20

20

பெங்களூரை இலகுவாக சாய்த்த கொல்கத்தா !

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ஓட்டங்களுக்குள் படுமோசமாக சுருண்டது. அந்த அணி சார்பாக படிக்கல் பெற்ற 22 ஓட்டங்களே அதிக பட்சமாக காணப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி, அந்த்ரே ரஸல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர்  93 ஓட்டங்கள் கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. துடுப்பாட்டத்தில்  சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 82 ஓட்டங்கள் குவித்தது. ஷுப்மான் கில் 34 பந்தில் 48 ஓட்டங்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது !

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, முத்து  என்பர் காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை பின் தொடர்ந்து பரமேஸ்வர சந்திக்கு அருகில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் வாள் ஒன்றையும் மீட்ட பொலிஸார், சந்தேகநபர் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

“ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சி மோசடி செய்துள்ளது.” – அலெக்ஸி நாவல்னி குற்றச்சாட்டு !

ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ள நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, யுனைடட் ரஷ்யா கட்சி முன்னிலை வகித்தது. 450 இடங்களில் 315 இடங்களைக் கடந்து கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் மொத்தம் 334 இடங்களைப் பெற்றிருந்த கட்சிக்கு இது சிறிய சறுக்கல் என்றாலும் கூட தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து சிறையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி, இந்த முடிவை நம்ப முடியவில்லை. 2011ல் தேர்தலில் மோசடி செய்தது போல் இப்போதும் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். 2011 தேர்தலில் மோசடி நடந்ததாக போராட்டம் நடத்தியதற்காகவே அலெக்ஸி கைது செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு முன்னதாக நாவல்னியின் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன. அதன் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் ஸ்மார் வோட்டிங் செயலியை தங்கள் சேவைகளில் இருந்து நீக்கின. இதுவும் புதின் அரசு கொடுத்த அழுத்தத்தாலேயே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

போதையில் தனக்கு தானே தீ மூட்டி குடும்பஸ்தர் ஒருவர் பலி – யாழில் சம்பவம் !

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்குச் சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரைத் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்குச் சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். அவ்வேளை அவரது உடலில் பரவியிருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது. இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“கிம் ஒரு பைத்தியக்காரன்” – டொனால்ட் ட்ரம்ப்  

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்  வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் பொது இடங்களில் நட்பு பாராட்டி வந்தார். அப்படி இருப்பினும் டிரம்ப், கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
டிரம்ப், ஜனாதிபதியாக  இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.
ஆனால், இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக போக்கு இல்லை. இந்நிலையில் வெளிப்படையாக கிம்மை தன் நண்பன் என்று சொல்லி வந்தாலும், அவரை சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் திட்டி தீர்த்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் – கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர்.
அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், ‘அவர் ஒரு பைத்தியக்காரன்’ என்று சொல்லியிருப்பதாக தகவல்.

ரஷ்யாவின் பல்கலைகழகத்தில் 08 பேரை சுட்டுக்கொன்ற 18வயது மாணவன் !

ரஷ்யாவின் பேர்ம் நகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், மாணவரொருவர் மேற்கொண்ட பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதின்போது அவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியிடமிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச்செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்றும் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி 18 வயதுடையவர் என்றும் அவர் முன்னதாக துப்பாக்கி, தலைக்கவசம் மற்றும் தோட்டாக்களுடன் சமூகவலைத்தளத்தில் படங்களை பதிவிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும். இதற்கு முன்னர் ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த மே மாதத்தில் 19 வயதான இளைஞரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து, ரஷ்யாவின் துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.” – நாமல் ராஜபக்ஷ

“மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

“நாட்டைத் திறக்க ஒரு நிமிடம் இருக்கும் போது மதுக்கடை நிரம்பினால், அதைத் தாண்டி நாம் எங்கு செல்கிறோம் என்பதை இருமுறை யோசிக்க வேண்டும்” என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகள் திறப்பது குறித்து தவறான செய்தி பரவியுள்ளது. என் கருத்துப்படி, கொவிட் தடுப்புக் குழுவோ அல்லது அரசாங்கமோ அத்தகைய தீர்மானத்தை எடுக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப கொரோனா தொற்றைக் குறைக்கும் நோக்கில் தான் கொவிட் குழு தீர்மானம் எடுக்கும்.

மதுக்கடையைத் திறப்பது குறித்து கொவிட் குழு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை.

எவ்வளவு தான் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தாலும் கூலி வேலை இல்லை என்று சொன்னாலும்  பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், மதுக்கடைகளைத் திறந்ததும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக  அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமான இரண்டு தலைமைப்பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி !

இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.

இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.

இருபதுக்கு20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், இருபதுக்கு20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

துபாயில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, இருபதுக்கு20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.

இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.

இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இருபதுக்கு20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிகழ்நிலை பட்டமளிப்பு விழா – மாணவர்கள் எதிர்ப்பு !

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா பகுதி 16,17,18 ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8,9ம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது.

எனினும் அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எனினும் இத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுகின்றது. இது தொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.எனினும் துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனவே நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம் என்றுள்ளது.

“இந்த நாட்டில் இல்லை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.” – ஹரின் பெர்ணான்டோ விசனம் !

“நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது வாரக்கணக்காக ஏன் வெளிநாடு செல்கிறார்கள்? மக்களை முடக்கத்தில் விட்டு விட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றனர். நாட்டின் தலைவர் தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார். என என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் சார்பாக பாதுகாக்க முன்வந்த சுகாதார ஊழியர்களுக்கும் படைப்பிரிவினருக்கும் எங்கள் மரியாதையை செலுத்துகிறோம். இந்த முறை ஒரு பெரிய வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துள்ளது.

இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்ததுள்ளது. அந்த வைரஸ் தான் நாட்டின் தலைமை. கொரோனா வைரஸுடன் ஒரு கொமிஸ் வைரஸும் பரவி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர்.

மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போடப்பட்டபோது, ​​ஆனால் இங்கு அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அரசாங்கம் தடுப்பூசி வழங்கியது. தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.

வாகனங்களுக்குரிய உதிரி பாகங்கள் இல்லை. நாட்டிற்கு பரவியுள்ள கொரோனா வைரஸுடன் பரவியுள்ள வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டு வருகிறோம். நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து வந்துள்ள வைரஸ், கமிஷன்களிலிருந்து வந்துள்ள வைரஸ், யானை கடத்தலில் இருந்து வந்துள்ள வைரஸ், உரங்களிலிருந்து வந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர் காலத்தில் முன்வைக்கிறோம்.

இத்தகைய சகல வைரஸும் வெளிநாட்டிலிருந்து வந்தது. எங்கள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும்.

நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசிகள் கொடுத்து முடித்தமைக்கு ஒரு பெரிய விழாவை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் இத்தாலியில் ஒரு பெரிய மாநாட்டிற்கு சென்றார். ஒரு வாரம் ஆகிவிட்டது.

நாடு இன்றும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் சீனி இல்லை, மாவு இல்லை, மருந்துகள் இல்லை. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற கழிப்பறைகளும் இல்லை.அத்துடன் நாட்டின் அரச தலைவரும் இல்லை தளபதியும் இல்லை. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.