17

17

“தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சியவர் இன்று தமிழ்கைதிகளை அச்சுறுத்துகிறார்.” – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பொன்சேகா  மேலும் பேசிய போது ,

“இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், அதற்கு தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தல்களை மேற்கொள்வோருக்கும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து, இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. இவர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினரின் பெயரைக் கேட்டாலோ அல்லது அவர்களைக் கண்டால்கூட ஒழிந்துக் கொள்வாராக இருக்கும்.

ஆனால், இன்று 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துகிறார். அந்தக் கைதிகள் இன்று அனைத்தையும் கைவிட்டுள்ளார்கள். அப்படியாவர்களை மண்டியிட வைத்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார்.

இது எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளை வீரன் ஒருவன் ஒருபோதும் செய்ய மாட்டான். குடிபோதையில் ஒருவன் துப்பாக்கித் தூக்கினால், அவன் வீரன் கிடையாது. நானும் சிறைக்கைதியாக இருந்துள்ளேன். அவர்கள் அனுபவிக்கும் துன்பம் எனக்கும் தெரியும். இந்த நிலையில், நான் கைதிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இவ்வாறான சண்டியர்கள் இனிமேல் சிறைச்சாலைக்குள் நுழைந்து அச்சுறுத்தினால், அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பியுங்கள்.

அரசாங்கம் லொஹான் ரத்வத்தவை, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து மட்டும்தான் நீக்கியுள்ளதே தவிர, அவருக்கு ஏனைய அமைச்சுப் பதவிகள் அப்படியே தான் உள்ளன.இவருக்கு எதிராக இன்னும் பல முறைப்பாடுகளும் உள்ளன. நாடாளுமன்றிலும் நான் இதுதொடர்பாக ஏற்கனவே கூறியுள்ளேன்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது” என அவர் குறிப்பிட்டள்ளார்.

ஊரடங்கை அமுல்படுத்திவிட்டு மதுபானக்கடைகளை திறந்துவிட்ட அரசாங்கம் !

வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு மதுபானசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையின் பலபகுதிகளிலும் மதுபானபட்பிரியர்கள் அலைமோத ஆரம்பித்துள்ளதால் மதுபானத்தால் ஒரு புதிய கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பபுக்கள் அதிகமாகியுள்ளது.

Gallery

மதுபானசாலைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.

மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை. பொலிஸார் அவ்விடத்தில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்தும் சமூக இடைவெளி பேணாமையை கருத்தில் கொள்ளாது செய்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!

பாகம் 7: புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 07 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 7

தேசம்: புளொட்டின் உருவாக்கம் பற்றி பேசியிருந்தோம். யார் உங்களை புளொட்டுக்குள்ள கூடுதலாக influence பண்ணின என்று நினைக்கிறீங்க…

அசோக்: கூடுதலாக அதில கேசவன், ரகுமான் ஜானுடைய கருத்துக்கள். இவங்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள், மார்க்சிய ஐடியோலொஜி இருந்தது. ஈஸ்வரன் அடுத்தது வாசுதேவா. வாசுதேவாவின் பிற்காலம் என்பது விமர்சனத்துக்கு உரியது. அந்த காலத்துல வாசுதேவா முற்போக்கான ஆளாகத் தான் இருந்தவர். காந்தியத்தில் மிக செயற்திறனுடைய ஆளாகத்தான் இருந்தவர். மட்டக்களப்பு தோழர்கள் பலர் புளொட்டுக்குள்ளும், காந்தியத்துக்குள்ளும் உள்வாங்கப்படுவதற்கு வாசுதேவா தான் முக்கிய காரணம். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் வருவதற்கு வாசுதேவோவும் ஒரு காரணம்.

தேசம்: மாவட்ட அமைப்பாளரின் செயற்பாடுகள் என்ன? என்னென்ன பணிகள் உங்களுக்கு தரப்பட்டது?

அசோக்: கூட்டங்கள் பிரச்சாரங்கள்தான். மக்களை அரசியல்மயப்படுத்தல். அரசியல் வகுப்புகள் நடத்துதல். வெகுன போராட்டங்கள் செய்வது, பத்திரிகைகள், துண்டுப்பிரசுர வினியோகம் இப்படிஇருக்கும். கூடுதலாக புதிய பாதை பேப்பர் விற்பது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராணுவ பயிற்சி அதுகள் இருக்குதா?

அசோக்: அதுகள் ஒன்றுமில்லை. உண்மையிலேயே புளொட்டில் முக்கியமாக இருந்தது அரசியல் வகுப்புக்கள்தான். தோழர்களை புளொட்டில் இணைப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்தது. அந்த நேரத்தில் என்னோடு மிகத் தீவிரமாக வேலை செய்த ஆட்கள், வரதன் என்று ஒரு தோழர், அடுத்தது சக்தி வடிவேல் என்று ஒரு தோழர், அகஸ்டின் என்ற ஒரு தோழர் அவர் பிறகு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக வந்தவர். பேரின்பம் நிறைய தோழர்கள். செல்வரெத்தினம், பணிக்ஸ், பாக்கி மாமா, கராட்டி அரசன், மங்களம் குணரா ஜா, குருக்கள்மடம், பழுகாமம் கிரமாங்களிலிருந்து நிறைய தோழர்கள். வாழைச்சேனையில் யோகராஜா, பெயர்கள் நிறைய மறந்து விட்டது. அவங்க பெயர்களைலெல்லாம் பதிவு செய்யனும். மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். அவர்கள் எல்லாம் மிகத் தீவிரமாக வேலை செய்தவர்கள். வரதன் என்ற தோழர் தன்னை அர்ப்பணித்து வேலை செய்தவர். கடைசி வரைக்கும் நாட்டை விட்டு வெளியேவில்லை.இப்பவும் ஊரில மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

