February

February

இலங்கையில் திரிபோஷாவுக்கும் தட்டுப்பாடும் – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா இல்லை என அறிவிப்பு !

கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்படாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷாவினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் திரிபோஷா உற்பத்திக்கு சுமார் 70 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுகின்றது. தேவையான அளவு மக்காச்சோளத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்த போதிலும், அதுவும் முடங்கியுள்ளது.

மேலும், திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான பால் மாவைப் போதுமான அளவு பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இல்மனைட் அகழ்விற்காக அரச அதிகாரிகளால் களவாடப்படும் தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்க – மீட்க உதவுமாறு கோரிக்கை !

முல்லைத்தீவு – கொக்கிளாயில், கம்பித்தறை மற்றும் வில்லுவெளி ஆகிய தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்விற்காக கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்தினர் அபகரித்துள்ளனர்.

இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகபாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனைப்படி சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அதேவேளை தமிழர் தாயகப்பரப்பில் தற்போது அபகரிப்புச்செயற்பாடுகள் அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன், அந்த அபகரிப்புச் செயற்பாடுகளைத் தடுக்க பன்னாடுகள் தலையீடுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கொக்கிளாய் தமிழ் மக்களிடம் வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்களை சேகரிக்கும் செயற்பாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருந்துத் தெரிவிக்கையில்,

கொக்கிளாய் பகுதியில் எவ்வித அறிவிப்புக்களுமின்றி தங்களுடைய காணிகளை அளவீடு செய்து, அபகரிக்கப்படுவதாக மக்கள் எம்மிடம் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக நாம் இங்கு வருகைதந்துள்ளோம். ஏற்கனவே இல்மனைட் அகழ்விற்காக கொக்கிளாய் – கம்பித்தறை என்ற பகுதியில் 44ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அபகரிகப்பட்டுள்ளன.

இந் நிலையில் தற்போது அதற்கு அருகிலுள்ள வில்லுவெளி என்னும் இடத்திலும், 60ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அளவீடுசெய்யப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையிலே கடந்த 09.02.2022 அன்று இவ்வாறு அபகரிக்கப்படுகின்ற பகுதிகளைப் பார்வையிட்டோம். இறுதியாக இம்முறை எமது தமிழ் மக்களால் பெரும்போக நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைசெய்யப்பட்ட காணிகள், எமது தமிழ் மக்களின் நிலக்கடலை பயிர்ச்செய்கை காணிகள், தென்னங்காணிகள், வில்லுக்குளம் என்று சொல்லப்படக்கூடிய குளம்என, இப்படியாக பரியளவு நிலப்பரப்பு அளவீடுசெய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு, அபகரிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையிலே இந்த விடயத்தை சட்டரீயாக அணுகி, எமது தமிழ் மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கில், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் ஆலோசனைகளைப்பெற்று, முல்லைத்தீவுமாவட்ட சட்டத்தயணியான தனஞ்சயனை அழைத்துவந்து அபகரிப்பு நிலைமைகளை நேரடியாகக் காண்பித்துமிருந்தோம்.

குறிப்பாக கொக்கிளாய் பகுதியில் தமக்குச்சொந்தமான கூடுதல் காணிகள் அபகரிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கிளாய் மாத்திரமின்றி கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, செம்மலைவரையில் கனியமணல் அகழ்விற்காக காணிகள் அபகரிக்கப்படப்போவதான தகவல்களும் வெளிவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் கொக்கிளாயிலிருந்து செம்மலைவரையிலே கடற்கரையாக 12கிலோமீற்றர் நீளமாகவும், கடற்கரையிலிருந்து உயரமாக 650மீற்றர் அகலமாகவும் காணிகள் அபகரிக்கப்படப்போவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மாகாணசபை ஆட்சிக்காலம் இருந்த காலத்திலே, கம்பித்தறைப் பகுதியில் இப்படியான காணிகள் அபகரிக்கவோ, வேலிகள் அமைப்பதற்கோ, கனியமணல் அகழ்விற்கான வேறு எந்த நடவடிக்கைகளையும் அங்கு செய்வதற்கு நாங்கள் இடமளித்திருக்கவில்லை.

வடமாகாணசபை ஆட்சி இருந்தகாலத்தில்கூட இல்மனைட் அகழ்வுசெய்வதுதொடர்பிலே பேசப்பட்டது.

