August

August

“கிடைக்கின்ற தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள்.” – விசேட வைத்தியர் சுதர்ஷினி வலியுறுத்தல் !

இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது தண்ணீர் அருந்தவோ முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

“அரசு ஆசிரியர்களை தெளிவாக ஏமாற்றப்பார்க்கின்றது. போராட்டம் தொடரும்” – ஆசிரியர் சங்கம் அறிவிப்பு !

24 வருடங்களாக தீர்க்கப்படாத அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி அமைச்சர் தினேஸ் குனவர்தன தெரிவித்தார்.

இதன்படி

ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு  உட்பட பல தீர்வுகளை அமைச்சரவை வழங்க முன்வந்துள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் , ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு ‘கோரப்பட்ட தீர்வுகளை வழங்காமல்’ செப்ரெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு ரூ. .5,000 கொடுப்பனவை வழங்குவதற்கான முன்மொழிவு ‘தெளிவாக ஆசிரியர்களை ஏமாற்றுவது’ என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் துணை அதிபர் அறிக்கையில் கூட குறிப்பிடப்படாத இந்த முன்மொழிவை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் ஏற்கவில்லை என்றும், அவர்களின் திட்டங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

“நடைமுறைக்குள்ள வந்துள்ள அவசரகால நிலை.” – கண்டனம் வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதியால் அவசரகால நிலைமையை நாடு பூராக பிரகடனப்படுத்தியுள்ளார். இதை பயன்படுத்தி  முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடைபெறும். ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியுடைய கையிற்கு சென்றடைந்துள்ளதை நாங்கள் வலுவாகக் கண்டிக்கின்றோம்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நேற்று நள்ளிரவிலிருந்து அவசரகாலநிலைமை நாடு பூராகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலே உணவுவிநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படுவதற்காக இதனை செய்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்த சட்டத்தின் கீழ் நாட்டிற்கு ஆபத்து இருந்தால் பாதுகாப்பிற்கு ஆபத்து இருந்தால் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும். இதனால்தான் பொதுமக்கள் பொதுசுகாதார அவசரகால நிலைமைக்காக ஒரு சட்டமியற்றப்படவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக சொல்லியிருந்தோம். அதற்கான தனிநபர் சட்டமூலத்தை நான் நாடாளுமன்றத்திலே பிரேரித்திருக்கின்றேன் அதனை எடுத்து நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது, அப்படியிருந்தும் அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற தோரணையிலே இப்பொழுது இதனை செய்திருக்கின்றார்கள்.

இதன் ஆபத்து என்னவென்றால் -இதைத் தொடர்ந்து முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடைபெறும். ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியுடைய கையிற்கு சென்றடைந்துள்ளதை நாங்கள் வலுவாகக் கண்டிக்கின்றோம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒன்பதாயிரமாக அதிகரித்த கொவிட் மரணங்கள் !

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 194 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 438,421 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 371,992 ஆக அதிகரித்துள்ளது.


அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி வானில் பறந்த தலிபான்கள் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் !

ஆப்கனின் காந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபான்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி உறைய வைக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அந்நாடு முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் தலிபான்கள்  துப்பாக்கி குண்டுகளை முழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில், அப்கனின் காந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலத்தைத் தொக்கவிட்டபடி தலிபான்கள்  பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தலிபான்களின் அதிகாரபூர்வ ஆங்கில ட்விட்டர் பக்கத்தில் (தலிப் டைம்ஸ்) தான் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவிற்குக் கீழே, நமது விமானப் படை. இப்போது இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படையின் ஹெலிகாப்டரில் காந்தஹார் நகரை ரோந்து செய்தபோது.. என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஒரு சடலம் தொங்குவது தெளிவாகத் தெரியும் நிலையில் அதுகுறித்து ஒரு சிறிய வார்த்தை கூட  தலிபான்கள் கூறவில்லை. அந்த சடலம் அமெரிக்க வீரருடையதா இல்லை பொதுமக்களுடையதா என்ற விவரம் ஏதுமில்லை. இருப்பினும் அதனைப் பகிர்ந்து வரும் பலரும், இந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே ஒரு மனிதர் தானா இல்லை ஏதும் பொம்மையா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெட் க்ரூஸ், இந்த அச்சுறுத்தும் வீடியோ, ஆப்கானிஸ்தானில் ஜோ பைடனால் நடந்த பேரழிவின் ஒரு சாட்சி. அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில்  தலிபான்கள்  பயணிப்பதும் அதில் ஒருவரை தொங்கவிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

“பைடனின் முட்டாள்தனத்தால் ஆப்கான் விடயத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது.” – முன்னாள் ஜனாதிபதி காட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகலை அடுத்து அந்த நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் மீது முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அமெரிக்க படைகள்  இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறியது. இந்நிலையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியமை தொடர்பில் கூறிய போதே டிரம்ப்   தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப்  கூறியதாவது ,

ஆப்கானிஸ்தானில் இருந்து ஜனாதிபதி  டிரம்ப்  வெளியேறிய விதம், ஜோ பைடன் நிர்வாகத்தின் போரில் இருந்து பின் வாங்கியது ஆகியவை மோசமாகவே பார்க்கப்படும். திறமையாக கையாளவில்லை.

