20

20

அமைச்சர்கள் செய்தால் தவறு இல்லை – சாதாரண மக்கள் செய்தால் தவறு – இடத்துக்கொரு சட்டம் – நபருக்கொரு தண்டனை என பயணிக்கும் ஆசியாவின் ஆச்சரியம் !

சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது . நகர்ப்புறங்களில் வாழ்பவனுக்கு ஒரு சட்டம் – கிராமங்களில் வாழபவனுக்கு ஒரு சட்டம் – படித்தவனுக்கு ஒரு சட்டம் – பாமரனுக்கு ஒரு சட்டம் – பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்றெல்லாம் இயற்ற முடியாது. சட்டம் அது ஒன்று தான். யார் செய்தாலும் அதற்கான தண்டனை ஒன்று தான். ஆனால் நேற்றைய தினம் சமூக வளைத்தளங்களில் வெளியாகியிருந்த படங்கள் பார்ப்போரை கோவப்படச்செய்வதாகவே அமைந்திருந்தது.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை தனி மனிதர்களுடைய சுயமரியாதையை சிதைப்பதாகவே அமைந்தருந்தது. ஜனநாயக நாடு எனக்கூறிக்கொண்டு தனிமனித சுயமரியாதையை உள்ளிருந்து சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
May be an image of motorcycle, street, road and tree
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் நேற்று காலை இராணுவத்தினரால் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் என்ன தேவைக்காக வெளியே வந்தார்கள் என்பது அடுத்த கட்டம். ஏதோ பாடசாலைச்சிறுவர்களுக்கு ஆசிரியர்கள் முழந்தாழிட்டு தண்டனை வழங்குவது போல வழங்கியிருக்கிறார்கள் இராணுவத்தினர். பாடசாலை மாணவர்களுக்கு கூட அப்படியான தண்டணை வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றோம்.
தவறு செய்கின்ற எல்லோராரையும் உங்களால் இப்படி தண்டிக்க முடியுமாயின் வரவேற்கத்தக்கது. ஆனால் அப்படியில்லையே. உயர் இடங்கள் என்றாலோ – எதிர்கக்கூடிய மக்கள் கூட்டம் எனறாலோ ஒதுங்கி விடுகின்றீர்கள். சாதாரண மக்கள் என்றால் எகிறி பாய்கின்றீர்கள். அண்மையில் தென்னிலங்கையில் தடுப்பூசி வழங்கிக்கொண்டிருக்கும் போது அனைத்துமக்களும் வரிசையில் நின்று தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். இதே சட்டம் அங்கு தூங்கிக்கொண்டு தான் இருந்தது.
முகக்கவசம் அணியாத சாதாரண மக்களை பொது இடங்களில் வைத்து அவர்களினுடைய சுயமரியாதையை கவனத்தில் எடுக்காது ஏதோ தெருநாய்களை பிடிப்பது போல அள்ளிக்கொண்டு சென்றது இந்த நாட்டு காவல்துறையும் – பொலிஸாரும் தான். ஆனால் அமைச்சர் சரத்வீரசேகர முகக்கவசம் அணியாது ஒரு பொது நிகழ்வில் பங்கு பற்றிய போது அவருக்கு இதே இராணுவம் தலைகுனிந்து வணக்கம் சொன்னது. அவரை இப்படி அமர வைத்திருக்கலாமே..? முடியாது. அங்கு எல்லாம் சட்டம் பாயாது.
இவ்வளவு ஏன் கொரோனா தீவிரமாக பரவிக்கொண்டிருந்த போது தம்மிக பண்டார என்பவர் கேகாலையில் கொரோனாவுக்கான பாணி மருந்து விற்ற போது சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் குவிந்தனர். முக்கியமாக சுகாதார அமைச்சர் கூட அங்கு சென்று குறித்த பாணியை வாங்கி அருந்தி சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டார்.  அங்கு யாரையும் கைது செய்யவுமில்லை. கட்டுப்படுத்தவுமில்லை இந்த அதிகாரிகள்.
இது போக மேல் மாகாணத்தில் பயணத்தடை கணக்கேயில்லாமால் வழமையான நாட்கள் போலவே இயங்கிக்கொண்டிருக்கின்றது. அங்கே சட்டம் இல்லை- இராணுவமும் இல்லை போலும்.
இங்கு பிரச்சினை சரத்வீரசேகரவோ – மேல்மாகாணமோ – தம்மிக பண்டாரவோ அல்ல. அவர்கள் எல்லோருக்கும் சட்டம் செல்லுபடியற்றது எனின் எல்லா இடங்களுக்கும் அதுதான் சட்டமாக இருக்க வேண்டும். இதை விடுத்து ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனா கட்டுப்பாடு என கூறி தனிமனித சுதந்திரம் மறறும் சுயமரியாதை  பறிக்கப்படுவதை ஏற்றுக்ககொள்ள முடியாது.
பயணத்தடை காலங்களில் வெளியே செல்வது தவறு எனின் யார் சென்றாலும் தவறு தானே.  எல்லோரையு் கட்டுப்படுத்துவீர்களா என்றால் முடியாது. இலங்கையில் ஓரளவாவது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு இராணுவத்தினரின் கண்காணிப்பும் காரணம் தான் மறுக்க முடியாது.
ஆனால் தனிமனிதரை அவமானப்படுத்தும் – மன நோகடிக்கும்  தண்டனைகளுக்கு இடமில்லை என இலங்கையின் அரசியலமைப்பு வலியுறுத்துகின்றது. அரச காவல்துறையினருக்கும் – இராணுவப்பிரிவினருக்கும் முதலில் அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான  அறிவை வழங்கிவிட்டு அவர்களை பணிக்கமர்த்த வேண்டும்.  அப்போது தான் தன்னை  ஜனநாயக நாடு என குறிப்பிடும் இலங்கை அதற்கான – அந்த ஜனநாயகத்தை அடைவதற்கான பாதையை நோக்கி கொஞ்சமாவது முன்னேற முடியும்.

