March

March

உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

பாறாங்கல்லை தலையால் அடித்து உடைப்பது ஒன்றும் கெட்டித்தனமான காரியம் அல்ல. அப்படிச் செய்ய நினைப்பது முட்டாள்தனமானது. இந்த முட்டாள் தனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை நிரூபித்துச் சென்றனர். சாட்சிக் காரனின் காலில் வீழ்வதைக் காட்டிலும் சண்டைக்காரனின் காலில் வீழ்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திக் கூர்மையுடையவர்கள் செய்யக் கூடியது. இதில் நியாயம், நீதி, தர்மம் எல்லாம் எங்கட பக்கம் இருக்கு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

நாங்கள் இந்த ஹோமோ சப்பிபயன்ஸ் சப்பியன்ஸ் கள், எங்களுடைய முதாதையர்களை கொன்றொழித்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சார்ள்ஸ் டாவினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற விதி இன்றைக்கும் மிகப்பொருத்தமானதே. சார்ள்ஸ் டார்வின் நியாயம் பிழைக்கும், நீதி பிழைக்கும், தர்மம் பிழைக்கும் என்றெல்லாம் ரீல் விடவில்லை. ‘செர்வைவல் ஒப் தி பிற்றஸ்ற்’ என்று தான் சொல்லி இருக்கின்றார். அந்தந்தச் சூழலில் தன்னை தக்கவைத்து இனவிருத்தி செய்யக் கூடிய இனங்களே தங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே கூர்ப்புக் கொள்கை. இதனையே ‘ஆலமரமும் நாணல் புல்லும்’ கதையில் சிறு வயதில் படித்துக்கொண்டோம். அது தமிழர்களுக்கும் பொருந்தும் உக்ரேனியர்களுக்கும் பொருந்தும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணிக்கு வருவதற்கு முன் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பானது மிக மோசமானது. மிலேச்சத்தனமானது. அப்பாவி உக்ரைன் மக்களின் நாளாந்த வாழ்வியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பும் யுத்தமும் மிகப் பாரிய மனித அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைன் மக்களின் பக்கம் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்தால் அவர்களைக் காப்பாற்ற எந்தக் கடவுளரும் வர மாட்டார்கள். உக்ரைனை உசுப்பி விடும் அமெரிக்கா – பிரித்தானியா உட்பட்ட நேட்டோ நாடுகளும் வரமாட்டார்கள். அவர்களால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவையே நிறுத்த முடியவில்லை. தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது’ போலாகிவிட்டது உக்ரைனுக்கு. இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல. இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற யுத்தம். அதற்கு உக்ரைன் களப்பலியாகி உள்ளது.

பெப்பரவரி; 21: ரஷ்யாவின் ஆட்சித் தலைவர் விளாடிமீர் பூட்டின் மேற்குலகின் பின்னணியில் இருக்கும் உக்ரைனின் கிழக்குப் பிராந்திய பிரதேசங்களான டொனேற்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனிநாடாக அங்கீகரித்தார்.

பெப்பரவரி 22 ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய ஒரு மணிநேர நீண்ட தொலைக்காட்சி உரையில் டொனேற்ஸ்க் மக்கள் குடியரசு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றின் இறையான்மையை அங்கீகரிப்பதாக ரஷ்யத் தலைவர் அறிவிதார். அத்தோடு ரஷ்யாவுக்கு வெளியே நாட்டுப்படைகளை பயன்படுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

பெப்ரவரி 23: உக்ரைன் நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது.

பெப்ரவரி 24: ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. பெப்ரவரி 16 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என மேற்கு நாட்டு உளவு ஸ்தாபனங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன.அதற்கு ஒரு வாரம் களித்து ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்தது. இதனை ஒரு விசேட இராணுவ நடவடிக்கையாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு என்ற பதங்கள் தற்போது ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரை மீது படையெடுக்கும் என உக்ரைன் அரசோ உக்ரைன் மக்களோ எதிர்பார்க்கவில்லை. தங்களை மிரட்டுவதற்காகவே ரஷ்யா கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாகத் தெரிவித்து வந்தனர். ரஷ்யப் படைகள் உக்ரைனுள் நுழைவதற்கு சில தினங்கள் முன்பாகவும் உக்ரைனின் நாளாந்த வாழ்வு அவ்வளவு பதட்டத்துடன் காணப்படவில்லை. ஆனால் லண்டன், பாரிஸ், நியூயோர்க் நகரங்கள் மிகுந்த பதட்டத்துடனேயே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிக்கட்டுவதற்கு அவர்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு மிக வாய்ப்பானதாக அமைந்தது.

