14

14

“சர்வதேசம் தமிழர்களை காக்கும் – காக்கவேண்டும் ” – காலங்கள் மாறியும் மாறாத சம்பந்தன் ஐயா !

இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பெரும் தவறு.  ஏமாற்ற நினைத்தால் அரசின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் சாத்தியமாக அமையாது” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கின்றோம். தமிழ் மக்கள் நலனில் அக்கறைகொண்ட சர்வதேச சமூகம், இலங்கை மீது பல பரிந்துரைகளை முன்வைத்து பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இதன்போது பல வாக்குறுதிகளையும் இலங்கை அரசிடமிருந்து சர்வதேசம் பெற்றுள்ளது. இதை இந்தியா செய்திருக்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம் செய்திருக்கின்றது, ஐ.நா. சபை செய்திருக்கின்றது, அமெரிக்கா செய்திருக்கின்றது. இவ்வாறு பல நாடுகளும், நிறுவனங்களும் இலங்கை அரசிடமிருந்து பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றுள்ளன.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்குப் பல நாடுகளாலும், நிறுவனங்களாலும் போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் இலங்கை அரசு மீது மேலும் அதிகரிக்கும். அதை நாம் வரவேற்கின்றோம். ஏனெனில் அது சர்வதேச சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை சர்வதேச சமூகம் உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு போதியளவு உதவிகளை சர்வதேச சமூகம் வழங்கியிருந்தது. அதன்போது தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியை சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வைப்பது சர்வதேச சமூகத்தின் கடமை.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கருமங்களை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும். தவறினால் நிலைமைகள் போகப்போக இன்னும் மோசமடையும். பலவிதமான தடைகள் இலங்கை மீது விதிக்கப்படலாம். அதாவது பயணத்தடை, பொருளாதாரத் தடை, மனித உரிமைகள் சம்பந்தமான தடைகள் எனப் பல தடைகள் வரலாம்.

எனவே, தான்தோன்றித்தனமாகச் செயற்படும் இலங்கை அரசு, தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அத்தியாவசியம். மாறாவிட்டால் அரசின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் சாத்தியமாக அமையாது” – என்றார்.

இது ஒருபுறமிருக்க “பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.” – சரத் வீரசேகர பதில் !

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இலங்கையின் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன்தான் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளது. அதை நீக்குவதா? இல்லையா? என்பதை இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்க முடியாது.

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றபடியால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும், அதற்குத் துணைபோனவர்களையும் கைதுசெய்தோம் தற்போதும் கைதுசெய்து வருகின்றோம்.

இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்துவது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம் – என்றார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2021 – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச் !

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அவர் 2-வது முறையாக வென்றார். இதற்கு முன்பு 2016-ல் கைப்பற்றி இருந்தார்.

இதன்மூலம் ஜோகோவிச் புதிய வரலாறு படைத்தார். 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட் சிலாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு 1969-ல் ராட் லாவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

ஜோகோவிச் ஒட்டு மொத்தமாக 19 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 5 தடவையும், அமெரிக்க ஓபனையும் 3 முறையும் கைப்பற்றினார்.

பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோகோவிச் உள்ளார். இருவரும் தலா 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் போது அவர்களுடன் ஜோகோவிச்சும் இணைவார்.

“இலங்கை இன்னொரு சிரியாவாக உருவாகிவிடாமல் தடுக்க வேண்டும்.” – மங்கள சமரவீர எச்சரிக்கை !

“இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இலங்கை ஆசியாவின் பிறிதொரு சிரியாவைப் போன்று மாறிவிடும்.” என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் ( சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தை தொடர்ச்சியாக பின்பற்றியிருந்தால் எரிபொருள் விவகாரத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது.

நான் நிதியமைச்சராக பதவி வகித்த போது அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ச்சியாக பின்பற்றியிருந்தால் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை உபயோகிக்கும் சகல மக்களுக்கும் 2 பில்லியன் டொலர் வரை நன்மையைப் பெற்றிருக்கக் கூடும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டில் அதன் விலையை அதிகரிப்பதற்கும் , உலக சந்தையில் குறைவடையும் போது உள்நாட்டில் மீண்டும் விலையைக் குறைப்பதற்கும் ஏற்ற வகையில் உலகின் பல நாடுகளும் பின்பற்றும் வகையிலேயே இந்த விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இன்றும் இதனைப் பின்பற்றி வருகின்றன. இந்நாடுகளில் நாளாந்தம் இந்த சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை முகாமை செய்யப்படுகிறது. இலங்கையில் ஆரம்பகட்டமாக மாதாந்தம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் நிதி அமைச்சு பதிவியிலிருந்து விலகும் போது எரிபொருள் விலை உலக சந்தையில் 63 டொலராகக் காணப்பட்டது. அதன் பின்னர் 2020 இல் முழுநாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் விலையானது உலக சந்தையில் 23 டொலராக குறைவடைந்தது. எனினும் இதன் பயனை அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை.

கடந்த ஆண்டு உலக சந்தையில் இவ்வாறு பாரியளவில் எரிபொருள் விலை குறைவடைந்தமையால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 400 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றது.

அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாகவே எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது. இன்று நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுதந்திரத்தின் பின்னர் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்கட்சி அல்ல. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் சட்ட விதிகளையும் பாதுகாக்கும் பாரிய சக்தியே அவசியமாகும். அவ்வாறான நிலைக்கு சென்றால் மாத்திரமே நாட்டை பாதுகாக்க முடியும். அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் இலங்கை ஆசியாவில் பிரிதொரு சிரியாவைப் போன்று ஆகிவிடும் என்ற அச்சம் எழுகிறது.