இந் நிலையில் இந்த இல்மனைட் அகழ்வுசெய்வதுதொடர்பிலே ஓர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலே நானும் இருந்தேன். அப்போது நாங்கள் கடுமையாக வாதாடி எமது தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால் மகாணசபை ஆட்சிக்காலம் முடிவுற்ற சூழலில், 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் கம்பித்தறைப் பகுதியில் 44ஏக்கருக்கும் மேற்பட்ட எமது தமிழ் மக்களின் வயல் காணிகளை அபகரித்து வேலிகள் அமைத்ததுடன், அங்கு மணல் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் ஒருபுறம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் மேலதிக காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்த அபகரிப்பு நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனிடமும், சட்டத்தரணி தனஞ்சயனிடமும் தெரிவித்து, இவர்களது ஏற்பாட்டில் வழக்கு தொடர்வதற்காக, உரிய ஆவணங்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அதற்கமைய நாம் விரைவில், அபகரிக்கப்பட்ட எமது மக்களின் காணிகளை விடுவித்துத்தருமாறு நீதிமன்றினை நாடுவதற்கு இருக்கின்றோம்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இந்தப் பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குள்ளும் பல அரச திணைக்களங்களும், அரசோடு தொடர்புடையதுமான பிரிவினரும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, முப்படையினரும் எமது காணிகளை அபகரித்துள்ளனர், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிங்களக்குடியேற்றம், தமிழர்களின் பூர்வீக மணலாற்றினை வெலிஓயாவாக மாற்றி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்களக்குடியேற்றங்கள், இந்தவரிசையில் தற்போது கனியமணல் கூட்டுத்தாபனமும் இணைந்துகொண்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளை எமது தமிழ் மக்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றனர்.தமக்குத் தமது நிலம்தான்வேண்டும், எமது நிலம்தான் எமது பூர்வீக சொத்து எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் எமது மக்களிடம் எவ்வித அனுமதிகளையும் பெறாமல், எமது மக்களின் விருப்புக்குமாறாக அவர்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கும் நடவடிக்கைகள்தான் இங்கு இடம்பெற்றுவருகின்றன.

எனவேதான் நாங்கள் சட்டரிதீயாக இந்தவிடயத்தினைக் கையாண்டு, எமதுமக்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். மேலும் எமது பகுதிகளில் வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, குளங்கள் அழிக்கப்பட்டு இராணுவக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன, ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தென்னிலங்கை மற்றும் இந்தியமீனவர்கள் சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களால் எமது கடற்பரப்பரப்பினை ஆக்கிரமிக்கின்றனர், எமது தமிழ் மக்களின் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காணிகளும் அபகரிக்கப்படுகின்றன, இதுதவிர பௌத்த மதம் எமது பகுதிகளில் திணிக்கப்படுகின்றது, பௌத்தமத ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் இந்த கொடுமைஓளை நாம் யாரிடம் தெரிவிப்பது?

இங்கு இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது பன்னாடுகளுக்குத் தெரியாதா?

இதுவரையில் எம்மோடு கலந்துரையாடிய பன்னாட்டு குழுக்களிடமும், இங்கு இடம்பெறும் பிரச்சினைகள்தொடர்பில் கேட்டறியவந்த அனைத்து பன்னாடுகளைச் சேர்ந்த தரப்புக்களிடமும் நாம் இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கின்றோம். ஆனாலும் சிங்களத்தினுடைய ஆதிக்கமும், ஆக்கிரமிப்புச் செயற்பாடும் தொடர்கின்றது. இவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டும்.

எமது மக்களுக்குரிய காணிகள் எமதுமக்களுக்கே வழங்கப்படவேண்டும். இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் வேண்டாம். எமது மக்களை வாழவிடுங்கள் என்றுதான் நாம் கேட்கின்றோம். எமது நிலங்கள் எமக்குவேண்டும், எமது கலாச்சாரங்கள் எமக்குவேண்டும், எமது மதங்கள் இங்கு பாதுகாக்கப்படவேண்டும் என்பதைத்தான் நாம் கேட்கின்றோம். நாம் ஓர் பூர்வீகக் குடிமக்கள் என்றவகையில் எமக்கு நியாயமான தீர்வுகிடைக்க, இந்தவிடயத்தில் பன்னாடுகள் தலையீடுசெய்வேண்டும்- என்றார்.

நில மீட்புக்காக புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மாவை அறிவிப்பு !

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வவுனியாவில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்த்து நாங்கள் ஏற்கனவே குரல் எழுப்பியிருக்கின்றோம். அதற்கு எதிராக வாக்களித்து இருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலைகள் இருந்தாலும் இப்பொழுது இயக்க ரீதியாக எதிர்ப்பை முன்னெடுத்திருக்கின்றோம். நாங்கள் இப்போது தீர்மானம் எடுத்திருப்பது எங்களுடைய நிலத்தை நாங்கள் ஆழ வேண்டுமாக இருந்தால் எங்கள் மண்ணிலே நில உரிமை அடிப்படையாக இருக்க வேண்டும்.