பிரித்தானிய பிரதமரின் வீட்டுக்கு வர்ணம் அடிக்க நிதியயை வழங்கியவருக்கு அரச ஒப்பந்தம் ஒன்று வழங்குவது பற்றியும் பேசப்பட்டு இருந்தது. அத்தோடு கோவிட் லொக் டவுன் காலத்தில் தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான நம்பர் ரென் டவுனிங் ஸ்ரீற்றில் 17 வரையான குடியும் கும்மாளமும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் கலந்துகொண்டிருந்தார். அதற்கு எதிரான விசாரணைகள் முடக்கி விடப்பட்டு பொறிஸ் ஜோன்சன் அம்பலப்பட்டு இருந்த சமயத்திலேயே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது என்ற துருப்புச் சீட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வீசி தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாத நிலையில் இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் அதனைத் தொடர்ந்து அவருக்கான அதரவும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் அடுத்த தேர்தலிலும் அவர் டொனால் ட்ரம்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. வழமையாக உள்நாட்டில் தங்கள் செல்வாக்குகள் சரியும் போது அதனை நிமிர்த்துவதற்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்களுக்கு ஒரு யுத்தம் தேவைப்படும். இத்தடவை இவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூட்டின் நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவுக்கு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஜோ பைடனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் சுக்கிரன் உச்சத்தில்.

உலக இயக்கம் என்பது கள்ளன் – பொலிஸ் விளையாட்டுப் போன்று அவ்வளவு கருப்பு – வெள்ளை அளவுக்கு தெளிவான வேறுபாடுடையது அல்ல. இப்பொழுதெல்லாம் இந்த மேற்குலக ஆங்கில ஊடகங்களில் ரஷ்யாவை ‘பறையா ஸ்ரேற் – Pariah State’ என்ற அடைமொழியோடே அழைக்கின்றனர். ‘பறையா – Pariah’ என்பது தமிழில் இருந்து ஆங்கில மொழியால் தத்தெடுக்கப்பட்ட சொல். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாகக் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியயைக் குறிக்கின்ற இச்சொல்லையே இவர்கள் தங்களுக்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வெளியார் தீண்டத்தகாதோர் என்போரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் இச்சொல்லை தற்போது விளாடிமீர்பூட்டினுக்கும் ரஷ்ய அரசுக்கும் எதிராக மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. சாதியம் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தெற்காசியப் பிராந்தியத்தில் இவ்வாறான சாதிய அடைமொழிகள் குறிப்பிட்ட சமூகங்களின் மீதான அழுத்தங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ஒடுக்குவதற்கே உதவியாக அமையும்.

இதுவரை யாரும் செய்யாத அநீதியை ரஷ்யா செய்துவிட்டது போன்று மேற்கு நாடுகளும் மேற்கு நாட்டு ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறி தம் இஸ்டத்திற்கு எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம் எந்த நாட்டின் ஆட்சியையும் வீழ்த்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கியதே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவற்றினது ஜால்ரா கோஸ்டியும் தான். ஈராக், அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்த மேற்கு நாடுகள் புரிந்த யுத்தக் குற்றங்கள் பல லட்சங்கள், கோடிகள். இவர்கள் தங்களது பிரச்சினை என்று வருகின்ற போது ஜனநாயகம் பற்றியோ மனித உரிமை பற்றியோ சுயாதீன ஊடகங்கள் பற்றியோ மூச்சுவிடுவதில்லை. ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மேற்குலக யுத்த வெறியர்களான ஜோர்ஜ் புஷ்சோ ரொனி பிளேயரோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இவர்களின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் சுனோடன், யூலியன் அசான்ஜ் ஆகியோரை பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவர்களுக்கு மரணத்தை வழங்கத் துடித்துக்கொண்டுள்ளனர். எதற்காக? குவான்டனாமோ பேயிலும் ஈராக்கிலும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக.

