December

December

“மக்கள் அரசாங்கத்தை மாற்ற மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.” – ரில்வின் சில்வா

மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. அதற்காக மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான நோக்கங்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தை வெளிப்படுத்தும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் என எதுவுமே இல்லாது போகும் வேளையில், சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என்ற நிலை உருவாகும் வேளையில் மக்கள் மேலும் மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. எனவே வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள்.

ஆனால் இது கலவரமாக அமையாது, ஜனநாயக ரீதியில் மாற்றத்தை உருவாக்க முடியும். குறிப்பிட்ட சிலர் வீதியில் இறங்கினால் அரசாங்கத்தினால் அடக்குமுறையை கையாள முடியும். ஆனால் மக்கள் அலை வீதிக்கு இறங்கினால் அவர்களால் அடக்குமுறையை கையாள முடியாது.

இவ்வாறான நெருக்கடிகளில் மக்கள் பொறுத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை. எனவே ஜனநாயக ரீதியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாமும் கூறுகின்றோம்.

மக்கள் ஒன்றாக வீதிக்கு இறங்கி ஆட்சி மாற்றத்தை கேட்பது  ஜனநாயக செயன்முறையேயாகும். அதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. இதனை கிளர்ச்சி என அடையாளப்படுத்த வேண்டியதில்லை.

ஆட்சியை எமக்கு தாருங்கள் என நாம் கேட்கவில்லை, தலைமை ஏற்று சகலரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுபோவோம் என்பதே எமது அழைப்பாகும்.

சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த வேலைத்திட்டத்தில் இனம், மொழி பாகுபாடு இன்றி சகலரையும் இணைத்துக்கொண்டால் மட்டுமே மீள முடியும். அதற்கு சகல மக்களும் தயாராக உள்ளனர்.

தலைமைத்துவமும், சரியான வேலைத்திட்டமுமே தேவைப்படுகின்றது. அதனை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.

“நிர்வகிக்க முடியாவிட்டால் புதிய நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே தீர்வு.” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய கலை கலாசார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் செல்கிறது. தவறுகள் திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும்.விவசாயத்துறை தொடர்பில் மாற்றுத்திட்டங்களை செயற்படுத்துவது அவசியமானதாகும். உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்களின் எதிர்வு கூறல் குறித்து விவசாயத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சீசெல்ஸ் நாட்டில் 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை !

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் இம்மாதம் 10 ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

பல நாட்களாக பணிக்கு வராததால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் உயிரிழந்திருந்தமையும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திருந்தமையும் தெரியவந்தது.

அதன்படி, இலங்கையரின் கொலை தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் எகிறும் பொருட்களின் விலை -150 ரூபாயினால் அதிகரிக்கிறது பால்மாவின் விலை !

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது, நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உருவாக்கிய அரசை விட்டு ஏன் வெளியேற வேண்டும்..? – வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் திட்டம் எதுவும் இல் லை என்று நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாங்கள் உருவாக்கிய அரசை விட்டு ஏன் வெளியேற வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் முன்னோக்கிச் செல்வதே ஒரே நோக்காகவுள்ளது என்றும் ஆனால், நாட்டிற்கு ஏதேனும் அசம் பாவிதம் நடந்தால், அது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பால்மாவின் விலை – தேநீர் விற்பனையை இடைநிறுத்த தீர்மானம் !

பால்மாவின் விலை அதிகரிப்பால், தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத், தெரிவித்தார்.

பால்மாவின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலையும் அதிகரிக்கப்பட்டால் பொது மக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தட்டுப்பாடு, வரிசைகள் மற்றும் பொருட்களின் விலையை உயர்த்தும் கொள்கையை அரசாங்கம் தொடர்கிறது.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பக்கெட்டின் விலையை 150 ரூபாவாலும், 400 கிராம் பக்கெட்டின் விலையை 60 ரூபாவாலும் உயர்த்துவது விசேட கொள்கை அறிக்கையின் நோக்கமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கோப்பை தேநீரின் விலை ரூ.60ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு முன்னர் பால்மா விலை அதிகரித்ததால் நுகர்வோர் இதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தனர்.