அது இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல முனைகளில் மகாவலி, தொல்பொருளியல் அடிப்படையில் பௌத்த மயமாக்குவது, சிங்கள மயமாக்குவது, சிங்களவர்களை குடியேற்றுவது , அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு சமமாகவும், அதற்கு அப்பாலும் இராணுவங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைவசம் வைத்துள்ளது . இவற்றையெல்லாம் நாங்கள் மதிப்பீடு செய்யப்போகின்றோம்.

நிலத்தினுடைய விடுதலைக்காக விடிவிற்காக அதனை நாங்கள் உறுதிப்படுத்துவதற்காக எங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு எங்கள் மண்ணை நாங்கள் ஆளுவதற்கு நிலம் எங்களுக்கு இருக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். இன்று அரசினாலும் , இராணுவத்தினாலும் தொடர்ந்தும் பல காரணங்களை கூறி கைப்பற்றப்படுகின்ற நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி எங்களை சிறுபான்மையானவர்களாக , சுயநல உரிமைக்கு தகுதியற்றவர்களாக நாங்கள் அரசியல் உரித்தை கோருவதற்கு எங்களை தகுதியற்றவர்களாக ஆக்குகின்ற மிக கொடிய போராட்டத்திலே மிக பெரிய திட்டத்தோடு இன்றைய அரசாங்கம் ஒவ்வொரு ஈடுபட்டு வருவதுகின்றது அதற்கு நாங்கள் முகம்கொடுத்து பலவிதமான நெருக்கடிகளை சந்திப்பதோடு. ஜனநாயக ரீதியில் நிலத்தை பாதுகாக்க போராட வேண்டி இருக்கின்றோம்.

எமது மக்களை பாதுகாக்கலாம் என்பதற்காக சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற இலங்கை, சர்வதேச சூழ்நிலையில் நிலம் ரீதியாக முழுமையான விபரங்களையும் , வரைபடங்களையும் மக்கள் இழந்திருக்கிறார்கள் , மக்கள் தங்களுடைய நிலத்தை எவ்வளவு இழந்திருக்கிறார்கள் அந்த நிலங்களை பாதுகாக்கவும், பறிக்கப்பட்ட , அபகரிக்கப்பட்ட , இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும் விரைவில் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடத்தப்பட இருக்கின்றது.

அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கூகுள் மெப் அடிப்படையில் எவ்வளவு நில வரைபடங்களை கொண்டுள்ளது.

அதற்கு பின்னர் எவ்வளவு நிலங்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். இராணுவம் எவ்வளவு நிலங்களை கைப்பற்றியிருக்கின்றது, அவ் நிலங்களில் தாங்கள் குடியுரிமை கொண்டுள்ளவர்களாக , உரித்துடையவர்களாக , அங்கே பண்ணைகளை வைத்திருப்பதும், விவசாயத்தை செய்வதும் , தொழில்பேட்டைகளை அமைப்பதும் இவ்வாறு வடக்கு கிழக்கு முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது மட்டுமல்ல இராணுவமே குடியேற்றப்பட்டவர்களாக எங்களுடைய நிலங்களை கைப்பற்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களுடைய கையிலே வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் சர்வதேசத்திற்கு முன்னால் முன்வைப்பது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக இந்த நாட்டுக்குள்ளும், வெளியிலும் புலம்பெயர்ந்தவர்களும் நிலத்தை மீட்பதற்காக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மாநாட்டிலே உரிய தீர்மானத்தை எடுக்க இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 04 நாட்களாக குறைக்கப்படுகிறதா வார வேலை நாட்களின் எண்ணிக்கை.?

நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்தவேண்டிய சுமார் 560 பில்லியன் ரூபாவை (280 மில்லியன் ரூபா) நிலுவையில் வைத்துள்ளது.

எனவே, மேலும் கடன் வழங்கினால் வங்கிகள் நட்டமடையக்கூடும்.எனவே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்தும் கடனை வழங்கினால் அரசின் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதை தடுப்பது கடினமாகும். எனவே, அதற்கான கடனை உடனடியாக நிறுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனையால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை கணிசமான அளவு அதிகரிக்கவும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், வாரத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைத்து, வேலை நேரத்தை அதிகரிக்கவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய, நிறுவனங்களின் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 வரை தொடர வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், நிறுவனங்களுக்குள் சேவையாற்றும் ஊழியர்களை காலை 9 மணி முதல் 3 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களை முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரிக்கு பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி – வெளியாகியுள்ள அறிவிப்பு !

சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும். அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணண் தெரிவித்தார்.

