2022

2022

தமிழக முகாமில் இலங்கை பெண் தூக்கிட்டு தற்கொலை !

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் தர்மராஜேஸ்வரன் யோகலதா வயது 36 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குறித்த பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டின் பேரில் தாந்தோன்றிமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை.” – இரா. சாணக்கியன்

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டக்களப்பு மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை என சொல்லப்பட்டது. இதனாலேயே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டதற்கு காரணம் இலங்கை முழவதிலும் உள்ள பிரதேசங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு உள்ளது என்று காட்டுவதற்காகவே என்றார்.

தற்போது வடக்கு கிழக்கிலே மாவீரர் தினம் நடப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்துள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெறுகிறது. இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை என அரசாங்கம் சொல்லும்போது அது தொடர்பான ஒரு பதாதையைக் கூட காட்சிப்படுத்த முடியாத நிலை இன்று மட்டக்களப்பில் காணப்படுகிறது.

கிரானில் அது தொடர்பாக கட்டப்பட்ட பதாதையை கிழித்திருக்கிறார்கள். விஷமிகளோ, இராணுவத்தினரோ, பொலிஸார் செய்தார்களா, யார் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.

எமது மண்ணுக்காக உயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்கள் குறித்து நினைவு தினம் தொடர்பான பதாதையைக் கிரானில் கிழித்திருக்கிறார்கள்.தரவையில் இது தொடர்பான முன்னெடுப்புக்கள் எடுக்கும்போது பல எதிர்ப்புகள் வருவதாக அந்த சமூகம் சொல்லுகிறார்கள். இது ஒரு அரசியல் நிகழ்ச்சி இல்லை.என்றார்.

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான க.சேயோன், நல்லரெட்ணம், சி.வவானந்தன் ஆகியோர்கள் அதிதியாக கலந்து கொண்டனர்.

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது !

கடந்த சில நாட்களாக ஆசிரியர்களினால் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இது போன்ற மற்றொரு சம்பவம் பாதுக்க பகுதியில் பதிவாகியுள்ளது.

பாதுக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியர் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் மாணவரை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (18) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

“ஓமானில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் எனது மகளை மீட்டுத்தாருங்கள்.”- இலங்கைத்தாய் வேண்டுகோள் !

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக  சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசாவே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.

இலங்கையில் இருந்து தனது மகளை டுபாயில் வீட்டு பணிக்காக அழைத்துச் செல்வதாக முகவரம் பொய்க்கூறி, ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ள தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகம், 16 தரம் வேலைவாய்ப்பு பணியகம், மனித உரிமை ஆணைக்குழு, சிறுவர் நன்னடத்தை பிரிவு என கடந்த 9 மாதங்களாக தனது மகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தனது மகள், அவருடன் அங்கு 90பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக காணொளியொன்றினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை அந்த பகுதியைச் 9, 10 வயது இருபெண் குழந்தைளின் தாயாரான பர்திமா ஸபீரா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதால், அவரையும் மீட்டு தருமாறு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிக்கும் கல்வி அமைச்சர்..? – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விளக்கம் !

2022 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடத்துடன் தொடர்புடைய திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தற்போது தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாடப்புத்தகங்களில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு இவ்விடயங்களை ஆராய்ந்து, உரிய திருத்தங்களை மேற்கொண்டு அப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில இணையத்தளங்களில் மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிப்பதாக தன் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

´அனைத்து மதத்தினரினதும் உடன்பாட்டுடன் இந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. எல்லா மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நான் இதைச் செய்தேன். நான் தவறாக ஏதும் செய்யவில்லை. அந்த மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்த இணையத்தளம் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகிறது. இதனை நிறுத்தாவிடின் சிறப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்படும்´ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்.” – சார்ல்ஸ் நிர்மலநாதன்

“இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை.

