26

26

“மனிதாபிமானமற்ற இந்த அரசாங்கம் மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கிறது.” – சஜித் பிரேமதாஸ

“மனிதாபிமானமற்ற இந்த அரசாங்கம் மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கிறது.” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் கொரோனா நிலவரம் – விலைவாசி உயர்வு என்பன தொடர்பாக சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

கொவிட் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மூடப்பட்ட பல நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கையை நிலையை அறிந்து நிவாரண பொதிகளை வழங்கியுள்ளன. ஆனால், இலங்கையில் நடப்பது என்னவென்றால் எங்கள் செல்வாக்கின் காரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணப் பொதிகூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களும் தியாகம் செய்யப் பட வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் செய்த தியாகங்களை அரசாங்கம் பார்க்கவில்லை போலவும் தெரியாது என்பது போலவும் இருப்பதை நம்ப முடியாதுள்ளது. மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கும் அரசாங்கமே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.

மக்களை தியாகம் செய்யுமாறு கோரும் அரசாங்கமே உணவு செலவழிப்பின் ஆற்றலில் உலகில் மிகவும் வறிய ஐந்தாவது இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. நாட்டு மக்கள் தங்களின் ஊதியத்தில் 66 சதவீதத்தை உணவுக்காகச் செலவழிக்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை அளித்து நாட்டுக்கு 60 கோடி ரூபா வறிதாய் பறிபோக காரணமாக இருந்த இந்த மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று வேளை போக ஒரு வேளை உணவைக்கூட உண்ணாமல் பெருமூச்சு விடும் நூறாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் தியாகம் செய்யுமாறு மக்களிடம் கேட்பதை விட பெரிய கோரிக்கை எதுவுமில்லை.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை மட்டுப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனூடாக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது என்றார்.

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்ிய வகையில் இடதுசாரிப் பாரம்பரியத்தோடு செயற்படுகின்ற ஒரே கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளும் கொரோன காலத்து குழுவாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. தனிநபர் குழுவாத முரண்பாட்டால் கட்சியின் உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் இக்குழுவாத போக்கு காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பும் இக்குழுவாத போக்கிற்குள் இழுத்துவிடப்பட்டு உள்ளது.

இவ்விரு கட்சிகளுமே சராசரி மக்களைப் பொறுத்தவரை முகவரியற்ற கட்சிகளாக இருந்த போதும் நுண் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைப்புகள். அமைப்பு வடிவத்தில் இயங்குகின்ற போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள். புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி இலங்கை தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய வரலாற்றைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் கிந்துசிட்டி மயானப் போராட்டம் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு பலமான குரலாக இருந்து வருகின்றது. அதேபோல் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி அகதிகள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றிற்காக பிரித்தானியாவில் உள்ள ஏனைய இடதுசாரி மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. இவ்வமைப்புகள் மீது பல விமர்சனங்கள் இருந்த போதும் அமைப்பு வடிவில் இயங்குகின்ற இடதுசாரி நிலைகொண்ட அமைப்புகள் இவையிரண்டுமே.

உங்களுக்கு தெரிந்த வலதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் அந்தப் பட்டியல் மிக மிக நீண்டு செல்லும். ஆனால் உங்களுக்கு தெரிந்த இடதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஓரிரு பெயர்களை முன் வைத்ததுமே ‘அவரை இடதுசாரி என்று யார் சொன்னது? என்ற கேள்வி வெவ்வேறு திசைகளில் இருந்து வரும். ‘தோழர்’ என்று பெயருக்கு முன் போட்டால் இடதுசாரியா? ‘மார்க்ஸ், லெனின், கார்ள் மார்க்ஸ்’ படத்தை முகநூல் வட்ஸ் அப் ப்ரோபைலில் போட்டால் இடதுசாரியா? மார்க்ஸ் படம் போட்ட தேநீர் கப்பில் ரீ குடித்தால் இடதுசாரியா? இப்படி ஆளுக்கு ஒரு அடையாளத்தோடு நான் கொம்னிஸ்ட், நான் சோசலிஸ்ட், நான் லெப்டிஸ்ட் என்ற தோரணையோடு பலர் உலாவருகின்றனர்.

இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். வலது சாரிக் கருத்தியலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் முற்போக்கானவர்களாகவும் சக மனிதர்களை மதத்தவரை இனத்தவரை ஒடுக்கப்பட்ட சாதியினரை பெண்களை மதிப்பவர்களாக இருந்த போதிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கருத்தியல் பிரிவினரின் கருத்தியல் பிரதான அரசியல் சமூக நீரோட்டத்தில் இல்லை. அதற்கு தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் பலரின் தனிமனித நேர்மையின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே தனிப்பட்ட ஆண் – பெண் உறவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசியலையும் அவர்கள் சார்ந்த அரசியல் அமைப்புகளையும் மலினப்படுத்தும் போக்கு இக்கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதற் களப்பலியானவர் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினர் மு மயூரன். இவ்வாண்டு மார்ச் 21 கட்சியின் அரசியற் குழு வருமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மு மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார்; என்ற குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு முன்வைக்கப்பட்டதாகவும் மு மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவும் முன்னுக்குப் பின் முரணாணதாக இருப்பதாகவும்; கட்சி குற்றம்சாட்டி அவரை கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பெண், மு மயூரனுக்கும் தனக்கும் இருந்த உறவை வஞ்சக எண்ணத்தோடு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் மு மயூரன் மீது சுமத்தப்பட்ட பழியை களைவதற்காக தனது முகநூலில் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்.

கட்சிக்கு அல்லது கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்த மோகனதர்ஷினி என்பவர் மேற்கொண்ட தனிநபர் தாக்குதலே இதுவென கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. மோகனதர்ஷினியிடம் இருந்த பெறப்பட்ட பணம் மீளளிக்கப்பட்ட போதும் அவர் கட்சியில் அதீத செல்வாக்கை செலுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரே இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவராக சி கா செந்தில்வேல் உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் பொதுவெளியில் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் பலரும் அவருக்கு இந்நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இதே போன்றதொரு குற்றச்சாட்டு பிரித்தனியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரும் தமிழ் அரசியல், கலை, இலக்கிய எழுத்துக்கள் மூலமும் அறியப்பட்டவரான சேனன் உருவாக்கி இருந்தார். இன்று இவ்வமைப்பு கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன் புலம்பெயர் நாடுகளில் அமைப்பு வடிவில் உள்ள ஒரே தமிழ் இடதுசாரி அரசியல் ஸ்தாபனம் இதுவென்றால் அது மிகையல்ல.

தங்களை முற்போக்காளர்கள் பெண்ணிய போராளிகள் என முத்திரைகுத்திக் கொண்ட 20 பேர் கையெழுத்திட்ட முகநூல் போராட்டம் ஒன்று ஓகஸ்ட் பிற்பகுதியில் பெரும் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மோகனதர்ஷினி, தீப்பொறி அமைப்பினரான ராகுல் சந்திரா (ரகுமான் ஜான்) ஆகியோர் கையெழுத்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குற்றம்சாட்டப்பட்டவருடனும் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்களும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தவர்களுமே இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். முற்றிலும் தனிப்பட்ட வஞ்சம் தீர்க்கின்ற செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தங்கள் சொந்த நலன்களை முன்நிறுத்தி அப்பாவிப் பெண்களின் பெயர்களை தெருவுக்கு இழுத்துவிடுகின்ற முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே தமிழ் பெண்கள் பொது வெளிக்கு வரமுடியாத அளவுக்கு அவர்கள் அச்சமான சூழலில் உள்ள போது காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டுவந்து விவாதித்து பெண்களை கேவலப்படுத்துவதும் இடம்பெற்று வருகின்றது. தங்களுடைய கருத்துக்கு மாறான பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டவர்களை அணுகி அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ‘தம்பி எனக்கு வயசாச்சு இவையோட எனக்கு மல்லுக்கட்ட முடியாது. அது தான் ‘லைக்’கை எடுத்துப்போட்டன்’ என தேசம்நெற் க்கு தெரிவித்தார். ‘தம்பி நாளைக்கு உங்களைப் பற்றியும் ஏதும் எழுதிப் போடுவினம், கவனம்’ என்று என்னை எச்சரிக்கையும் செய்தார். முகநூல் ரவுடிகள் ஜாக்கிரதை.

புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி போல் குழுவாதத்திற்குள் சிக்காத தமிழ் சொரிடாரிட்டி அமைப்பு மேற்படி குற்றச்சாட்டை முற்றிலும் பாறுபட்ட கோணத்தில் அணுகியுள்ளது. தமிழ் சொலிடாரிட்டியின் முக்கியஸ்தர் ராஜரஞ்சன் புஸ்பராகவன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்ட பதிவில்: “அரசியல் ரீதியாக அமைப்பை எதிர்கொள்ள வக்கற்றவர்கள் இத்தகைய சிறுமைத்தனமான செயல்களில் – அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் பலரது அரசியற் போதாமை பல முன்பே விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இதில் பலர் சமூக விரோத அரசியலை நீண்ட காலம் செய்து வருபவர்கள் என்பது தெரிந்த விசயமே” எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அவதூறுகளுக்கு நாம் அடிபணியப் போவதில்லை“ என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான தனிமனித உறவு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல என்பது தெளிவாகின்றது. தமிழ் இடதுசாரி அரசியல் ஒரு தெளிவுக்கு வருவதற்கு முன் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பது திண்ணம். இவற்றை கடந்துசெல்லும் வல்லமை ஏற்கனவே நலிந்துள்ள இடதுசாரி ஆர்வலர்களிடம் இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

“கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள்.”- ஆளுங்கட்சி உறுப்பினர் மக்களுக்கு அறிவுரை !

கொவிட் தொற்று நோய் பயப்பட வேண்டிய ஒரு கொடிய நோய் அல்ல என மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மரணத்தின் பயமே மரணத்துக்கு முக்கிய காரணம் என இன்று(26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இன்று இலங்கையின் இறப்பு வீதம் 1.9 ஆகும். மக்களின் மனதில் மரண பயத்தை உருவாக்குவது நல்லதல்ல. மரண பயமே இறப்புக்கு ஒரு முக்கிய காரணம். 81 சதவீத மக்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்கின்றனர். 14 வீதமானோர் லேசான காய்ச்சலுடன் குணமடைகிறார்கள். எனவே பயப்படுவதற்கு இது ஒரு கொடிய நோய் அல்ல. சிலருக்கு தாங்கள் நன்றாகத் தேறி வருகிறோம் என்று கூடத் தெரியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“வன்னியில் மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழல்.” – அடைக்கலநாதன்

மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவதாக  வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவுக்கு வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லது கட்டுப்பாட்டு விலையில் எந்தப் பொருட்களையும் பெற முடியாத சூழ்நிலை என் தேர்தல் மாவட்டங்களான மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ளது. ஏழைகளின் உணவுப் பொருட்களாகக் கருதப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தை ஆராய எந்த அரச அதிகாரிகளும் முன் வருவதாக தெரியவில்லை. பொருட்களின் விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறுபட்டு கூடிய விலையில் பொருட்கள் யாவும் விற்கப்படுகின்றன.

அரசு விதித்த கட்டுப்பாட்டு நிர்ணய விலை பொருந்தாததாக இங்கு காணப்படுகிறது. இதற்கு காரணம் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு என்றே கூறவேண்டும். மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.

எனவே இவ் விடயத்தினை கவனத்தில் இருத்தி இந்த மக்களின் அவதி நிலையினை போக்க உரிய நடவடிக்கை  எடுக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஐ.நா ஊழியர்களை தாக்கிய தலிபான்கள் !

ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஊழியர்களைத் தலிபான்கள் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ”காபூல் விமான நிலையத்துக்குத் தப்பிச் செல்ல இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியரைத் தலிபான்கள் விரட்டிச் சென்று தாக்கினர். மேலும், காபூலில் இருந்த இன்னொரு ஐ.நா. ஊழியரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் அங்கிருக்கும் ஐ.நா. ஊழியர்களுக்கு அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். காபூலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள்தான் அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

எனினும் தலிபான்கள் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை விளக்கம் ஏதும் தரவில்லை.

இலங்கையில் 40 வீதமாக அதிகரித்துள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, இலங்கையின் மத்திய மாகாணத்தில் கடந்த வாரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக 20ஆம் திகதி வெளியிடப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மேல் மாகாணத்திலேயே அதிகமாக 5 7வீத தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல : மேற்குலகின் தலையீடுகள் எப்போதும் ஆபத்தானதே !