முக்கியமாக தடுப்பூசி பெற்றவர்களையே அனுமதிப்பது சிறந்தது. பூஸ்டர் தடுப்பூசி வரை பெற்றவர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை மற்றும் சிவராத்திரி மட்டுமல்லாமல் பிறந்தநாள் நிகழ்வு மத நிகழ்வுகள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் அல்லது ஒழுங்கு சீர் செய்யப்படல் வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய ஒரு திறந்த வெளியில் 150 பேர் மட்டுமே ஒன்றுகூடலாம் முககவசம் அணிதல் தகுந்த சமூக இடைவெளிகளை பேணல் கை சுகாதாரம் பேணல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியமாகும் என இந்து மக்களினால் நாளை அனுட்டி க்கப்படவுள்ள சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை சம்மந்தமாக மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும்.

கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனை தாக்கும் ரஷ்ய படைகள் – கூகுள் எடுத்த அதிரடி முடிவு !

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  ஏராளமான இராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய படைகள் கூகுள் மேப் உதவியுடன் வழிதடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்துகொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஓரளவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாகம் 30: செல்வியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டுப் பயணம்! நான் ஒன்றும் தூய்மைவாதி கிடையாது!! பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும்!!!

(ஞானம் – எம் ஆர் ஸ்டாலின்

ஆலோசகர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்)

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 30 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர், செல்வி கடத்தப்பட்டது பற்றி அந்த காலத்தில் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விபரம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு வாழ்க்கையை செல்வியோடு சேர்ந்து அமைப்பதற்கு திட்டமிட்டு இருந்தீர்கள். அதேநேரம் உங்களுக்கு பொருளாதார வளம் தேட வேண்டுமென்ற ஆர்வம் எதுவுமே அந்த நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான சூழலில் நீங்கள் எப்படி வெளிநாட்டுக்கு பயணமாவது என்ற முடிவுக்கு அல்லது தெரிவுக்கு வந்தீர்கள்? பொதுவாக வெளிநாட்டுக்கு வாற எல்லோருக்கும் பொருள் தேட வேண்டும் என்பதுதான் பிரதான காரணமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். செல்வி கடத்தப்பட்டிருக்கிற அந்த சூழலில் வெளிநாட்டுக்கு வாறது என்று எப்படி முடிவு செய்தீர்கள்.

அசோக்: உண்மையில் வெளிநாட்டிக்குவரும் எண்ணம் எப்போதும் என்னிடம் இருந்ததில்ல. அந்த நேரம் இந்தியா எனக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது. நிறைய தோழர்கள் இருந்தபடியால் எனக்கு ஆரோக்கியமாக என்னுடைய மனநிலைக்கு ஏற்ற உரையாடலுக்கான நட்புக்கான இடமாக இருந்தது. வெளிநாட்டுக்கு வாற ஐடியாவே இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், நான் இந்தியாவிலிருந்து கொண்டு தங்களுக்கு எதிராக வேலை செய்கின்றேன் என்ற சந்தேகம் புலிகளுக்கு இருப்பதாகவும் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிக்கு சென்றால் செல்வியை விடுவிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் புலிகள் பக்கத்திலிருந்து சந்தேகம் வந்ததாக எனக்கு செல்வியின் வீட்டில் இருந்தும், சில நண்பர்களும் சொன்னார்கள். நான் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு போனால் செல்வியை புலிகள் விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்கள்.

இந்த நேரத்தில் தீம்தரிகிட ஞாநி அவங்க செல்வியின் கைது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்திருந்தார். இந்த செய்தியை கேட்டதற்குப் பிறகு நானும் தோழர் திருநாவுக்கரசும் ஞாநி அவங்களிடம் சென்று நிலமையை சொல்லி அந்தக் கட்டுரை வேண்டாம் என்று சொன்னோம். நாங்கள் பார்த்தோம், அந்த கட்டுரை வெளி வந்தால், கட்டுரை புலிகள் பக்கத்தில் கோபத்தை உண்டு பண்ணும் என்று. ஆனால் நான் வெளிநாட்டுக்கு போற ஐடியாவை யோசிக்கவில்லை. ஏனென்றால் அப்படி கொஞ்சமாவது எண்ணம் எனக்கு இருந்திருந்தால் யோசித்திருக்கலாம். அப்படி ஒரு எண்ணமே என்னிடம் இருக்கவில்லை. அப்போ திரும்பத் திரும்ப அழுத்தம் வந்துச்சு போனால் விடுவார்கள் என்று. அப்போ உருத்திரனுக்கும் இந்த செய்தி தெரியும். திடீரென்று உருத்திரன் சொல்லிட்டு ஒரு வாரத்துக்குள்ள கிளம்பு போகலாம் என்று. எங்க என்று கேட்க பிரான்சுக்கு போ என்று சொல்லி.

