24

24

லண்டன் நூலுரையாடல்: பாமரன் உண்மையில் பாமரனா?

நேற்று ஒக்ரோபர் 23 இல் ‘திரள்’ இலக்கிய குழுமம் ஏற்பாடு செய்த தோழர் பாமரனின் ‘பகிரங்க கடிதங்கள்’ நூலின் வாசிப்பனுபவமும் கலந்துரையாடலும் ஹரோவில் சிறப்பாக நடைபெற்றது. இருபது வரையான மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வை ஊடகவியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் பா நடேசன் தலைமையேற்று நடத்தினார். கோவிட் காலத்தில் கருக்கொண்ட ‘திரள்’ குழுமத்தின் முதலாவது நிகழ்வு இதுவென்பதிலும் பார்க்க பா நடேசன் தம்பதியர் மீது அரசியல் என்ற பெயரில் சேறடிப்பு மேற்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது நேரடி நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சட்டவல்லுநர், விமர்சகர் கருணா தம்பா பாமரனுடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பாமரன் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழும்பிய குரல் எனத் தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் ரஜிதா சாம், பாமரன் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரும்புள்ளிகளாக இருந்தாலும் அவர்களை தன் எழுத்துக்கள், கிண்டல்கள் மூலம் விமர்சனத்திற்கு உட்படுத்தியதாகவும் அவருடைய எழுத்துக்களில் இருந்த நளினத்தையும் விதந்துரைத்தார். திரைச் சமூகத்தைச் சேர்ந்த கே பாலச்சந்தர், சங்கர், மணிரத்தினம், வைரமுத்து, வாலி ஆகியோர் உட்பட ஜெயலாலிதா, வைக்கோ, சோ ராமசாமி ஆகியோரை நோக்கியும் பகிரங்கக் கடிதங்கள் எழுதப்பட்டு இருந்ததை விதந்துரைத்தார். ஊடகவியலாளர் விமர்சகர் கோபி ரத்தினம் தமிழ் தேசிய அரசியலில் பாமரனின் நிலைப்பாட்டை விதந்துரைத்தார். அவருடைய எள்ளல் அங்கத எழுத்துமுறை சொல்லவரும் விடயத்தினை மலினப்படுத்தி விடும் என்பதால் தான் அதனை விரும்புவதில்லை என்றும் ஆனால் பாமரனின் எழுத்துக்களில் தனக்கிருந்த ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.

விமர்சகர் வேலு நூல் ஆய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு லண்டன் தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் மேடைக்கு வெளியே வெளிப்பட்டது.

ஆய்வாளர்களைத் தொடர்ந்துநிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் ஊடகவியலாளர் குணா கவியழகன் பாமரன் ஒரு அதிகாரத்திற்கு எதிரான குரல் என்று பாராட்டினார். தமிழகத்தில் கருத்தியல்களை உருவாக்கும் அதிகாரமையங்களை கேள்விக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் சாம் பிரதீபன் பாமரனைக் கொண்டாட நான் வரவில்லை என்றாலும் அவருடைய எழுத்துக்களை மதிப்பதாக குறிப்பிட்டார். ஆனால் வைரமுத்துவின் கட்டெறுப்பு எங்கு ஊருகின்றது என்பதைப் பார்ப்பவர்கள் மகளீரின் தொப்புளுக்கு அப்பால் வைரமுத்து எழுதியவற்றை பார்க்க வேண்டும் என்றார்.

பாமரனுடைய எழுத்துக்களை இன்றே சந்திக்கிறேன் என்று கூறிய தேசம் ஜெயபாலன் இதுவரை கதைத்தவர்களின் அடிப்படையில் பாமரன் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை என்றும் கெ பாலச்சந்தரும் மணிரத்தினமும் படைத்தவை இன்ரலெக்சுவல் கோஸ்டியை நோக்கியே இருந்தது. இவர்கள் எந்த அதிகாரத்தினதும் மையப்புள்ளிகள் அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் வாலி, வைரமுத்து கூட அதிகார மையத்தின் மையப் புள்ளிகள் அல்ல. காதலர்ககள் துணைவர்கள் எறும்புவிட்டதற்கும் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் ஜெயபாலன் கேள்வி எழுப்பினார். கே பாலச்சந்திரிலும் மணிரத்தினத்தைக் காட்டிலும் அதே காலகட்டத்தில் சிறந்த படங்களைத் தந்தவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டுமே ஒழிய இன்றைய சூழலோடு அதனை ஒப்புநோக்க முடியாது என்றும் குமுதம் சஞ்சிகை ஒன்றும் பெண்ணடிமைத் தனத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரான புரட்சிகரமான சஞ்சிகையுமல்ல என்பதையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்தவர் என்பதற்காக தமிழ் தேசியத்திற்காக நின்றவர் என்பதற்காக அவருடைய மறுபக்கத்தை நோக்காமல் தவிர்க்க முடியாது என்றும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.

