01

01

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஓராண்டு சிறை !

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்த சர்கோஸி, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.

அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 22.5 மில்லியன் யூரோக்களை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பரிஸ் நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அந்த ஓராண்டில், மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட கைவளையத்துடன் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 2012ஆம் ஆண்டு மறுதேர்தலில், நிக்கோலஸ் சர்கோஸி, சோசலிஸ்ட் பிராங்கோயிஸ் ஹாலண்டேவிடம் தோற்றார்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்த்துக்கல் அரசு அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 15-ந்திகதி தலிபான் படையினர் முழுமையாக ஆட்சியை கைப்பற்றினார்கள். ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். அதில் விளையாட்டு போட்டிகள் நடக்கக்கூடாது என்பது முக்கியமானதாகும்.
மேலும் பெண்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் தடை விதித்து இருந்தனர். அதை மீறுபவர்களுக்கு கொடூர தண்டனைகளையும் அவர்கள் வழங்கினார்கள். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் அதைபோல கொடூர தண்டனைகளை வழங்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் காரணமாக பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கால்பந்து அணி பிரபலமாக செயல்பட்டு வந்தது. உயிருக்கு பயந்த அவர்களும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் தற்போது போர்த்துக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர். அந்த வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்த்துக்கல் அரசு அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“நாங்கள் பிச்சை கேட்கவில்லை.உயிரோடு தந்த எமது பிள்ளைகளையே திருப்பி கேட்கின்றோம்..” – மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் !

“சர்வதேச சிறுவர் தினத்தை இன்றைய தினம் எத்தனையோ இடங்களில் மகிழ்வாக அனுஷ்டிக்கின்றனர்.ஆனால் தமிழர்களாகிய நாங்கள் சிறுவர் தினத்தை இன்றைய தினம் துக்க தினமாக அனுஸ்ரிக்கின்றோம். ” என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை  மணியளவில் மன்னாரில் ஊடக சந்திப்பு இடம் பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”எங்களுக்கு பின் உள்ள புகைப்படங்களில் காணப்படுகின்ற சிறுவர்கள் அனைவரும் தாய் தந்தையுடன் வருகை தந்து இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச சிறுவர் தினத்தை இன்றைய தினம் எத்தனையோ இடங்களில் மகிழ்வாக அனுஷ்டிக்கின்றனர்.ஆனால் தமிழர்களாகிய நாங்கள் சிறுவர் தினத்தை இன்றைய தினம் துக்க தினமாக அனுஸ்ரிக்கின்றோம். எமது சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர்.எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு சிறுவர் தினத்தை கொண்டாட முடியும்?.குறித்த சிறுவர்கள் தாய் தந்தையுடன் ஓமந்தையை தாண்டி வந்தவர்கள்.அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

துணியில் சுற்றிக் கொண்டு வந்த சிறுவர் ஒருவர் கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.அந்த குழந்தைக்கு என்ன தெரியும்? கூட்டிக்கொண்டு போன குழந்தை மற்றும் பெற்றோர் இன்று உயிருடன் உள்ளார்களா? இல்லையா? என்பது கூட தெரியாது.இந்த நிலையில் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்ரிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள்,உறவுகளும் கிடைக்கும் வரை எந்த தினமாக இருந்தாலும் துக்க தினமாகவே அனுஸ்ரிப்போம். மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் மரணச்சான்றுதல் வழங்க அவர் யார்?

மரணச்சான்றுதல் மற்றும் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவா ? நாங்கள் இத்தனை காலம் வீதியில் போராடினோம்.?.அதனை எடுக்க வேண்டிய முறைகள் எமக்கு தெரியும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எமது போராட்டம் சர்வதேச நாடுகளுக்கே தெரியும். எமது பிள்ளைகளை மீட்க நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளுக்கு தெரியும்.இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் ஜனாதிபதி  கதைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதலில் பிள்ளைகளையும்,உறவுகளையும் காணாது தேடி அலையும் உறவுகளாகிய எங்களுடன் கதையுங்கள்.நாங்கள் பிச்சை கேட்கவில்லை.உயிரோடு தந்த எமது பிள்ளைகளையே திருப்பி கேட்கின்றோம். உயிரிழந்த பிள்ளைகளுக்காக நாங்கள் போராடவில்லை.உயிருடன் உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகளை கேட்டு போராடுகின்றோம்.

எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.பிள்ளைகள் உயிருடன் இருக்கிறதா? இல்லையா என்பது ஜனாதிபதிக்கு தெரியும்.பிள்ளைகள் இறந்திருந்தால் எங்கே இறந்தது?எப்படி இறந்தது என்பதை தெரிவியுங்கள்.அதன் பின்னர் மரணச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதா,இல்லையா ? என்று தீர்மானிப்போம்.

உலக நாடுகளை ஏமாற்றுவது போல் எங்களையும் ஏமாற்ற வேண்டாம்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் பயணித்தவருக்கு ஒரு இலட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் – யாழ்.நீதிமன்ற நீதவான் நளினி சுதாகரன் தீர்ப்பு !

மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு இலட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் கொழும்புத் துறையைச் சேர்ந்தவர் குறித்த நபர் இன்று நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டார்.

அவர் மீது 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குற்றப்பத்திரத்தை பொலிஸார் தாக்கல் செய்தனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, வரிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாதவரை பின் இருக்கையில் இருத்தி அழைத்துச் சென்றமை மற்றும் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

எதிரி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

அதனால் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதமும் ஏனைய 4 குற்றங்களுக்கு 50 ஆயிரத்து 500 ரூபாயும் தண்டப்பணமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

“ஐ.நா.எங்களை அங்கீகரிக்க வேண்டும்.” – தலிபான்கள் கோரிக்கை !

ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால், ஐ.நா.வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில், ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்தனர். ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் அனுமதி கோரினார். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், ஆப்கனின் முன்னாள் அரசின் ஐ.நா.பிரதிநிதியும்  பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

இந்நிலையில்,முஹம்மது சுஹைல் ஷாஹீன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“காபூல் நிர்வாகம் இப்போது செயல்பாட்டில் இல்லை. இப்போது இங்கே செயல்படுவது இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் ஆட்சி. இந்த ஆட்சி ஓர் அரசாங்கத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. இதுதான் ஆப்கன் மக்களின் உண்மையான பிரதிநிதி. அதனால், எங்களுக்கு ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க தகுதி இருக்கிறது. எங்களை ஆப்கன் மக்கள் ஆதரிக்கின்றனர். ஆகையால் ஐ.நா. எங்களை அங்கீகரிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உலகம் ஏற்கும் நாடாக ஆப்கனை உருவாக்க தலிபான்கள் விரும்பினர். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஒன்பது பேர் கொண்ட ஐ.நா குழுவுக்கு ஆப்கனின் கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இந்த முறை அதற்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு சுட்டுப் போட்டார்கள் – 100 நாட்களாகியும் தீர்வில்லை என தாயார் கண்ணீர் !

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு சுட்டுப் போட்டார்கள், இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார் அதிர்சி தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவர் மேற்கொண்ட துப்பாகி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ. தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று (01) எடுக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா. சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு பொலிஸார் பாக்க மாட்டினம். இதனை சிஐடி யிடம் கொடுக்குமாறு நீதவான் தெரிவிக்கின்றார். ஆனால் அதற்கு பொலிஸார் ஒரு பதிலும் கொடுக்கின்றார்கள் இல்லை. இந்த ஆட்டோ காரன் தான் எனது பிள்ளையை கொலைக்கு கொடுத்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் அவனை பிடிக்க வேண்டும். எனது மகன் படுகொலை செய்யப்படு இன்று 100 நாட்கள் கடந்துள்ளதாகவும் 8 வது தடவையாக வழக்கு தவணை போகின்றது. பொலிஸார் ஒன்றும் தெரிவிக்கவில்லை. எறாவூர் பொலிஸார் தலைமையில் விசாரணை இடம்பெறுகின்றது.

அவர்கள் பணக்கார் அரசியல்வாதி, நாங்கள் ஏழைகள் என்பதால் எதுவும் நடக்கவில்லை. இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எனது மகனின் படுகொலைக்கு நீதிவேண்டும் என படுகொலை செய்யப்பட்வரின் தாயாரான மகாலிங்கம் சின்னப்பிள்ளை கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேவேளை கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவரே உயிரிழந்துள்ளதை அடுத்து மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரா எவர்ட் பாலியல் பலாத்காரம் – குற்றவாளியான போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை !

பிரித்தானியாவின் லண்டனில் போலீஸ் அதிகாரியால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சாரா எவர்ட் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

லண்டனைச் சேர்ந்தவர் 33 வயதான சாரா எவர்ட். இவர் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சாராவின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் லண்டன் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனில் பெண்களுக்குப் பாதுகாப்பில் இல்லை என்றும், சாரா வழக்கில் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் சாராவின் கொலை தொடர்பாக, 48 வயதான போலீஸ் அதிகாரியான வெய்ன் கூசன்ஸ் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்ததில், சாரா வீடு திரும்புகையில் வெய்ன் அவரை வழிமறித்து, கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டார் என்று கையில் விலங்கிட்டுக் கைது செய்துள்ளார்.

பின்னர் சாராவை லண்டனுக்கு வெளியே உள்ள தனது வீட்டுக்கு வெய்ன் கடத்திச் சென்றுள்ளார். அங்கு சாராவை பலாத்காரம் செய்து, கொன்று, பின்னர் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஏரியில் சாராவின் உடலுக்குத் தீயிட்டதாக ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பான வழக்கு கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. இதில் நேற்று லண்டன் குற்றவியல் நீதிமன்றம், வெய்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கு குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “சாரா குடும்பத்தினர் அனுபவித்திருக்கும் வலியை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இந்த கொடூரமான குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கான காரணங்களை நாம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் !

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்க உலக வங்கியின் நிர்வாகக் குழுவால் நேற்று (30) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ  தெரிவித்துள்ளார்.

கிராமம் புற சாலை வலையமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண்மை சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டம் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் அதேவேளை, இந்த திட்டத்தை கண்காணிக்க தேசிய வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்படும்.

இந்த கடன் தொகையை 10 வருட சலுகை காலம் உட்பட 28 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 65 வயதானவர் கைது !

14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் ​பேரில் 65 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதவான் ஆர். ராமமூர்த்தி முன்னிலையில் ​நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரான திருமணம் முடித்த 65 வயதான அந்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பரிசோத​னைக்காக, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இராணுவத்திடம் கையளித்த எமது சிறுவர்கள் எங்கே? – முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், 1669ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச சிறுவர் நாளான இன்றும், கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு- மாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு,  எங்கே எங்கே உறவுகள் எங்கே? ,  இலங்கை இராணுவத்திடம் கையளித்த எமது சிறுவர்கள் எங்கே?,  எமது குழுந்தைகளுக்கு உயிர்வாழும் உரிமை இல்லையா?, எங்கள் குழந்தைகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.