2022

2022

“கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடாது அதனை உங்கள் அருகில் உள்ள ஒரு ஏழை வீட்டிற்கு உணவுக்காக கொடுங்கள்.” – கர்தினால் மல்கம் ரஞ்சித்

“ஊடக அறிக்கையின்படி, இந்த நாட்டில் 6.1 மில்லியன் மக்கள் பசியுடன் உள்ளனர். நாடு இப்படிச் சிதைந்து கிடக்கும் போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாது.” என என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறி குருசா உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற “நம்பிக்கையின் பிறப்பு” எனும் கிறிஸ்துமஸ் கரோல் கச்சேரியைத் தொடர்ந்து உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்தார்.

 

ஆட்சியாளர்களின் மோசமான நடத்தையின் விளைவாகவே இந்த நாட்டிற்கு நேர்ந்துள்ளது. அவர்கள் உணவுக்காக உலக நாடுகளிடம் கையேந்துகிறார்கள். உணவுக்காக அந்நியர்களை அணுகுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்

இந்த ஆண்டு, மாட்டுத் தொழுவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள். அதுதான் கிறிஸ்துமஸ் நடைபெறும் இடம். உங்கள் அருகில் உள்ள ஒரு ஏழை வீட்டிற்கு உணவு கொடுங்கள். கிறிஸ்துமஸ் என்பது பெறுவதை விட கொடுப்பது. அது தான் கிறிஸ்துவின் செய்தி என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சில திறமையான குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணி !

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இச்செயற்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எதிர்கால செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருள் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது ஆலோசிக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு, போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காணுதல், போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது சிறையில் உள்ள கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் முறையான சிகிச்சைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தன்னார்வ மையங்கள், சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, நன்னடத்தை சேவைகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூர் சட்டங்களை உடன் அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

போதைப்பொருள் பரவலை ஒழிப்பதற்கு சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் இலங்கையிலும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நாவுலவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும் பாடசாலை முறையும் போதைப்பொருளால் நிரம்பியுள்ளதாகவும், நாட்டின் சட்ட முறைமைகள் திருத்தப்பட்டு நீதித்துறை உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளை நோக்கி கல்வி முறையை மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்குப் பதிலாக அதிகாரிகள் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் அதேவேளை இலங்கை போதைப்பொருள் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள புகையிலை நிறுவனங்களிடமிருந்து அரசாங்க அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாகவும், எனவே சிகரெட்களுக்கு வரி விதிக்காமல் பொதுமக்களுக்கு வரி விதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நாட்டை முன்னேற்றுவதே எமது பிரதான இலக்கு.” – ராஜபக்ச தரப்பு !

“நாட்டை முன்னேற்றுவதே எமது பிரதான இலக்கு.” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இவ்வருடத்தின் இறுதி பகுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் ஒருசிலர் பொய்யாக வழக்கு தாக்கல் செய்து இல்லாத பிரச்சினையை தற்போது தோற்றுவித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் தரப்பினர் தான் தற்போது தேர்தலுக்காக குரல் கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்கள்.

தேர்தலை பிற்போட வேண்டிய பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது,தேர்தல் எப்போது இடம்பெற்றாலும் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நாட்டை முன்னேற்றுவது பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான கொள்கையாக உள்ளது.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்த தரப்பினருடனும் கூட்டணியமைக்க தயார் என்பதை அறிவித்துள்ளோம்.கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையலாம் என்றார்.

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது.” – சரத்வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். இல்லாது விடின் நாம் அகற்ற நேரிடும்.”- மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அகற்றவில்லையெனில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவ மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.

எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம். காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும், பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம். அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள்.

இங்கே ஒன்றும் நடக்கவில்லை என்று காட்டும் வகையிலும் ஐ.நாவிற்கு தமது அறிக்கைகளை வழங்க காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இழப்பீடு வழங்க முயற்சிக்கின்றனர்.

நாங்கள் இழப்பீட்டிற்காக இவ்வளவு காலமும் போராடவில்லை. எமது உறவுகளுக்காகவும், அத்தனை உயிர்களுக்காகவுமே நாங்கள் போராடி வருகிறோம். எமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று முதலில் கூறுங்கள். அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும், உறவுகளையுமே நாங்கள் கேட்கிறோம்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்றே கடந்த 15 வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். எமது உறவுகளை திருப்பி தாருங்கள் என்று கேட்கின்றோம். ஆனால் அதை பற்றி கதைக்கிறார்கள் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (ஓ.எம்.பி) பற்றி கதைக்கிறார்கள், நஷ்ட ஈடு பற்றி கதைக்கிறார்கள்.