திரைப்பட விமர்சகர் தயா அவர்களும் கே பாலச்சந்தர் மணிரத்தினம் தொடர்பில் வைத்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். அந்தந்த காலகட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை அந்தந்த காலகட்டத்துடனேயே ஒப்பு நோக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட ஒரு படைப்பை வைத்து கலைஞர்களை முத்திரை குத்திவிட முடியாது என்பதையும் தயா சுட்டிக்காட்டினார். மேலும் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்க பாமரன் கையில் எடுத்த ஓணம் பண்டிகை கூட ஒரு மளுப்பல் அரசியலே என்பதையும் தாயா தெளிவுபடுத்தினார். கருணாநிதியையும் திமுகா வையும் விமர்சிப்பதில் இருந்த தயக்கமே அதற்குக் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான அருட்குமாரின் விமர்சனம் பாமரனின் அரசியல் நிலைப்பாடு சார்ந்ததாக அமைந்தது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் தமிழர்களைக் கைவிட்ட திமுக அரசு சார்ந்து பாமரன் இயங்குவதை அவர் தனது உரையில் கடுமையாகச் சாடி இருந்தார்.

ஊடகவிளலாளர் சுகி ரத்தினம் பாமரன் 300 வரையான நூல்களை எழுதியுள்ளார் அதில் ஒன்றை இரண்டை வாசித்துவிட்டு தன்னால் முழுமையான விமர்சனத்தை வைக்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனாலும் ‘பாமரன்’ என்ற புனைப்பெயர் ஒரு அரசியல் சார்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். குணா கவியழகன் குறிப்பிட்டது போல் பாமரன் ஒரு அரசியல் செயற்பாட்டாளர் அல்ல அவர் ஒரு சமூக செயற்பாட்டளரே என்றார் சுகி. பாமரனின் இரு நண்பர்களும் அங்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் பாமரன் எப்போதும் சமூக நீதிக்காக குரல் எழுப்பிய ஒருவர் என்பதை அழுத்தி தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

“கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார்.” – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு !

“கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத் பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்றனவற்றில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காரமுனை காணிப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுராதா ஜகம்பத் மூன்று விடயங்களை செய்து கொண்டிருக்கின்றார். ஒன்று, பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்களில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார். இரண்டாவது, தமிழ் பேசும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த உயர் நிர்வாகங்களில் சிங்களவரை நியமிக்கின்றார். மூன்றாவது, ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்காக தங்கள் அடிவருடிகளை இங்கு அனுப்பி அந்தச் சபைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.இவற்றையே அவர் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.

நாங்கள் விழிப்பாக இல்லாது விட்டால் எங்கள் வீட்டுக் கதவுகளும் குடியேறுவதற்கு தட்டப்படும் நிலையே உருவாகும். விழிப்புடன், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் நாங்கள் எங்கள் உரிமையைப் பாதுகாக்க முடியும்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எமது மண்ணைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் கஸ்டப்படுகின்றோம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல நாங்கள் எங்களுக்குள் பிளவு பட்டால் கூத்தாடிகள் கூரையைப் பிரித்துக் கொண்டு இங்கு குடியேறுவதற்கு வருவார்கள். எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மியன்மாரில் பாரிய பாரிய மனித உரிமை மீறல்கள் – ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி !

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கலாம் என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார்.

மியன்மார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வருடாந்த ஆய்வறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மியன்மாரின் இராணுவ அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற நிலையில் தற்போது நாடு உள்நாட்டுப் போரின் நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஆயிரக்கணக்கான படையினரும் பாரிய கனரக ஆயுதங்களும் மியன்மாரின் வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள பகுதிகளுக்கு நகர்த்தப்படுவது குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றதிலிருந்து இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 8 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அசலங்க , பாணுக்க ஜோடி அபாரம் – பங்களாதேஷை துவம்சம் செய்தது இலங்கை !

உலகக்கிண்ண ரி20 தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போடடியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் சார்பில் நயீம் 62 ஓட்டங்களையும் , ரஹீம் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் சமிக கருணாரத்ன, பினுர பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

இதற்கமைய, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும்  பாணுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

பந்து வீச்சில் சகிப் ஹல் ஹசன் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

“ராஜபக்ஷ அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை. சிரிப்பு காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.” – மனோ கணேசன்

விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி பருப்பு, விலைவாசிகளைப் பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்பு காட்டியுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச தான் பதவிக்கு வரவில்லை என்ற ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கூற்று தொடர்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

கொவிட் முதல் அலையின் போது, முதன் முறையாக நாட்டு மக்களை விளித்து ஜனாதிபதி உரையாற்றியபோது, மீன் டின், பருப்பு, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பேன். அவற்றை கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவேன், என்று தனது உரையில் ஜனாதிபதி கூறினார். இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வேறு விடயம். அவரது வர்த்தமானி விலைகளில் சந்தையில் பொருட்களை தேடியலைந்து மக்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

சீனிக்கு ரூ. 49-75 என்ற மிகப்பெரிய வரி குறைப்பை இந்த ஜனாதிபதி செய்தார். வரி குறைந்தது. இதனால், சுமார் ரூ.1,595 கோடி வருமானத்தை திறைசேரி இழந்தது. இந்த பெரும் தொகை, பாமர மக்களுக்கு விலைக் குறைப்பாக கிடைக்கும். அதாவது சீனி அரசாங்கம் சொல்லும் குறைந்த விலையில் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம்.

