18

18

அன்புக்குரியவள் செல்வி புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை! துணைபோனவர்களும்!! ஆதரித்தவர்களும்!!! : பாகம் 29

 

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 29 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 29:

தேசம்: கடந்த உரையாடலில் நீங்கள் அமைப்பை விட்டு வெளியேறி பிறகு ஈ.என்.டி.எல்.எப் ஆரம்பித்து அதில் இருந்து வெளியேறினது பற்றி எல்லாம் கதைத்திருக்கிறோம். இப்ப கிட்டத்தட்ட நீங்கள் ஒரு நீண்ட ஒரு அரசியல் இடைவெளி ஒன்றுக்குள் வாறீர்கள். கிட்டத்தட்ட 86 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து அரசியல் வெற்றிடம் ஒன்று வருது. அந்த ஐந்து ஆண்டுகள் 87 களில் இருந்து 92ஆம் ஆண்டு பரிசுக்கு வரும்வரைக்கும் எப்படி அந்த சூழல் இருந்தது தமிழகத்தில்.

அசோக்: நாங்கள் ஈ.என்.டி.எல்.எப் தொடர்பாக முரண்பட்டு வெளியேறும்போது மிகுந்த பொருளாதார நெருக்கடி இருந்தது. நாங்கள் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தானே இருந்தனாங்கள். பொருளாதார ரீதியாக மிக நொந்துபோன காலம் தான் அது. என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்த தமிழகத்து இடதுசாரி தோழர்கள் பலர் எங்களுக்கு உதவிகள் செய்தாங்க. குறிப்பாக செம்பியன் என்றொரு தோழர். அடுத்தது ஏழுமலை என்றொரு தோழர்.

தேசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களா?

அசோக்: செம்பியன் தோழர் அவர் கட்சி சார்ந்தவர் அல்ல. அந்த நேரத்தில் எக்ஸ்ரே ரிப்போட் என்ற வாராந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு கொண்டிருந்தவர். அவர்தான் அதன் ஆசிரியர்.

அவருடைய உதவி கிடைத்தது. இவரும் தோழர் ஏழுமலையும் தோழர் டக்ளஸ் ஆட்களுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள். தோழர் ஏழுமலை எக்ஸ்ரே ரிப்போர்ட் சஞ்சிகையின் காரியாலய பொறுப்பாளராக இருந்தார். இந்த பத்திரிகை காரியாலயம்தான் எங்களுக்கு பல நாட்கள் தஞ்சம் கொடுத்தது. இந்த தோழர்களை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

தேசம்: இது நீங்கள் எல்லோரும் ஒரு இடதுசாரி கருத்தியலில் இருந்தபடியால் அவர்களோடு தொடர்புகள் இருந்திருக்கு.

அசோக்: ஓம். அடுத்தது ஆரம்ப காலங்களிலேயே இந்தியாவுக்கு போன காலங்களிலேயே இலக்கிய அரசியல் நட்புகள் கூட இருந்தது.

தேசம்: பேனா நண்பர்களுக்கு ஊடாகவா?

அசோக்: இல்லை இல்லை. இந்தியாவில் ஏற்பட்ட உறவுகள். அரசியல் இலக்கிய உறவுகள். நிழல் திருநாவுக்கரசு…

தேசம்: இதெல்லாம் நீங்கள் மத்திய குழு கூட்டங்களுக்கு போகேக்கயா?

அசோக்: போகேக்க அந்தக் காலங்களில் ஏற்பட்ட உறவுகள். அப்போ அவங்களும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள்.

தேசம்: யார் அப்படி சொல்லக் கூடிய ஆட்கள்?

அசோக்: தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, ஜமாலன், காலக்குறி கான், சண்முகம், நீண்ட பயணம் சுந்தரம் நிறையபேர் இருந்தார்கள். நிறைய தோழர்கள் ஹெல்ப் பண்ணினார்கள். பத்திரிகையாளர் தீம்தரிகிட ஞாநி போன்றவர்களின் உறவுகள் இருந்தபடியால் எங்களுக்கு ஒரு ஆத்ம ரீதியான பலம் ஒன்று இருந்தது. தோழர் கேசவன், தோழர் பொதிய வெற்பன், எஸ்.வீ இராஜதுரை, வீரா.சந்தானம், போன்றவர்களின் உறவும் இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்குள்ள இந்தியாவிலையும் ஒரு இடதுசாரி கருத்தியல் வலுப்பெற்று கொண்டிருந்தது அல்லது மார்க்சிச கட்சிகள் தமிழகத்தில் ஒரு போராட்டத்தை தொடங்குவது மாதிரியான சிந்தனைப் போக்குகளும் இருந்தது தானே.

அசோக்: எம். எல் குரூப்புகள் இருந்தது. மாக்சிச ஐடியோலொஜியோடு அரசியல் இலக்கிய சஞ்சிகைகள் வெளி வந்தகாலம் அது.

