26

26

சீனாவின் சினோவேக் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 358- மருத்துவர்களுக்கு கொரோனாத்தொற்று !

இந்தனோசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு அந்நாட்டில் பரவிய பிறகு ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
தொற்று பாதிப்பு விகிதம் 14.6 சதவீதத்தை அந்நாட்டில் எட்டியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தடுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், இந்தோனேசியாவில் மருத்துவர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால்  அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து 401 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சினோவேக் தடுப்பூசிதான் அந்நாட்டில் அதிகம் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358- மருத்துவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள்.  இந்தோனேசியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் சினோவேக் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. மாறுபாடு கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன், பிற தடுப்பூசிகளை காட்டிலும் மிகவும் குறைவு என நம்பப்படுகிறது.

“ஐ.நாவுக்கு வாக்குறுதியளித்ததை போல பயங்கரவாதச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

பயங்கவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் அச்செயற்பாட்டினையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மீளாய்வு உட்படுத்துவதற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சட்டம் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்போது இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்குவதாக இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக 30.1தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதிலும் குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாக அந்த முயற்சி முழுமை அடையவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. எம்மைப்பொறுத்தவரையில் அரசாங்கம் ஐ.நாவிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும், நாடுகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும். அதனை மீளாய்வு செய்வதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

துற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சம்பிரதாயங்களுக்கு அமைவாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும் சட்டங்கள் நிச்சயமாக ஜனநாயக விழுமியங்களை உள்ளீர்த்ததாக இருக்க வேண்டும் என்றார்.

“கோட்டாபாயராஜபக்ஷவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தமைக்காக பலர் சித்திரவதை செய்யப்பட்டு வெளிநாடு தப்பிவந்துள்ளனர்.” – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் அறிக்கை !

இலங்கையில் போர் முடிவிற்குவந்து 12 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், தமிழர்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு இரத்தக்கறை படிந்த சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னும் தொடர்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மிளகாய்த்தூள், பிளாஸ்டிக்பைகள், பெற்றோல், கட்டுமானக்குழாய்கள், தண்ணீர் பீப்பாய்கள், மின்சார வயர்கள், சிகரட்கள், முட்கம்பிகள், சூடான இரும்புக்கம்பிகள், கப்பிகள் மற்றும் கிரிக்கெட் விக்கெட் மட்டைகள் என்பன சித்திரவதை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சித்திரவதை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கும் அதேவேளை, போர் முடிவடைந்ததன் பின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் சிலர் கடந்த 2020 நவம்பரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகின்ற பாதிக்கப்பட்டோரில் அநேகமானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்களது வாக்குமூலங்களை ஆவணப்படுத்துவதில் தாமதமேற்பட்டுள்ளது. ஜனாதிபதித்தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகப் பிரசாரம் செய்தமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டமையுமே தாம் கடத்தப்பட்டமைக்கு காரணமென விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கூறுகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இலங்கை எந்தளவிற்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோ, அந்தளவிற்கு சித்திரவதைகளுக்கும் பிரபல்யம் பெற்றுள்ளது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் தொடரும் சித்திரவதை, துஷ்பிரயோகங்களை முழுநாடும் ஏற்றுக்கொள்வதுடன் பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இதுவாகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டிய நேரமாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“என்னுடைய முயற்சிகளின் விளைவாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை தமிழ்தேசியவாதிகள் ஏறு்கமறுக்கின்றனர்.”  – சுரேன் ராகவன்

“என்னுடைய முயற்சிகளின் விளைவாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை தமிழ்தேசியவாதிகள் ஏறு்கமறுக்கின்றனர்.”   என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழ் அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இப்போதாவது இது நடந்திருப்பதைக் குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அதேபோல் தமிழ் அரசியலைப் பற்றி கரிசனையடையவர்கள் சந்தோஷமடைய வேண்டியதுமாயிருக்கின்றது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் முழுமையாக 93 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். சாதாரணமாக ஒவ்வொரு பொசன் மற்றும் வெசாக் நாட்களில் இது நடைபெறும் விடயமாக இருந்தாலும் வியாழக்கிழமை நடந்த விடயத்திலிலுள்ள விசேட விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அரசியல் வரலாற்றில் அரசியல் நியமங்களின்படி கைதிகளை விடுவிப்பதானது இருதரப்பினருக்கு இடையே இடம்பெறுகின்றதாகும். அது போர்க் கைதிகள் அல்லது வேறு கைதிகளாகவும் இருக்கலாம். கைதிகளை விடுவிக்கின்ற முக்கிய கலாசாரத்தின் நோக்கம் என்பது, விழுந்திருக்கின்ற அல்லது இல்லாமல் போயுள்ள உறவை வளர்த்தெடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த இம்முயற்சி நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை விவாதிக்கப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ச, தன்னுடைய வாழ்கையில் சிறையில் அனுபவித்த கண்ட கதைத்த தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வேதனையை உணர்ந்தவராக பிரேரணையை முன்வைத்தார். முதன்படி ஜனாதிபதிக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் எனது நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