தேசம்: அந்த நேரம் நீங்கள் திருச்சியில் இருக்கிறீர்கள்?

அசோக்: திருச்சியில் தோட்டம் போட்டு கொண்டு இருக்கிறோம். உருத்திரன் சொல்லிட்டுது உடனே மெட்ராஸ் வா என்று. நான் என் நிலைமையை சொன்னேன். இல்லை இல்லை நீ மெட்ராஸ் வா கதைக்கலாம் என்று. நான் மெட்ராஸ் வந்த உடனே…. அதுக்கு முதல் ஒரு சம்பவம் நடந்தது கனடாவிருந்த தோழர் தீபநேசன் வெளிநாட்டிக்கு என்னை வரும்படிகூறி எனக்கு பணம் அனுப்பி இருந்தார். நான் வரமுடியாது என்று சொல்லி ஈஸ்வரனை அந்தப் பணத்தை கொடுத்து உருத்திரன் ஊடாக சுவிஸ் அனுப்பி வைத்துவிட்டேன்.. வெளிநாடு வரும் நோக்கமே இருக்கவில்லை எனக்கு. அப்போ உருத்திரன் சொல்லிச்சு ஈஸ்வரன் அங்கிருந்து சொல்லிக்கொண்டு இருக்கு உன்னை அனுப்பி வைக்க சொல்லி. நீ போனால் சிலநேரம் செல்வியை விட்டுவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள போக வேண்டும் ஆயத்தமாகு என்றுசொல்லி. அந்த மனநிலையே எனக்கு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

மெட்ராஸ் வந்து ஒரு வாரத்திக்குள்ளே டெல்லி வந்து ஜேர்மன் வந்துட்டேன். ஜேர்மனிக்கு வந்த பிறகுதான் நான் தோழர்களுக்கு அறிவித்தேன் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவங்களுக்கு நான் முதலில் சொல்லல. அப்போ தோழர் எஸ்.வி. இராஜதுரை அவங்களோடு நெருங்கிய அரசியல் உறவு இருந்தது. எங்களுக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர். அவர் ஈழத் தமிழர்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு அவருடைய புத்தகங்கள் எழுத்துக்கள் மிக உதவியாக இருந்தது. அவரும் நானும் அசோக் நகரில் மூவேந்தர் கொலனி என்று ஒன்று இருந்தது. அங்க ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்தனாங்கள். நான் கீழ் வீட்டில் இருந்தன். அவர் மேல் வீட்டில் இருந்தவர். அப்ப நாங்க அடிக்கடி கதைத்துக்கொள்ளுவோம். அவரிட்ட தான் டெலிபோன் இருந்தது. நான் இங்கே வெளிநாட்டுக்கு வந்துட்டு அவருக்குத்தான் முதலில் சொன்னேன்.

அங்கிள் நான் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவருக்கு ஆச்சரியம். ஒரு வாரத்திற்கு முதல் அவரும் நானும் சந்தித்து கதைக்கிறம். பிறகு அவரிடம் சொல்லித்தான் இரா பத்மநாதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ரேடியோ சிலோனில் தயாரிப்பாளராக இருந்தவர்.

தேசம்: ரேடியோ மாமா என்று சொல்லுவது…

அசோக்: ஓம். அவருக்கு நீண்ட வரலாறு ஒன்று இருக்கு. மட்டக்களப்பின் ஆரம்ப கால அரசியல் இலக்கிய ஆளுமைகள். அந்த நேரம் கேள்விப்பட்டிருப்பீர்கள் வீரகேசரி செட்டியார் என்று. அந்தக் காலத்தில் அவரோடு உலகப் பயணம் போய் வீரகேசரியில் பயணக்கட்டுரை எழுதினவர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் டி சிவநாயகம் ஆசிரியராக இருக்கும் போது, இவர் துணை ஆசிரியராக இருந்தவர். அவர் ரேடியோ சிலோனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இனக்கலவரத்தால பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மெட்ராஸ்சில் தங்கி இருந்தாங்க. என் கிராமத்தை பற்றி முன்னர் கதைத்த போது இவங்களைப் பற்றி கதைத்திருக்கிறன். அவர் மகன் காண்டிபனோடு அங்க தங்கி இருந்தார். காண்டீபன் படித்துக் கொண்டிருந்தவர். அவங்களோட நான் விடுமுறை நாட்களில் வந்து நிற்பேன். இயக்கத்தை விட்டதற்குப் பிறகு அங்கேயும் தங்கியிருந்தன். தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்களைப் போன்ற கஷ்டப்பட்ட பல தோழர்களுக்கு அவரும் மகன் காண்டீபனும் நிறைய உதவி செய்திருக்காங்க. அந்த நேரத்தில் அவங்களுக்கும் கஷ்டம். இருந்தாலும் நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாது.