தேசம்: அவர்களோடு நீங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா?

அசோக்: நீண்ட காலமாகவே நான் போன காலத்தில் இருந்து மக்கள் யுத்த குரூப் – பீப்பிள்ஸ் வோரோடு (People’s War) எனக்கு உறவு இருந்தது. அதுல தான் எனக்கு நீண்ட பயணம் தோழர் சுந்தரம், தோழர் கேசவன் நிறைய தோழர்களின் உறவு எனக்கு இருந்தது. பெயர்கள் வேண்டாம். அந்த உறவுகள் ஒரு அரசியல் சார்ந்த உறவாக இருந்தது. அவர்கள் சின்ன சின்ன ஹெல்ப் எல்லாம் பண்ணினார்கள்.

தேசம்: இலக்கியம் சார்ந்த ஈடுபாடுகள் எப்படி இருந்தது அது எவ்வளவு தூரம்?

அசோக்: ஆரம்ப காலத்தில் எனக்கு இலக்கியம் தொடர்பான ஆர்வம் இருந்தபடியால் இலக்கியத் தொடர்பு நிறைய இருந்தது எனக்கு. என்னுடைய நண்பர்களும் இலக்கியவாதிகள் தான். அரசியல் சார்ந்தவர்கள் எல்லோரும் இலக்கியத்தோடு தொடர்பு கொண்ட தோழர்கள்தான். நாங்க அந்த நேரத்தில் பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகை வெளியிட்டம் தானே டெசோவுக்கு. அந்த நேரம் நான் ஜெயகாந்தனை போய் பேட்டி கண்டேன். இலக்கிய ஆர்வத்தால்தான் அவரைப் பேட்டி கண்டேன். நீண்ட பேட்டி. அடுத்தது பொங்கும் தமிழமுதுதிற்காக அந்த நேரம் நான் நிறைய பேரை சந்தித்து எழுத வைத்தேன். அப்படி இலக்கிய உறவு ஒன்று இருந்தது. ஆனால் நான் இயக்கம் சார்ந்த இருக்கிறபடியால் அந்த உறவை என்னால் பேண முடியாமல் போய்விட்டது.

தேசம்: பிறகு அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த உறவுகள்…

அசோக்: அந்த உறவுகள் உதவிச்சு. அவங்க தான் எனக்கு துணையாக இருந்தவர்கள். நிழல் திருநாவுக்கரசு எல்லாம் மறக்க முடியாத தோழர்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் தமிழக எழுத்தாளர்களுக்கும் புலம்பெயர்ந்த அல்லது இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் அல்லது உறவு இருந்தது…

அசோக்: ஓம் அப்படியான உறவும் சூழலும் இருந்திருக்கு. ஒரு பக்கத்தில் பார்க்கப்போனால் அவர்கள் தங்களை இழந்து எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாங்கள் அந்த நிலையில் இருந்தால் நான் நினைக்கல நாங்கள் உதவி செய்வோம் என்று. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், இடதுசாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கொடுத்த ஒத்துழைப்பு இருக்குதானே, அந்த மனநிலை நான் நினைக்கவில்லை எங்களுக்கு இருக்கும் என்று. தங்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மாதிரி. தோழர் நிழல் திருநாவுக்கரசு எல்லாம் வசதியான தோழர் இல்லை. பிஎச்டி செய்வதற்கு பதிஞ்சுபோட்டு வசதி இல்லாமல் பிஎச்டியை விட்டவர். குடவரைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஒரு ஆய்வு செய்தவர். அப்படியான நெருக்கடியான சூழலிலும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள். அவங்களை மறக்க இயலாது.

தேசம்: அதற்குப் பிறகு நீங்கள் பரிசுக்கு வந்த பிறகும் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள். அதற்கு அங்க ஆதரவு…

அசோக்: நான் ‘அசை’ என்ற சஞ்சிகை வெளியிட்டேன் தானே. அதுக்கெல்லாம் முழு உதவி. நானும் நாவலனும் நடாத்திய இனியொரு இணையத்தளத்திற்கும் இந்த தோழர்கள் எழுதினாங்க. இங்க தோழர் யமுனா ராஜேந்திரன் செய்த உதவிகள் நிறைய. நான் கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கவும், எழுதவும் மிகவும் துணை நின்ற தோழர் அவர். அடுத்தது கோட்பாட்டு ரீதியாக பிற்காலத்தில் வளர்வதற்கான பின்புலமாகவும் அவங்க இருந்தார்கள். காலக்குறி சஞ்சிகை எல்லாம் கோட்பாட்டு ரீதியான சஞ்சிகை. கான் கொண்டு வந்தவர். அவர் சமீபத்தில்தான் காலமானவர்.

