17

17

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நேர்ந்த சோதனை – உலகின் முதல் நிலை வீரரை திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா !

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது.

34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் அதிகபட்ச ஆண்கள் சிங்கிள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களாக உள்ளனர்.

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட் ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் நோவாக் ஜோகோவிச்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு அளிக்கப்பட்ட விசா குடிவரவுத் துறையால் ரத்து செய்யப்பட்டது.

வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருக்கு விசா கொடுத்ததற்கு அவுஸ்திரேலியாவிலும் பரவலான எதிர்ப்பு எழுந்தது.

விசா ரத்து செய்யப்பட்டபின் நோவாக் ஜோகோவிச் தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தை நாடிய நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

எனினும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் வெள்ளியன்று ரத்து செய்தார். அவர் அந்நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதை எதிர்த்து ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உச்சபட்ச நீதிமன்றங்களின் ஒன்றான, மெல்பர்னில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தை நாடினார். டென்னிஸ் வீரர் தரப்பில் 268 பக்க பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ஜோகோவிச் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.

அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஐ.நா. வின் ‘கோவேக்ஸ்’ திட்டம் – ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் விநியோகம் !

கொரோனா நோய் தொற்று தொடங்கிய பிறகு பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி  திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் இந்த திட்டத்தின் கீழ் நன்கொடையாக அளித்த தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது. தடுப்பூசிகள் வினியோகத்தில் சமத்துவமின்மை நிலவுவதாக நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, பிற நாடுகளும் கோவேக்ஸ் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

கடந்த 13-ந்திகதி நிலவரப்படி 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், 88 நாடுகள் 40 சதவீதத்துக்கு குறைவாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மாதம் கூறுகையில்,

‘‘வருகிற ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் 70 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக இலக்கு நிர்ணயித்து புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்தநிலையில் ஐ.நா. சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கி சாதனை படைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

ருவாண்டாவுக்கு கடந்த 15-ந்திகதி 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

“ஜனாதிபதியின் விவசாயக் கொள்கை பேரழிவாக மாறியுள்ளது.” – ஹரினி அமரசூரிய

“ஜனாதிபதியின் விவசாயக் கொள்கை பேரழிவாக மாறியுள்ளது.” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள் சுயாதீனமானவை எனவும் முதலீட்டாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு அவற்றின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹரினி அமரசூரிய, நாடு அந்நிய செலாவணி நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அங்கு பேசிய அவர்,

காரணத்தினால் அடுத்த சில மாதங்களில், அரசாங்கம் பெரிய அளவிலான உணவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துள்ளதாகவும் அதுவும் நாட்டுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

ஜப்பானிடமிருந்தும் கடனுதவியை எதிர்பார்க்கிறது இலங்கை !

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது. ஜப்பானில் இருந்து பெறப்படும் கடன் ஜப்பானிய யெனில் வழங்கப்படும் என்பதோடு 0.05 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இந்த தொகை சில மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்படுகின்றது.

அத்தோடு ஜனவரி 18ல் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவது உட்பட, இந்த ஆண்டு 6 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பணப்புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்து குறிப்பாக உலக வங்கி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மேலும் கடன்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும்..” – வடிவேல் சுரேஸ் அறிவுரை !

“சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும்..” என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (17) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். அன்று வாக்களித்து இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டு சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக தெரிவுச் செய்ய வேண்டும். இப்போது தை பிறந்துள்ளது. நிச்சயம் வழி பிறக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும். உங்களுக்கு வலித்தால் எமக்கும் வலிக்கும். இது தொப்புள் கொடி உறவு இதை எவராலும் அசைக்க முடியாது.

வேதனைக்கு மத்தியில் சாதனை படைப்பது தான் இந்த மலையக மக்கள். பெருந்தோட்ட கம்பனிகாரர்களினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

“வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை.” – சிவஞானம் சிறிதரன்

“வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது.” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .
கிளிநொசி விநாயகபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தர கல்விக்கு தகுதியுடைய மாணவர்களையும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவி மற்றும் 40 வருடங்களாக குறித்த கிராமத்தில் பல சமூக சேவைகளை ஆற்றிவந்த மதியவர் சுந்தர்ரஜ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக இன்று (17) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,

இவர்களை இன்றைய நிகழ்வில் கௌரவிப்பது என்பதற்கு பின்னால் பலரது உழைப்பு உள்ளது அவர்களுடைய கல்வி க்கும் பலரது உழைப்பு வழிகோலியது. அதே போன்று 40 வருடங்களுக்கு மேல் வளர்த்த முதியவரையும் நன்றியுனர்வோடு கௌரவப் படுத்தியுள்ளனர்.