வரலாற்றிலே ஜோ பைடன் நிர்வாகம் ஒரு போரை மோசமாக கையாண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப தருமாறு கோரப்பட வேண்டும்.

அதை திரும்ப ஒப்படைக்காவிட்டால் நாம் இராணுவப் படையுடன் அங்கு சென்று அதனை திரும்பப் பெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அந்த ஆயுதங்களை வெடிக்க செய்து அழிக்க வேண்டும். இதுபோன்ற பலகீனமான திரும்பப் பெறுதல் போன்ற முட்டாள்தனமான செயலை யாரும் நினைத்தது கூட இல்லை.

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தோற்றுவிட்டது. தலிபான்களிடம் சரணடைந்து விட்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்க படைகள் ஈடுபட்ட போது மீட்பு விமானத்தில் பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.

“புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கின்ற செயற்பாடுகளை இலங்கை அரசு  முன்னெடுக்க வேண்டும்.” – இரா.துரைரெட்ணம்

“புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கின்ற செயற்பாடுகளை இலங்கை அரசு  முன்னெடுக்க வேண்டும்.” என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகள் தொடர்பில் இந்தியாவின் செயற்ப்பாட்டிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது தமிழ்நாட்டு அரசு தமிழர்களுக்கு வழங்கிய ஒரு நல்ல செய்தியாகும்.

யுத்தக்காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இலங்கை அரசு, புலம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக அதாவது, அவர்களுக்காக நல்ல திட்டங்களை அமுலாக்கி அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கின்ற செயற்பாடுகளை இலங்கை அரசு  முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடு செல்வோருக்கு அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் !

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் பணியகத்திற்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த தடுப்பூசி நடவடிக்கைகள் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும். அதற்காக ஒரு குறிப்பிட்ட திகதி மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரையிலும் 30,000 -க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12,000 -க்கும் மேற்பட்டோருக்கு பொருத்தமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் தொழிலாளர்கள் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், 24 மணிநேர சேவையில் உள்ள 1989 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் !

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மிகச்சிறப்பான – அதே நேரம் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன். தன்னுடைய அபார பந்து வீச்சால் எதிரணி வீரர்களை நடுங்க வைக்கக்கூடியவர்.
இவர் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி, அதை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர். 38 வயதான ஸ்டெயின், இன்று அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.. 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்டெயின் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்துள்ளார்.
125 ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகளும், 47 டி20 போட்டியில் 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், டி20-யில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

“அரசாங்கம் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கின்றது.” – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு !

“அரசாங்கம் நெல் பறிமுதல் என்ற போர்வையில்  வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கின்றது.” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நெல் பறிமுதல் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். அரிசி விலையினை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால் முதலில் இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்ய வேண்டும்.

அதனைவிடுத்து வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி விவசாயிகளின் நெல்லை பறிக்கீன்றீர்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம்..?

விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை விற்பனைசெய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போவதில்லை. மேலும், நாட்டில் அரசி விலையினை தீர்மானிக்கும் செயற்பாடுகளை விவசாயிகள் செய்யவில்லை. அவர்கள் தங்களது நெல்லை வைத்து வேறு தொழில்கள் செய்யலாம்.

இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்குள் விதைநெல்லை உற்பத்திசெய்யமுடியாதா.? எனக்கேட்டவர்கள் இன்று விதைநெல்லுக்காக வைத்திருந்த நெல்லைக்கூட பறித்துக்கொண்டுசெல்கின்றார்கள் என்றால் இது எந்தவகையில் நியாயமானது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் இலங்கைக்கான பணிப்பாளருடன் கதைத்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து இது தொடர்பில் கூறியிருக்கின்றோம். தெற்கில் இலட்சக்கணக்கான மூடைகளை வைத்திருக்கும் பல நெல் ஆலைகள்,அரசியல்வாதிகளிடம் உள்ளன.

அதனையெல்லாம் விட்டுவிட்டு இங்குள்ள விவசாயிகளின் நெல் ஆலைகளுக்கு சீல்வைத்து, அந்த நெல்லை இவ்வாறான அரசியல்வாதிகளின் நெல் ஆலைகளுக்குத்தான் குறைந்த விலையில் வழங்கப்போகின்றீர்கள் என்ற சந்தேகம் கூட எங்களிடம் உள்ளது. ஆகவே, உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும். எதிர்காலத்தில் அட்டைகளைக்கொடுத்தே அரசி போன்ற பொருட்களை வாங்கவேண்டிய நிலையேற்படும்.

எங்கள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை பறித்து எடுத்தால் அவர்களும் அந்த அட்டையுடனேயே திரியவேண்டிய நிலைவரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.