15

15

பணமோசடியில் ஈடுபட்ட இரு லண்டன் தமிழர்களுக்கு பதினொரு ஆண்டுகள் தண்டனை!

 

லண்டன் குயின்ஸ்வே யில் செவர்னியர் – லண்டன் நகர் அழகியல் பொருட்களை விற்ககும் கடையில் பணமாற்றுச் சேவையை மேற்கொண்டவரும் அங்கு பணியாற்றியவரும் மொத்தமாக 11 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 2016 முதுல் 2018 வரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்கள் நாணய மாற்றை இவர்கள் செய்துள்ளனர். கடையை நடாத்தி வந்த ரவிராஜ் கணேஸ்பரன் (61) மற்றும் அவருடைய கடையில் பணியாற்றிய நிரோஜன் பாலசிங்கம் ஆகியோருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கணேஸ்பரன் கடையை நடாத்த நிரோஜன் பாலசிங்கம் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் அவருக்கான மோசடி வாடிக்கையாளர்களைத் தேடிக்கொடுத்து வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

லுல்சிம் புலாக்கி என்பவர் பணக்கட்டுக்கள் கொண்ட முதுகப்பையோடு கடைக்குள் நுழைவதை நோட்டமிட்ட பொலிஸார் கடையை முற்றுகையிட்டதில் கடையினுள் £140,000 பவுண்கள் இருந்துள்ளது. ஈஸ்ற்ஹாமில் வாழும் ரவிராஜ் கணேஸ்பரனுக்கு 5 ஆண்டுகளும் ஈலிங்கில் வாழும் நிரோஜன் பாலசிங்கத்திற்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு சவுத்வார்க் கிரவுன்கோர்ட்டில் நடைபெற்றது.

உலகின் கருப்பு பணம் அதிகம் உலாவுமிடங்களில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது. உலகின் மிகப்பெரும் மோசடியாளர்களின் கூடாரமாகவும் பிரித்தானியா இருக்கின்றது. உலகின் வெவ்வேற நாடுகளில் பணமோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிரித்தானியா புகலிடமாக இருக்கின்றது. சென்றவாரம் வெளியான பன்டோரா அறிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் பிரித்தானியாவில் இருப்பதுமட்டுமல்ல பிரித்தானிய அரசின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறான பணமோசடி காரணமாக பிரித்தானிய வீதிகளில் கத்திக்குத்துகளும் கொலைகளும் இடம்பெற்று வருகின்றது. பணத்தின் மீது வெறிகொண்டு பணத்தைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்படுவதன் விளைவுகள் பாரதூரமாகிவிடுகின்றது.

“30 ஆண்டுகால போரில் இறந்தோரை விட அதிகமானோர் வீதிவிபத்தில் இறந்துவிட்டனர் .” – அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 30 ஆண்டுகால போரை விட அதிகமான மக்கள் இறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். நம்ப முடியுமா? இந்நாட்டு மக்களில் மஞ்சள் கோட்டில் மற்றும் பெருந் தெருக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வருடப் போரில் கூட 29,000 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரை 1,760 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள்தான் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர். அதனை பரிசோதிக்க எந்த உபகரணமும் இல்லை. அந்த உபகரணங்களை விரைவில் கொண்டு வருவோம். அவை சட்டப்பூர்வமானவுடன், எமக்கு கைது செய்ய முடியும். என்றார்.

எல்லா மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை !

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (15) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

´அத்துடன், ஏனைய மாவட்டங்களிலுள்ள மேற்படி வயதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும், இம்மாதம் 21ஆம் திகதி முதல், பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாகத் தடுப்பூசி ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளன´.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையன்று, மேலும் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றும் கோரப்பட்டிருந்த தடுப்பூசிகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு இருக்கின்றன என்றும், கொவிட் தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

குறைவடையும் கொரோனா இறப்பு வீதம் – உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், வாராந்திர ஆய்வு குறித்து நேற்று (14) அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் கொவிட் பெருந்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இது, கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு.

ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கொவிட் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பல நாடுகள் தற்போது புதிதாக கொவிட் அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடவுள். அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்.” – ஜொஹானி கண்டனம்

தன்னை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒப்பிட்ட ஊடகங்களுக்கு இலங்கைப் பாடகி ஜொஹானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

No description available.

ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடவுள். அத்தகைய ஜாம்பவானுடன் என்னை எப்படி ஒப்பிட முடியும்? ரஹ்மானுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்க ஊடகங்கள் என்னை தெரிவு செய்ததில் நான் ஏமாற்றம் அடைகிறேன். ஒரு நாள் ரஹ்மானுடன் பணிபுரிய விரும்புகிறேன். அவர் எனக்கு முன்மாதிரி என ஜொஹானி கூறியுள்ளார்.