தேசம்: இந்தியாவில் இருந்த அந்த நான்கு ஆண்டுகளில் நிறைய பேரை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது எப்படி நடந்தது? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு பொருளாதார பலம் இல்லாத நிலையில் ஏற்கனவே வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தோழர்கள் உங்களுக்கு உதவி செய்தவையா? அது எப்படி அந்த ஏற்பாடு நடந்தது? வெளிநாடுகளுக்கு ஒரு காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் 90, 91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தொகையான ஆட்கள் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள். அதில் குறிப்பாக புளொட் அமைப்பிலிருந்து வந்த ஆட்களும் நிறைய பேர் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தது?

அசோக்: உருத்திரன் என்று ஒரு தோழர் இருந்தவர். அவர் புளொட்டில் இருந்தவர். அவர் சென்னையில் கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று வைத்திருந்தவர். அவர் குறைந்த செலவில் எல்லா தோழர்களையும் அனுப்பினார். அடுத்தது நாங்கள் வந்த பிறகு அங்க உள்ள தோழர்களை கூப்பிடுவது. முழுப் பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை. அப்போ குறிப்பிட்ட தொகைகளை கொடுத்து விட்டு பின் இங்கு வந்த பின் வேலை செய்து கொடுப்பது.

தேசம்: அப்போ நட்பின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் …

அசோக்: ஓம். நிறைய தோழர்கள் அப்படித்தான் வந்தவர்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வரக்கூடிய சூழல் எங்களுக்கு இருக்கவில்லை தானே. முதல் கொஞ்சம் காசு கொடுக்கறது பிறகு வந்து உழைச்சு மிச்சக்காசு கொடுக்கிறது. உருத்திரன் பக்கத்திலிருந்து அதற்கான உதவி கிடைத்தது.

தேசம்: உருத்திரன் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்…

அசோக்: இறந்திட்டார். தீவுப் பகுதியை சேர்ந்த தோழர். நிறைய பேரை அனுப்பி இருக்கிறார்.

தேசம்: புளொட்டில் இருந்த சிலபேர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வட இந்தியாவில் போயிருந்து இப்படியான உதவிகளை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியா? உருத்திரன் போல வேறு சிலரும் அந்த அமைப்புக்குள் இருந்தவர்களா?

அசோக்: அப்படி இருந்த மாதிரி நான் கேள்விப்படவில்லை. நான் அறிந்தவரை உருத்திரன் தான் அந்த காலகட்டத்தில் நிறைய ஹெல்ப் பண்ணினது. வேற ஆட்கள் ஹெல்ப் பண்ணின மாதிரி தெரியல. சில வேளை எனக்கு தெரியாமல் இருக்கலாம்.

தேசம்: எத்தனை பேர் அளவில் உங்களுக்கு தெரிய அந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருப்பார்கள்? நீங்கள் இருந்த அந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் ?

அசோக்: எனக்கு தெரிய வெவ்வேறு ஏஜென்சிக்கால வந்த தோழர்கள் இருக்கிறார்கள். உருத்திரனுக்கால வந்த தோழர்களா?

தேசம்: இல்லை இல்லை பொதுவாக…

அசோக்: பொதுவா நாங்கள் ஒரு 100 -150 தோழர்கள் வந்திருப்போம். சில தோழர்களை ஐரோப்ப நாடுகளுக்கு கூப்பிட முடியாமல் போய்விட்டது. அந்தத் தோழர்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். இலங்கைக்கு போன தோழர்களுக்கு அங்க இருக்க முடியாமல் போய்விட்டது. அவங்கள் கொழும்புக்கு போய் குறைந்த பயணச் செலவோடு ஏஜென்சிக்கு ஊடாக அப்படி நிறைய தோழர்கள் வளைகுடாவுக்கு போனவர்கள். வளைகுடாவுக்கு போனவர்கள் கூட சில தோழர்கள் ஐரோப்பாவுக்கு வந்து விட்டார்கள். ஏனென்றால் பெருந்தொகை காசு வேணும் தானே அந்த நேரம் வளைகுடாவுக்கு போறதுக்கு குறைந்த காசுதான்.

தேசம்: 87 ஆம் ஆண்டிலிருந்து 92 ஆண்டு அந்த இடைப்பட்ட காலம் வரைக்கும் நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை…

அசோக்: பின்தள மாநாட்டுக்கு வந்ததற்கு பிறகு நான் இலங்கைக்கு செல்லவில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் செல்லவில்லை…

அசோக்: இன்றைக்கு வரைக்கும் போகவில்லை.