இன்று ஆப்கானின் நெருக்கடிகள் ஒன்றும் புதில்ல. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் காலம் காலமாகச் செய்துவருகின்ற குறளி வித்தைகளின் தொடர்ச்சியே. செல்வத்தால் கொழுத்த மேற்கு நாடுகள் ஐநா வின் பொது உடன்பாடு இன்றி. ஏனைய நாடுகளில் தலையீடு செய்வது தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே. அதனால் இத்தலையீடுகள் பெரும்பாலும் அந்நாடுகளைச் சீரழிவிற்குள்ளேயே தள்ளி விடுகின்றன. அண்மைய தசாப்தங்களில் வளைகுடா யுத்தம் – ஈராக், லிபியா, யேர்மன், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தலையீடு செய்து அங்கிருந்த அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்து தங்களுக்கு சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சி எதனிலும் மேற்குலகம் வெற்றிபெறவில்லை.

ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கின்றோம் என்ற பெயரில் இந்த மேற்கு நாடுகள் நேரடி அல்லது மறைமுக தலையீடுகளைச் செய்து அந்நாடுகளின் மக்களையும் வளங்களையும் அழித்து அந்நாடுகளை பல தசாப்தங்களுக்கு முன்னேற முடியாதளவிற்கு சீரழித்து வந்துள்ளன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆராஜகப் போக்குகளை ஆரம்பத்தில் ஊக்குவித்தவர்களும் இந்த மேற்கு நாட்டினரே. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைனுக்கு உயிரியல் ஆயுதங்களை வழங்கியது, லிபிய அதிபராக இருந்த கேர்ணல் கடாபிக்கு ஆயுதங்கள், நிதியை வழங்கியது மேற்கு நாடுகளே. ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களையும் தலிபான்களையும் தொடர்ந்து அல்ஹைடா பின்லாடனையும் வளர்த்துவிட்டது இந்த மேற்குலகமே. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆயுதம் வழங்கி வளர்த்ததும் இவர்களே. இப்போது தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடாத்தியதும் இந்த மேற்குலகமே.

இவ்வாறெல்லாம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் இந்த மேற்குலகின் நடவடிக்கைகள் தங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றால், அவர்கள் அம்போ என்று அந்த நாடுகளை கைவிட்டு ஓடிவிடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தலையீட்டின் போதும் நடைபெற்றது. அதுவே ஆப்கானிஸ்தானிலும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அமெரிக்க நேட்டோ படைகளுடன் சேர்ந்து போரிட்ட குர்திஷ் போராளிகள் கைவிடப்பட்டனர். அமெரிக்க துருப்புக்கள் மீளப்பெறப்பட்ட போது குர்திஷ் வீரர்கள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு விடப்பட்டனர். அமெரிக்க நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகளுக்கு உதவிய உள்ளுரவர்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகளிடம் கைவிட்டுவிட்டே இந்த மேற்கத்தைய படைகள் வெளியேறின. வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இதே மாதிரியான அரசியல் சூழல் இலங்கையிலும் இருந்தது. 1980களில் தனக்கு மாறாக அரெிக்காவுடன் உறவைப் பேணிய இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட இந்திய அரசு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் வழங்கி, ஆயுதங்களையும் வாரி வழங்கியது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை இந்தப் போராளிகளுக்கு தமிழீழம் அமைவதை இந்தியா ஒரு போதும் அனுதியாது என்பதை மிகத் தெட்டத் தெளிவாக தெரிவித்தும் இருந்தது. ஆனால் இந்த ‘ஈ’ அமைப்புகள் (EPRLF & EPDP) தவிர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் என்பன மக்களை தொடர்ந்தும் தமிழீழம் என்ற போர்வையில் ஏமாற்றியே போராட்டத்தை முன்னெடுத்தன. ஈபிஆர்எல்எப், ஈபிடிபி மட்டுமே வெளிப்படையாக தமிழீழத்தைக் கைவிட்டு தூர நோக்கோடு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்று ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தது. EPDP, தமிழீழ விடுதலைப் புலிகளோடு இருந்த முரண்பாட்டால் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தியதும் விடுதலைப் புலிகள் போல ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டதும் வரலாறு.