தேசம்: அவர் உங்களுடைய உறவினரும் கூட என?

அசோக்: அத்தான். பெரியம்மாட மகளை திருமணம் முடித்தவர். நாங்கள் திருச்சிக்கு வரும்வரைக்கும் அங்க தான் இருந்தது. எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் அதிர்ச்சி எப்படி திடீரென்று போனது என்று. வந்ததற்கு பிறகு செல்வியை விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு விடுவார்கள் நாளைக்கு விடுவார்கள் என்று அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்ப முப்பது வருஷமா போயிட்டுது நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் கனவாகி போய் விட்டது.

தேசம்: பிறகு ஜெர்மனியில் இருந்து எப்படி பிரான்சுக்கு வந்தனீங்க?

அசோக்: ஜெர்மனியில் நான் முகாமில் தான் இருந்தன். அங்கயே நான் இருந்திருக்கலாம். எனக்கு ஜெர்மனியை விட பிரான்ஸ் பிடித்திருந்தது. பிரான்சினுடைய புரட்சி, அரசியல் களம் எனக்கு உவப்பானதாக இருந்தது. அப்போ பிரான்சுக்கு வந்த எனக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தேசம்: ஆரோக்கியமாக இருந்ததா…

அசோக்: நான் குறிப்பிட்ட காலம் தானே இருக்கப் போறேன். செல்வி விடுவிக்கப்பட்டதும் திரும்பத்தானே எண்ணி இருந்தன். அப்போ பிரான்ஸில் இருந்துட்டு போகலாம் என்றுதான் வந்தேன். இங்கே வந்ததற்கு பிற்பாடு இங்கே என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. இப்படி இங்கேயே இருப்பன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் போற ஐடியாவிலதான் இருந்தன். கேஸ் போடுற ஐடியாவில இருக்கவில்லை. தோழர்கள் சொன்னார்கள் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும்படி. கிடைச்சா பிறகு இந்தியாவுக்கு போய் வாறது லேசாக இருக்கும் தானே என்று.

இந்த அகதி தஞ்சம் கோரும் வழக்கு தொடர்பாக முறைமைகள் தெரியாது எனக்கு. அப்பதான் சபாலிங்கம் தோழரை தொடர்பு கொள்கிறேன். அப்போ நான் பிரான்சுக்கு வந்ததும் யாருடைய தொடர்பும் இல்லை. என் கிராமத்து புளொட் தோழர்கள் இங்க இருந்தவர்கள் அவங்களோடு தான் நான் இருந்தேன். ஞானம் எம். ஆர். ஸ்டாலின், தயா, நல்லிஸ் என்று சொல்லி தோழர்கள் எல்லாம் இங்கே இருந்தவர்கள். ஞானம் எல்லாம் நிறைய உதவி செய்தாங்க. காலப்போக்கில் அரசியல் முரண்பாடுகள் வந்துவிட்டது என்பது வேறு விசியம். தனிப்பட்ட வகையில் ஞானத்தின் உதவிகளை மறக்கக் கூடாது. அவங்க தான் எல்லா உதவியும் செய்தார்கள். சாப்பாடு எல்லாம். ஒரு மாதத்துக்கு எதுவுமே செய்ய இயலாது. அப்போ எல்லா உதவியும் அவங்கதான் செய்தார்கள்.

அப்போ சேரன் கனடாவிலிருந்து எனக்கு சொன்னார். தன்ர ஃப்ரெண்ட் சபாலிங்கம் என்று, அவர் அகதி வழக்கு போன்ற விடயங்களில் அக்கறையாக இருக்கிறவர். அவரை போய் சந்தி என்று சொல்லி. அப்பதான் சபாலிங்கத்தோட உறவு வருது. சபாலிங்கத்தோடு பேசிட்டு இருக்கும்போது எனக்கு தெரிஞ்சது சபாலிங்கம் எழுதுவதைவிட நான் என் அகதிக் கோரிக்கையை எழுதினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி நானே எழுதினேன். பிறகு அந்த வழக்கு அகதிகள் காரியாலயத்திற்கு போய் பிறகு என்னுடைய அகதி கோரிக்கை ஏற்கப்பட்டது.