கடைசியில், இந்த ரூ.1,595 கோடி திறைசேரிக்கும் போகவில்லை. மக்களுக்கும் கிடைக்கவில்லை. எங்கே போனது? யாருக்கு கிடைத்தது? இதுபற்றி ஜனாதிபதி இதுவரை பதில் கூறவில்லை. இதற்கிடையில் ஜனாதிபதி அரிசி, உணவு தானிய மொத்த வியாபார புறக்கோட்டை கடைவீதிக்கும் போய் அங்கே கடைகளில் சற்று நேரம் கணக்கு பிள்ளை வேலையும் பார்த்தார்.

பொருட்களை தேடி கண்டு பிடிக்கிறேன் என தனது இராணுவ அதிகாரி ஒருவரையும் நியமித்தார். அவரும் ஆலைகளை பிடிப்பேன், களஞ்சிய சாலைகளை உடைப்பேன், திறப்பேன் என்றார். ஒன்றும் பிரயோஜனம் இல்லை. கடைசியில், அரிசி விலைகள் தொடர்பில், ஜனாதிபதியின் வர்த்தமானிகளை தூக்கி கடாசி விட்டு பாரிய ஆலை அதிபர்கள்தான் விலைகளை தீர்மானித்து அறிவித்தார்கள். இப்போது அந்த இராணுவ அதிகாரியும் காணாமல் போய் விட்டார்.

சந்தை பொருளாதார நாட்டில், பொருட்களின் விலைகளை, “தேவை-விநியோகம்” (Demand & Supply) ஆகியவைதான் தீர்மானிக்க முடியும். இரண்டும் சமபலத்தில் இருக்க வேண்டும். தேவை கூடி, விநியோகம் குறைந்தால் விலை கூடும். தேவை குறைந்து, விநியோகம் கூடினால் விலை குறையும். இந்த பொருளாதார அறிவு என்னிடம் உண்டு. எங்களிடம் உண்டு. இவர்களிடம் இல்லை. ஆகவே, இந்த இராணுவ அதிகாரிகள் தடாலடியாக விலைகளை தீர்மானிக்க முடியாது.

அரசாங்கம், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அவதானித்து, வரி குறைப்பு, வரி விதிப்பு என்ற நிர்வாகத்தை மட்டுமே செய்ய வேண்டும். இராணுவ, சுங்க, வரி அரசாங்க அதிகாரிகளை கொண்டு வர்த்தக சமூகத்தை மிரட்டி காரியமாற்ற முடியாது. மிரட்டினால், “போதுமடா சாமி” அல்லது “போதுமடா ஆமி” என்று கூறிவிட்டு வர்த்தக சமூகம் கடைகளை மூடி விட்டு வீடுகளில் இருப்பார்கள்.

“வேறு வழியில்லை. சும்மா முரண்பட வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள்”, என என் நண்பர்களுக்கு நான் சொன்னேன்.

இந்த ராஜபக்ஷ அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை. பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள், அடித்து கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது. தெரியாத வேலையை செய்ய போய் இப்போது இவர்கள் மூக்குடைந்து போய் இருக்கின்றனர். இன்று, வாழ்க்கை செலவு விலைவாசி விஷயம் கைமீறி போனவுடன் ஜனாதிபதி விலைவாசியை தீர்மானிக்க நான் இந்த பதவிக்கு வரவில்லை என மாற்றி போடுகிறார் என்றார்.

மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்ககூடாது – சீனாவில் புதியசட்டம் !

கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக சிறு குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்ய முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளார்கள்.

அவர்கள் விளையாடுவதற்கு, மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கு போதிய நேரம் இல்லை. இதுசம்பந்தமாக பெற்றோர்கள் அரசிடம் முறையிட்டனர். இதுபற்றிய விவரங்களை அரசு ஆலோசித்து இருக்கிறது.

அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என்று முடிவு எடுத்தனர். இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. இப்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை – அப்புத்தளையில் சவப்பெட்டியுடன் ஒப்பாரி போராட்டம் !

பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்புத்தளை நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சவப்பெட்டியை ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். அதேபோல தோட்ட நிர்வாகங்களின் அடாவடியைக் கண்டித்தும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற் பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இணைகின்றன தமிழ்த் தேசியக் கட்சிகள் !

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் பங்கேற்கும் என்றும் ரெலோவின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கூட்டத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துங்கள் – தமிழ்தேசிய கட்சிகள் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் !

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வடக்கு – வட மத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றி அமைத்து, தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்க திட்டம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும், இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இந்த நடவடிக்கை அமைவதாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆகவே இந்த் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் சமல் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.