1987இல் இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்திய இராணுவம் 1990இல் இலங்கையை விட்டு வெளியேறியதும் அக்கால கட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு உதவியவர்கள் அவர்களுக்கு ரற்றா காட்டியவர்கள், இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் சில தசாப்தங்களுக்கு பின் தள்ளப்பட்டு நிற்கின்றது. இந்த போராட்டங்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என்று எந்த உயிரிழப்பிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. டட்ட கஸ்டங்களுக்கும் இழப்புகளுக்கும் கூட எவ்வித அர்த்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றோம். எங்களிடம் எஞ்சியிருப்பது வெறும் அனுபவங்கள் மட்டுமே. அதிலிருந்தும் எதனையும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் தாரில்லை.

இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் வெளியேற்றம் பற்றி 24 மணிநேரச் செய்திச் சேவைகள் பிளந்து தள்ளுகின்றன. இன்னும் சில வாரங்களில் ஆப்கானிஸ்தான்காரர்கள் எங்கள் நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கிறார்கள் என்று இந்த மேற்கு நாட்டுச் செய்தி நிறுவனங்கள் ஒப்பாரி வைக்கும். ஈராக் அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், லிபிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், சிரிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள் இன்றும் இத்தாலியின் மெடிற்றிரேனியன் கடற் பரப்பில் தினமும் அகதிகள் உயிரிழக்கின்றனர். ஏன்? இந்த மேற்கு நாடுகள் தலையீடு செய்து அவர்களின் நாடுகளைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியதால், அவர்கள் வாழ வழியின்றி மேற்கு நோக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த நிலைக்கு இந் நாடுகளே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீங்கள் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கிழித்தது போதும், உங்கள் சர்வதேச பொலிஸ்காரன் அடாவடிகள் போதும், மூடிட்டு இருங்கள் செய்த பாவங்களுக்கு, அனைவருக்கும் அகதி அந்தஸ்த்தை வழங்குகள்.

‘சிங்களம் தெரியாததால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் அதிகாரிகள். – திரைமறைவில் உள்ளவர்கள் யார்..? – கோவிந்தன் கருணாகரம் காட்டம் !

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர் வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் சிங்கள அதிகாரிகள் தவிர்ந்து ஏனைய தமிழ் அதிகாரிகள் குறித்த அவர்களின் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களால் அனுமதிக்கப்படாமை தொடர்பில் இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டதன் நிமித்தம் இந்த நாடு முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு உள்நாட்டுப் போரைச் சந்தித்திருந்தது. அந்தப் போரின் நிமித்தம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றது. இருந்தும் 2009லே போர் மௌனிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போர் எதற்காகத் தொடங்கப்பட்டது? எப்படித் தொடங்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக மீண்டும் அந்த நிலைமையை ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் மேலதிகாரிகளும் தமிழ் பேசும் மக்களை ஒடுக்கி துன்புறுத்தும் நிலைமை அதிகாரிகள் மட்டத்திலே அரங்கேறுகின்றது.

கடந்த வைகாசி பதினொராம் திகதி பொதுச் சேவை ஆணைக்குழுவானது திட்டமிடல் பிரிவில் அதிகாரிகளாகக் கடமை புரிந்தவர்களை நேர்முகப் பரீட்சைகள் மற்றும் சேவை மூப்பின் அடிப்படையில் அவர்களுக்குப் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு கொடுத்து பொது நிர்வாக அமைச்சிற்கு பத்து அதிகாரிகளைச் சிபாரிசு செய்திருந்தது. பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் ஐவர் சிங்களவர்கள், நால்வர் தமிழர், ஒருவர் முஸ்லீம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

பொது நிர்வாக அமைச்சு இந்தப் பத்துப் பேருக்கும் கடந்த ஆகஸ்ட் 07ம் திகதிக்கிடையில் அவர்களது கடமைகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்த அமைச்சுகளில் பொறுப்பேற்கும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதில் சிங்களவர்கள் ஐவரும் எவ்வித தடையும், இடையூறுகளுமின்றி தங்களது கடமைகளை தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அமைச்சுகளில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

