17

17

இலங்கையில் பாதுகாப்பற்ற சூழலில் சிறுவர்கள் – 10 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 60 வயதான நபர் !

10 வயதும் மூன்று மாதங்களேயான சிறுமியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில், 60 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அளுத்கம சீனவத்த பிர​தேசத்தைச் சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார். அளுத்கம கனேகம பிரதேசத்தில், தனது வீட்டில் வைத்தே, சிறுமியை பல தடவைகள் சந்தேகநபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து ​கண்டறியப்பட்டது.

சம்பவத்தை அடுத்து, பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த அந்த நபர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்.

தனது சட்டத்தரணியின் ஊடாக, அளுத்கம பொலிஸ் நிலையத்தில் ​இன்று (17) சரணடைந்தார். 60 வயதான சந்தேகநபர், சிறுமியின் தந்தையின் மாமா ஆவார்.

நெருங்கிய உறவினரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்க உட்படுத்தி வந்துள்ளார். தனது வீட்டுக்கு விளையாடுவதற்கு வருகைதந்த போதே சந்தேகநபர், பல தடவைகள் வன்புணர்ந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் தேடியுள்ளனர். எனினும், அவர், அப்பிரதேசத்தில் இருந்தே தலைமறைவாகிவிட்டார். கொழும்பில் தலை​மறைவான அந்நபர், தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரி​சோதனையை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. அதன்பின்னர், சட்டத்தரணியின் ஊடாக, பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.

அதன்பின்னர், தர்ஹா நகரில் இருக்கும் இராணுவத்தின் கொரோனா சிகிச்சை மையத்துக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

“தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று புரியவில்லை.” – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் காட்டம் !

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று புரியவில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் இன்று எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். உங்களை நம்பித்தானே வாக்களித்தோம், இன்று என்ன நடக்கின்றது எனக் கடும் விரக்தியை வெளியிடுவதுடன், அரசின் பயணம் மாற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

கேஸ் இருக்கிறதா, கிழங்கு இருக்கிறதா என அன்று மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். ஆனால், இன்று கேஸும் இல்லை, கிழங்கும் இல்லை. இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்தைகளுக்கும், வௌவால்களுக்குமா இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது?

முடிந்தால் மாகாண சபை அல்லது பொதுத்தேர்தலை நடத்திப் பாருங்கள். அரசு மீது மக்களுக்குள்ள நம்பிக்கை என்னவென்பது தெளிவாகத் தெரியவரும் என்றார்.

“அமெரிக்காவின் செயலே தலிபான்கள் எழுச்சிக்கு காரணம்.” – ஜேர்மனி குற்றச்சாட்டு !

ஆப்கானிஸ்தால் படைகளை முன்னரே திரும்பப் பெற்றது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு என்று ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை, ஜெர்மனி, பிரித்தானியா  ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து ஜெர்மன் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுக் குழுவின் தலைவர் நோர்பர்ட் ரோட்ஜென் கூறும்போது, “நான் இதை கனத்த இதயத்துடனும், என்ன நடக்கிறது என்ற திகிலுடனும் சொல்கிறேன். முன்கூட்டியே படைகளைத் திரும்பப் பெறுவது என்பது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு. இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் மற்றும் நம்பகத்தன்மையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவநம்பிக்கையின்மை மற்றும் துரோகத்தை உணரச் செய்யும்” என்றார்.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இவை கசப்பான நிகழ்வுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

“புலிகளுடன் தொடர்பில்லை என தலிபான்கள் கூறுவது ஒரு நாள் செய்தி மட்டுமே அதனால் ஒரு பயனும் இல்லை.” – மனோ கணேசன்

“புலிகளுடன் தொடர்பில்லை என தலிபான்கள் கூறுவது ஒரு நாள் செய்தி மட்டுமே அதனால் ஒரு பயனும் இல்லை.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மனோ கணேசன்  இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஆப்கன் மக்களுக்கு உரிமை இருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக முதலில் அன்றைய சோவியத், பின்னர் இன்றைய அமெரிக்கா என்ற இரண்டு வல்லரசுகளின் விளையாட்டு திடலாக ஆப்கன் ஆகியது. தலிபான், முஹாஹிஜிதீன்களின் நிர்மாணத்திற்கே அமெரிக்கர் தான் பிள்ளையார்-சுழி போட்டனர்.

ஆனால், இடைக்காலத்தில் வந்து போன தலிபான்களின் ஆட்சியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை. அனைத்துலகம் ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமை பட்டயத்தை மிகவும் ஆவேசமாக தலிபான்கள் மீறினார்கள். அனைத்துமே மேற்கத்திய ஊடக அவப்பிரசாரம் என்று அவர்கள் இன்று பூசி மெழுக முடியாது.

எனினும் இன்று காலம் அவர்களுக்கு பாடம் படிப்பித்து இருக்கும் என நம்புவோம். வல்லாதிக்க நோக்கங்களுக்கு வெளியே தம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க அப்பாவி ஆப்கன் மக்களுக்கு இருக்கின்ற உரிமையை, முதலில் ஆப்கன் ஆட்சியாளர்கள்தான், அவர்கள் எவராக இருந்தாலும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும்.

சமூக நீதி, சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செய்வதற்குமான ஆப்கன் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஆப்கன் மக்களுக்கு, இது “நம்ம ஆட்சி” என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும்.

நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று, கடந்த 20 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கன் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்த கூடாது. இல்லா விட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது.

ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம். அப்பாவி ஆப்கன் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது.

“புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை” என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது, இலங்கையில் ஒரு “ஒருநாள் செய்தி”. இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்த வில்லை. கடந்த இடைக்கால தலிபான் ஆட்சியில், “பாமியன்” உலக பெளத்த மரபுரிமை சின்னங்கள் குண்டால் தகர்க்கப்பட்டமை உண்மைதானே.

