16

16

கொரோனாவால் நிறுத்தப்பட்ட திருமணங்கள் – இலங்கையில் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதம் !

கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக நாட்டில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளினால் திருமண வைபவங்கள் நடைபெறுவதில்லை எனவும் இதுவே பிறப்பு வீத வீழ்ச்சிக்கான பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டு தோறும் இலங்கையில் சுமார் 350,000 குழந்தை பிறப்புக்கள் பதிவாகும் எனத் தெரிவித்துள்ளார். எனினும், திருமண வைபவங்கள் நடாத்தப்படாத காரணத்தினால் கடந்த ஓராண்டு காலமாக குழந்தை பிறப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் காரணமாக சுமார் 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வருடாந்தம் 350,000 பிறப்புக்கள் இதனால் தடைப்படுவதாகவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை – கிறீஸில் பதற்றம் !

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்‍கு எதிர்ப்புத் தெரிவித்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர்.

கிரீஸ் நாட்டு மொத்த மக்‍கள் தொகையில் இதுவரை 41 சதவிகிதம் பேருக்‍கு கொரோனா வைரஸ் இரண்டு தவணை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவத் துறையில் பணியாற்றும் பணியாளர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளது.

அதனால் மருத்துவப் பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍கொள்ளவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்திக்‍கொள்வது தனிநபர் விருப்பம் என்றும், மதச் சட்டங்களுக்‍கு அது எதிரானது என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

 

முன்னதாக மருத்துவப் பணியாளர்களுக்‍கு அரசு பிறப்பித்த உத்தரவில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் கண்டிப்பாக ஊதியமற்ற விடுமுறையில் வீட்டுக்‍கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்‍கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்‍கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆருடம் !

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது  ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியை தனியார் மயப்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, கல்வியில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்களது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என  தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,

73 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அடக்குமுறைகளும், அநீதிகளும் தற்போது கட்சி பேதமின்றி அனைவர் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. அத்துடன், இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தற்போது செயல்படும் தென்னிலங்கை சிவில் அமைப்புகள், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அரசாங்கம் கொவிட் சூழலை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதியான இன்பம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு அனுமதி !

சீனாவின் மற்றுமொரு தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் இப்போது இலங்கையில் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது, ஸ்புட்னிக் வி, சினோபார்ம், மொடர்னா, அஸ்ட்ரா செனகா என அனைத்து தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் குசல் பெரேரா !

இந்திய கிரிக்கெட்டின் 2-ம் தர அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 18-ந் திகதி நடக்கிறது. இப்போட்டி தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா, காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறார்.

குசல் பெரேரா தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், காயத்தின் தன்மை அல்லது அவர் தொடரில் இருந்து விலகுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அணியின்  வைத்தியர் கூறும்போது, குசல் பெரேரா, ஆறு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் கேப்டனாக குசல் பெரேரா இருந்தார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை இலங்கை இழந்தது.

இதனால் அவரை தலைவர்  பொறுப்பில் இருந்து நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் அவர் காயம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காரணமாக விலகி உள்ளார்.

இலங்கைக்கு தடுப்பூசி வழங்கியதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை – அமெரிக்கா

எவ்வித நிபந்தனைகளும் இன்றி இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக  இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 15 லட்சம் மொடர்னா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதில் எவ்வித உள்நோக்கமோ நிபந்தனைகளோ கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி தடுப்பூசிகளே இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசிகள் உயிர் காக்க உதவும் எனவும், நோய்த் தொற்றை ஒழிக்க உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த தடுப்பூசி உதவி வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளை வழங்கும் போது எவ்வித வேறு நோக்கங்களும் கிடையாது எனவும் மக்களின் உயிர் காப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பதினைந்து லட்சம் மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் அவர் இந்தவிடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் இலங்கைக்கு 1.5 மில்லியன் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இலங்கைக்கு 5 வகையான தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனடிப்படையில் இலங்கைக்கு இதுவரையில் 10,098,100 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறை வளர்ச்சியை உலக அளவில் மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவுமாறு சவூதி அரேபியாவிடம் இலங்கை கோரிக்கை !

இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவது தொடர்பில் கூட்டு திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹமட் அல் காதிப்புடன்  விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு அமைச்சர்களுக்கும் இடையிலான இப்பேச்சுவார்த்தை ஸூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீத மாணவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசியை செலுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். நாட்டில் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் ஏற்கனவே தடுப்பூசி வழங்க தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க முடியும். இலங்கையை கொவிட் பாதுகாப்பான நாடாக ஏனைய நாட்டு அரசாங்கங்கள் நம்புகின்றன. ஆகவே, சுற்றுலாத்துறை வளர்ச்சியை உலக அளவில் மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவுமாறு சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டார்.

சவுதி அரேபியா சுற்றுலாத்துறை அமைச்சர் அஹமட் அல்காதிப், சவுதி அரேபியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என  உறுதியளித்துள்ளார்.2022 க்குள் உலக சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு திரும்பும்  என சவுதி அரேபியா சுற்றுலாத்துறை அமைச்சர் இதன்போது நம்பிக்கையும் வெளியிட்டார்.

நடமாடும் கொரோனா தடுப்பூசி திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு !

நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊனமுற்றவர்கள் மற்றும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“ராஜபக்ஷ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“ராஜபக்ஷ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது.” என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புதிய நிதியமைச்சர் ஆகியோர், தமக்கு பணத்தை தேடும் வழி தெரியும் என கூறினாலும் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணத்தை தேடும் வழியே தெரியுமென்பதை நாங்கள் நன்கு அறிவோம். சொந்த கணக்குகளில் வைப்பிலிடுவதில் அவர்களுக்கு நிகர், அவர்களே. நாட்டுக்கான நிதியை அவர்களுக்கு திரட்ட தெரியாது.

நாட்டுக்காக நிதியை திரட்டும் முறைமை, நாட்டின் கடனை செலுத்தபணம் தேடும் முறைமை தொடர்பில் அவர்களுக்கு தெளிவு உள்ளதா என்பது தொடர்பான கேள்வி இப்போதும் எழுகிறது.  நாட்டின் நெருக்கடிக்கு பிரதான காரணம் கொரோனா என தொடர்ச்சியாக அரசாங்கம் தெரிவிக்கிறது, கொரோனா இல்லாவிட்டால் எமக்கு இந்த நெருக்கடி இல்லை என்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் இறக்குமதி, கட்டுமானப் பணிகளுக்கான மூலப் பொருள்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செய்தும் டொலர் நெருக்கடியிலேயே நாம் இருக்கிறோம். அரசாங்கம் இந் நெருக்கடி தொடர்பில் எதிர்வரும் மாதங்களுக்கு எவ்வாறு செயற்பட போகின்றது என்பதை, நாட்டுக்கு சொல்ல வேண்டும். இப்போது ராஜபக்ஷ வியாபார நிறுவனம், தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை விற்கின்றது. இதுவா அரசாங்கத்தின் கொள்கை,என நாம் கேட்கின்றாம்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆனதும் மெஜிக் செய்வார் என்றனர். ஆனால், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று இப்போது சொல்கின்றனர்.அவரது அமெரிக்கா முறையைப் பயன்படுத்தியாவது இந்த நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது – ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு !

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்த போதிலும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க படை வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் முழு படையும் வெளியேறி விடும்.

அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

இதுவரை நாட்டில் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் மொத்தமுள்ள 400 மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி மட்டுமே தலிபான்களிடம் இருப்பதாக அரச  தகவல்கள் கூறுகின்றன.

ஆங்காங்கே அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே தலிபான்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு ஆயுத உதவி, உணவு, வழிகாட்டு தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தலிபான்களுக்கு உதவு வதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருக்கிறது.