தேசம்: இந்த காலகட்டத்தில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருது. விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடு வந்து ஒரு யுத்தம் நடக்கிறது இந்திய ராணுவத்தோடு. பிறகு 91 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் திருப்பி வருது. அதுக்குள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இலங்கை அரசியலைப் பொறுத்தவரைக்கும் அது மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிற காலகட்டம். அதேநேரம் விடுதலைப் புலிகளின் கரங்கள் நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டு வருது. செல்வியும் அந்த நேரம் கடத்தப்படுறா…

அசோக்: அந்தக் கால கட்டத்தில் நாங்கள் ஒரு அரசியல் அனாதை தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் நாங்கள் எந்த அரசியலிலும் பெருசா ஆர்வம் காட்டவில்லை. எங்கட சொந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்த காலகட்டம் தானே. எங்களோட வந்த தோழர்களை காப்பாற்றுவது தான் எங்கட முயற்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் 91 ஓகஸ்ட் 30 செல்வி புலிகளால் கடத்தப்படுகிறார். யுனிவர்சிட்டிக்கு முன்னால இருந்த ஆத்திசூடி லேனில் எனக்கு தெரிந்த நண்பர்களுடைய வீட்டில் தான் இருந்தவா. அப்போ புலிகளின் பெண்கள் பிரிவால் விசாரணைக்கு என்று அழைக்கப்பட்டு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.

தேசம்: அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது…

அசோக்: பிறகு கொலை செய்யப்பட்டு விட்டார்.

தேசம்: செல்வியை மீட்பது சம்பந்தமா அல்லது விடுவிப்பது சம்பந்தமா நீங்கள் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டீர்களா?

அசோக்: கம்யூனிகேஷன் இல்லைதானே. கடத்தி ஒரு வாரத்துக்குப் பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரியும். இப்படி அரெஸ்ட் பண்ணி விட்டார்கள் என்று. அதற்குப் பிறகு பல்வேறு மட்டங்களில் சிவத்தம்பி தொடர்பாக ஒரு கதை இருந்தது தானே அவருக்கு புலிகளோடு உறவு இருக்கு என்று. அவரோடு உரையாடிய போது அவர் தன்ற பக்கத்தில் உள்ள இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தார். ட்ரை பண்ணுறேன் ஆனால் தெரியும் தானே பிரச்சினைகள் என்று சொன்னார். பிறகு நாங்கள் இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் சார்ந்த ஆட்களோடு எல்லாம் நாங்க நிறைய ட்ரை பண்ணினது. அந்த நேரம் பிபிசிக்கு தெற்காசிய பிரிவில் ஒருத்தர் இருந்தவர். விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமாக இருந்தவர். அவர் எல்லாம் சொன்னார் நாங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறோம் என்று. எதுவுமே சாத்தியப்படவில்லை. அந்த நேரத்தில் ஃபாதர் இமானுவேல் வந்தவர். அவரையும் சந்தித்து கதைத்தேன். அவர் ஒரு புலியாகத்தான் கதைத்தார்.

தேசம்: லண்டனில் இருக்கிறார் நாடுகடந்த தமிழீழத்தில்…

அசோக்: ஓம். அப்ப ஒரு சிஸ்டர் தான் ஏற்பாடு செய்து தந்தவர் எனக்கு. அவர் சொன்னார் புலிகள் செய்திருக்க மாட்டார்கள். புலிகள் ஒரு புனிதமான அமைப்பு. அப்படி எல்லாம் கதைக்க வெளிக்கிட்டார். பிறகு சொன்னார் அப்படி நடந்து இருந்தால் நான் முயற்சி செய்கிறேன் என்று. தெரியும் தானே…

தேசம்: அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

அசோக்: அவர் அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

தேசம்: அதை விட உங்களுக்கு தனிப்பட்ட முறையில் புலிகளிலிருந்த சில நண்பர்களையும் உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப ரவி அருணாச்சலம் போன்றவர்கள்…

அசோக்: ரவி அருணாச்சலம் அதற்கு பிறகுதான் புலிகளுக்கு போனவர். வெளிநாடு வந்த பின். அந்த நேரம் இந்தியாவில் புலிகளில் இருந்த நண்பர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்து வந்த பிறகு சந்தித்தேன். குறிப்பாக நோர்வே ரஞ்சித், இப்ப லண்டனில் இருக்கிறார். அவருக்கு எங்களைக் போலவே புலிகள் தொடர்பாக விமர்சனம் இருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சிலர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் செல்வியை காப்பாற்றி இருக்கமுடியும். உதாரணமாக புலிகளின் மிக முக்கிய அதிகாரத்தில் இருந்தவர் நோர்வே சர்வேஸ்வரன். அவர் இப்ப கடைசியா 2009 வரைக்கும் புலிகளுடைய ஐரோப்பாவில் அதிகாரமிக்க தலைமையில் இருந்தவர். கே பி யோடு மிக நெருங்கிய உறவு. அவர் எல்லாம் நினைத்து இருந்தால் செல்வியை விடுவித்து இருக்கலாம் ஏனென்றால் புலிகளில் பவர்ஃபுல் ஆன ஆட்கள் இவர்கள்.

