2022

2022

அரசாங்கத்தின் வரி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கறுப்பு போராட்டம்!

அரசாங்கத்தின் வரி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொழும்பகே எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய 20,000 மருத்துவர்களிடம் கையெழுத்து மனுவொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த மனு கையளிக்கப்படவுள்ளது.

இலங்கையில் 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் – தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர்.

கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறை

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) இதுவரை 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து, அவர் 18 மாதங்கள் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் – இது ஒரு போலி குற்றச்சாட்டு என சமூக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அவரை விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று (30) அவர் எதிர்கொண்ட கடைசி ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அவர் பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தமை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கனவே 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, தலைநகர் நே பை தாவில் (Nay Pyi Taw) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600 இற்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 13,000 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியதோடு, தீர்மானத்தின் வார்த்தைகளில் திருத்தங்களைத் தொடர்ந்து அந்நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீதான “இடைவிடாத சட்டரீதியான தாக்குதல்”, “எதிரிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அல்லது கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதற்கு இராணுவம் நீதிமன்றங்களை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது” என்பதைக் காட்டுகிறது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் இராணுவத்தால் மியன்மார் அதிகாரத்தை வன்முறையாகக் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு எதிராக பொதுமக்களால் பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் விளையவாக மியன்மர் இராணுவம், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இது இராணுவம் மற்றும் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிவிலியன் படையான தனி இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே புதிய உள்நாட்டு சண்டையையும் தூண்டியது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம் !

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன் 79ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலுள்ளது.

குறித்த பட்டியலில் 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்திலும் சுவிற்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகள், முறையே இரண்டு முதல் ஐந்தாம் இடம் வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 41.52 சதவீதத்துடன், 91 ஆவது இடத்தில் இந்தியாவும், 34.44 சதவீதத்துடன் 110 ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

“ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியானார்.”- அனுரகுமாரஅநுர குமார திஸாநாயக்க

தேர்தலுக்கு நிதியில்லை என்பதை ஜனாதிபதியின் பிறிதொரு அரசியல் சூழ்ச்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களையும்,மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்களையும் சிறைக்கு அனுப்புவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து அவர் நாட்டை விட்டு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விவசாயத்துறையை முழுமையாக சீரழித்து முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு அவர் தற்போது வெளிநாட்டுக்கு விடுமுறை கால உல்லாச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 05 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் எந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும்.

எரிபொருள்,எரிவாயு தற்போது தடையில்லாமல் கிடைக்கப் பெறுகிறது என அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் குறிப்பிடுவது தவறு.

அரசமுறை கடன்களை மீள் செலுத்த முடியாது,நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது எனகடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அரச முறை கடன் செலுத்தும் நிதி மிகுதியானது.

அந்த நிதியில் தான் எரிபொருள் மற்றும் எரிவாயு தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது,ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,பாராளுமன்றத்திற்கும் மக்களாணை கிடையாது.நாட்டு மக்கள் அரசியல் மறுசீரமைப்பை எதிர்பார்க்கிறார்கள். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தீர்மானமிக்கது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளையும்,சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தலை நடத்த நிதி இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா இல்லை என்றால்,2023 ஆம் ஆண்டு அரச செலவுகளுக்கு 7900 பில்லியன் ரூபாவை திரட்டிக்கொள்ளும் எனவும் அவர் கேளவி எழுப்பியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஒன்லைன் கட்டண தளத்தை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி – இளைஞனுக்கு விளக்கமறியல்!

இலங்கை மின்சார சபைக்கு (CEB) மின் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் இணைய கட்டண நுழைவாயிலை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த முக்கிய சந்தேக நபரை 2023 ஜனவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்தை ஹெக் செய்த ஒருவர் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் தன்னை ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு மென்பொருள் பொறியியலாளர் என அடையாளப்படுத்தியுள்ளார். மேலும் அவர் 10-20 சதவீத தள்ளுபடிக்கு தகுதியுடையவர் என நுகர்வோரின் மின் கட்டணத்தை அவர்களின் கடன் அட்டைகள் மூலம் செலுத்த முன்வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் சந்தேகநபர் சுமார் 400 பேரை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தப்பட்டது மற்றும் ரசீது தயாரிக்கப்பட்டது, ஆனால் CEB உண்மையில் செலுத்தப்படவில்லை.

25 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கடவத்தையில் சிறிது காலம் தங்கியுள்ளார். சிஐடியின் கூற்றுப்படி,குறித்த நபர் க.பொ.த (உ/த) வரை கல்வி பயின்றுள்ளார்.

சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சகோதரன் கைது !

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்துள்ளதுடன் அந்த குழந்தை மீது பாலியல் சேட்டை விட்டுவந்த நிலையில் அவர்களது உறவினரான பெண் ஒருவர் கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையும் தன் மீது மாமா இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவரை நேற்று கைது செய்தனர்

இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்டவரை நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கையில் 24 லட்சம் வறுமையில் – செஞ்சிலுவை சங்கம் அறிக்கை !

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, தற்போதைய நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் இலங்கை நாட்டின் மக்கள் தொகையில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழுந்துள்ளனர்.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11% பேர், அதாவது 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

நெருக்கடியின் தொடக்கத்தில் ஏழ்மையான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்ததாக அது கூறுகிறது.

அக்குடும்பங்கள் சொத்துக்களை விற்று கடனாளிகளாக ஆவதற்கும் , அவர்களின் சாப்பாட்டைக் குறைத்து, பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்லவிடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 26%, அதாவது 57 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அறிக்கை காட்டுகிறது.

இந்த நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்த நெருக்கடி 3.45 மில்லியனுக்கும் அதிகமான விவசாய மக்களையும், 2.43 மில்லியனுக்கும் அதிகமான ஊட்டச்சத்து தேவையுள்ள மக்களையும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

50 நாட்களில் 15  வயது பாடசாலை மாணவி உட்பட 11  பேர்   தற்கொலை – பின்னணி என்ன..?

ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின்  அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த  50 நாட்களில் 15  வயது பாடசாலை மாணவி உட்பட 11  பேர்   தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான்  சிந்தக உதயகுமார தெரிவித்துள்ளார்.

பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹங்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே  இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் 15-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.  அவர்களில் ஏழு பேர் மது மற்றும் போதைப்பொருளுக்கு  அடிமையானவர்களாவர்.

மேலும் பல மரணங்கள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்பட்டதாகவும்  தெரிவித்துள்ள அவர்,  பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், காதல் உறவினால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு  காரணம் என தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுவதாகவும் அவர்  கூறியுள்ளார்.