இது போன்ற ஆவேச முட்டாள்தனங்களை செய்யாமல் ஆப்கன் மக்களின் உடனடி தேவையான நிம்மதியை பெற்றுத்தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்த தலிபான்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். தமது மக்களை நேசிக்கும் பொறுப்புள்ள ஆட்சியாளராக தம்மை மாற்றிக்கொள்வதும், காட்டுவதும்தான், ஆப்கனை ஆக்கிரமித்திருந்த வல்லரசுகளுக்கு தலிபான்கள் தரக்கூடிய பதில் ஆகும்.

குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளதால் கவலையில் ரஷித்கான் – கெவின் பீட்டர்சன்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம். தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

“வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு. நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்.” – அமைச்சர் வாசுதேவ

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும் எனவும் அதற்கான வேலைத்திட்டமாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின் குளம், மகரம்ப குளம் மற்றும் மாமடுவ ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் குடிநீர் குழாய்களை பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

8.7 கிலோ மீற்றர் தூரத்திற்கு குடிநீர் குழாய் பொருத்துதல் மற்றும் புதிய இணைப்புக்களை வழங்குதல் என்பன இடம்பெறும். இதற்காக 46.24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா நீர் திட்டத்திற்கு நீர் பெற்றுக் கொள்ளும் இடமாக சேராறு நீர் தேக்கம் காணப்படுகின்றது. வவுனியாவுக்கு குடிநீரை வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்கு நீர் பெற்றுக்கொள்ளும் வளங்கள் போதுமானளவு காணப்படுகின்றன. புதிய குழாய்களைப் பொருத்தி அனைவருக்கும் குடிநீர் வழங்குவது எமது வேலைத் திட்டமாகும். அதற்காகத்தான் நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

வருடாந்தம் நாம் வரவு செலவுத் திட்டம் மூலம் குறிப்பிடத்தக்க அளவு குடிநீருக்காக நிதியை ஒதுக்கி எமது நீர் வழங்கல் அமைச்சு பணியாற்றி வருகின்றது. அதன் மூலம் வடக்கிற்கும் வவுனியா பிரதேசத்திற்கும் குடிநீர் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதே எமது நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வீதி மின்விளக்குகளை அணைத்து விட்டு மக்களை அச்சுறுத்தி இளைஞர்களை தாக்கிய இராணுவத்தினர் – யாழில் சம்பவம் !

பொன்னாலை மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் யுஹ12525 இலக்க மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தினர். இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கினர்.

படையினரின் மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடினர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சமடைந்தனர். சில மணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவு நேரம் மக்களை தாக்கிய படையினரின் செயற்பாடு குறித்து படையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.

பொலிஸார் வந்தால் சிக்கல் நிலை உருவாகும் என உணர்ந்த படையினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் வரை ஓடிச்சென்ற படையினர் அங்கு தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக நள்ளிரவு 11.55 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும் பின்னர் 119 இற்கு அறிவித்தமையால் அதிகாலை 2.00 மணிக்கு வந்து விசாரணை நடத்தினர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ தினம் பிற்பகல் வேளை பொன்னாலை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பொன்னாலை மற்றும் கோட்டைக்காடு இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர் எனவும் இச்சம்பவத்தின் தொடர்ச்சியாகவே படையினர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

“ஆப்கான் இராணுவமே நாட்டை பாதுகாக்காத போது அமெரிக்கா ஏன் ஆப்கானை காக்க வேண்டும்.” – ஜோபைடன் காட்டம் !

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள்  வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆப்கன் ஜனாதிபதி  அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியதாவது:

”ஆப்கனில் நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை. அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இறங்கின. படைகளை எப்போது வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஆப்கன் அரசும், படைகளும் தலிபான்களை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. அவர்களே எதிர்க்காதபோது அமெரிக்கா ஏன் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டைக் காக்காதபோது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்குக் கிடையாது.

ஆப்கனில் நடக்கும் விஷயங்களைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்  தெரிவித்தார்.

“பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்புங்கள்.” – தலிபான்கள் அறிக்கை !

பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்புவழங்கப்படுகிறது. உங்களது வழக்கமான வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகின், ”மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களைப் பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களது தலைமை காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாலிபான்கள் தங்களது ஆட்சியில் பழைய இஸ்லாமிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தலிபான்கள் 90-களில் அமுல்படுத்திய கடுமையான சட்டங்களை மீண்டும் கடைப்பிடிப்பார்களா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

10 வயதுக்குமேல் பெண் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் முகம் மற்றும் உடலை முழுவதுமாக மூடும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், திருடக் கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுதல், பிரம்படி கொடுத்தால் உள்ளிட்ட பல இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தலாம் என்ற அச்சத்தில் மக்கள்  உள்ளனர்.

நான்கு கார்களில் பணத்தை கட்டுக்காட்டாக திணித்துக்கொண்டு தப்பியோடிய ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி !

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி கட்டுக்கட்டாக பணம், நான்கு கார்கள், ஒரு ஹெலிகாப்டர் உடன் ஓமனுக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டார் என காபுலில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள்  தகவல் அளித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் காபூலின் அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கட்டுப்படுத்த துவங்கியபோது வன்முறையையும் போராட்டத்தையும் தவிர்க்கத் தான் பதவி விலகுவதாக அறிவித்த அஷ்ரப் கனி அண்டை நாடான தஜிகிஸ்தானில் குடி ஏற முயன்றார். ஆனால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து அவர் நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை அடைத்து திணித்து அதுபோதாமல் ஹெலிகாப்டர் ஒன்று பணக்கட்டுகளை வைத்து ஓமனுக்கு சென்று குடியேறி விட்டார் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர். கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும் அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.