தேசம்: ஜே.வி.பி காந்தியம் புளொட் என்று உள்வாங்கப்படுகிறீர்கள். இதுக்கெல்லாம் உங்களை தள்ளுகின்ற முரண்பாடு எதுவாக இருந்தது? இலங்கை அரசாங்கத்தின் எந்த வகையான செயற்பாடுகள் உங்களை எப்படித் தள்ளுது?

அசோக்: எனக்கு ஒரு அனுபவம் இருக்கு என்ன என்று கேட்டால், சின்ன வயதிலிருந்தே பல பிரதேசங்களுக்கு போய் வந்திருக்கிறேன். மலையகத்தில் நான் இருந்தனான். மலையகத்தில் எனக்கு பேனா நண்பர்கள் நிறைய பேர் இருந்தவர்கள். கற்றன், தலவாக்கெல, லிந்துல, டயகம, பொகவந்தலாவ, கொட்டகலை போன்ற இடங்களில் நண்பர்கள் இருந்தாங்க. நெடுஞ்செழியன் என்ற நண்பன் சில வருடங்களுக்கு முன் இறங்துட்டாங்க. பிற் காலத்தில வீரகேசரியில வேலை செய்தவர். அரசியல் சமூக அக்கறை கொண்ட நண்பன். அவரோடு மலையகத்தில் பல இடங்கள் சுற்றியுள்ளன்.

இவர் மூலம்தான் சந்திரசேகரம், விஜயகுமார் மற்ற தீர்த்தக்கரை இலக்கிய அரசியல் நண்பர்கள் பலரின்ற அறிமுகம் கிடைச்சது.

அப்ப நான் அடிக்கடி போவேன். நாங்கள் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் இருந்தாலும் கூட, எங்களுடைய சிந்தனை முறை வித்தியாசம் தானே. எங்களுடைய கல்வி, வாசிப்பு, அரசியல்…

அப்ப பார்க்கேக்கை, தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் அதேநேரத்தில், தொழிலாளர் ஒடுக்குமுறை என்பது எல்லா பக்கமும் ஒன்றாகத்தான் இருந்தது.

அதனாலதான் நாங்க ஜே.வி.பியிடம் போக வேண்டி வந்தது. பிறகு இனவாத ஒடுக்கு முறை வரும்போது எங்களுக்கு ஒரு சிந்தனை வருது. இதற்கு அங்கால ஒடுக்குமுறையில் ஒரு பரிணாமம் இருக்குத்தான் என்று. இன ஒடுக்குமுறை என்பது திடீரென வந்த ஒன்று இல்லைதானே. அதற்கு ஒரு பரிணாம வளர்ச்சி இருக்குதானே. தமிழ் தேசியத்தின் வளர்ச்சி என்பது திடீரென ஏற்பட்ட ஒன்று இல்லைதானே. அடிப்படைக் காரணங்கள் இருக்கு. அதற்கும் பரிணாம வளர்ச்சி ஒன்று இருக்கு. இனவாத ஒடுக்கு முறையால் தான் அது உற்பத்தி ஆகுது. வளருது. அப்ப நாங்க பார்க்கும்போது அது நியாயமாக எங்களுக்குப்படுது. தமிழரசு கட்சி மீதான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது யதார்த்தம் தானே

தேசம்: அதை எப்படி feel பண்ணுகிறீர்கள்… எல்லைப்புறக் கிராமங்களை கைப்பற்றுவதால் இனக்கலவரங்கள் ஒரு விடயமாக இருந்திருக்கும், போலீஸ் ராணுவ கெடுபிடிகள் இருந்திருக்கும், அதில ஒன்றா தரப்படுத்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது. இளைஞர்கள் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதற்கு தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது எவ்வாறான தாக்கத்தை கிழக்கு மாகாணத்தில் அல்லது உங்களில் ஏற்படுத்தியது?

அசோக்: தரப்படுத்தலுக்கு அரசியல்ரீதியாக வேற காரணங்கள் இருந்தது. தரப்படுத்தல் கிழக்கு மாகாண , மற்ற கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருந்தது என்பது உண்மைதான். ஆனா, அது முழுத்தமிழ்ச் சமுகத்தின் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்கியது என்பதை காணத்தவறி விடுறம். பல்கலைக்கழகத்திற்கு எடுபடுவது மாத்திரம் முக்கியம் அல்ல. கல்வியின் திறன், ஆற்றல், கொள்ளளவு, ஆளுமை, வளர்ச்சி இவை எல்லாம் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்ப் பல்லைக்கழகங்கள் செய்யத்தவறி விட்டன. அதற்கான போதிய வளங்கள் இல்லை. இதற்கு இலங்கை அரசு முக்கிய காரணம். இது பற்றி நாம நேர்மையாக ஆராய்ய வேண்டும். சிங்கள பிரதேசங்களில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பல்லைக்கழகம் சென்று வெளியேறும் மாணவர்களின் அறிவார்ந்த வளர்ச்சி திறன், ஆற்றல் தமிழ் மாணவர்களிடம் இல்லாமல் போனதை நாம் எப்போதாவது கவனிச்சோமா?