ஆனால் இப்போது எந்தவொரு ஜனநாயக நாடும் இன்னொரு நாட்டின் மீது படையெடுக்குமா? மனித உரிமைகள் மீறப்படுகின்றது யுத்தக் குற்றங்கள் நிகழ்கின்றது, ஊடக சுதந்திரம் இல்லை என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரேனியர்களின் கைகளில் ஆயதங்களைக் குவிக்கின்றனர். அதனை மேற்கு நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றனர். சாதாரணர்களின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயதங்கள் வழங்கப்படுவதன் மூலம் இவ்வாயுதங்கள் தகாதவர்களின் காடையர்களின் கைகளையும் அடைந்துள்ளது. அங்கு களவு, கொள்ளை, தனிப்பட்ட பழிவாங்கல்களிலும் இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் வாரி வழங்கப்பட்ட இந்த ஆயதங்களும் மேற்குலகம் அங்கு தொடர்ச்சியாக விநியோகிக்கும் ஆயதங்களும் உக்ரைனின் எதிர்காலத்தை இருளாக்கும் என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை இவ்வாறு யுத்த மூலம் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது. உக்ரைன் ரஷ்யாவோடு நல்லுறவாக இருந்த காலப்பகுதியில் மட்டுமே உக்ரைனால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 50 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக உள்ளது. இளம்தலைமுறையினரால் முந்தைய தலைமுறையினரை பராமரிப்பதற்கான செலவை (வரியை) ஈட்ட முடியவில்லை. இளம் தலைமுறையினர் உக்ரைனை விட்டு வேகமாக வெளியேறி வருக்னிறனர். இவர்களது முதலாவது இலக்காக ரஷ்யாவே இருக்கின்றது. மேலும் உக்ரைனின் 17 வீதமானவர்கள் ரஷ்யர்கள்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது மிகத்தவறான அணுகுமுறையே. ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைக்கின்ற எந்தவொரு அருகதையும் மேற்கு நாட்டு தலைமைகளுக்கு கிடையாது. இவர்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் விளாடிமீர்பூட்டினது அடாவடித்தனங்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. உண்மையில் சொல்லப் போனால் மேற்கு நாட்டு தலைமைகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் அராஜகங்கள் விளாடிமீர்பூட்டினைக் காட்டிலும் மோசமானது. இந்த மேற்கு நாட்டு தலைமைகளின் பூரண ஆதரவுடனேயே இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கின்றனர். சவுதிய அராபிய யேர்மன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னாபின்னாமாக்கி வருகின்றது. பர்மிய அரசு ரொஹிஞ்சா மக்களைக் கொன்றொழித்த போது இந்த மேற்கு நாட்டு அரசுகள் எல்லாம் பர்மிய அரசோடு வியாபாரத்தில் ஈடுபட்டுத்தானே இருந்தனர். இப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்னமே இந்த நேட்டோ அணிகள் உரு வந்தது போல் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? 1949 இல் 12 நாடுகள்: அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லண்ட், இத்தாலி, லக்ஸ்சம்பேர்க், நெதர்லாந், நோர்வே போரத்துக்கல் ஆகியன இணைந்து நேட்டோவை உருவாக்கின. 1997 இல் இந்த நேட்டோ விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லையை நெருங்கியது. ஹங்கேரி, செக் ரிபப்ளிக், போலந்த், பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவெனியா, ரொமேனியா, சுலொவேனியா, அல்பானியா, குரொவேசியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் அல்லது எல்லையை அண்மித்த நாடுகள் நேட்டோவோடு இணைக்கப்பட்டு நேட்டோ விஸ்தரிக்கப்பட்டது.

