03

03

நீதிமன்ற தடையுத்தரவையடுத்தும் தொடரும் மீனவர் போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் !

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பருத்தித்துறை –  சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் – உத்தியோகபூர்வமாக அறிவித்தது அமெரிக்கா !

சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க இராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Abu Ibrahim al-Hashemi al-Quraishi named IS leader | MEO
“நேற்றிரவு எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களையும், நமது கூட்டாளிகளையும் பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
நமது படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. நாம் போர்க்களத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷியை  அகற்றி உள்ளோம். இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் விமான தாக்குதல் நடத்தப்பட்டபோது, குரேஷி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்துபோனதாகவும், இதில் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய வழக்கு – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்ன..?

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரான நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதி சோபித ராஜகருணா தெரிவித்து, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நிலவும் கொவிட்-19 நிலைமையால் உயர்தர மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார் .

இந்த விடயத்தை கல்வி நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு விடுதலை !

நாளை (04) கொண்டாடப்படும் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் குழுவொன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலை யில் 11 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் இதில் உள்ளடங்கு கின்றனர்.

“ஐ.நா தொடர்ந்தும் தமிழர்களுக்கு தவறு இழைக்கிறது.” – தீர்வுக்கு உதவுங்கள் என ஐ.நா பிரதிநிதியிடம் மணிவண்ணன் வலியுறுத்தல் !

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று  யாழ். கச்சேரி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துங்கள்" - GTN

இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் பி. மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலில் ஐநாவுக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் கலந்துரையாடிய மாநகரமுதல்வர்,

கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எமது மக்களை காப்பாற்றும் என்று நாம் பெரும் நம்பிகை கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. 150,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர். இந் நிலையில் போருக்கும் பிற்பாடும் ஐ.நா தொடர்ந்தும் தவறு இழைத்து வருகின்றது.

யுத்ததத்தில் போர்குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகின்ற படை அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தமிழ் இனத்தின் மீது மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இனப்படுகொலை என்பது சர்வதேச குற்றம். அதை யாரும் ஒரு நாட்டின் உள்ளக ரீதியான பிரச்சனை என்று கைவிட்டு விடமுடியாது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் எங்களுடைய பொருளாதார வளம், கல்வி பண்பாடுகள் கலாச்சாரம் போன்ற எங்களுடைய அடிப்படைகள் அழிக்கப்படுகின்றன.

2 ஆம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஏன் உருவாக்கப்பட்டததெனில் நாடுகளைப் பாதுகாப்தற்கு அல்ல அந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக. அந்த நியாயப்பாட்டை அதன் முக்கியத்துவத்தை ஐ.நா முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியுத்தம் தொடர்பான மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல கடந்த காலங்களில் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்துவதோடு அதற்கான தீர்வையும் எமக்கு பெற்றுத் தரவேண்டும்.

தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத் தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன. அந்த காணி உரிமையளார்கள் இடைத்தங்கல் முகாங்களில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். எமது பொருளாதரம் என்பது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளன. ஒன்று விவசாயம் மற்றது மீன்படி. இன்று எமது விவசாய காணிகள் பலவற்றை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது. இதனால் எமது பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. மீன்பிடி என்பது அரச இயந்திரத்தையும் தாண்டி தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறலால் எங்களுடைய மீனவர்கள் பெரும் துன்பம் அடைகின்றார்கள். அவர்களது வலைகள் அறுக்கப்படுகின்றன படகுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்களில் திட்டமிட்டு எமது பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது என்றார்.

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் மண்டபம் அமைப்பதற்கு முன்னர் இலங்கை அரசாங்கமும் இந்தியா அரசாங்மும் கலாச்சார மண்டபத்தினை அமைத்து அதனை யாழ். மாநகர சபையிடம் கையளிப்பது என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இக் கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர் தற்போது இது யாழ். மாநகர சபைக்குத் தரமுடியாது மத்திய அரசாங்கத்திடம் தரவேண்டும் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்கு மேல் அது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறப்படுகின்றது. எப்படி அது சாத்தியம் இங்கு தமிழர்கள் சிங்களவர் முஸ்லிம் மலையகத் தமிழர் என்று பல இன மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு என்று ஒரு வரலாறுப் பண்பாட்டு பாரம்பரியங்கள் உள்ளன. அவர்களின் வரலாற்றில் இருந்து தான் சட்டங்கள் இயற்ப்பட வேண்டுமே ஒழிய பெரும்பான்மை இனத்தின் வரலாற்றைக் கொண்டு சட்டங்களை இயற்றிக் கொண்டு அதனை ஏனைய இனங்கள் மீது திணிக்கின்ற நிலைமை இங்கு காணப்படுகின்றது.