எனவே இது குறித்து சிந்தித்து கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு செல்வது சிறந்த தீர்மானமாகும். ஆனால் அவரால் தனித்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை பாதுகாப்பதற்கு இலங்கை இன்னொரு சிரியாவாக உருவாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றார்.

மேலும் 67 பேர் கொரோனாவுக்கு பலி – இன்றும் 2000க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 203 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

“பொய்களை செய்யாது நாட்டை திறவுங்கள்.” – ஜனாதிபதிக்கு எதிராக வீதியில் இறங்கிய பிக்கு !

“இப்படி நாட்டை மூடி பயனில்லை எனவும் நாட்டை மூடுவது என்றால் முழுமையாக மூட வேண்டும் எனவும் பொய்களை செய்யாது நாட்டை திறக்குமாறும் கோரி மாத்தளே சாசரதன தேரர் என்ற பிக்கு  தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும்வே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

நடு வீதியில் அமர்ந்து நாட்டை திறக்குமாறு சத்தமிட்டு கோரிக்கை விடுத்துள்ளதுடன் பிக்குவை வீதியில் இருந்து அப்புறப்படுத்த தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதிலும் அது முடியவில்லை.

இதனையடுத்து தம்புள்ளை மாநகர சபையின் மேயர் சென்று விசாரித்ததுடன் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்ட பின்னர்,பிக்குவை நகர சபைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர் நகர சபையின் அலுலகத்தில் இருந்து செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள பிக்குவை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தன்னை கைது செய்வதில்லை எனக் கூறி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக சாசனரதன தேரர் கூறியுள்ளார்.

நாட்டை மூடுவதாக கூறி கடைகளை திறப்பதாகவும் பணக்கொடுக்கல் வாங்கல்களை செய்வதாகவும் இப்படி நாட்டை மூடி பயனில்லை எனவும் நாட்டை மூடுவது என்றால் முழுமையாக மூட வேண்டும் எனவும் பொய்களை செய்யாது நாட்டை திறக்குமாறும் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சாசனரதன தேரர், ஜனாதிபதி மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் கெளரவமான கோல் ஒப் பேம் விருது பெறும் இலங்கை வீரர் !

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கெளரவமான கோல் ஒப் பேம் விருதுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது.

குறித்த கௌரவமானது சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றது.

Kumar Sangakkara: The greatest hero of our time – Groundviews

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், சிறந்த விக்கெட் காப்பாளராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரருமாக விளங்கிய ஒரு சில வீரர்களுள் குமார் சங்கக்காரவும் உள்ளடங்குவதாக சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் இந்த கெளரவ நாமத்தை பெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் 2 ஆவது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.

இதற்கு முதல் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 2016 ஆம் ஆண்டு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக இந்த கெளரவ நாமத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் தாங்கியொன்றின் விலை 20 டொலர் வரை குறைவடைந்த போதிலும், அதன் மூலம் பயன்பெறக் கூடிய சலுகையை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஊடாக நிதியமொன்றை ஸ்தாபித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தனவந்தர்களுக்கு வரி சலுகையை வழங்கியமையின் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது அந்த சுமையை மக்கள் மீது இறக்க முயற்சிக்கின்றனர். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் ஊடாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, தேவையேற்படின் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பின்வாங்கப் போவதில்லை. இதுவே எமது எதிர்பார்ப்பாகும்.

எந்தவொரு விடயத்தையும் முறையாக செய்து முடிக்க முடியாத மற்றும் முக்கிய தீர்மானங்களை ஸ்திரமாக எடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமை எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒரு விடயத்தைக் கூறுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளிநபர் அல்ல. அதே போன்று பொதுஜன பெரமுனவும் அரசாங்கமும் வெவ்வேறானவை அல்ல. அவ்வாறிருக்கையில் இவர் பிரிதொரு கதையைக் கூறுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் உண்மை பிரச்சினையான எரிபொருள் விலை விவகாரம் மறைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக 8 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து !

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் மீது மாத்திரம் சுமத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியை நாம் நிராகரிப்பதாக தெரிவித்து அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் 8 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடைச் செய்வது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது பொறுப்பாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிக்கையில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் , தேசிய சுதந்திர முன்ணியின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணி சார்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தேசிய காங்ரஸ் சார்பில் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சி சார்பில் ஜி.வீரசிங்க , ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் டிரான் அலஸ், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி சார்பில் அசங்க நவரத்ண ஆகியோர் இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் மீது மாத்திரம் சுமத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியை நாம் நிராகரிக்கின்றோம். அதற்கான காரணம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் கூடிய வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவிலேயே எடுக்கப்பட்டதாகும்.

இன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்த தீர்மானத்திற்கான பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தி , அரசாங்கத்தை மக்கள் மத்தியில் அநாவசிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எடுக்கப்பட்ட தீர்மானம் சவாலுக்கு உட்படுத்தி , அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் காணப்படுவதாக சித்தரித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடைச் செய்வது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பாகும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

முடிவுக்கு வந்தது பெஞ்மின் நேதன்யாகுவின் 12 வருட ஆட்சி – இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் !

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி  பெஞ்மின் நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்றுவிட்டன.
இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும். முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட்  (49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.
இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.