தேசம்: சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆட்கள்…

அசோக்: சிதம்பரநாதன் ஆட்கள் தொடர்பாக எல்லாம் நிறைய விமர்சனம் இருக்கு…

தேசம்: பல்கலைக்கழகங்களில் இருந்தவர்கள்…

அசோக்: அவங்கதான் பொங்குதமிழ் எல்லாம் செய்தவர்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் புலிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவங்க. செல்வி கடத்தப்பட்டது தொடர்பாக புலிகள் பக்கத்தில் இருந்து யாரும் கதைக்க தயாரில்லை. இன்றைக்கும் கூட என்ன நடந்ததென கதைக்க தயாரில்லை . அந்த கால கட்டத்தில் புலிகளில் இருந்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.

பெண்கள் பிரிவு என்ற படியால் தமிழினிக்கு எல்லாம் தெரிந்திருக்கும். தமிழினி இறந்து விட்டாங்க. ஆனால் யாருமே கதைக்கத் தயாரில்லை புலிகள் பக்கத்திலிருந்து . செல்வி கடத்தப்பட்டு இருந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டி க்கு போன இடத்தில் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வனிடம். அதற்கு தமிழ்ச் செல்வன் சொல்லி இருக்கிறது, அந்த கதையை விடுங்கள் என்று சொல்லி. மற்றது கவுண்டர் பாயிண்ட் பத்திரிகையாளரிடம் சொல்லுகிறார்கள் செல்வி இன்னும் கஸ்டடியில் தான் இருக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி அந்த நேரம் அன்டன் பாலசிங்கமே பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் புலிகள் பக்கத்திலிருந்து யாருமே கதைக்கத் தயாரில்லை.

இன்றைக்கு மனித உரிமை பேசுற நோர்வே சர்வே எல்லாம் மிகமோசமான ஆட்களா இருந்தவங்க. சர்வே புலிகளின் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் நானும் பரிசில் இருந்தன். ஊடகத் துறைக்கு எல்லாம் அவர்தான் பொறுப்பாக இருந்தவர். அதிகாரமிக்க நபர்களாகத்தான் இருந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயகம், மனித உரிமை பற்றி நோர்வேயில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசம்: செல்வி கடத்தப்பட்டது கொலை எப்ப நடந்தது என்பதும் தெரியாது…

அசோக்: 91 ஓகஸ்ட் கடைசி காலம் 30 ஆம் திகதி மட்டில. முப்பது வருஷம் வருது.

தேசம்: அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை? உத்தியோகபூர்வமாக புலிகள் அறிவிக்கவும் இல்லை.

அசோக்: ஒரு கட்டத்தில் செல்வியின் வீட்டுக்கு போய் சொல்லி உள்ளார்கள். செல்வி வீட்டார் அடிக்கடி புலிகளிடம் சென்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது புலிகள் ஒரு கட்டத்தில் வரவேண்டாம் முடித்தாச்சு என்று சொல்லிட்டாங்க.

தேசம்: ஆனால் என்ன காரணத்துக்காக என்று தெரியல. அவா ராணுவ ரீதியாக எந்த செயலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை முழுக்க கலை இலக்கிய ஈடுபாடு தான்?

அசோக்: ஒன்றுமே இல்லை. அந்தக் காலத்தில கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் எல்லாம் செய்துகொண்டிருந்தவங்க… ரவி அருணாச்சலம் போன்றவர்களெல்லாம் செல்வி புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவ அதனால தான் புலிகள் கொலை செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க.

தேசம்: ரவி அருணாச்சலம் புலிகள் பற்றி விமர்சித்த ஒரு ஆள் தானே…

அசோக்: பிற்காலத்தில் புலிகளுடைய ஆதரவாளராக வந்த பிறகு இந்தக் கதைகள் சொன்னவர். செல்வி அந்த நேரம் மொழிபெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறா. அதிகாரத்துக்கு எதிரான மொழிபெயர்ப்பு நாடங்களை யாழ்ப்பாணம் யுனிவர்சிட்டியில் போட்டிருக்கிறா. தியேட்டர் சயன்ஸ் தானே செய்தவ செல்வி. அதிகாரத்துக்கு எதிரான நாடகங்கள் போடும்போது புலிகள் இயல்பாகவே தங்களுக்கு எதிரானது என்று கருதிக்கொண்டாங்க. அந்தத் தகவல்களை செல்விக்கு எதிராக புலிகளுக்கு பரிமாறினதில குறிப்பிட்ட ஆட்கள் இருந்திருக்காங்க.

தேசம்: குறிப்பிட்ட அந்த ஆட்கள் யா ர் சொல்ல முடியுமா?

அசோக்: எனக்கு சிதம்பரநாதன் மீது சந்தேகம் இருக்கு. அவரோட மிக நெருக்கமாக இருந்த பல பேர் இது பற்றி அவர்களோடு கதைத்துப் போட்டு மறுத்திருக்கிறார்கள். அவர் அப்படி அதில் சம்பந்தப் படவில்லை என்று சொல்லி.