இனவாத கருத்துக்கள் பொருளாதார பின்னடைவிற்கு பிரதான காரணியாக உள்ளது. இனவாதத்தை முதலீடாக கொண்டு வரும் அரசியல்வாதிகளை சிங்கள மக்கள் ஆதரித்தார்கள். 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட போது சிங்கள சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தனிச் சிங்கள சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளும், இன அழிப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டது.

 

இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இளம் தலைமுறையினர் இனவாதம் இல்லாமல் சிறந்த முறையில் சிந்திக்கின்றமை வரவேற்கத்தக்கது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள். மகாவலி அபிவிருத்தி சபை ஊடான காணி அபகரிப்பு, இராணுவ முகாம் விஸ்தரிப்பிற்கான காணி சுவீகரிப்பு உள்ளிட்ட சவால்களை தொடர்ந்து எதிர்க் கொண்டுள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 671 ஹேக்கர் நிலப்பரப்பில் கடற்படை கோட்டபய கடற்படை முகாம் ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மக்களின் வீருப்பத்துடன் இந்த கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக கடற்படை குறிப்பிடுகிறது.தமது சொந்த காணிகளை கடற்படைக்கு விட்டுக்கொடுக்க விருப்பமில்லாத மக்கள் உள்ளார்கள். ஆகவே விருப்பம் தெரிவிக்காதவர்களின் காணிகளை அரசாங்கம் முறையாக விடுவிக்க வேண்டும்.

மறுபுறம் தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்களுக்காக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறது. முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்களை அழித்து அங்கு பௌத்த விகாரைகளை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பௌத்த மதத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இந்து ஆலயங்களையும், இந்து மத சின்னங்களையும் அழித்து பௌத்த விகாரைகளை ஸ்தாபிக்க முயற்சிக்கும் போது தமிழ் மக்கள் மனங்களில் விரக்தி நிலை தோற்றம் பெறும்.

2009 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் கூட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. நான்கு வருட காலத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை தற்போது அமுல்படுத்தியுள்ளது.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து இன்று வரை பாதுகாப்பு துறைக்கு மாத்திரம் 4200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை பகைத்துக் கெர்ணடு எந்த அரசாங்கமும் ஆட்சியில் இருக்க முடியாது என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் காணப்படுவதால் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் இராணுவத்தை திருப்திப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது, மத்திய வங்கியும் நாணய அச்சக கூட்டுத்தபானத்தை போன்று நாணயம் அச்சிடுகிறது. இந்த நிலை மாற்றம் பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்ட முடியும் என்றார்.

மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவன் பலி !

படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“மத்திய வங்கியின் ஆளுநரையும், எங்களது அரசாங்கத்தையும் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புங்கள்.” – பராளுமன்றில் உதய கம்மன்பில !

நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதே போல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டம் மீதான இன்றைய (17) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். அப்படிக்கூறிய அவரே, வரலாற்றில் அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளார்.

பாதிப்புகளை அறிந்து வைத்திருந்தாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் அதனைக் கைவிட முடியாது. அதுபோலதான் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அடிமையாகியுள்ளார். அதுபோல அரசாங்கமும் கடனைப் பெறுவதற்கு அடிமையாகியிருக்கிறது. எனவே, மத்திய வங்கியின் ஆளுநரையும், எங்களது அரசாங்கத்தையும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் – 22 வருடங்களின் பின் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள்.

எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார். எனக்காக அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து எதிர்ப்புக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் தொடக்கத்தில் இருந்து, தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை பல்வேறு அமைச்சுக்களின் கீழ் செயல்படுத்தி தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டம் இலங்கை பூராக இயங்கி வருகிறது, 2010 இல் ´தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்´ நிறுவப்பட்டது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. மற்றும் கண்காணிக்கிறது. இதற்கு இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.

தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இந்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நிலக் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது.

மற்ற நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுகின்றன.

இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 இராணுவத் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 365,403 இராணுவ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 1,184,823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய இராணுவ வெடி பொருட்கள் பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்படுகின்றன.

நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 12,000 க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தை அகற்றும் செயல்முறையின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது.