18

18

பாலியல் குற்றங்கள் செய்யும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் – பாகிஸ்தானில் புதிய சட்டம் !

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும்  குற்றவாளிகளுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் விரைவான விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஒரு வருடத்திற்குப் பிறகு, பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது பிரதமரால் உருவாக்கப்பட்டு முன்மொழியப்பட்ட விதிமுறைகள் ஆகும். இதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளின் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் முஷ்டாக் அகமது எதிர்ப்பு தெரிவித்தார். இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று அவர் வாதிட்டார். பாலியல் பலாத்காரம் செய்பவரை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். ஆனால், ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் கூறினார். எனினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

“சிங்கப்பூரை போலவே இலங்கையிலும் நடக்கிறது.” – அமைச்சர் விமல் வீரசங்ச

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசங்ச தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீது நேற்று (17) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சந்தைப் பொருளாதாரம் சரிவடையும் நிலைக்கு வந்துள்ளது. கொவிட் காரணமாக நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய டொலர் இல்லாமல் போயுள்ளது. இதற்கு முகங்கொடுப்பதற்காக உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் ஏற்றுமதி வலயம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு முதல் கடனில் தங்கியிருந்த செயல்திட்டங்களுக்கு முதலீடு செய்த அனைவரும் தற்போதைய பொருளாதார சரிவிற்கு பொறுப்புக் கூறவேண்டும். சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் பல பொருட்களின் விலை மட்டமும் உயர்ந்துள்ளது. இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

பூஞ்சாடியில் கஞ்சாசெடியை வளர்த்த இளைஞர் கைது !

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள சின்ன உப்போடை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பூச்சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 19 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தலைமையக போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவதினமான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது வீட்ன் பூச்சாடி இரண்டில் 3 அரை அடி, மற்றும் 2 அரை அடி உயரமான கஞ்சா செடியை வளர்த்து வந்தை கண்டுபிடித்ததையடுத்து 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்வரை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 19 திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதே நேரம் நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே “கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடனான தொடர்பு பற்றி குறிப்பிட்டுள்ள ரிஷாட்பதியுதீன் !

“அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“நாம் வேறு கட்சி, கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை அரச தலைவராக்குவதற்கு முயற்சி செய்தோம். எனினும், எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவில்லை.

இருந்தாலும், நாடாளுமன்றத்தில் நான் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து, எதிர்க்கட்சியின் கடமைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர்,

நான் அவ்வாறு கூறவில்லை , நான்ன் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் இவ்வாறான கேள்வியொன்று எழுப்பும் போது, தாம் கூட்டணி அமைக்கவில்லை என அவர் பதிலளித்ததாக ரிசாட் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

“ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது.” – அமைச்சர் உதயகம்மன்பில

ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தை திறக்குமாறு கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது.  கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் தொழிற்சாலையின்அ நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது அவசியம்.  தொழிற்சங்கங்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை.

தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை. ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது. அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

“தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.” – நாமல் ராஜபக்ஷ

“தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.” என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

உலகில் தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இங்கிலாந்திலும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் நிற்கின்றனர்.

உலகில் பல நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கை ஓரளவு அந்த நிலைமையில் இருந்து மீண்டு, தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.

ஆர்ப்பாட்டங்களை நடத்தி மீண்டும் நாட்டை மூடும் தேவையே எதிர்க்கட்சிக்கு இருக்கின்றது. எனினும் அப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்கப் போவதில்லை.

எவ்வாறான சவால்கள் வந்தாலும் சௌபாக்கிய நோக்கதை முன்னெடுத்துச் செல்வோம். எதிர்கால சந்ததிக்காக நாட்டை கட்டியெழுப்புவோம் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” – இரா.சம்பந்தன்

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர். இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.

நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் அடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசுக்கு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது”  என்றார்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

._._._._._.

மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.

._._._._._.

அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.

எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.

இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.

2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.

“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.

“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.

வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.

வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.

இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.

எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.

அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.

கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.

மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.

இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.

(இன்னும் வரும்.)