28

28

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீச்சு !

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி வலென்ஸின் நகர மையத்தில் பார்வையாளர்களை சந்தித்த போது அதிபர் இமானுவேல் மக்ரனை ஒருவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏறு்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது Lyon நகரில் வைத்து முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளது.

நகரில் இடம்பெற்ற உணவகம் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமக்கு எதிராக செயற்பட்டவரின் குழந்தையை சுட்டுக்கொலை செய்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்கள் எதிர்ப்புப் படையில் இருந்த போராளியின் குழந்தையைத் தலிபான்கள் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானில் ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், நாளுக்கு நாள் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரைக் கொன்று பொதுவெளியில் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.

இந்த நிலையில் பஞ்ச்ஷிர் பகுதியில்,  தலிபான்கள் எதிர்ப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த போராளியின் மகனைத் துப்பாக்கியில் தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கன் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தலிபான்கள்  கட்டவிழ்த்துள்ளனர்.

யாழ்.மாநகரசபை  அமர்வில்   திலீபனுக்கு அஞ்சலி – புறக்கணித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் !

யாழ்.மாநகர சபை  அமர்வில்  திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை  பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு  இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் ஆரம்பத்தில் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அது மாத்திரமின்றி   தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை காவல்துறையினர் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று இடம்பெற்ற   திலீபனின் அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழர்களை குறிப்பாக மீனவர்களை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – ஹானா சிங்கருக்கு கடிதம் !

இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு கடிதம் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது ,

இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழர்களை குறிப்பாக தமிழ் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

மன்னார் பேசாலை – வங்காளைபாடு பிரதேசத்திலிருந்து கடந்த 24 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படையைச் சேர்ந்த இருவர் மதுபோதையில் தாக்கியுள்ளனர். கிராம சேவையாளர் அப்பகுதியில் மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள், கிராமசேவகர் உட்பட அனைவரையும் கடற்படையினர் தாக்கியிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் பாதுகாப்புக் குறித்து அச்சத்திலுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீதான நடுநிலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.தமிழர்களை குறிப்பாக மீனவர்களை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதால், இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

“சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்காது ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்கிறது அரசாங்கம்.” – செல்வம் அடைக்கலநாதன்

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக இன்று(செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

குறித்த கடிதத்தில் மேலும் ,

“அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது. ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20.00 தினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று பெருமபாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு  வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகிரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும்.

அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச்செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும். இன்றைய காலப்பகுதியில் சிகரெட்  பாவனையை குறைப்பதானது கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்ளையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நான் நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

“ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள்.” – வைத்தியர் ஹேமந்த அறிவுறுத்தல் !

“ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

12 – 19 வயதிற்குட்பட்ட குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கே தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது, நாங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதனால்தான் இது குறித்து நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. எனவே, ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு விரைந்து செல்ல வேண்டாம்.

நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம், சரியான நேரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவார்கள். இதற்கிடையில், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறினால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது COVID-19 நிலைமையை மோசமாக்கும் என்றும் டாக்டர் ஹேரத் கூறினார்.

முடிவுக்கு வந்தது ஏமன் நாட்டின் பூதக்கிணறு தொடர்பான மர்மங்கள் !

ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு என அழைக்கின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது.
அதிசய கிணறு மரமம் வௌியானது - உள்ளே அற்புதங்கள்
இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழுவினர் துணிச்சலுடன் அந்தக் கிணற்றில் இறங்கி ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் கூறுகையில், இந்தக் கிணறு குகைபோல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. மேலும் அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் இருக்கின்றன. இங்கு எந்த பூதமும் இல்லை என தெரிவித்தார்.
பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுகிறது. இது பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என மதிப்பிட்டுள்ளோம். இந்த கிணறு ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புகிறோம். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

“விலகுவோர் விலகலாம். யார் விலகிச் சென்றாலும் அரசாங்கம்  கவிழாது.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது ,

அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. யார் சென்றாலும் அரசாங்கம்  கவிழாது. சிறு கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க் கட்சிகள் கனவு காண்கின்றனர். எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

உலகச் சந்தையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. கடுமையாகப் பாதிக்கும் இந்தச் சூழ்நிலையை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி அரசாங்கத்தில் இருந்திருந்தால் இலங்கையின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

“அரசாங்கம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிக்கிறது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

நாட்டின் வளங்களைத் துச்சமாகக் கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசாங்கம், மறுபுறம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இவை அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் என்றும் இது ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ சொந்தமானது அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரத்தையோ அல்லது பணபலத்தையோ பயன்படுத்தி இந்தக் காணிகளை எந்தவொரு தரப்பினரும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாச, உரிய சட்டங்களுக்கு மாறாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தரம் 08 இல் கல்வி பயிலும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 இல் கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.