தேசம்: யார் இந்த தகவல்களை புலிகளுக்கு கொடுத்தது என்பதில்…

அசோக்: இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தபோது அவர் மறுத்ததாக அவரோடு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள், சொல்லி இருக்கிறார்கள்.

தேசம்: கிட்டத்தட்ட இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களை நடத்தியிருக்கோ கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் எங்க பக்கத்திலும் நடந்திருக்கு. இல்லை அதிலும் பார்க்க மோசமாக நடந்திருக்கு.

அசோக்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். கேட்கலாம். புலிகளுடைய படுகொலை தொடர்பாக எதுவும் செய்யமுடியாது. குறைந்தபட்சம் இதுதொடர்பான வருத்தம் கூட யாரிடமும் இல்லை. இன்றைக்கு புலிகளின் மிக விசுவாசிகளாக படைப்பாளிகளாக, கவிஞர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். பெண்கள் மீது புலிகள் செய்த படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்ச மனவருத்தத்தை கூட வெளிப்படுத்தக் கூட தயாரில்லை. அவங்களும் பெண்கள் தான். படைப்பாளிகள், கவிஞர்கள் சொல்லப்படுகிற பெண்கள் கூட பெண்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்சமாக மனவருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. இன்டைக்கு பேஸ்புக்ல பார்க்கலாம் புலிகள் உத்தமமானவர்கள், பிரபாகரன் மிக உத்தமமானவர் என பிழைப்பு இலக்கியம் செய்பவர்களை. அது அவங்கட சுதந்திரம். ஆனா குறைந்தபட்சமாக இந்த மனிதாபிமான கண்டனங்களை, மனவருத்தங்களைக் கூட வெளிப்படுத்த தயாரில்லை தானே. கொலை செய்த புலிகளை விட கொடிய மனநிலை கொண்டவங்க இவர்கள்.

தேசம்: ரவி அருணாச்சலத்தை விட வேறு யாராவது இப்படியான சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக கருத்துகள் சொல்லி இருக்கிறார்களா?

அசோக்: இல்லை. நண்பர்கள் என்ற அடிப்படையில் ரவி அருணாச்சலம் கொலையை கண்டிக்கின்ற நபராக இல்லை. ஆரம்பத்தில் இருந்தவர். சரிநிகர் பத்திரிகையில் வேலை செய்யும்போது புலிகள் தொடர்பாகவும், பிரபாகரன் தொடர்பாகவும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில் ரவி அருணாச்சலமும் ஒராள். பல்வேறு புனை பெயர்களில் நிறைய விமர்சனங்களை வைத்தவர். காலப்போக்கில் ஐரோப்பாவுக்கு வந்தபிறகு அவருடைய முகம் மாறிவிட்டது. அவர் மட்டும் இல்லை கடந்த காலங்களில் புலிகளுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்த பலர் காலப்போக்கில் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக மாறிவிட் டார்கள்.

ஈயுனிஸ் மணித்தியாலத்திற்கு 125 கி மீ வேகத்தில் பிரித்தானியா மீது தாக்குதல்! மூவர் பலி!! ரஷ்யா அல்ல இயற்கை!!!

பிரித்தானியாவும் – அமெரிக்காவும் உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிற்கு சகுனம் பார்த்துக்கொண்டிருக்க இன்று காலை முதல் ஈயுனிஸ் புயல்காற்று மணித்தியாலத்திற்கு 125 கிமீ வேகத்தில் பிரித்தானியாவை தாக்கிக் கொண்டுள்ளது. இச்செய்தி எழுதப்படும் வரை லண்டன், இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் மூவர் கொல்லப்பட்டு உள்ளனர். தலைநகர் லண்டனில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் வீசப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஈயுனிஸின் தாக்குதல் மோசமாக இருந்தது. மூன்று தசாப்தங்களுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரும் புயலாக ஈயுனிஸ் வர்ணிக்கப்படுகின்றது. அதிவேக வீதிகளில் பயணித்த இரு பெரும் லொறிகள் அருகருகே புரட்டிப் போடப்பட்டது. ஈயுனிஸ் புயல்காற்று மணிக்கு 70கிமீ முதல் 122 கிமீ வேகத்தில் நாடு முழுவதும் பரந்த தாக்கத்தைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் அம்பர், யலோ, ரெட் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. முதற் தடவையாக லண்டன் ரெட் எச்சரிக்கைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,250,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவற்றில் 750,000 வீடுகளுக்கு மீளிணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 500,000 வீடுகள் இன்றைய இரவை இருளிலேயே களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

லண்டனின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஓற்று அரினாவின் கூரை பிய்த்தெறியப்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி உள்ளது. விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி காணொலியாக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சில ரெயில் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டது. வேல்ஸில் விமான, ரெயில் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டது.