 “யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரத்தை  மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி !

“யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரத்தை  மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன்.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (19.06.2021)மன்னார், இலுப்பைக் கடவைக்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் கிராம மக்களின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கடலட்டை பண்ணை தொடர்பாக, தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதாவது, மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதனை விரும்பாத சில சுயலாப சக்திகளே கடலட்டை பண்ணை  தொடர்பாக, தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாடுகள் தீர்த்து, யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராகிம் ரைசி தெரிவு !

ஈரான் ஜனாபதிபதி ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஜனாபதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம்(18.06.2021) நடந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது. எனினும் அதிபர் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் குறைவான வாக்குகளே பதிவாகின என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70‌ சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.
ஜனாபதிபதி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அப்தூல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் உசேன் காஜிஜடேஹசேமி ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும், இப்ராகிம் ரைசி வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஜனாபதிபதி வேட்பாளர்களாகபோட்டியிட்ட அப்தூல் நாசர் ஹெம்மாட்டி மற்றும் முகசன் ரஜாய் ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இப்ராகிம் ரைசிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறில் 06 மாத குழந்தை வெட்டிக்கொலை !

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீனக்குடா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால் வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா காவற்துறையினர் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவில் வேகமாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட டெல்டா இலங்கையிலும் !

கடந்த வருடம் முதல் உலகையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸினுடைய வீரியம் குறைந்தபாடில்லை. தினமும் புதிய பரிமாணத்தில் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகின்றது கொரோனா. இதன் ஒரு வகையான டெல்டா இந்தியாவில் கண்டறியப்பட்டிருந்ததது. அதனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

வேகமாக பரவி வரும் இந்திய டெல்டா கொவிட் வகை முதலில் பதிவான தெமட்டகொட பகுதியில் மேலும் 15 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவர்கள் எந்த வகையான கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய தொடர்புடைய மாதிரிகள் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தெமட்டகொட அராமயா சாலை பகுதியில் மொத்தம் 129 பேர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு, தெமட்டகொட அராமய சாலை  பகுதியில் உள்ள மக்களுக்கான கொவிட் தடுப்பூசி பிரசாரம் தொடங்கப்பட்டது.

இரசாயன பசளையை தாருங்கள் என விவசாயிகள் போராட்டம் – எதிர்காலத்துக்காக சேதனப்பசளையை பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தல் !

இலங்கையில் இதுவரை காலமும் இரசாயனப்பசளை அதிகம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது தடை செய்யப்பட்டு  வேகமாக சேதனப்பசளை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இது இரு வேறு விதமான கருத்துக்களை இலங்கையில் தோற்றுவித்துள்ளது.

நீண்ட காலமாக இரசாயனப்பவளையையே பயன்படுத்தி விளைச்சல் பெற்று வந்த விவசாயிகள் இந்த சேதன பசளை பயன்பாடு மற்றும் அறிமுகம் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்புக்களில் எதிர்க்கட்சியினுடைய குரல்களும் உள்ளடக்கம்.

நேற்று கூட கிண்ணியாவில் இரசாயனப்பசளையை மீள வழங்கக்கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும்  ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ “ கடினமாக இருந்தாலும் பரவாயில்லை – நாங்களு் கஷ்டப்படாலும் பரவாயில்லை. எதிர்கால சந்ததிக்காக சேதனப்பசளையை பயன்படுத்துங்கள்.” என எல்லா கூட்டங்களிலும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ” ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால், அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியமாகும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.