நீண்டகாலமாக சிறைகளில் பெற்றோர், பிள்ளைகளை இழந்து இருந்த அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரே கூரைக்குள் இரவு உணவை அருந்தியிருப்பார்கள். அதன் பின்னணியில் இன்னுமொரு விடயம் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நடந்துகொண்ட விதம் துக்ககரமாகவே இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்தாலும் கூட நான் ஆளுநராக இருந்த காலத்திலும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்ட முயற்சிகளின் பேரில் இந்த விடயம் இடம்பெற்றிருப்பதை தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் ஏற்க மறுக்கின்றனர். சில நேரங்களில், இப்படியான முக்கிய கேந்திர அரசியல் தீர்வுகளைக் காணும்போது, அவர்களுடைய எதிர்கால அரசியல் வெறுமனே நின்றுவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருக்கின்றதோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அரசியல் கைதிகள் இன்னும் பலர் உள்ளனர். 106 பேர் இன்னும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் நாங்கள் விடுதலை செய்ய வேண்டும். அதற்கான பேச்சை நடத்த வேண்டும்” . என்றார்.

‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம்.” – தோல்விக்கு பின் விராட் ட்வீட் !

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தோல்விக்குப்பின் பேசிய இந்திய அணி தலைவர் விராட் கோலி
‘‘இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து மீண்டும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். அணியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்போம். ஒரே மாதிரியான அணியைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர மாட்டோம்.
அடுத்த திட்டத்துக்காக ஒரு வருடம் வரை காத்திருக்கமாட்டோம். எங்கள் ஒயிட் பால் அணியில் ஏராளமான வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் உள்ளார்கள். அதேபோல் டெஸ்ட் அணியையும் தயார் செய்ய வேண்டும்.
அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்குக் கொண்டு வர வேண்டும்’’ என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ள விராட் கோலி ‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம். ஒன்றாக இணைந்து நாங்கள் முன்னோக்கி பயணிக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முடிவின்றி வேட்டையாடும் கொரோனா – 40 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்திருந்தாலும் கூட உலகம் இன்று வரை முடங்கிப்போய்தான் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு உதவிய 50,000 ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.

துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

18,000 ஆப்கானியர்கள் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அது நீண்ட கால செயல்முறை என்பதால் தாமதமாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், ‘எங்களுக்கு உதவியவர்களுக்கு உதவ நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த வேறு எவரையும் போலவே அவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ என கூறினார்.

இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.

மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் போது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.”  – நிரோஷன் பெரேரா

“நல்லாட்சி அரசில் பெற்றோலுக்காக 02ரூபாய் அதிகரித்த போது கூச்சலிட்ட மகிந்த ராஜபக்ஷ இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்…? ” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினால் எரிபொருள் விலை குறைவடையும் என்று அமைச்சர்கள் சிலர் கூறினர். தற்போது பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதால் எப்போது எரிபொருள் விலையை குறைக்கப் போகிறீர்கள்?

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக போராடிய தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் அதேபோன்று மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

 

எனவே அரசாங்கம் அவர்களுக்கான துரித நிவாரணத்தை வழங்க வேண்டும். ஆகவே பசில் ராஜபக்ஷ வந்துவிட்டார் எனக் கூறி அவரது கைகளில் பந்தை மாற்றிவிட்டு ஏனையோர் தப்பிக்க முயலக்கூடாது.

மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஊடகங்கள் முன்னால் முதலைக்கண்ணீர் வடிப்பதை தவிர்த்து தலைமைத்துவத்திடம் நேரடியாக சென்று பேசி மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் செய்த அரசியல் புரட்சியால் தான் ஐக்கிய தேசியக் கட்சி பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.” – ஐக்கிய மக்கள் சக்தி

“ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் செய்த அரசியல் புரட்சியால் தான் ஐக்கிய தேசியக் கட்சி பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஓர் ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க, அரசியலில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவார் என விடுக்கப்படும் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் விக்கிரமசிங்கவால் இன்னும் ஒரு தடவைகூட ஜனாதிபதியாக முடியவில்லை. பலமான எதிரணியையும் அவர் கட்டியெழுப்பவில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியே இனி நிறைவேற்றும்.

ரணில் 27 வருடங்கள் புரட்சி செய்தார்தான். ஆனால், கட்சி பூஜ்ஜிய நிலைக்கு இன்று வந்துள்ளது. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால்தான் நாம் ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படுகின்றோம்.

ரணில் மீது மதிப்பு உள்ளது. ஆனால், அரசியல் ரீதியில் கொள்கை ரீதியில் முரண்பாடு உள்ளது” – என்றார்.

“நாம் ஆட்சிக்கு வந்த பிறகே இலங்கையால் கடன்களை முறையாக செலுத்த முடியும் என்பதை நிரூபித்துளோம்.” – நேற்றைய மக்களுக்கான உரையில் ஜனாதிபதி !

“நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறேன்.  எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு  நேற்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தன்னுடைய உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கருதப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று நாம் பொறுப்பெடுத்து முடித்தோம். அதேபோன்று, நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்தும் மீண்டுவந்து மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் நான் அர்ப்ணிப்புடன் செயற்படுவேன்.

இலங்கை மக்கள் அன்று மதரீதியிலான அடிப்படைவாத அச்சத்தில் உறைந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பு வீழ்ச்சிகண்டதனை மக்கள் அவதானித்தார்கள். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் காரணமாக எமது புலனாய்வுப்பிரிவு பலவீனமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவு சர்வதேசத்திற்கு முன்பாக அகௌரவப்பட்டது.

எமது புராதன இடங்கள், தொல்பொருள் பகுதிகள் பகிரங்கமாக அழிக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு நாங்கள் முடிவுறுத்திய ஆயுதப் போராட்டம் மிகவும் பயங்கரமான தோற்றத்தில் மீண்டும் உருவாகியது. தேசிய பாதுகாப்பு குறித்து தற்போதுவரை பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றோம்.

பொறுப்புடைய பதவிகளுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களினால் வீழ்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவின் மனநிலையை மீண்டும் நாங்கள் உறுதிப்படுத்தினோம். அன்று பலவீனமடைந்த புலனாய்வுப் பிரிவை மீண்டும் மறுசீரமைத்துள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மறக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். பாதாள உலகை கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் கடத்தல், பாவனையையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். எமது கலாசாரம் உட்பட அனைத்தையும் அவமானப்படுத்தும் யுகத்தை நிறுத்தினோம்.

அனைவரினதும் அடையாளங்களைப் பாதுகாத்து, மற்றவர்களுக்கு இடையூறு அற்ற சமாதானமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அம்பாறை பொத்துவில் கடலோர விகாரை, தீகவாவி போன்ற கலாசார மத உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம்.

இன்று எமது நாட்டு மக்கள் இனியும் ஒற்றையாட்சி குறித்து அச்சமடையத் தேவையில்லை. எமது நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு எமது அரசாங்கம் எந்த வகையிலும் இடமளிக்காது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய தருணத்தில் செலுத்த முடியாமற் போகும் என்று எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆருடங்களை தகர்த்தெறிந்து இலங்கையினால் கடன்களை சரியான நேரத்தில் செலுத்த முடிந்ததது.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடங்கொடுக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் சில விம்பங்களை பெரிதுபடுத்திய போதிலும் அரசாங்கத்தின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டது , அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது பொய்யான விம்பமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனது ஆட்சியில் எந்த அரசியல் நியமனங்களும் மேற்கொள்ளவில்லை.  நீதித்துறையிலும் அதேபோன்ற கொள்கையையே பின்பற்றப்படடுகின்றது.  அரசாங்கம் இன்று பலவீனமடைந்திருப்பதாகவும், தோல்வியடைவதாகவும் விமர்சனம் வெளியிடுபவர்கள், நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததோடு, அவை இன்று நிறைவேற்றப்படாத காரணத்தினாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.