பால்மா தட்டுப்பாட்டால் ஒரு கோப்பை தேநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நுகர்வோர் உணவகங்களுக்கு வந்ததாகவும், எனினும் உணவக உரிமையாளர்கள் பால்மாவை பெற முடியாமல் போனதால் தேநீர் தயாரிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். நுகர்வோருக்கு தரமற்ற தேநீரை வழங்க முடியாத நிலை உள்ளது.

நுகர்வோர் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை.” – சீனாவை தூண்டும் சீவின்பயோடெக் நிறுவனம் !

இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள சீனாவின் உர நிறுவனம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளது.

சீவின்பயோடெக் நிறுவனமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் சீவின்பயோடெக் நிறுவனத்தின் உரத்தில் ஆபத்தான பக்டிரீயாக்கள் காணப்படுவது உள்ளுர் சோதனைகளின் மூலம் உறுதியானதை தொடர்ந்து அந்த உரத்தினை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம் எனினும் அந்த நிறுவனத்திற்கு 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சீன நிறுவனம் தொடர்ந்தும் போர்க்கொடி தூக்கிவருகின்றது.  இந்த விவகாரத்தினால் தனது பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்த நிறுவனம் கருதுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவர்கள் சீன அரசாங்கம்இலங்கை மீது தடைகளை விதிக்கவேண்டும் என அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சீவின் நிறுவனத்திற்கும் இலங்கையில் உள்ள அந்த நிறுவனத்தின் தொடர்பாளர் ஒருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் சீன நிறுவனம்இலங்கைக்கு எதிராக எவ்வாறானநடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையை நம்பவேண்டாம். இலங்கையை சேர்ந்த தங்கள் பிரதிநிதியுடனான தொடர்பாடலின்போது இலங்கையை நம்பவேண்டாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு ஏதாவது பொருட்களை அனுப்புவதாகயிருந்தால் முதலில் முன்கூட்டிய பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் மேலும் பல சர்வதேச நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்யப்போகின்றோம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வந்த தேயிலையை தடை செய்யவேண்டும் என சீன அரசாங்கத்தை சீன நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல் !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று(புதன்கிழமை) அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கைதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஆணைக்குழுவிடம் உள்ள ஒழுங்குகளுக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணியின்போது மதுபோதையில் இருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகத்தர்கள் !

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையிலிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையில் குற்றம் உறுதியானமையால் இருவரும் மறு அறிவித்தல் வரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இராணுவத்துக்கு சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லை. துப்பாக்கி முனையில் கொல்வதே நோக்கம்.” – சிவஞானம் சிறீதரன்

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

நாட்டில் ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம். நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்காக, சிறையில் இருந்த தேரரை கொண்டு வந்து தனது ஆயுதமாக கோட்டா பயன்படுத்தி வருகின்றார். இராணுவ தளபதிகளை அமைச்சின் செயலாளர்களாக அவர் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 14 அமைச்சின் செயலாளர்கள் இராணுவ தளபதிகள். அத்துடன் ஆளுநர், திணைக்கள தலைவர்களும் அவ்வாறே நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்த பெருமானின் அவதாரமாக தன்னை காட்டிக்கொள்ளும் தேரர் இப்பொது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.
நாம் இப்போதும் இராணுவ ஆட்சியில் தான் உள்ளோம். இது தமிழ் மக்களுக்கு மட்டும் இடி அல்ல. சிங்கள மக்களுக்கும் இது ஆபத்தானது. ஏனென்றால் 1970களில் கதிர்காமத்து அழகி மன்னம்பேரியை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இராணுவத்தினர்.

பிரேமதாச காலத்திலும் சுமார் 50 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்காக அப்போது பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச சர்வதேசம் வரை சென்றிருந்தார். ஆகவே, இராணுவத்துக்கு சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லை. துப்பாக்கி முனையில் அனைவரையும் கொல்வதே அவர்களின் நோக்கம்.

தமிழர்கள் முதலும் இராணுவ ஆட்சியில் இருந்தார்கள். அதேபோல பொருளாதார ரீதியான பிரச்சனைகளை தமிழர்கள் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். எனவே தமிழர்களுக்கு இது புதிதல்ல. சிங்கள மக்கள் தற்போது துன்பத்தை உணர ஆரம்பித்துள்ளனர் என்றார்.