2022

2022

இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான 57 பக்க ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“We are near total breakdown”  என்ற கருப்பொருளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, நாட்டின் உணவுப் பணவீக்கம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், வருமான இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வை முன்வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், மருந்துப் பொருட்களின் விலையை 40% உயர்த்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதுடன், ஓகஸ்ட் மாதத்திற்குள் 2 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 724 அத்தியாவசிய அறுவை சிகிச்சை சாதனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் அல்லது 28% மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முகநூலில் கருத்து வெளியிடுவோரை கூட கைது செய்கிறார்கள் – நாடாளுமன்றில் இரா. சாணக்கியன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘அரசாங்கமானது பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதை விடுத்து, இளம் தலைமுறையினரை கைது செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டைவரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை. மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். 47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை நாடாளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?

பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவின்றி பாடசாலைகளுக்கு செல்லும் 3.5 மில்லியன் மாணவர்கள் !

3.5 மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்றி பாடசாலை செல்கின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொள்ளும்போது 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களில் 3.5 மில்லியன் மாணவர்களிற்கு உணவு வழங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் மாணவர்களிற்கு உணவை வழங்குவதற்கான திட்டத்தை கல்வி அமைச்சு உட்பட அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் உணவு தேவை தொடர்பான விடயத்தில் தற்போதுமிக மோசமான நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கான வசதியில்லாத நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு மாத்திரம் உணவை வழங்கியுள்ளது இந்த திட்டத்தையும் அரசாங்கம் உரிய முறையில் தற்போது முன்னெடுப்பதில்லை இந்த நிலையில் 3.5 மில்லியன் மாணவர்களிற்கு உணவை வழங்கும் திட்டம் அவசியம் என ஜோசப்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகள் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து உணவு தயாரிக்கின்றனர். அல்லது பாடசாலைக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்து உணவை பெற்று மாணவர்களிற்கு வழங்குகின்றனர். இவை அனைத்தும் தற்காலிக நடவடிக்கைகளே எனவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கமே நிரந்தர தீர்வை வழங்கவேண்டும் – மாணவர்களிற்கு உணவை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதிகரிக்கவேண்டும் தற்போது ஒரு சாப்பாட்டிற்கு 60 ரூபாய் வழங்கப்படுகின்றது அது போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

……………………………….

இதே நேரம் பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாடசாலை மதிய உணவு திட்டத்தை  விரிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

இதற்குத் தேவையான நிதியை வெளிநாட்டு மானியங்கள் மூலம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பூரண சத்தான உணவை வழங்கும் வகையில் 7,926 பாடசாலைகளில் உள்ள 1.08 மில்லியன் மாணவர்கள் இத்திட்டத்தின் இலக்காக உள்ளனர்.

வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய் செலவில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே இவ்வாறு சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான்.

மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான்.

அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலை சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து காணொளியை பதிவு செய்த இளைஞனுக்கும், அதனை பயன்படுத்தி மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞனையும் சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹிஜாப் போராட்டம் , ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு !

ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு அதிபர்  அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார். மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணி !

போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்றை நியமிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், பொலிஸ் மற்றும் மேலும் சில நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த செயலணி உருவாக்கப்படுமென அமைச்சர் கூறியுள்ளார்.

குடிசைகள் இல்லாத இலங்கையை உருவாக்குவதே இலக்கு – பிரதமர் தினேஷ் குணவர்தன

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நம்பிக்கை உள்ள வீட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசதி குறைந்த 1200 தோட்டங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு – ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு !

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது.

இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

´அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக´ இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தினை நாசப்படுத்தியுள்ளார் – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக  மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் முழுமையாக மாகாணத்தினை நாசப்படுத்தியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்,

ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.

நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். மயிலடுத்துறை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்,இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம். தற்போது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும். “ என தெரிவிதார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.
இவ்விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள் அதனை மாவட்ட செயலாருக்கு வழங்க முடியும்.
சேதன பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 5 ஹேக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் இணக்கமானவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

யாழ்ப்பாணத்தில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு !

வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.

பலாலி அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 20, 28 மற்றும் 30 வயதுடைய மூவரே பொலிகண்டி பகுதியில் வைத்து வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர் , கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 217 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர். அவை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கஞ்சா பொதிகளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தனர்.