25

25

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா – 7 இலட்சம் பேர் வரை இறக்க வாய்ப்பு !

கொரோனா அதிகரிப்பால் ஐரோப்பாவில் மேலும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலம் அமைக்க வெட்டிய குழியால் கிளிநொச்சியில் மாணவர்கள் அவதி – இன்னுமொரு விபரீதம் ஏற்பட முன்னர் சரிசெய்யுமாறு கோரிக்கை !

கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக பாலம் அமைப்பதற்கு வெட்டிய குழி மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது எனவும் நேற்றைய தினம் பெய்த மழை காரணமாக ஆரம்ப பிரிவு மாணவர்கள் இருவர் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்த நிலையில் ஏனைய மாணவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கரைச்சி பிரதேச சபையினரால் பாலம் ஒன்று அமைப்பதற்கு பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறித்த குழி நிரம்பி நீர் செல்வதனால் ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள் அதனை கடந்த செல்ல முற்பட்ட போது தவறி விழுந்துள்ளதாகவும் அதிஸ்டவசமாக ஏனைய உயர்வகுப்பு மாணவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் இல்லாத நிலையில் குறித்த பகுதி காணப்படுகிறது. இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அறிவித்துள்ளதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே ஒரு விபரீதம் ஏற்பட முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அழிவை நோக்கி நகரும் இலங்கை.” – சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை !

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு வலுவான நாடு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு வெளிநாட்டு கையிருப்பை வைத்திருக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளவா 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடாபியின் மகனின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம் !

லிபியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அடுத்த மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.
மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் கடாபி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  செயிப் அல் இஸ்லாம் கடாபிக்கு எதிரான முந்தைய தண்டனைகள் காரணமாக அவர் தகுதியற்றவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
2015 ஆம் ஆண்டு தனது தந்தையை பதவி விலகக் கோரிய எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியதற்காக செயிப் அல் இஸ்லாம் கடாபிக்கு திரிபோலி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  ஆனால் அந்தத் தீர்ப்பு லிபியாவின் போட்டி அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பின்னர் அவர் 2017ல் விடுவிக்கப்பட்டார். எனினும், போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் வெடித்துச் சிதறும் எரிவாயு சிலிண்டர்கள் – பின்னணி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் !

எரிவாயு சிலிண்டர்கள் கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே அவை தற்போது வெடித்துச் சிதறக் காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் பல இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்த போதிலும் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்காக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜூன் 18 ஆம் திகதி லிட்ரோ எரிவாயு ஒழுங்குபடுத்துனருக்கு அப்பாற்பட்டதா? எனவும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி இலங்கையின் சமையல் எரிவாயு சந்தையில் குமுறல்கள் என்ற தலைப்பிலும் டெய்லி மிரர் பிரத்தியேக செய்திகளை வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் மாதத்திலிருந்தே தெரியவராத காரணங்களிற்காக சிலிண்டரின் எரிவாயுக் கலவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனமும் லாஃப் நிறுவனமும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதியின்றி இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
கடந்த ஏப்ரலில் இருந்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சிலிண்டரின் வாயுக் கலவையை பியூட்டன் 80 : புரொபேன் 20 என்ற நிலையிலிருந்து முறையே பியூட்டன் புரொபேன் 50க்கு 50 என மாற்றியுள்ளன.
வால்வுகளில் கசிவுகள் ஏற்படுகின்றன என வெளியான முறைப்பாடுகளுக்கு இதுவே காரணம்.
எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களே அனைத்து வெடிப்புச் சம்பவங்களுக்கும் காரணம் என தான் உறுதியாக நம்புவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின்முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திக சேனரட்ண ஆகியோருடன் நானும் ஏனைய அதிகாரிகளும் இலங்கை நுகர்வோர் அதிகார சபையில் இந்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்திய சந்திப்பின் பின்னர் நான் இந்த ஆபத்துக்கள் குறித்து எதிர்வு கூறினேன் என குறிப்பிட்ட அவர் இலங்கை ஒரு வெப்பமண்டல நாடு என்பதால் எல்பி வாயுவில் குறைந்தளவு புரொபேனும் அதிகளவு பியூட்டனும் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஏன் எல்பி வாயுவின் கலவையில் மாற்றங்களை மேற்கொண்டீர்கள் என நாங்கள் கேட்டவேளை தரநிர்ணய நிறுவனத்தின் தலைவரிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை என குறிப்பிட்ட குணவர்த்தன, நான் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கலவையைக் கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து அவருக்கு தெளிவுபடுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டரில் அதிகளவு புரோபேன் காணப்படுவது ஆபத்தானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன் எனவும் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதையும் நான் அவர்களுக்கு தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டார். எனினும் சித்திக சேனரட்ண எல்பி வாயுவின் கலவையில் மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் துசான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கும் இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கையை எடுக்குமாறும் ,இலாபம் உழைப்பதற்காக எரிவாயு நிறுவனங்கள் சிலிண்டரின் கலவையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம். அதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை ஜூன் பத்தாம் திகதி அனுப்பினேன் எனவும் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதனால் மிகவும் பாரதூரமான ஆபத்து ஏற்படக்கூடும்,என்பதை நான் அறிந்திருந்தேன்,அது உண்மை என்பது தற்போது நிருபணமாகியுள்ளது.அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் எனது கோரிக்கை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளை இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி !

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

காலி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும் வோரிக்கான் 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பிரத்வெயிட் 41 ஓட்டங்களையும் கோர்ன்வோல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரவீன் ஜெயவிக்கிரம 4 விக்கெட்டுகளையும் ரமேஸ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் லக்மால், எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

156 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை கிரிக்கெட் அணி, 348 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதன்போது இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன் வோல் மற்றும் வோரிக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக போனர் ஆட்டமிழப்பின்றி 68 ஓட்டங்களையும், ஜோசுவா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 5 விக்கட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிண்ணியா படகு விபத்து – பாலத்தை உடனடியாக புனரமைக்க ஜனாதிபதி உத்தரவு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், 9 மாதங்களுக்குள், குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் வீதிக் கட்டமைப்பின் புதிய தகவல்கள்’ என்ற தலைப்பில், இன்று முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே அமைச்சின் செயலாளர் குறித்த விடயத்தை தெரிவித்தாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி களப்பில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் விபத்துக்குள்ளாகி, பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் என்னை புலி என்றும் கனடாவில் புலி இல்லை என்றும் ஏசுகிறார்கள்.” – கனடாவில் இரா.சாணக்கியன் !

இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“கிண்ணியா படகு விபத்து – ஒருவரை ஒருவர் நோக்கி விரல் நீட்டிக்கொண்டிருக்காதீர்கள்.” – கிழக்கு ஆளுநர் !

கிழக்கு மாகாணத்தில்  அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு  மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படையினரால் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை பார்ப்பதற்காகக் இன்று கிண்ணியா தளவைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல. போருக்குப் பின்னர் இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டப்பட்டன.

அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்தே ஆரம்பமானது. இலங்கையின் மிக நீளமான பாலம் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி  கொரோனா தொற்றால் பாதித்ததால் தாமதமானது. மாற்று வழி இருந்தபோதிலும் மக்கள் அதை பயன்படுத்த விரும்பவில்லை.

இந்த சம்பவத்தை நாங்கள் இப்போது விசாரித்து வருகிறோம். இன்று  அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். பொறுப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது.

எனினும் தற்போது இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் கடற்படையினரால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பாலத்தின் பணிகளை விரைவில் முடிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது” என தெரிவித்தார்.

கிண்ணியா படகு விபத்து – நகர சபை தவிசாளர் கைது !

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பாலம் இன்மையால் படகுப்பாதை போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் படகுப்பாதையில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்களில் 19 பேர் தொடர்ந்தும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.