சிங்கள கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, திறமையோடு ஒப்பிடும்போது, எமது கிராமப்புற மாணவர்கள் மிக பின்தங்கியவர்களாக இருக்கிறாங்க. பேரினவாத அரசுகள் பின்தங்கிய தமிழ் கிராமப்புற பாடசாலைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களில் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள செய்து வருகிறதை நாம் கவனிக்க தவறிவிடுறம். ஒவ்வாரு வருடமும் இந்திய உயர் கல்வி பல்கலைக் கழகங்ளுக்கு பிஎச்டிக்கு நிறைய மாணவர்கள் போகிறாங்க. டெல்லி ஜேஎன்யு க்கு போன பலரை எனக்கு தெரியும். எங்கட ஆட்கள் என்றால் யாரும் பெரிதாய் இல்லை. என்ன காரணம் இதையெல்லாம் ஆராய்யவேணும்.

இனக்கலவரங்களின் தோற்றத்தின் பிண்னணியை ஆராய்ந்தால், அந்தந்த காலங்களில் ஆட்சி செய்த அரசின் இனவாதமும், திட்டமிட்ட செயலும் தெரியவரும். எந்தவொரு மக்கள் கூட்டமும் இனவாதிகளாக பிறப்பதில்லைத்தானே. அதிகார வர்க்கம் இனவாத சிந்தனைகளை விதைக்கிறது. தமிழ் அதிகார வர்க்கமும், சிங்கள அதிகார வர்க்கமும் விரும்பி இருந்தா, எங்கட தேசிய இன சிக்கல்களை எப்போ தீர்த்து இருக்க முடியும்தானே. இவங்களின்ர இருப்புக்கு முரண்பாடுகள் அவசியம் என்பது அவங்களுக்கு தெரியும்.
எனக்கு அரசுகளின் இனவாத செயற்பாடுகளில் முக்கிய காரணமாகபட்டது.

திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள்தான். பௌத்த மயமாக்கல். தமிழ்மக்களின்ர நிலத்தை பறிப்பது மாத்திரமல் தமிழ் மக்களின்ர உரிமைகளையும் சுதந்திரங்களையும் அந்த நிலத்திலிருந்து பறிப்பதுதான் இதன்ற நோக்கம். கந்தளாய்க் குடியேற்றத் திட்டம் கல்லோயாக் குடியேற்றத் திட்டம்
இவையெல்லாம் இந்த நோக்கத்தோடுதான் செய்யப்பட்டன.

இதைப்பற்றி புள்ளி விபரங்களோடு நிறையக் கதைக்கலாம். வி.நித்தியானந்தம் அவங்க இதைப்பற்றி நிறைய எழுதி இருக்காங்க. யாழ்ப்பாண யூனிவசிற்றில இருந்தவர். இப்ப நி யூசிலாந்து யுனிவசிற்றில இருக்கிறார். நாங்கள் எடுத்த உடனேயே தரப்படுத்தலை தானே பார்க்கிறோம்…

தேசம்: தரப்படுத்தல் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…

அசோக்: தரப்படுத்தல் என்பது உப காரணிதான். ஒரு தமிழ் தேசிய போக்கினுடைய வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் போராட்டத்தின் தொடக்கத்திற்கும் உந்து சக்தியாக இருந்தது தரப்படுத்தல்தான். அது ஒரு உப காரணி. அதற்கு முதல் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமஉரிமை இல்லாதது, சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கல். தனிச்சிங்களச் சட்டம், புறக்கணிப்புக்கள் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது.

தேசம்: இதெல்லாம் நீங்கள் உணரக்கூடியதாக இருந்தது…

அசோக்: உணரக்கூடியதாக இருந்தது. அடுத்தது இந்த ஒடுக்குமுறை என்பது படுபயங்கரமாக இருந்தது. இரண்டு ஒடுக்குமுறைகள் இருந்தது. ஒன்று இன ரீதியான ஒடுக்குமுறை. அடுத்தது வர்க்க ரீதியான ஒடுக்குமுறை. தேசிய இனமாக ஒடுக்கப்படுகின்ற அதேநேரம் வர்க்க ரீதியாகவும் ஒடுக்குமுறை இருந்தது. அப்போதான் புளொட்டினுடைய தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டம் என்பது சகல மக்களுக்குமான விடுதலை. தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தல். ஒரு தமிழீழப் போராட்டம் என்பது தந்திரோபாயம். அதை வைத்துக்கொண்டு மூலோபாயத்தை நோக்கி போதல் என்பதுதான் புளொட்டினுடைய கோட்பாடாக இருந்தது.

அரசியல் கோட்பாடு எமக்கு உடன்பாடாக இருந்தது. இதப்பற்றி முன்ன கதைச்சி இருக்கம்.
அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பதை இப்ப நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் சாத்தியமாக தான் தெரிந்தது. ஏனென்றால் ஜே.வி.பி எங்களுக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருந்தது தானே. அது தோல்வியடைந்தாலும் கூட, ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஜே.வி.பி எங்களுக்குத் தந்தது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில்தான் நான் நினைக்கிறேன் 81 காலகட்டத்தில்தான் மாவட்ட சபை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தமிழீழக் கோரிக்கையை 77 ஆம் ஆண்டு முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்குப் பிறகு அந்த கோரிக்கையில் இருந்து பின் வாங்குற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கு வாறினம். மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தான் யாழ்ப்பாணத்தில மாவட்ட சபைத் தேர்தலை ஒட்டி கலவரம் ஒன்று நடக்கிறது. அதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள்? கிழக்கு மாகாணத்தில் அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததா?

அசோக்: மாவட்ட சபை என்பது எந்தவிதமான பூரணமான தீர்வையும் தமிழ் மக்களுக்கு தரப்போவது இல்லை என்பதில் மிகக் கவனமாக இருந்தனாங்கள். மட்டக்களப்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஆட்கள் மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டவர்கள் தானே. அபிவிருத்தி என்பது வேறு, அரசியல் விடுதலை உரிமை என்பது வேறு. மாவட்ட சபை என்பது எங்களுக்கு அபிவிருத்தி ரீதியான பிரயோசனங்களைத் தரலாமே, ஒழிய அரசியலுக்கான தீர்வாக மாவட்டசபை இருக்க இயலாது. அதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். மாவட்ட சபை என்பது தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையை தணிப்பதற்கான ஒரு உபாயமாக தான் அரசு கையாண்டது. ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலை அதன் சம உரிமை சுதந்திரம் இவைகளுக்கூடாகத்தான் புரண அபிவிருத்தி கிடைக்குமே தவிர இந்த அபிவருத்தியெல்லாம் ஒருவகை ஏமாற்று வேலதான்.

தேசம்: இந்த மாவட்ட சபையை கூட தர விரும்பாத ஒரு நிலையில்தான் அரசாங்கம் இருந்தது.

அசோக்: இலங்கை அரசியல் பாரளுமன்ற ஆட்சி அதிகாரம் இனவாதத்தினலாதான் கட்டமைக்கப்பட்டதுதானே. இதற்கு இனமுரண்பாட்டை கூர்மையாக்கல் அல்லது தக்க வைத்துக்கொள்ளல் அவசியம். அப்பதான் ஆட்சியை பிடிக்க முடியும். அதே நேரம் சர்வதேசத்திற்கு, இந்தியாவுக்கு இனமுரண்பாட்டை தணிப்பது போல பாவனையும் காட்டவேண்டும். மாவட்ட சபைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இருந்த தாக்கம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் ஆயுதப் போராட்டத்துக்குரிய தாக்கங்கள், சின்ன சின்ன வடிவங்கள், அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தது. அங்க உருவாகவில்லை.

தேசம்: அந்தக் குழப்பம் யாழ்ப்பாண நூலக எரிப்பு இதுகள் அவ்வளவு தூரம்….

அசோக்: யாழ்ப்பாண நூலக எரிப்பு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அது ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் நாங்கள் வாசகர் வட்டம், படிப்பு என்று இருந்தபடியால், நூலக எரிப்பு என்பது பெரிய தாக்கத்தை கொடுத்தது.

தேசம்: அதற்கு எதிரான ஊர்வலங்கள் ஏதாவது நடந்து இருக்கா.

அசோக்: அது பெருசா நடக்கல. கிழக்கில் பெருசா நடந்த மாதிரி தெரியல. நாங்க துண்டுப்பிரசுரம் அடிக்க நினைச்சம். முடியல்ல.

தேசம்: புளொட்டில் நீங்கள் இணைந்த பிறகு தான் துண்டுப் பிரசுரங்கள் அதுகளை விநியோகிக்கிறது அப்படியாக செயற்பட்டீர்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கினீர்கள் அந்த காலத்தில்?

அசோக்: பிரசுரம் தொடர்பாக பிறகு நான் கைது செய்யப்பட்டன். ஆரம்பத்தில் முதலாவது கைது, கல்முனையில் ஒரு சிங்கள முதலாளியினுடைய லாரி ஒன்று எரிக்கப்பட்டது. தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் புளொட் தோழர்கள் கைது செய்யப்பட்டவர்கள்.

அந்த நேரத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தபடியால் கைது செய்யப்பட்டன். ஆனால் உண்மையில் அவங்களுக்கு அதோட சம்பந்தமில்லை. அரஸ்ட் பண்ணி கொஞ்ச காலம் வைத்திருந்த பிறகு பிணையில் விட்டவங்க. அந்த வழக்கில் அஸ்ரப் தான் பேசினவர். அதற்குப்பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்பட்டேன். சைன் வைக்க வேண்டும் எனக் கூறி விடுவிக்கப்பட்டன். நான் போலீசுக்கு போகாமல் விட்டுட்டேன். போகாமல் விட்டவுடனே நான் தேடப்பட்ட ஆள் ஆகிட்டேன். பிறகு என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அரஸ்ட் பண்ணி என்னை கொண்டு போயிற்றாங்க. டி.ஐ.ஜி மகேந்திரன் தான் விசாரித்தவர். அது ஒரு சுவாரசியமான சம்பவம்

தேசம்: என்ன நடந்தது அதுல? மஹேந்திரன் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் டி.ஐ.ஜி யாக இருந்தவர் என்று நினைக்கிறேன் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவ காலத்தில் இருந்தவர் என நினைக்கிறேன்.

