17

17

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – உலகளாவிய பாதிப்பு அடிப்படையில் 75ஆவது இடம் !

இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகளாவிய பாதிப்பு அடிப்படையில் 75ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

இலங்கையில் கொரோனா 3ஆவது அலையாக புதுவருடக் கொத்தணி தீவிரம் பெற்றுள்ள நிலையில் நேற்று மேலும் 1631 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இலங்கையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 229,889 ஆக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் உலகளாவிய ரீதியில் கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 75 ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

240,708 மொத்த தொற்றாளர்களுடன் ஓமான் 74ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், 3 கோடியே 43 இலட்சத்து 52 ஆயிரத்து 329 தொற்றாளர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2 கோடியே 96 இலட்சத்து 33 ஆயிரத்து 105 தொற்றாளர்களுடன் இந்தியா
2ஆவது இடத்திலும், ஒரு கோடியே 75 இலட்சத்து 43 ஆயிரத்து 853 தொற்றாளர்களுடன் பிரேஸில் 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் விண்வெளி செல்லும் மூன்று விண்வெளி வீரர்கள் !

சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர்.

புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகள்... முதல் முறையாக வீரர்களை அனுப்பியது சீனா

கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங்,  லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர்.

ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. விரைவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அபாயகரமான பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பியதை போல, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்பி வைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 70 டன் எடையில் விண்வெளி நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயற்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும்.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தியான்ஹெ பெட்டகம், ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் தியான்சோ- 2 என்ற சரக்கு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அதன் தொடர்ச்சியாக, விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள் – எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தான் காரணம் !

தென்னிலங்கை கடற்பரப்பில் அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதனை தொடர்ந்து குறித்த பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக இறந்த வண்ணம் கரையொதுங்கிக்ககொண்டிருக்கின்றன. பலரும் இதற்கு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்தமை தான் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் “எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ ஆமைகளை பாதித்திருக்கக்கூடும் என்று வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டொக்டர் லலித் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறிக்கப்பட்ட ஆமைகளின் பாதையில் இருந்து இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்

ஆமைகள் முட்டையிடுவதற்கான அதிகபட்ச காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களாகும், மேலும் ஆமைகளுக்கும் கப்பல் ஆபத்தில் இருந்த நேரத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.

கொழும்பு அருகே ஆமைகளின் பாதை கடலுக்கு குறுக்கே உள்ளதாகவும், முட்டையிடுவதற்கு வந்த ஆமைகள் தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் முடிவு செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

“மக்கள் வீதியில் இறங்கும் நாளே ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடைசி நாள்.” – அரசுக்கு ஆதரவளித்த தேரர் எச்சரிக்கை !

“வீதிப் போராட்டங்களை நடத்தும் அளவுக்கு மக்களைத் தள்ளிவிட வேண்டாம். அவ்வாறு தள்ளிவிடும் பட்சத்தில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் அன்றே கடைசியாகும்.”  என கொழும்பு நாரஹேன்பிடி அபயராமய விகாரையின் விகாராதிபதியான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(17.06.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ராஜபக்ச அரசாங்கத்தைப் பற்றி சரியாக அறிந்துகொள்ளாமல், அவர்களைக் ஆட்சிக்கு கொண்டுவந்தமை மிகப்பெரிய தவறு.

மேலும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அதிலுள்ள இரசாயனங்கள் மற்றும் பொருட்கள் கடலில் கலந்ததினால் நூற்றுக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் இன்று இறந்த நிலையில் கடற்கரையில் மீடகப்படுகின்றன.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவா வெளியிட்ட கருத்து நகைப்பிற்குரியதாகும். கடல்வாழ் உயிரினங்களின் சூழ்ற்சியே இதற்குக் காரணம் என அவர் கூறுவது வேடிக்கையாகும். ஆட்சிக்கு வந்த அத்தனை அரசாங்கங்களும் ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளை அதிகரித்தன. அவ்வாறு அதிகரிக்கப்படுவதற்கான கால, நேரம் தகுதியாக அமைந்ததாக உள்ளது.

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அதனைக் கவனிக்காமல் எரிபொருள் விலையை அதிகரித்திருக்கின்றதை ஏற்கமுடியாது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனித்து எடுத்த முடிவாக இதனைக் கருதவும் முடியாது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்பதால் அமைச்சரவையிலிருக்கின்ற அத்தனை அமைச்சர்களும் இதற்கான பொறுப்பினை ஏற்கவேண்டும்.

அதேபோல தற்போதைய அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக நாடு எந்த இடத்திற்குத் தள்ளப்படுமோ என்கிற அச்சம் எமக்குள் ஏற்பட்டிருக்கின்றது. இதனிடையே மக்கள் ஆத்திரமடைந்தால் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். தெரிந்து கொண்டு சென்றால் கதிர்காமம், தெரியாமல் சென்றால் நடுத்தெருவு தான் என்று மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பழமொழியொன்று உள்ளது.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர தெரியாதத்தனமாக ஆதரவளித்துவிட்டோம். அதனால் நாங்களும் இன்று பயணத்தை முழுமையாக முடிக்க முடியா அளவில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனைக்கு அனுமதி இல்லை !

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், முத்திரையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மதுபான விற்பனையை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மதுவரித்திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியது.

எனினும் நாட்டில் கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்திடமும் இதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

 

இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,  இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் சந்திப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்தது. இருப்பினும் அது இறுதி நேரத்தில் அந்த முடிவுகாலவரையறையின்றி  ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், கொழும்பில் முகாமிட்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக்கூட்டமும் வழமை போன்றதான வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்  பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் போது “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,  இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று நேரில் உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது.

வழமை போல இந்தியா தன்னுடைய சுயநலத்துக்காக இலங்கை தமிழரை பயன்படுத்தவுள்ளேன் என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. நம்மவர்களும் இந்தியா – சர்வதேசம் என வழமையான அதே கதைகளை சற்று புதிய வடிவத்தில் எமக்கு தெரிக்கப்போகிகின்றனர். அவ்வளவே தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை.

சிங்களத்தரப்பு சீனாவை ஆதரிக்கின்றது. நாம் இந்தியாவை ஆதரித்தால் இந்தியா தமிழருக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பது தான் தமிழ்தலைமைகளின் நிலைப்பாடு. பாவம் அவ்வளவு தூரம் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவால் மாகாணசபை தேர்தலை கூட நடத்த  அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இதை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்தியா – சர்வதேசம் – தமிழ்தேசியம் இவை இல்லாவிட்டால் எமது அரசியல் தலைவர்களுக்கு அரசியல் செய்ய முடியாது என்பதே என்பது தான் இன்றைய தேதியின் ஆகக்கொடுமையான உண்மை.