ஈயுனிஸ் எவ்வளவு மோசமான நட்டத்தினை ஏற்படுத்தியது என்ற கணக்கை அரசு கணக்கிட ஆரம்பித்துள்ளது. இவ்வாறான புயல்களுக்கு பிரித்தானியா தயார் நிலையில் இருக்கின்றதா என்ற கேளிவியும் எழுப்பப்படுகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வாகனப் போக்குவரத்தும் சக்தியும் மின் இணைப்பிலேயே தங்கியுள்ளதால் மின்வெட்டுக்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை துரிதகெதியில் சீரமைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயற்கை அழிவுகள் மேற்கு நாடுகளிலும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது. வெள்ளம், புயல், கோவிட் என்று இயற்கையின் சீற்றத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும் அதனைவிடுத்து மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் யுத்த தளபாடங்களுக்கும் இராணுவ விஸதரிப்புகளுக்குமே அரசுகள் முன்னுரிமை தருகின்றன.

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.” – ஜுலி சங்

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் நேற்று இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

“இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென்னை  சந்தித்திருந்தேன்.

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் நான் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியிருந்தேன். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளுடன் தீப்பற்றி எரிந்த பெலிசிட்டி ஏஸ் கப்பல் !

ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ்  என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே நேற்று திடீரென தீப்பற்றியது.

இந்நிலையில், போர்த்துக்கீச கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

Car Carrier Felicity Ace Abandoned After Catching Fire in Atlantic Ocean

இதனை தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் கருகிய மகிழுந்துகளின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் சுமார் 3 காற்பந்து விளையாட்டு மைதானம் அளவிலான இடப்பரப்பை கொண்டதாகும்.

இதில் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யவிருந்த லம்போர்கினி, போர்ஷே, ஓடி உட்பட சுமார் 3,965 சொகுசு மகிழுந்துகள் இருந்தன.

100க்கும் மேற்பட்ட மகிழுந்துகள் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படவிருந்தன.

இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசு மகிழுந்துகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.

உயர் தர பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதி !

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரியல் பாட முதலாம் பகுதி வினாத்தாளின் தமிழ் மொழி பெயர்ப்பில் பாரிய குறைபாடுகள் இருந்ததால் மாணவர்களால் சரியான விடையெழுத முடியாத நிலையேற்பட்டதாக முன்னாள் பிரதம பரீட்சகர் ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சையைப் பொருத்தவரை அது மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற பரீட்சையாகும். எனவே, இப்பரீட்சை வினாத்தாள்கள் மயக்க நிலையிலன்றி தெளிவாக விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களால் வினாவுக்கேற்ற விடைகளை எழுத முடியும். அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்றதற்கான பிரதிபலனை அடைய முடியும்.

இந்த வருட உயிரியல் வினாத்தாளின் பல வினாக்களின் மொழிபெயர்ப்பு பிழை காரணமாக மாணவர்களால் தெளிவாக விடையைத் தீர்மானிக்க முடியாத நிலையேற்பட்டதாகவும், இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழ் மொழி மூல மாணவருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.

இது அவர்களது பல்கலைக்கழகத் தெரிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அநீதி கழையப்பட வேண்டும். பரீட்சைத் திணைக்களம் இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு உரிய பரிகாரம் காணப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். அல்லது இந்தப் பரீட்சையை இரத்துச் செய்து மீள் பரீட்சை நடத்தப்பட வேண்டும்.

ஒரு பரீட்சையைக் கூட சரியாக நடத்த முயடியாத அளவுக்கு இந்த அரசு மிகவும். பலவீனமடைந்துள்ளது. பொருளாதார ரீதியாக மக்களை கஷ்டத்தில் தள்ளி அன்றாட உணவுக்கு அல்லல் படும் நிலையையேற்படுத்தியுள்ள இந்த அரசு இப்போது மாணவர்களின் எதிர்காலத்திலும் கைவைக்க ஆரம்பித்துள்ளது. ஜனநாயகத்தை நேசிப்போரால் இதனை அனுமதிக்க முடியாது.

தமிழ் பேசும் மக்களுக்கு நன்மைகள் பல செய்வதாகக் கூறி அவர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்து இந்த அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதி குறித்து வாய்மூடி மௌனமாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

தமிழ் மொழி மூல மாணவருக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தப் பாரிய அநீதி குறித்து அவர்கள் கவனம் செலுத்தாது இருப்பது குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். இது போன்ற விடயங்களில் தீர்வு பெற்றுத்தராத இவர்கள் இந்த அரசிடம் இருந்து தமிழ் பேசும் மக்களுக்கு என்ன தீர்வைப் பெற்றுத் தரப்போகின்றார்கள் என்று கேட்க விரும்புகின்றேன்.