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் கொண்டு செல்லும் உதரணமாக ஒரு பூட்டினை செய்யும் தொழிலாளி ஒவ்வொரு பூட்டுக்கும் சாவிகளை செய்கின்றான். ஆனால் ஒரு சாவியை கொண்டு மற்றைய பூட்டை திறக்க முடியாது ஒரு சாதாரண தொழிலாளியாக இதனை செய்ய முடியுமென்றால் இறைவனால் ஏன் செய்யமுடியாது.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவில் இந்த மண்ணிலேயே பிரசவிக்கப்பட்டவர்கள். விடுதலை உணர்வுடன் வாழ்பவர்கள். வரலாறுகள் வித்தியாசமானது. பல கனவுகளோடு வாழ்ந்தவர்கள் இன்றும் ஆத்மாக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் என்றோ ஒருநாள் நனவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் !

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபிதாபி விமான நிலையம் அருகே டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  டிரோன் தாக்குதலில் விமானநிலையத்தில் இருந்த 3 எரிப்பொருள் டேங்கர்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பகுதியில் டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அபிதாபி டிரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அபுதாபியில் மூன்று எண்ணெய் டேங்கர்களில் ட்ரோன்கள் வெடித்திருக்கலாம் மற்றும் அபுதாபியின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக கட்டுப்பட்டு வரும் கட்டுமான இடத்தில் நடந்ததாகக் காவல்துறை அறிக்கை கூறியுள்ளது. அபுதாபியின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்கு அருகே மூன்று பெட்ரோலியம் டேங்கர்களில் தனித்தனியாக வெடிப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் ட்ரோன்களுக்கு சொந்தமான சிறிய பறக்கும் பொருட்கள் இரு பகுதிகளில் விழுந்து வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வெடிக்குண்டு தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதற்கு போறுப்பேற்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போரில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஏமனின் தலைநகரைக் கைப்பற்றி அங்குள்ள சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்தை வெளியேற்றியது. பின்னர் ஈரானிய ஆதரவு ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டணியின் முக்கிய உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.” – அமைச்சர் உதய கம்மன்பில

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும், வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசாங்கம் பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துகின்றது.” – சரத் பொன்சேகா

அரசாங்கம் பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின்
பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாதகமான பொருளாதார நிலைமைக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு. அரசாங்கத்தின் மீது வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதாகவும், தரகு கட்டணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், அரச சொத்துக்களை விற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக நாட்டின் அபிவிருத்தியை தொடர்ந்து சந்தைப்படுத்துகிறது. அண்மையில் இடம்பெற்ற எரிவாயு கசிவுகளால் வீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதால் எதிர்காலத்தில் பொதுமக்கள் பொருத்தமான தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலாம் வருட மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய விரிவுரையாளர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சம்பவம் !

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி  பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியதாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், மேற்படி விரிவுரையாளரால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் பற்றி, அந்த மாணவி தனது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்திய பல்கலைக்கழக உபவேந்தர், அந்தப் பல்கலைக்கழத்தின் பேரவையைக் கூட்டி – விடயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அதனையடுத்து, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, குறித்த விரிவுரையாளரை – பல்கலைக்கழகப் பேரவை, பணி இடைநீக்கம் செய்துள்ளதோடு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது

இந் நடவடிக்கைகளுக்கு முன்னர், குறித்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், தான் தவறாக நடந்து கொண்டமையை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டு, அழுது – மன்னிப்புக் கோரியதாகக் கூறப்படுகிறது. அது குறித்த குரல் பதிவுகள் பிபிசிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக செய்த முறைப்பாட்டை மீளப் பெற்றுக் கொள்வதாக, தற்போது பல்கலைக்கழகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனை பல்கலைக்கழகத்தின் நிா்வாகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை மீளப் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட மாணவி தனது முறைப்பாட்டை மீளப்பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் இதற்கு முன்னரும், மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான சிரேஷ்ட விரிவுரையாளரொருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம் – பிபிசி தமிழ்