2022

2022

கைவிடப்படுகிறது கோட்டா கோ கம போராட்டம் – அகற்றப்படும் கூடாரங்கள் !

நாளை (5) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததன் பிரகாரம் போராட்டக்காரர்கள் சில கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

இந்த கூடாரங்களை அகற்றும் பணி நேற்று இரவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்று பிற்பகல் சில கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இது வரை போராட்ட பகுதியில் தங்கி முதலுதவி அளித்து வந்த புனித ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

ஞானசார தேரரின் ஒரே நாடு – ஒரே சட்டம் அறிக்கையை குப்பையில் போடுங்கள் – ரவூப் ஹக்கீம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமறியலில் இருந்த போது கையடக்கத் தொலைபேசி பாவனை – தானிஷ் அலிக்கு சிறை !

காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி என்ற நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது நீதிமன்றம்.

விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மலையகத்தில் அடை மழை – விவசாயிகளை கண்டுகொள்ளாது இருக்கும் விவசாய திணைக்களம் !

மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைகின்றனர்.

 

கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீரை ஏந்தும் கிளை ஆறான பத்தனை ஆறு பெருக்கெடுத்ததால் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகமான விவசாயிகள் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வங்கிகளில் மற்றும் தங்க நகைகளையும் அடகு வைத்தும், கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிகமான கடன் தொகையை பெற்று விவசாய நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், வெள்ளப்பெருக்கினால் செலவு செய்யப்பட்ட தொகையை கூட மீட்க முடியாத அளவிற்கு பாரிய பொருளாதார பிரச்சினைகளை சந்திப்பதாக விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாய குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இதேபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நுவரெலியா மாவட்ட விவசாய திணைக்களம் எவ்வித நிவாரண உதவிகளையும் தரவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி – இலங்கைக்கு முதலாவது பதக்கம் !

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

WATCH : Yupun wins bronze at 100 meters in CW Games 2022 - NewsWire

அவர் தனது தூரத்தை ஓட எடுத்த நேரம் 10.14 வினாடிகளாக பதிவாகியுள்ளது.

இதன்மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான எஃப்42-44/61-64 தட்டெறிதல் பரா போட்டியில் இலங்கையின் பாலித ஹல்கஹவெல கெதர வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேகமெடுக்கும் ஒமிக்ரோன் பரவல் !

நாட்டில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிக் பேஷ் போட்டித் தொடர் – பெயர்ப்பட்டியலில் பிரபாத் ஜயசூரிய முன்னிலையில் !

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஷ் போட்டித் தொடரில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினேஸ் சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரிய குறித்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் பானுக ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஜனாதிபதி ரணிலின் சிம்மாசன உரை பழைய புராணம் தான்.”- தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில், புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிம்மாசன  உரைக்கு பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் வரலாற்றில் இருந்ததையே மீண்டும் இந்த உரையில் முன்வைத்துள்ளது. அத்துடன் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையே அந்த உரையில் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் !

எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகளின் அழுத்தங்கள் அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

குடும்ப பகையால் ஏற்பட்ட கொடூரம் – வவுனியாவில் குடும்பஸ்தர் சுட்டும், வெட்டியும் படுகொலை – 7 பேர் கைது !

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (03) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரஞ்சா என்று அழைகப்படும் ஜோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த நபரின் கை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு பிறிதொரு இடத்தில் வீசப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசாருடன் இணைந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி சிதம்பரபுரம் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 4 வாள்கள், இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 7 பேரில் ஒருவர் காயம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்டிருந்த நீண்டநாள் பகையும், அதன் காரணமாக அவ்வப்போது இடம்பெற்ற மோதல்களின் தொடர்ச்சியாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.