ஆனால் ஏனைய தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐவரும் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற இடத்தில் ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இவர்களை பதவியேற்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கு சிங்கள மொழி மூலம் தான் நிர்வாகம் செய்ய வேண்டும் அதனால் அந்த அதிகாரிகள் தகுதியற்றவர்கள் என்ற காரணம் அமைச்சுக்களின் செயலாளர்களால் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வானது திட்டமிட்ட ஒன்றாகவே இவ்வாறு பதவி உயர்வு பெற்ற தமிழ் அதிகாரிகளுக்கு நடைபெற்றிருப்பதாகவே நான் அறிகின்றேன். இது வெறுமனே அமைச்சுக்களின் செயலாளர்களால் மாத்திரம் இடம்பெற்றிருக்க மாட்டாது. இவர்களுக்கு யாரோ மேல் அதிகாரியோ, அரசியல்வாதிகளோ பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் சிங்களவர்களைத் தவிர்த்து மிகுதி தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐந்து பேரையும் தங்கள் பதவிகளைப் பொறுப்பெடுப்பதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இந்த நாட்டிலே கடந்த கால யுத்தங்கள் நடைபெற முன்பு எந்த திணைக்களங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழ் அதிகாரிகள் தான் தலைமைப் பொறுப்புகளில் இருந்த வரலாறுகளே இருக்கின்றது. இதன் பிற்பாடு நிர்வாக பொறுப்புகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுகளிலும் பல்வேறு இடையூறுகள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகத்தான் இந்த நாட்டிலே போர் மூண்டது, இத்தனை அழிவுகளையும் இந்த நாடு சந்தித்தது என்ற பட்டறிவை இந்த அரசு கொண்டிருந்தாலும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு தமிழ் பேசும் மக்களைத் தள்ளுவதற்கான ஒரு உத்தேசமாக இருக்கின்றதோ என்று எண்ணத் தோணுகின்றது.

இது சிங்கள தேசம் என்ற சிந்தனையில் சிங்களவர்களைக் கொண்டுதான் அரசியல் ரீதியானதாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்த நாட்டை நடத்தப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையாக தமிழ் பேசும் வாழும் பிரதேசம் உங்களுக்குத் தேவையில்லையா? அல்லது எதிர்காலத்திலும் தமிழ் பேசும் மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கப் போகின்றீர்களா?

மத்திய அரசாங்கத்திலே சிங்கள மொழி மூலம் தான் நீங்கள் நிர்வாகம் செய்ய வேண்டும். சிங்களவர்களைக் கொண்டு தான் நீங்கள் நிர்வாகம் செய்யப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிற்கு எதற்காக நீங்கள் சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றீர்கள். 98 வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்களவர் ஒருவரைப் பிரதம செயலாளராக நியமித்திருக்கின்றீர்கள். வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலே சிங்கள அரச அதிபர்களை நியமித்திருக்கின்றீர்கள். 75 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் தொடர்ச்சியாக சிங்களவர் ஒருவரையே பிரதம செயலாளராக வைத்திருக்கின்றீர்கள்.

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது?

எனவே இவ்விடயமானது இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அறிகுறியாகவும், மீண்டும் ஒரு போரை ஏற்படுத்துவதற்குமான எத்தனிப்பாகவுமே தென்படுகின்றது.

இன்று பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் தங்கள் வேலை செய்த இடங்களில் விடுவிப்பினைப் பெற்று மத்திய அரசின் கீழ் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக பொது நிர்வாக அமைச்சிலே வெறுமனே கையெழுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே அந்த உயர் அதிகாரிகளை தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று அவர்களது கடமைகளைச் செய்ய விட வேண்டும். அல்லது வடக்கு கிழக்கிலே இருக்கும் சிங்கள அதிகாரிகளை அங்கே எடுத்துவிட்டு இவர்களை வடக்கு கிழக்கிலே அவர்களது கடமைகளைச் செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தாண்டவம் – 11 நாட்களில் 2000 பேர் பலி !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நாளாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 14ஆம் திகதி 161 பேரும், 15ஆம் திகதி 167 பேரும், 16ஆம் திகதி 171 பேரும், 17ஆம் திகதி 170 பேரும், 18ஆம் திகதி 186 பேரும், 19ஆம் திகதி 195 பேரும், 20ஆம் திகதி 198 பேரும், 21ஆம் திகதி 183 பேரும், 22 ஆம் திகதி 194 பேரும், 23ஆம் திகதி 190 பேரும், 24ஆம் திகதி 198 உயிரிழந்துள்ளன.

 

இதே நேரம் தற்போதைய கொரோனா பரவல் நிலவரப்படி இலங்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 139 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.