ஜொஹானியின் யூடியூப் சந்தாதாரர்கள் 2.95 மில்லியன் எனவும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2.93 மில்லியன் சந்தாதாரர்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் இருவரையும் ஒப்பிட்டு நேற்று வைரலானமை குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் பாரிய உணவுப்பஞ்சம் ஏற்படும்.” – மக்கள் விடுதலை முன்னணி அதிருப்தி !

நாட்டில் பாரிய உணவுப்பஞ்சம் ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்களுக்கு பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது. இதனை தவிர்க்க முடியாது.

அரசாங்கத்திடம் தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாதமையே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும். இலங்கையில் அரிசி உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமையினால் இப்போது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் கூறிய கருத்துக்களையும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் பார்த்தால் இவர்களின் அப்போதைய திட்டம் என்ன என்பது தெரிந்திருக்கும். ஒரு பருக்கை அரிசியைக்கூட இறக்குமதி செய்யமாட்டோம் என கூறியவர்கள் இன்று ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்கின்றனர்.

ஏனைய சகல பொருட்களினதும் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது தொடர்ந்தால் மக்களே ஆட்சியை கவிழ்க்கும் நிலை ஏற்படும் என்றார்.

பங்களாதேஷிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் – 4 பேர்பலி – 22 பேர் படுகாயம் !

பங்களாதேஷிலுள்ள இந்துக் கோவில்கள் மீது நேற்று (14) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் கொமில்லா இந்து கோவிலில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றவேளையில் இனந்தெரியாத குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதேபோல் கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களை கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு படையினர் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலே இந்த கலவரம் ஏற்பட காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“நாளையை நோக்கிய இலங்கை” – தேசிய நடவடிக்கை ஆரம்பம் !

பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம்  என்பன இணைந்து நாளையை நோக்கிய இலங்கை’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மரபு ரீதியான சிந்தனைகளைக் கடந்து, எதிர்காலத்தை நோக்கிய புதிய சிந்தனைகளின் ஊடாக அறிவின் துணையோடு முன்னேற்றகரமான பொருளாதார முறையை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது.

மேலும், கல்வித் துறையை தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்காக மிகவும் சாதகமான முறையில் பயன்படுத்துவதற்கு இதனூடாக எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“அரசு கொழும்பு மாணவர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கி பாரபட்சத்துடன் செயற்படுகின்றது.” – இராதாகிருஸ்ணன் அதிருப்தி !

“அரசு கொழும்பில் இருக்கின்ற மாணவர்களுக்கு ஒரு சலுகையும் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சலுகையையும் செய்ய முற்படுவது மிகவும் தவறான ஒரு செயற்பாடாகும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அறிவித்தலின்படி அடுத்து வருகின்ற நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அதனை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பதாக நிறைவு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.இதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது.

இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனெனில் மாணவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.அப்படியானால் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை வழங்கிய பின்பு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் கொழும்பில் இருக்கின்ற மாணவர்களுக்கு ஒரு சலுகையும் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சலுகையையும் செய்ய முற்படுவது மிகவும் தவறான ஒரு செயற்பாடாகும்.

நான் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில் இந்த செயற்பாட்டை பிழையான ஒரு முன் உதாரணமாகவே கருதுகின்றேன்.மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினைகளை இது உருவாக்கும் எனவே அணைத்து மாணவர்களுக்கும் ஒரே தடவையில் அல்லது படிப்படியாக தடுப்பூசியை வழங்கிய பின்பு பாடசாலையை ஆரம்பிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் ஒரு புறம் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.அவர்களுடைய கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான ஒரு நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்பது கேள்விக்குறியான சாத்தியமான செயற்பாடாக தெரியவில்லை.ஆசிரியர்களும் அதிபர்களும் இல்லாமல் எவ்வாறு பாடசாலைகளை ஆரம்பிப்பது என்ற கேள்வி எழுகின்றது.

எனவே இந்த அனைத்து விடயங்களையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு மாணவர்களின் நன்மை கருதி சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா !

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு அமைய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகி இருந்தது.

இந்நிலையில், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவை மீள இணைப்பதற்கான, இரகசிய வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்று(14) இடம்பெற்றது.

இதன்போது 193 நாடுகளில் 168 நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கமைய, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆண்டுகளுக்கு அமெரிக்கா அங்கத்துவம் பெறவுள்ளது.