31

31

“அரசை விமர்சித்தால் கன்னத்தில் அறைவிழும்.” – ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் !

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்களை இலக்குவைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்தும் சொற்போர் தொடுத்தால், பங்காளிகளின் கன்னத்தில் அறைவதற்குக்கூட நாம் தயார்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

அரசுக்குள் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்து விமர்சனங்களை முன்வைப்பதைவிட, வெளியில் சென்று முதுகெலும்புடன் விமர்சனங்களை முன்வைப்பதே மேல்.

எங்கள் கட்சித் தலைவர்களை விமர்சனங்களால் தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினகளாகிய நாம் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம் – என்றார்.

“மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் வனப்பாதுகாப்பு துறையினரின் நடவடிக்கைகளை ஏற்கமுடியாது.” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலும் நாங்கள் தலையிட்டு வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றை தடுத்து வந்திருக்கின்றோம்.

தற்போதும் மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னகபடுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இவ் வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதுடன் மக்கள் வாழ்ந்த இடங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இன்று வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக எல்லைக் கற்கள் இடப்படும் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளும் மற்றும் வாழ்வாதார காணிகளும் காணப்படுகின்றது.

இவர்கள் இங்கு பல வருட காலமாக வாழ்ந்ததற்கான ஆவணங்கள் வைத்திருப்பதுடன் பல வருட காலமாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்களும் குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

ஒரு சிலரிடம் ஆவணங்கள் இல்லாமைக்கான காரணம் கடந்த யுத்தகாலத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவற்றை கருத்திற்கொண்டு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் செயற்படவேண்டும்.

எதிர்வரும் காலங்களில் நாங்கள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதார காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

வாள்வெட்டு குழுவினருக்கு வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை !

எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

“வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் கடந்த பல வருடங்களாக தொடர்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அது பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தலையிட்டும் அதனை முற்றாக தீர்க்க முடியாமல் உள்ளது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அது தொடர்பில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?” என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் ஒரே சட்டமே நடைமுறையிலுள்ளது. மாகாணத்திற்கு மாகாணம் அல்லது நகரத்துக்கு நகரம் அது வேறுபட முடியாது.

எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அந்தவகையில் அவ்வாறானவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களானால் தொடர்ச்சியான சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றார்.

“ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.” – பிள்ளையான் 

அரசியல் போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காது மக்களின் சார்பில் இருந்து ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கு தீர்வை நான் பெற்றுக் கொடுப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஏறாவூர்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்துதெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,
கடந்த காலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் பாற் பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன்.விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அரசியல் போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காது மக்களின் சார்பில் இருந்து ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கு தீர்வை நான் பெற்றுக் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற உத்தரவு !

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி, யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிவான், கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் சிறையில் வைக்க உத்தரவிட்டனர்.