அப்ப செல்வியிட விடுதலைக்காக இங்கே வந்ததற்குப் பிறகு புலிகளுடைய அமைப்போடு தொடர்பில் இருந்த புளொட் தோழர் ஒருவர். இங்க ராஜ் என்று இருந்தவர். அவர் போய் திலகரோட எல்லாம் கதைத்து திலகர் என்னை ஆபிசுக்கு கூப்பிட்டவங்க. நான் ஆபிஸ் போகவில்லை. பிறகு தொடர்பாளர் என்று சொல்லி ஒரு ஆளை அனுப்பினார்கள். அவரிட்ட நான் இந்த பிரச்சினை எல்லாம் கதைத்தேன் அவர் தங்களுக்கு தெரியாது என்று சொல்லி தாங்கள் கட்டாயம் தலைமையோடு வன்னிக்கு கதைக்கிறம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிறகு எனக்கு விளங்கிவிட்டது. அவங்க சும்மாதான் என்னோட கதைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. பிறகு எதுவும் நடக்கல.

தேசம்: இப்ப இதுல இந்தியாவில் இருந்த போது அரசியல் செயற்பாடுகளில் நிறைய ஈடுபட்டு இருக்கிறீர்கள். இந்த அரசியல் இலக்கிய உரையாடல்கள் அறிமுகம் நட்பு இதுவெல்லாம் எப்பவுமே இரண்டு பக்கத்துக்கு உரியது விவாதமும் … அதுகளைப் பற்றி சொல்லுங்கள் உங்களுக்கு அ.மாக்ஸோடையும் தொடர்பு இருந்தது என்று நினைக்கிறேன்.

அசோக்: அ. மாக்ஸோடையும் புளொட்டில் இருக்கும் போது தொடர்பு வந்தது. அது நெருக்கமான உறவு இல்லை. அக்காலங்களில் அவரின் அரசியல்கருத்துக்களில் நிறைய உடன்பாடுகள் எனக்கு இருந்தது. காலப்போக்கில் அவரின் அரசியல் நிறைய மாற்றம் அடைய தொடங்கியது. மார்ச்சியத்தை விமர்சனத்தோடு பார்க்காமல் அதை நிராகரிக்கின்ற நிலைக்கு அவர் வந்திட்டார். பின் நவினத்துவம் என்ற கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் பிழையாக விளங்கிக் கொண்டவர்களில் அ.மாக்சும் ஒருவர். அதை பெருங்கதையாடல் என்று சொல்லி எல்லாம் நிறப்பிரிகை என்ற சஞ்சிகையில் எழுதினார். இப்படி நிறைய கட்டுரைகள். காலப்போக்கில் அது ஆரோக்கியமான முரண்பாடாக தொடங்கி ஒரு காலகட்டத்துல அவருக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் விரிசல் கண்டுவிட்டது. ஆனால் அவருடைய புத்தகங்கள் எங்களை பக்குவப்படுத்தி இருக்கு. ஆரம்ப காலத்தில்.

தேசம்: வரலாறு என்பது அப்படித்தானே தத்துவ மேதைகள் எடுத்துக்கொண்டாலும் தத்துவ மேதைகளின் மாணவர்கள் அவர்களுக்கு முரணாக போவது ஒரு இயல்பான வளர்ச்சி தானே.

அசோக்: அவருக்கு ஐரோப்பாவில் கிடைத்த புதிய நண்பர்கள் மிக மோசமான நபர்களாக எனக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கொள்கையிலும் கோட்பாட்டிலும் எவ்வித அக்கறையுமற்று தனிமனித நடத்தையிலும் மிக மோசமான நபர்களாக இருந்தபடியால் மாக்ஸோடு எனக்கு இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.

எஸ் வி ராஜதுரை தோழருடன் நிறைய தொடர்பிருந்தது. இங்க வந்து சந்திச்சவர். காலப்போக்கில் அவருடன் சினேக முரண்பாடு இருந்ததேயொழிய அவரோடு உறவு இருந்தது. இந்திய இராணுவத்தை புலிகள் எதிர்த்ததால புலிகள் தொடர்பாக அவரிடம் ஆதரவு நிலைப்பாடு இருந்தது.

தேசம்: உங்களைப் பற்றின விமர்சனங்களில் ஒன்று நீங்கள் கடுமையான தூய்மைவாதம் பேசுவது என்று. என்னிடமும் அந்த விமர்சனம் இருக்கு நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…

அசோக்: பல்வேறு நண்பர்கள் மத்தியில் இந்த விமர்சனம் குற்றச்சாட்டு இருக்கு. எனக்குதெரியும்.

தேசம்: மற்றது நீங்க சமூக இயக்கங்களில் வேலை செய்யும்போது பல்வேறுபட்ட நபர்களை சந்திப்பீர்கள். எல்லாரும் நூறு வீதம் சரியாக இருப்பார்கள் என்று இல்லைதானே. நானும் நூறுவீதம் சரி என்று இல்லை நீங்களும் நூறுவீதம் சரி என்று இல்லை.