அசோக்: என்னுடைய பெயர் யோகன் கண்ணமுத்து தானே அப்ப கண்ணமுத்து என்றவுடன் அவர் நினைத்தார் ஆள் ஒரு பெரிய ஒரு சைசா உடம்பா இருப்பார் என்று. அவருக்கு தெரியாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று. அப்ப நூர்டீன்தான் என்னை அரஸ்ட் பண்ணினது. என்னை டி.ஐ.ஜி மஹேந்திரன் விசாரிப்பதற்காக அவரின் ஒபிசிக்கு கொண்டு போனாங்க… என்னை உள்ளுக்கு அனுப்பினதும். அவர் என்னை எதிர்பார்க்கவில்லை, இந்த தோற்றத்துடன் எதிர்பார்க்கவில்லை.

தேசம்: மாணவனை எதிர்பார்க்கவில்லை.. !

அசோக்: என்னை கொண்டு போன சிஐடி இன்ஸ்பெக்டர் , தம்பிராஜா எம்பியின் மகன். பெயர்
ஜெயக்குமார். எனக்கு நிறைய உதவி செய்தவங்க. அவர் வந்தவர். கூட்டிக் கொண்டு போன மூணு பேரையும் வெளியில போக சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார். நான் கை கட்டிக்கொண்டு நின்றேன். என்னை சொன்னார் உட்கார சொல்லி. நான் உட்காரவில்லை. நான் பெரிய அப்பாவி மாதிரி சோகத்துடன் இருந்தன். ஆள் சொல்லிச்சு உட்கார சொல்லி.

கேட்டார் புளொட்டுக்கும் உனக்கும் என்ன உறவு என்று. நான் சொன்னேன் ஒரு தொடர்பும் இல்லை என்று. அப்ப வாசுதேவாவ எப்படி தெரியும்? நான் சொன்னேன், காந்தியத்தில் நான் வேலை செய்கிறேன் என்று. நான் படித்துக்கொண்டு, காந்தியம் சமூக சேவைகள் என்று ஈடுபடுகிறேன். நீ பொய் சொல்ல வேண்டாம் நீதான் மாவட்ட அமைப்பாளராக வேலை செய்கிறாய். ரிப்போர்ட் எல்லாம் வந்திருக்கு. நிறைய வன்செயல்களில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுக்குப் பின்னாடி நீ இருக்கிறாய் என்று. நான் சொன்னேன், அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரின்ஸிப்பலிடம் கேட்டுப் பாருங்கள் என்று.

அப்ப கேட்டார் தமிழீழம் கிடைக்கும் என்று நீ நம்புறியா என்று. நான் சொன்னேன் எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்று. நான் காந்தியம் தான் என்று. தமிழீழம் கிடைக்கப்போவதில்லை வீணாக வாழ்க்கையை இழக்காமல் ஏதாவது தொடர்ந்து படி. அல்லது படித்து போட்டு வெளிநாட்டுக்கு போ. இனிமேல் இதில ஈடுபடக்கூடாது என்று போட்டு, இதுதான் கடைசி இனி ஏதாவது பிரச்சனை வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போட்டு, இவரை ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிட்டார்.

அதோட என்னை விட்டாச்சு பிறகு. பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், போலீஸ் தெரியும் தானே, தொடர்ந்து கண்காணிப்பில் தான் நான் இருந்திருக்கிறேன். ஒரு நாள் என்ன நடந்தது என்றால், ஜே ஆர் ஜெயவர்த்தன வடகிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது தொடர்பாக வடகிழக்கில் மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று நடந்தது. அதுல யாழ்ப்பாணத்தில ஈபி ஆர்எல் எப் GUES செய்தது. மட்டக்களப்பில் நாங்கள் பொறுப்பெடுத்தோம்.

வடகிழக்கில் பாடசாலைகளை பகிஷ்கரிக்க சொல்லி எல்லாம் ஒழுங்கமைத்தாச்சு. அது தொடர்பா நோட்டீஸ் அடிக்கிறதுக்கு மட்டக்களப்பு ராஜன் அச்சகத்துக்கு நான் போனேன். அங்க ஓடர் கொடுத்திட்டேன் முதலே நோட்டீஸ் எல்லாம் அடிக்கிறதுக்கு. அண்டைக்கு போய் நோட்டீஸ் எடுத்து ரோட்ல வரும்போது அரஸ்ட் பண்ணுப்படுறேன் கையும் மெய்யுமா. அரஸ்ட் பண்ணு பட்டதும் தெரியும்தானே, ஒன்றுமே செய்ய இயலாது ஏனென்றால் கையும் மெய்யுமாக அரஸ்ட் பண்ணபடுறேன். நாங்க நோட்டிசை தமிழ் ஈழ விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் அச்சிட்டிருந்தோம்.

