December

December

முஸ்லீம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்களா..? – சாணக்கியனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் நசீர் அஹமட் !

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது “ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் கௌரவ பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்” என்று தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உங்களுடன் பகிரங்க விவாதத்தை நடாத்த நான் தயாராக இருக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பரிக்கப்பட்டது தொடர்பிலும், அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே உங்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் குறித்து உங்களுடைய அறியாமையை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் இது தொடர்பாக திறந்தவெளியில் உங்களுடன் விவாதிக்கும் வகையில் உங்களது சம்மதத்தை நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குரிய இடம், பொருத்தமான நேரம் தொடர்பில் இருவரும் கலந்தாலோசித்து இந்த பகிரங்க விவாதத்தை நடத்த வேண்டும் என்றார்.

“நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.” – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

“நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.” என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுன நிச்சயம் பெற்றிப்பெறும். சஜித், சம்பிக்க, ரணில், அநுர மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. விவசாயத்துறை அமைச்சின் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு பொறுப்பாக்கப்படவில்லை. நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை.

விவசாயத்துறை அமைச்சின் செயற்பாடுகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. கொவிட் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இராணுவத்தினரது உதவியில்லாமல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். தடுப்பூசி செலுத்தல் திட்டத்தை இராணுவத்தினர் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துள்ளார்கள்.

இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு தேவையான முக்கிய விடயங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறையானதாகவும், நிலையானதாகவும், செயற்படுத்துவதற்கு ‘பசுமை விவசாய செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பசுமை விவசாய செயற்பாட்டு மையம் செயற்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. சேதனபசளை திட்டத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன. இரசாயன உரம் தடை செய்யப்பட்டபோது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்தது. சேதன பசளை திட்டத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் இரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை. எதிர்வரும் காலங்களில் நாட்டில் பெரும் உணவு தட்டுபாடு ஏற்படும் என எதிர்தரப்பினரும், ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. பெரும்போக விவசாயம் நிச்சயம் வெற்றிப் பெறும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பறிபோகும் தமிழர்களின் நிலங்கள் – தொடரும் வனவளத்துறையினரின் அடாவடி !

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த காணிகளுக்குள் நேற்று உள்நுழைந்த வனவளத் திணைக்களத்தினா் எல்லைக்கற்களை நட்டு அவற்றைக் கையகப்படுத்தியுள்ளனா்.

100 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் உழுந்து பயிர்ச்செய்கை செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினா் பூத்துக்காய்ப்பதற்கு தயாராகக் காணப்பட்ட உழுந்துப் பயிர்களுக்குள் தமது உழவு இயந்திரங்களை ஓட்டிச் சென்று பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்னா்.

இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக தமிழர்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல் தலைவர்கள் கூறுவதற்கெல்லாம் ஆமென் சொல்ல முடியாது.” – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை ஒரு கேலிக்கூத்து போன்றது எனவும் அவர் விமர்சித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனேமுல்ல பொல்லாத்த தேவாலய பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

மதத் தலைவர்கள் அனைத்த சந்தர்ப்பங்களிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றும் மதத் தலைவர்கள் சுயாதீனத் தன்மையை அரசியல் நன்மைக்காக பயன்படுத்தினால் வெட்கப்பட வேண்டும் .  அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது.

இன்று மக்கள் நிர்க்கதியாகியுள்ளமைக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மதத் தலைவர்களும் காரணம். இந்த நாடு மத நாடொன்றாகும்.

இதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை .  அத்தோடு, தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களை இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்கள் வீசிய தூண்டிலில் சிக்கிய வெடிகுண்டு – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களது தூண்டிலில் திடீரென ஒரு பாரமான பை அகப்பட்டுள்ளது.

உடனே குறித்த சிறுவர்கள் அதனை தூக்கி பார்த்தபோது அப் பையில் துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது அவதானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

யாழ். காவல்துறையினர் குறித்த வெடிகுண்டினை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மீட்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை – மக்கள் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட மாற்றம் !

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதனால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டமையை அடுத்து – பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அந்த இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்திருந்தார்.
இவ்வாறான எதிர்ப்புகளையடுத்து சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட சிலையை இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து அகற்றுவதாக பொலிஸார் நேற்று வாக்குறுதி வழங்கினர். இதனால், சிலை வைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் அங்கிருந்து சென்றனர்.
இந்தப் பின்னணியிலேயே சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு – புறக்கணித்த முன்னணியினர் !

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன.

தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் இந்த சந்திப்புகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது ,

13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியாவிற்கு உறுதியளித்ததை போன்று 13ஆம் திருத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்து கோருவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, நிரந்தர தீர்வுக்கான அலுத்தங்களை ஒருபோதும் கைவிட போவதில்லையென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அது சமஷ்டி மற்றும் கூட்டு சமஷ்டியிலான தீர்வாகவே அமையும்.

இருப்பினும், தற்போது ஒற்றையாட்சியின் கீழ் உள்ள உரிமையைப் பெறுவதற்கான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் கூடி பொது ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேநேரம், தேர்தல் முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதை மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரிந்திருந்தால் இந்த 30 வருட யுத்தமே நடந்திருக்காது.” – யாழில் அத்துலிய ரத்ன தேரர் !

கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

வடமாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியினை முதற்கட்டமாக 32 மாணவர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் மத்தியின் அன்னசத்திர பகுதியில் அமைந்துள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்தனதேரர் கலந்துகொண்டு இரண்டு மொழிக்கற்கையின் சிங்கள பாடநெறியினை கற்ற மாணவர்களுக்கே இச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிங்களம், தமிழ் மொழியிலான பிரச்சனையில் விவசாயிகளுக்கான காணியில்லை, விவசாயிகள் தொழில்நுட்பத்திற்கான தொழில் முறையில்லை அதற்கான நிதியில்லை அதனை முன்னெடுத்து செல்லுகின்ற போகின்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பில்லை. இவை தீர்க்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அதிலும் சாதிப் பிரவினை ஏற்றுக்கொள்ள முடியாது நன்கு வளர்ச்சி அடைந்த பிரிவினையில் சாதிப் பிரவினையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

விவேகானந்தர் மற்றும் ஏனைய சமய பெரியார்களின் உருப்பட்ட உபதேசங்களில் கூறப்பட்ட ஒன்று இந்த பிரச்சனை இருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் எல்லாரும் சாதிப்பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். பௌத்த மதத்திலும் சாதிப்பிரவினையினை புத்தபெருமான் எதிர்க்கின்றார். உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் உலகத்தில் உள்ளதைபோன்று அனைத்து உயிர்களையும் நேசிக்கவேண்டும். அதுதான் காலத்தின் அவசியம். இப்போது எமது மாகாணத்தில் தேவையாக இருப்பது கணனி பொறியிலாளராக வருவது மிக அவசியம் அதற்கான தொழில்வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். அதற்காக தயார் நிலையில் உருவாக வேண்டும்.

விவேகமற்ற தீர்மானங்களால் இலவசக்கல்வியையும் அழிக்க முயற்சிக்கிறது ராஜபக்ஷ அரசு – ஆசிரியர் சங்கம் கவலை !

அரசாங்கம் காலத்திற்கு காலம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பான ஜனாதிபதியின் உணர்வுகளை மேற்கோள்காட்டி, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா..?  என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்த டொலர் தட்டுப்பாடு – உணவுப்பொருட்களுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு !

சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, கடலை, செத்தல் மிளகாய், பருப்பு மற்றும் மசாலா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை இருக்கும் என்றும் கூறப் படுகிறது.