எமது அரசியில் அபிலாசைகளை நாம் பெற்றுக் கொள்வது தொடர்பில் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஆனால் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் போதாது. அரசியல் கைதிகள் சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். காணாமல் போன உறவுகள் நீதி வேண்டி போராடுகின்றார்கள். அவ்வாறு இருக்கையில் நீங்கள் விடுகின்ற வெறும் அறிக்கைகள் அல்லது தீர்மானங்கள் எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுகளைத் தராது. அறிக்கைகள் ஆறுதல் அளிக்காது. கூடிய விரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமாகவே எமக்கான பிரச்சனைகளுக்கான நிரந்த தீர்வுகள் எட்டப்படும் என்பதில் எமது தமிழ் அரசியல் தலைவர்களும் மக்களும் விரும்புகின்றார்கள்.

நான் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றேன். ஒன்று எமது இனத்தின் மீது காலாகாலம் மேற்கொள்ளபட்ட இனவழிப்புகளுக்கு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கப்பெற வேண்டும். சுயநிர்ணய உரிமை அங்கீகிக்கப்பட்ட எமக்கான அரசியல் தீர்வை பெற ஐ.நா உதவ வேண்டும். இரண்டாவது திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற பொருளாதார கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கு எமது மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு !

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (03) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தொடக்கி வைத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார்கள்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்.,

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்குகின்ற ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் சட்டமாக இருக்கின்றது.

அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை சீர்த்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்த்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.

அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தினையும் செய்யப் போவதில்லை. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தினை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடையங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் அந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோருகின்ற ஆவணத்தினை கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்.

இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாக சென்று வீதி வீதியாக சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம். தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கையெழுத்து போராட்டத்தினை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது.

யாழில் நடைபெறுகின்ற மீனவர்களின் போராட்டத்தினை கருத்தில் கொண்டு அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தினை முழு வீச்சாக செயற்படுத்துவோம் என்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களிடத்தில் கையெழுத்து சேகரித்து அனுப்பவுள்ள கடிதத்தில் 1979 ஆம் ஆணடின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிகமாக) எமது சட்டப்புத்தகங்களில் காணப்படும் மிகக்கொடூரமான சட்டமாக தற்போதும் சட்டப்புத்தகங்களில் காணப்படுகின்றது.

1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிகமாக 6 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 ஆண்டு காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும் கஸ்டத்தினையுமே வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல் துறையினரிடம் வழங்கப்படும் எந்த வாக்கு மூலத்தையும் கண்டு கொள்வதில்லை. இது நீதி மன்றத்தினால் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படாது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவிக் காவல் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்கு மூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும். இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புக்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணை திறமை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை.

உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கு ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலங்கள் தடுப்பு காவல் மற்றும் பிணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது. இக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புக்களை அவதானித்தால் இதனை கண்டு கொள்ளமுடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது.

2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்ததை சீர்திருத்தம் செய்வதற்காக 2022 ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி அதன் திருத்திற்கான சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அமுலாக்கங்களிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகளிலும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்காக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்தி சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் அரசியல்வாதியின் மகனுக்கு விளக்கமறியல் – பதவியை இராஜினாமா செய்தார் அமைச்சர் !

ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (03) வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகனான, 23 வயதான அச்சிந்த ரன்தில ஜெஹான் பெனாண்டோ நேற்றிரவு பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
அத்துடன் இத்தாக்குதல் சம்பவத்திற்காக பயன்படுத்திய BMW வகை கார் ஒன்றை களுபோவில பிரதேசத்தில் வைத்து ராகமை பொலிசார் மீட்டிருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை தமது பதவியை இராஜினாமா செய்வதாக, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம் – அவசரமாக வரவழைக்கப்பட்ட விசேட அதிரடி படை !

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த திங்கட்கிழமை முதல் சுப்பர் மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதனால் வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தடை கோரி இருந்தனர்.

அதனை அடுத்து மீனவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மதுபோதையில் எனக்கூறிய அமைச்சர் டக்ளஸை சாடிய இரா.சாணக்கியன் !

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருந்தார்.

மீனவர்கள் மதுபோதையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

அத்துடன், மீனவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக பதவி விலக வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் – அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் வாக்குவாதம் !

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பி சென்றுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிவரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும், தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

அதனால் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.