தேசம்: என்ன காரணம்…

அசோக்: அது ஒரு அபத்தமாக காரணம். தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் அண்டகிரவுண்ட் என்றும், தமிழ் ஈழ விடுதலைக் கழகம் அதனோட ஓப்பின் வொடி என்றுதான் நாங்க அந்த நேரத்தில இயங்கினம். வெகுஜன வேலைகள் எல்லாம் இதன் பெயரிலதான் செய்தோம். ஆன பொலிசிக்கு தெரியும் ஓரே ஆட்கள்தான் என்று. பெயரில் ஒரு சொல்தான் வித்தியாசம். சாதாரணமாகவே விளங்கும் இரண்டும் ஒன்றுதான் என்று.

அரஸ்ட் பண்ணின உடனே என்னை விசாரித்தது நூர்டீன். அவருக்கு இயக்கங்கள் பற்றி சகலதும் தெரிந்திருந்தது. நாங்கதான் முட்டாள்தனமாக இயக்கம் நடாத்தி இருக்கம்.

அந்த நேரத்தில புளொட்டின் தலைமையிடம் அண்டகிரவுண்ட் அமைப்பின் வடிவம், வெகுஜன அமைப்பின் வடிவம் பற்றிய எந்த அரசியல் புரிதல்களும் இருக்கல்ல. இப்ப நினைக்கும்போது சிறுபிள்ளத்தனமாக இவைகள் தெரிகின்றன. பார்த்தீங்க என்றா அண்டகிரவுன்ட அமைப்பின் பெயர் தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம். வெகுஜன அமைப்பின் பெயர் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் யோசித்துப் பாருங்க, இப்படி யாரும் பெயர் வைப்பாங்களா?

தேசம்: அந்த நேரம் புளொட்டின் தலைமை என்று யாரை சொல்கிறீர்ங்க?

அசோக்: உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றவங்க…

தேசம்: பிறகு என்ன நடந்தது…?

பிறகு, நூர்டீன் என்னை கடுமையாக விசாரிக்க முன்னரே, என்னை சிஐடி அரஸ்ட் பண்ணினபடியால், அவங்க என்னை விசாரிக்க பொறுப்பெடுத்தாங்க. ஒரு அடி கூட விழல.

சிஐடி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நல்லா கெல்ப் பண்ணினார். அடுத்த நாள் வாசுதேவாவையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க.

விசாரித்த பிறகு, கோர்ட்டுக்கு கொண்டு போனாங்க. பிறகு ரிமாண்ட் ஒரு மூன்று மாதம் உள்ளுக்கு இருந்தன்.

வாசுதேவாவை ஒரு மாதத்தில விட்டிட்டாங்க. பெட்றிக்சும், பேரின்பநாயகம் என்று சொல்லி யாழ்ப்பாணத்திலிருந்து வந்த லோயர் இரண்டு பேரும்தான் வாதாடுனவங்க. என்னை விடுவிக்கக்கோரி மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடந்தது. அதற்குப்பிறகு, பிணையில் வந்தாலும் கூட தொடர்ந்து சயின் பண்ண வேணும் நான். சைன் பண்றதால என்ன பிரச்சனை என்றால் ஏதாவது பிரச்சனை நடந்தால் என்னை தான் அரஸ்ட் பண்ணறது. அடுத்த தெரியும்தானே. போலீசில் பிடிபட்டால்… அதால நான் தலைமறைவு ஆகிட்டேன். அதற்குப் பிறகு தேடப்படும் ஆளாக ஆக்கப்பட்டேன்.

தேசம்: 82 ஆண்டுக்கு பிறகு நீங்கள் தேடப்பட்ட ஆளா ஆக்கப்பட்டுட்டீங்க. உங்களுடைய கைது தொடர்பா பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன்

அசோக்: ஓம் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது.

தேசம்: அதற்குப் பிறகு உங்களுடைய தலைமறைவுவுக்கு பின் செயற்பாடுகள் எப்படி இருந்தது.

அசோக்: தலைமறைவாக இருந்துகொண்டு நிறைய தோழர்களை வைத்துதான் செயற்பட்டனான். வரதன் சக்திவேல், பேரின்பம், தில்லைநாதன், குணம், பாக்கி மாமா, ஜீவா நிறைய தோழர்கள் இருந்தவர்கள்.

தேசம்: அப்ப இயக்க முரண்பாடுகள் கிழக்கில பெருசா வரேல.

அசோக்: அந்த நேரம் வரேல. மிக தோழமையாக தான் நாங்கள் இருந்தோம். மட்டக்களப்பு ஜெயில் விரேக் வந்து… அதைப் பற்றி கதைக்கலாமா?

தேசம்: அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில இயக்க முரண்பாடுகள் பாரிய பிரச்சனையாக வந்து கொண்டிருக்கின்றது என்று.

அசோக்: அந்த டைம்ல அதற்கு முதலில் சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை எல்லாம் நடந்திட்டு தானே.

தேசம்: அது சம்பந்தமா என்ன அறிந்து இருந்தீர்கள் அந்த நேரம். நீங்கள் சேர முதலே அது நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

அசோக்: இல்லை சுந்தரம் படுகொலை 82இல் தானே நடக்குது.