எனவே, மக்களுக்கும் மாணவர்களுக்கும் அநீதி இழைக்கும் இந்த அரசாங்கத்தையும், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களது உரிமைசார்ந்த விடயத்தில் கவனம் செலுத்தாது மௌனமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்து விட்டது. அதற்கு மக்கள் தயாராக வேண்டும். மக்களுக்காக அவர்களின் கஷ்டங்களுக்காக குரல் கொடுக்கும் எம்மோடு இணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான யூனிஸ் புயல் பிரித்தானியாவை தாக்கியது !

பிரித்தானியாவை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும்,  பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த புயலானது கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான புயல் என கருதப்படுகிறது. புயல் தாக்கியபோது வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன. பேருந்து மற்றும் ரெயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்கு தேவைப்பட்டால் இராணுவம் தயார் நிலையில் உள்ளது. வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், 10 கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெருமளவில் சேதம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று வடக்கு ஜெர்மனியைத் தாக்கும் என்றும் இரவில் கிழக்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியின் வடக்கு கடலோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க் – குறுகிய நேரத்தில் செய்த செயல் !

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொரி சாரதிகளும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லொரி சாரதிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லொரி சாரதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக லொரி சாரதிகள் கனடாவில் போராட்டத்தில் குதித்தனர். பாராளுமன்றத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மேலும் கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலத்தையும் மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். லொரி சாரதிகள் போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஒப்பிட்டு உலகின் நம்பர்-1 பணக்காரர் எலன் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் படத்தை வெளியிட்டு அதில், ஹிட்லர் கூறுவது போல் என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் டுவிட் பதிவை நீக்கினார்.
ஏற்கனவே கனடாவில் நடக்கும் லொரி சாரதிகள் போராட்டத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கனடா அமைச்சர் பிலிப் ஷாம்பெயின் கூறும்போது, ‘எலான் மஸ்க்கின் கருத்துக்கள் வெளிப்படையாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது’ என்றார்.

300 ரூபாய் வரை பாணின் விலை அதிகரிக்கும் !

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை முந்நூறு, நானூறு ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது.
இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுடனான டி20 போட்டி – இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி தோல்வி !

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கேன் ரிசர்ட்சன் மற்றும் ஜெய் ரிசர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் கிளேன் மெக்ஸ்வெல் 48 ஓட்டங்களையும், ஜோஸ் இஞ்செல் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் ​​தொடரை  ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“13 வது திருத்தச்சட்டத்தை நாம் ஆதரித்த போதே எல்லோரும் ஆதரித்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது.” – அமைச்சர் டக்ளஸ்

“13 வது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பம், இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்த போது எமக்கு பக்க பலமாக சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது.” என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“கரை காண விரும்பும் கப்பலுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்காக ஊடகங்கள் திகழ வேண்டும். நிமிர்ந்தெழ விரும்பும் மக்களுக்கு அறிவூட்டும் கல்வியாக ஊடகங்கள் இருக்க வேண்டும். அரசியல் தலைமைகளின் கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்வது போல், மக்களின் ஆழ்மன விருப்பங்களையும் கண்டறிந்து அரசியல் தலைமைகளிடம் சொல்ல வேண்டும்.

 

எங்கெல்லாம் மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் ஊடகங்களும் மக்களை வழி நடத்தி சென்றிருக்கின்றன. போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரியலில் வதை பட்ட மக்களின் வாழ்வியலின் மீதும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனைகளே வலிமையானவை,.. ஆகவே ஊடகவியலாளர்களே வலிமை மிக்க போராளிகள், அழிவாயுதங்களை ஏந்திய காலங்கள் முடிந்து விட்டன, இன்று நீங்கள் அறிவாயுதங்களை ஏந்த வேண்டும். ஊடகமும் அறிவாயுதங்களில் ஒன்று.

 

தமிழ் மக்களின் உரிமையை நோக்கிய பயணத்தில் 13 வது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பம், இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்த போது எமக்கு பக்க பலமாக சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் இங்கு நடந்திருக்காது. காலம் கடந்தாவது இன்று எமது யதார்த்த வழிமுறைக்கு பலரும் வந்திருப்பதை நான் வரவேற்கின்றேன். ஆனாலும், இன்று அதனை ஆதரிக்கின்றவர்களும் எதிர்க்கின்றவர்களும் உண்மையை மறைத்து பொய்யான அரசியல் நலன்களுக்காகவே அதனை செய்கின்றனர்.

 

அது எமது மக்களுக்கு விமோசத்தினை தரப்போவதில்லை. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? இவைகள் குறித்த ஆழ்மன உணர்வுகளும் உறுதியும் சகலருக்கு இருக்க வேண்டும். அடுத்து வரும் சந்ததிக்கு நாம் எதை விட்டு செல்லப்போகின்றோம்? எதை உருவாக்கி கொடுக்க போகிறோம்? இவைகள் குறித்த தொலை தூர பார்வையும் சமூக அக்கறையும் ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம். அதை நோக்கியே உழைத்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.