மரண சான்றிதழ் வழங்குவதாக கூறுகிறார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை. எனது உறவுகளையும் பிள்ளைகளையுமே கேட்கின்றோம். சுமார் 2200 நாட்களாக மழைக்கும் வெயிலுக்கும் இடையில் நின்று போராடி வருகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 148 பேர் இதுவரை மரணித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறார்கள்.

நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம். எங்களுக்கு நஷ்ட ஈடு தர நீதி அமைச்சருக்கு என்ன அருகதை உள்ளது? நீதியமைச்சர் மன்னார் பக்கம் வராமல் இருப்பது அவருக்கு நல்லது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண் துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும்.

அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். எங்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சுமார் 2 ஆயிரம் நாட்களாக போராடுகின்ற எமக்கு அதை செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? எனவே இனி வரும் காலங்களில் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறுவதை நிறுத்துங்கள்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா வரை பண உதவி !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆகக்கூடியது 20,000 ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கொடுப்பனவு மீள அறவிடப்பட மாட்டாது என்பதுடன் முற்றிலும் நன்கொடையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய ஒரு ஹெக்டயர் அல்லது அதனிலும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான நெல் விவசாயிகளுக்கு 10,000 ரூபாவும் ஒரு ஹெக்டயரிலும் அதிக நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நெல் விவசாயிகளுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இப்பண உதவி வழங்கப்படவுள்ளதுடன் இவை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.

இம்முறை 08 இலட்சம் ஹெக்டயர் வயல் பரப்பில் பெரும்போகப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கு அவசியமான MOP உரத்தை கொள்வனவு செய்வதற்காகவே விவசாயிகளுக்க இப்பண உதவி வழங்கப்படுகிறது.

இதற்காக 08 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன், நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்டுமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வெகு விரைவில் விசேட ஊடக சந்திப்பொன்றை  நடத்தி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி பரந்தனில் மக்கள் ஆர்ப்பாட்டம் !

கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

இன்று காலை 10 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் குறித்த இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் காணியில் 20 ஏக்கர் காணியினை தமக்கு பெற்றுத்தர கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அப்பகுதியில் 153 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், தமக்கேன 1/4 ஏக்கர் காணியினை பெற்றுத்தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

எந்தவித முன்னறிவித்தலும் இன்று இரவோடு இரவாக இரசாயன கூட்டுத்தாபனத்தினர் வேலி அமைத்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை !

தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று  பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அக்டோபர்  2021 இலிருந்து டிசம்பர்  2022 வரை  25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

2021வரை பிறப்பு பதிவு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு சிறப்பு தூதரக முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும், பிரதி உயர்ஸ்தானிகர் ரீ. வெங்கடேஸ்வரனின் முயற்சியால் இலங்கை பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவை யாவும் இலங்கை அரசின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன.

மாநிலத்தில் உள்ள புனர்வாழ்வு முகாம்களைப் பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சரிடமும் தமிழ்நாடு மாநில அரசிடமும்  இணக்கப்பாட்டை கோரியுள்ளது. மேலும், அந்த புனர்வாழ்வு முகாமுக்குள் பிரவேசிப்பதற்கும் அத்தகைய முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14,000 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து ஆவணங்களும் சீராக இருந்தால் விண்ணப்பதை சமர்ப்பித்த அதே நாளில் தூதரக பிறப்புச் சான்றிழை எந்தவித தாமதமும் இன்றி பிரதி தூதரகம் வழங்குகிறது.

மேலும், குடியுரிமை விண்ணப்பமும்  ஏக காலத்தில்   இந்த பிரதி தூதரகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுயமாக முன்வந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,  பதிலளித்த அவர், ‘ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக சுமார் 500 இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பி முடிந்தது’ என்றார்.

போதைப்பொருள் பாவனைக்காக பிச்சை எடுக்க அனுப்பப்படும் சிறுவர்கள் !

போதைப்பொருள் பாவனைக்காக, சிலர் சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்

இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.