள வறுமை சார் பிரச்சினை என நாடு பல வழிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் இலங்கையில் உத்தியோகபூர்வமாக நான்கு பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 227 அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காள நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் இது தேவையில்லாத ஒன்று . எங்களுக்கு தெரிந்தவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஏழ்மையில் வாடுவதாகவோ..? அல்லது வாகனங்களுக்கு கூட வசதியில்லாதவர்களாகவோ தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் ஆடம்பரமாகவும் செல்வ மிதப்பிலுமே திளைக்கின்றனர். இப்படியான நெருக்கடியான சூழலில் மக்கள் பணத்தை மக்களுக்கு செலவிடுவதே ஆக்கபூர்வமானதாக இருக்கும். இதுவே பலருடைய வேண்டுகோளாகவும் உள்ளது.

இப்படியான ஒரு நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  227 அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் விவகாரம் சர்ச்சைக்குரியதாக உருமாறியுள்ளது. இது தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு மத்தியில் இந்த விடயத்தில் மிகப்பெரும் ஓழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த 227 வாகனங்களுக்குமான கொடுப்பனவாகிய 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பிலான திறந்த கடன் பத்திரமானது வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்க முன்னரே தயார் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி குறித்த கடன் பத்திரம் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அமைச்சரவை அங்கீகாரமானது மே 18ஆம் திகதியே அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.

நாட்டில் பொருளாதார சரிவு, மக்களின் ஜீவநோபாய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இவ்வாறு வாகன இறக்குமதியை செய்திருப்பதன் ஊடாக மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு !

அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நகர அபிவிருத்தி யோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, பதவிசிறிபுர மற்றும் குச்சவெளி பிரதேசத்தின் புல்மோட்டை ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

திருகோணமலை மாவட்டம் பல்லின சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு மாவட்டம். இங்கு நீண்ட காலமாக இன ஒற்றுமை பேணப்பட்டு வருகின்றது.

திருகோணமலை, வெருகல் போன்ற பிரதேசங்கள் தமிழ் மக்களை அதிகமாகக் கொண்ட பிரதேசங்கள். கிண்ணியா, மூதூர், குச்சவெளி, தம்பலகமம் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்கள். அதேபோல கந்தளாய், சேருவில, மொரவௌ, கோமரங்கடவெல, பதிவிசிறிபுர போன்ற பிரதேசங்கள் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாகும்.

நாட்டில் வாழ்கின்ற சகல மக்களையும் உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கையாகும். இந்தக் கொள்கை திருகோணமலை மாவட்ட நகரத் தெரிவில் கவனத்தில் கொள்ளப்படாமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

எனவே, இந்தக் குறையினை நிவர்த்திக்கும் பொருட்டு கிண்ணியா, மூதூர் மற்றும் வெருகல் போன்ற பிரதேசங்களையும் இந்த நகர அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைந்த பட்சம் ஒரு வருடம் மட்டுமே ” – பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

2020 வருடம் முழுமையாக கொரோனா தொற்று அச்சம் நீடித்திருந்த நிலையில் இந்த வருடம் முழுக்க முழுக்க கொரோனாவுக்கான தடுப்பூசியை நுகர்வது தொடர்பாக உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. பிரிட்டன் தங்களிடம் உபரியாக உள்ள சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா என பல நாடுகளிடமிருந்தும் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான நகர்வுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் , தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு கொரோனாதடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை நோயெதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுகின்றது.

அத்துடன், குறித்த நோயெதிர்ப்புசக்தி ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து விஞ்ஞான ரீதியான பதிலொன்று இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆகவே, கொரோனா தடுப்பூசியை வருடத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை பெற்றுக் கொள்ள வேண்டியநிலை ஏற்படுமா ? என்பது குறித்து உறுதி கூற முடியாது.

இதேவேளை, சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னரும், நோய் அறிகுறிகள் காணப்பட்ட சிலர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள் காணப்பட்ட, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்களு்கு எதிராகவும் குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் .” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் !

“ சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்களு்கு எதிராகவும் குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் .” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளுக்கான தொனிப்பொருளாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காக கொண்டு 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிக்கும் இலக்கை கொண்ட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த தாங்கள், இன்றும் அதற்காக இன்னும் கடுமையாக உழைத்து வருவதாக உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆபத்தான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

தற்போதைய தலைமுறையை மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று தாங்கள் சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

அதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் தாம் தயவுடன் கேட்டுக்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று குணமடைந்த எதிர்கட்சி தலைவர் – முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை தடுப்பூசி எடுக்க மாட்டேன் என அறிக்கை !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். நல்ல விடயம் தான்.

இங்கு கேள்வி “கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்ற இவ்விருவரும், சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டமையேயாகும்.

என்றுமே இந்த அரசியல் தலைவர்கள் ஏன் அரச மருத்துவமனைகளை நாடுவதில்லை என்ற கேள்வி என்னை துளைத்துக்கொண்டேயிருக்கின்றது. இது போக வழிபாட்டினை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசியுள்ள எதிர்க்கட்சி தலைவர் “நாட்டின் முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன்.” என கூறியிருந்தார்.
மக்கள் மீது அவ்வளவு பற்று உள்ள தலைவராக இருந்திருந்தால் மக்கள் சிகிச்சை பெறும் அதே தடுப்பு நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கலாம். மக்களுக்கு அது ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கும். நம்பிக்கையையும் அளித்திருக்கும்.
ஆனால் அவர் அது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. அவர் மட்டுமல்ல உயர்மட்டத்திலுள்ள யாருமே அது தொடர்பாக கவனம் செலுத்துவதில்லை. தங்களுக்கு நோய் என்றவுடன் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகள் தான் தஞ்சம். இங்கு ஒரு கேள்வி அவசியமாகிறது..? தனியார் மருத்துவமனைகள் தான் சிறப்பான சிகிச்சையளிக்கின்றன என்றால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்காக முறையான சிகிச்சைகள் இல்லையா..? என்பதே அதுவாகும்.
ஆளும்கட்சியினர், எதிர்கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் அரசு மருத்துவ மனைகளை பயன்படுத்த முன்வரவேண்டும். அப்போது தான் அங்கு நடக்கின்ற பிரச்சினைகள் வெளிக்கொண்டுவரப்படும். அவை இன்னும் சிறப்பாக இயங்க வழியேற்படும். அதை விட்டு விட்டு நீங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருந்து எடுத்து விட்டு மக்களை நேசிகிறேன் என
கூறுவது பேச்சுப்பல்லக்கு அம்பலம் ஏறாது என்பது போன்றதானது தான்.
சரி செய்திக்கு வருவோம்..,  சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸ இருவரும், கொழும்பு-02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய சஜித் பிரேமதாஸ,
நாட்டின் முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நான் தடுப்பூசியை பயன்படுத்த மறுத்தமையினாலேயே எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச எனினும் முழுசனத்தொகைக்கும் தடுப்பூசி கிடைக்கும்வரை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாடு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆபத்தினை தவிர்ப்பதற்காக நாங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவோம் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள பெரும்பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,அவர்கள் உணவுகளை பெறமுடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்