தேசம்: சுந்தரத்திற்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?

அசோக்: பெரிதாக நெருக்கமான உறவு ஏற் படவாய்ப்பிருக்கவில்லை. இரண்டு தடவைகள் சந்தித்திருக்கிறன். புலிகள் சுந்தரத்தை சுட்ட போது புலிகள் மீது எங்களுக்கு கடும் ஆத்திரம் வந்தது. இயல்பாகவே ஒரு ஆத்திரம் வரும் தானே.

தேசம்: அதுதான் முதலாவது சகோதர படுகொலை…

அசோக்: ஓம், ஆனால் அந்த படுகொலை மட்டக்களப்பில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு அதிருப்தி இருந்தது புலிகள் மீது. மட்டக்களப்பு புலித் தோழர்களுடன் கதைத்தால் அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. அவங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் நடக்கிற எந்த ஒரு விஷயத்துக்கும் தொடர்பில்லை அப்ப முரண்பட்டும் பிரயோசனமில்லை தானே.

தேசம்: மட்டக்களப்புக்கு யாழ்ப்பாணத்துக்கும் அடுத்த சிக்கல் என்னவென்றால் நிலத் தொடர்போ, நேரடி தொடர்போ இல்லை.

அசோக்: அப்படித்தான் அன்றைய நிலமை இருந்தது. அடுத்தது அங்கு வேலை செய்த தோழர்கள் எல்லாருமே, அப்ப ஈரோசில வேலை செய்த ரமேஷ் என்ற தோழர், ஈபிஆர்எல்எஃப் பில் வேலை செய்த தோழர்கள் பாலா, சிவலிங்கம், கணேஸ், சின்னத்துரை நிறைய தோழர்கள் பெயர்கள் நான் மறந்துட்டேன். எல்லோரும் நாங்கள் ஃபிரண்டா இருந்த ஆட்கள் தானே. ஈபிஆர்எல்எஃப் பில் சின்னத்துரை என்ற ஒரு தோழர் அவர் என்ற பெஸ்ட் பிரெண்ட்.

தேசம்: இதையெல்லாம் பார்க்கும்போது யாழ்ப்பாணத்துக்கும் மட்டகளப்புக்கும் இடையில பெரிய ஒரு கலாச்சார வேறுபாடு ஒன்றும் இருந்திருக்கு

அசோக்: கலாச்சார வேறுபாடு என்று சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சனை, நான் என்ன நினைக்கிறேன் என்றால், இயக்கங்களுக்குள்ள அரசியல் கல்வி இல்லை. ஒரு அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் ஒரே நோக்கத்துக்காக…

தேசம்: சித்தாந்த அரசியல் கலாச்சாரம் ஒன்று இருக்கேல…

அசோக்: இருக்கேல. அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் இந்த இயக்க முரண்பாடுகள் வந்திருக்காது. ஒரே நோக்கத்துக்காக, ஒரே போராட்டத்துக்காக, ஒரே கொள்கைக்காக நிக்கிறம் என்ற உணர்வு வந்திருக்கும். மத்தியதர வர்க்கத்திற்குரிய போட்டி, பொறாமை, அதிகார ஆசை இவை எல்லாம் அரசியல் கல்வி, மக்கள் மயப்பட்ட செயற்பாடு சிந்தனை முலம்தான் இல்லாமல் போகும். 83 ஜூலை கலவரத்துக்கு பிறகுதான் யாழ்ப்பாணத்தில நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம். சம ணர் குளத்தில் நடந்த வகுப்புகள் ஒன்றுக்குமே யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்கள் வந்தது குறைவு. நான் அறிய யாருமே வந்ததில்லை. பொன்னுத்துரை தோழர் மாத்திரம் வந்து போவார். வேறு தோழர்கள் வந்ததில்லை.

தேசம்: யாழ்ப்பாணத்தில நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்திலேயே இங்க வந்து யுஎன்பி செயற்பாட்டாளரைக் கொலை செய்தது மாதிரி யாழ்ப்பாணத்திலும் சில கொலைகள் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் தியாகராஜா…

அசோக்: மட்டக்களப்பில் நடந்த கொலைகளை எங்களால நிறுத்த முடிந்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலா ராமச்சந்திரன் யு என் பி அமைப்பாளராக இருந்தாலும்கூட எங்களுக்கு அந்த கொலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கல்ல. கொலை, தனிநபர் பயங்கரவாதம் என்பது எப்பவுமே விடுதலைக்கு சாத்தியமில்லை.

தேசம்: துரையப்பா படுகொலையை நீங்கள் எப்படி பார்த்தீர்கள் அந்த நேரம்..

அசோக்: சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாக அவரைப் பற்றி மோசமான பிம்பம்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. துரையப்பா அவர் தொடர்பாக பொசிட்டிவான விடயங்கள் இருக்கு. அதை ஏற்றுக் கொள்கிற அதே நேரம், அவர் தொடர்பான நெகட்டிவான விமர்சனங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். அதுக்காக படுகொலை என்பது பிழை. ஆனால் அவரை பிழையற்ற நபராக புனிதராக கட்டமைக்கும் போக்கு ஒன்று இருக்குத் தானே அது பிழை.

ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பில் இருந்தவர். அவரும் எஸ்எல்ஃப் பி இல இருந்தவர். துரையப்பா மாதிரிதான் அவர் அபிவிருத்தி வேலை செய்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அதன்ர அரசியல் எல்லாத்திற்கும் எதிரான ஆள். அதே நேரம் விடுதலை இயக்கங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணினவர். ஒரு தடவை பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு பொலிஸ் பெமிசன் தரல்ல. ராஜன் செல்வநாயகம்தான் எடுத்துத் தந்தவர். மாலா ராமச்சந்திரன் படுகொலை செய்யப்படாமல் இருந்தால் அவரும் இயக்கங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பார். அதால தான் தனிமனித பயங்கரவாதத்தை, கொலைகளை நாங்க எதிர்த்தம். நாக படை உருவாகியிருந்தால் யாழ்ப்பாணம் மாதிரி தனிநபர் பயங்கரவாதம், கொலைக் கலாச்சாரம் உருவாகியிருக்கும். கண்டகண்ட முழுப்பேரையும் எதிரிகளாக்கி சுட்டு இருப்பார்கள். அதே நேரம் ராஜன் செல்வநாயகம் போல துரையப்பா இருக்கல்லதானே.

தேசம்: துரையப்பா செய்வதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை ஒரு எதிரியாகத் தானே காட்ட முற்பட்டது.

அசோக்: எப்பவுமே அரசியல் இருத்தலுக்கு இலங்கை அரசிற்கு தமிழர்களை எதிரிகளாக்குவது போல, தமிழரசுக்கட்சிக்கு, கூட்டணிக்கு எதிரிகளை கட்டமைக்கவேண்டிய அவசியம் இருக்கு. அதற்கான சந்தர்ப்பங்களை துரையப்பா போன்றவங்க வழங்கியது அக்காலங்களில் இவர்களுக்கு சாதகமாக போய்விட்டது.

தேசம்: இயக்கங்களின் மந்தமான ஒரு வளர்ச்சி, இவ்வாறான ஒரு போக்குத்தான் 83 ஜூலை வரைக்கும் தொடர்ந்து கொண்டிருந்ததா?

அசோக்: 83 ஜூலை வரை எல்லா அமைப்புகளும் மந்தமான போக்கா, பெரிய வளர்ச்சி இருக்கல்ல.
புளொட் சித்தாந்த ரீதியாக வளர்ந்த தோழர்களை கொண்டிருந்த போதிலும், ஒழுங்கான கட்டமைப்பு இருக்கல்ல. நான் நினைக்கிறேன் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக அந்த காலகட்டத்தில் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மாத்திரம்தான் என்று… ஈபிஆர்எல்எவ் இல் அரசியல் ரீதியான வளர்க்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்ட அமைப்பாக, ஒரு கட்டமைப்பை கொண்டு ஈ.பி.ஆர்எல்எஃப் இருந்தது. அது வேறு எந்த அமைப்பிலும் இருக்கவில்லை.

தேசம்: ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தது. விடுதலைப்புலிகளை காட்டிலும் பன்மடங்கு. இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது இது இந்த வீக்கம் 83 ஜூலைக் பிறகுதான் வருதா அல்லது அதற்கு முதலே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்குள்ள கூடுதலான நபர்கள் உள்வாங்கப்பட்டு விட்டார்களா?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு முற்பாடு புளொட்டுக்குள்ள உள்வாங்கப்பட்ட தோழர்கள் முழுப்பேரும் அரசியல் சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்டவர்கள். ஏனென்றால் பாசறை நடத்தப்பட்டது .யாழ்ப்பாணம் தவிர்ந்த எல்லா இடங்களிலும் பாசறை நடத்தப்பட்டது. அடுத்தது அவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தாங்க. வடக்குக்கு அங்கால விவசாய குடும்பங்களாக , கடல்தொழிலாளர்கள் குடும்பங்களாக, தொழிலாள குடும்பங்களாக. அல்லது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும், உழைக்கின்ற சமூகத்தினுடைய அபிலாசைகளையும், குணாதிசயங்களையும் கொண்டிருந்தாங்க. நிறைய தோழர்கள் இருந்தாங்க. 83 ஜூலைக் பிறகுதான் எல்லா இயக்கங்களிலும் வீக்கம் ஏற்படுது. புளொட்டிலும் அப்படித்தான். இலங்கை அரசின் பேரினவாத செயல்களினால், இனக்கலவரத்தால் உணர்ச்சி கொண்ட, பாதிக்கப்பட்ட பலரும் இயக்கங்களில் சேருராங்க. எல்லா மாவட்டங்களிலிருந்தும். கூடுதலா புளொட்டில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேதான் கூட தோழர்கள் இருந்தாங்க. பெரும்பான்மை தோழர்கள் இப்படித்தான் வந்தவங்க. ஆனால் பின்தளத்தில் இவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டப் பட்டது. புளொட்டில் அரசியல் கல்விக்காக, அரசியல் சமூக விஞ்ஞானக் கல்லூரி ஒன்று சென்னையில T3S என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மற்ற இயக்கங்கள் எப்படியோ தெரியல்ல.