அசோக்: நானும் அப்படி இல்லை. நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்றால் நாங்கள் பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். யார்தான் வாழ்க்கையில் தவறுவிடாதவர்கள். என் வாழ்வே எனக்கு விமர்சனத்திற்கு உரியது. ஆனா கடந்த காலங்களில் விட்ட அதே தவறுகளையும் பிழைகளையும் தொடர்ந்து செய்ய முடியாதுதானே.

என் வாழ்க்கை வேறு, கோட்பாடு வேறு, எழுத்து வேறு என்றால் நான் ஊரிலேயே சந்தோஷமாக இருந்து இருக்க முடியும். அரசியல், ச மூகம், போராட்டம் என்று வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
நான் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால் குறைந்தபட்சம் நாங்க பேசுகின்ற வார்த்தைகளுக்கு, எழுதுகின்ற வார்த்தைகளுக்கு, நம்புகின்ற கோட்பாடுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று. அப்ப நண்பர்களும் தோழர்களும் தவறிழைக்கும்போது அந்த முரண்பாடுகள் வரும். நண்பர்கள் தோழர்களோடு நான் கொள்ளும் அரசியல் முரண்பாடுகளை பகை முரண்படாக்க நான் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் சிலர் பகை முரண்பாடாக கையாண்டு எனக்கெதிரான மிகமோசமான செயல்களையெல்லாம் செய்திருக்காங்க. நான் அவங்களையெல்லாம் எதிரிகளாக நினைத்துப்பார்த்தது கூட கிடையாது.

நான் இவர்களைப்போல் வாழ நினைத்திருந்தால் இவர்களைப் போல் நிறைய சமரசம், பிழையாக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சின்னச்சின்ன சமரசம், செய்தாலே போதும். இதை நண்பர்கள் செய்யும் போது விமர்சனம் எனக்கு வருகின்றது. இதை தூய்மைவாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் நண்பர்கள் கடும் விமர்சனங்களை எனக்கு வைத்திருக்கிறார்கள். அதை ஆரோக்கியமாகத்தான் எடுத்து இருக்கிறேன். நிறைய திருந்தி இருக்கிறேன். நான் ஆரம்ப காலத்தில் நிறைய நண்பர்களுடன் நான் முரண்படுவேன். இப்ப ஓரளவு குறைவு. முரண்படுவதில் இருந்து ஒதுங்கி விடுவேன். உண்மையிலேயே எனக்கு கோபம் வாரது ஏனென்றால் அரசியல் தவறுகளை மன்னிக்கலாம். அரசியல் தவறுகள் எமது அரசியல் தெளிவற்ற தன்மை, புரிதல் அற்ற நிலைகளில் ஏற்படக்கூடியது. ஆனா சொந்த வாழ்க்கையில் தனிப்பட்ட நலன்களுக்காக பிழைப்புக்காக அயோக்கித்தனங்களை செய்து கொண்டு மறுபுறம் அரசியல் செய்யும் நபர்களை காணும் போது கோபம் வராமல் என்ன செய்யும்.

தேசம்: முரண்படுவது பிரச்சினை இல்லை பகையாக மாறாமல் இருந்தால் சரி…

அசோக்: நான் எந்த பகைவரோடும் உரையாட தயாராக இருப்பேன். மிக மோசமான புலிகளோடும் உரையாடல் இருந்திருக்கு. உரையாடலுக்கு நான் எப்போதும் தடை விதித்தது இல்லை. அனால் உரையாடலில் நிகழும் தருணத்தில் அந்த உரையாடலுக்கு நேர்மையோடும் உண்மையோடும் நாம் இருக்க வேண்டும்.

“அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகின்றோம்.” – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

தேவையான நேரம் வரும் போது கட்சி மத்திய குழுவின் அனுமதியுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகி வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது

மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு உத்தரவு !

மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவையடுத்து பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் மீண்டும் விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர். எனினும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மன்னார் நீதவானிடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது 90 சதுர அடி பரப்பளவில் புதைகுழி உள்ள பகுதி பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியை 2019ஆம் ஆண்டு இடைநிறுத்துவது தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

2019 ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நிலவரப்படி, புதைகுழியில் 156 நாட்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சியின் போது 342 மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அமைதி உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்தது உக்ரைன் – அமைதி திரும்ப வாய்ப்பு !

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த அழைப்பையும் உக்ரைன் ஏற்க மறுத்தது. பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உக்ரைன் வீணடிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பெலாரசில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.