இந்நாடுகள் சுதந்திரமான இறைமையுள்ள நாடுகள் தான். தாங்கள் யாராடு இணையலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்நாடுகளுக்கு உள்ளது என்பது உண்மையே. அப்படியானால் அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் ரஷ்ய சார்பான கியூபாவில் ரஷ்யா ஏன் படைத்தளத்தை உருவாக்க முமயாது. ரஷ்யாவின் நட்பு நாடான லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் ரஷ்யா ஏன் தனது இராணுவத்தளத்தை நிறுவ முடியாது. நேட்டோ அணிகள் அதனை அனுமதிக்கத் தயாரா. இந்த விடயத்தில் சீனா மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புப் பற்றிய ரஷ்யாவின் விசனத்தில் நியாயம் இருப்பதை சீனா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது. நேட்டோவின் பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்பதோடு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா வலுப்படுத்தி உள்ளது. இந்தியாவும் தாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் சர்வதேச ரவுடித்தனத்திற்கு ரஷ்ய – உக்ரைன் (நேட்டோ) மோதல் முடிவு கட்டும். இதுவரை சர்வதேச வர்த்தகம் டொலரிலேயே இடம்பெற்று வந்ததால் அமெரிக்கா யார் மீதும் பொருளாதார தடையைக் கொண்டுவந்து ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கு மாற்றீடாக சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அதன் முதல் எத்தனிப்பு ரஷ்யா – சீனா வர்த்தகமாக அமையும். BRICS – பிரிக்ஸ் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் தங்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் விஸ்தரிப்பதன் மூலமும் உலக சந்தையை இவர்களால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தங்கள் உறவை நான் முந்தி நீ முந்தி என்று துண்டித்து வருகின்றன. இதுவொன்றும் உக்ரைன் மக்கள் மீதான அனுதாபத்தில் கிடையாது. எங்கே தங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டால் பின் தங்களுடைய நிலைமை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிடக்கூடாது என்ற ஒரு தற்காப்பு உத்தியே. புpரச்சினைகள் மெல்லத் தணிய கள்ளக் காதலியிடம் போவது போல் சத்தமில்லாமல் மீண்டும் போய் கடைவிரித்து விடுவார்கள். இந்நிறுவனங்களால் ரஷ்யாவுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் கிடையாது. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்தும் பொருட்களையே விற்பனை செய்கின்றன. ஒரு வகையில் ரஷ்யாவின் செல்வத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றீடான பொருட்கள் ரஷ்யாவிலோ ஆசியாவிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ரஷ்யா எரிவாயுவை பெற்றோலை நிறுத்தினால் நேட்டோ அணி நாடுகளில் அடுப்பு எரிப்பதே போராட்டமாகும். இதுவரை மின்சாரத்திற்கும் எரிவாயுவிற்கும் காலாண்டுக்கு 300 பவுண்கள் செலுத்தி வந்தனான் இப்போது மாதத்திற்கு 300 பவுண்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஈராண்டுகளுக்கு முன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ஒரு பவுண் செலுத்தியது இன்னும் சில மாதங்களில் லீற்றருக்கு இரு பவுண்களாகிவிடும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை விலையேறி பாணிண் விலையேறியது. உலகின் பாண் கூடையாக கருதப்படுவது ரஷ்யாவும் உக்ரைனும். இவர்களே 30 வீதமான கோதுமையை உலகிற்கு வழங்குகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக பெரிய நாடு உக்ரைன் அதுவும் இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
நேட்டோ அணிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் நாளை நெருங்கிக் கொண்டுள்ளனர். இன்றைய வரைக்கும் ஈரானோடும் வெனிசுவெலாவோடும் வம்பிளித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது ஈரானிடமும் வெனிசுவெலாவிடமும் மடிப்பிச்சைக்கு போய் நிற்கப் போகின்றனர். பெற்றோல் பிச்சை.

மூக்குக்கு அணியும் மாக்ஸ், வைத்தியர்களுக்கான பாதுகாப்பு கவசம் இல்லாமல் தங்கள் சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் மரணிக்க விட்டவர்கள் இன்றும் நூற்றுக்கணக்கில் மரணித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அக்கறையற்றவர்கள் லாபத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் இந்த முதலைகளின் நீலக்கண்ணீரில் மயங்காமல் உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக விகாரை அமைக்க முயற்சி – ஊர்மக்கள் செய்த துணிகர செயல் !

அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை அடிவாரப் பகுதியில் இரவோடு இரவாக அத்திவாரம் வெட்டப்பட்டு விகாரை அமைக்கும் பணிக்கான ஒழுங்குகள் நடைபெற்ற வேளை இன்று காலை பிரதேச பொதுமக்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ரஷ்யா !

ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றபோது, ரஷ்யா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.
இந்நிலையில், விசாரணையை புறக்கணித்தது குறித்து ரஷ்யா தரப்பில் முதல் முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இது பொருத்தமில்லாத அபத்தமான வழக்கு என்பதால் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை’ என ரஷிய வெளியுறவுத்துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இனப்படுகொலையைத் தடுப்பதற்காகவே தாக்குதல் நடத்துவதாக தவறாகக் கூறி ரஷ்யா தனது படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சித்ததாக உக்ரைன் தரப்பில் வாதிடப்பட்டது.

“அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறையுங்கள்.” – வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு !

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் வளி சீராக்கி (A/C) பாவனையை தவிர்த்து மின்விசிறிகளை உபயோகிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து மின்விளக்கு, மின்சாதனங்களை அணைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பிற்பகல் 2.30 முதல் பி.ப 4.30 வரை வளி சீராக்கியின்(A/C) செயற்பாட்டை இடைநிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை(A/C) செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு !

நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அயலவர்கள் நேற்று (08) மாலை 119க்கு வழங்கிய தகவலின் பேரில் கிரிபத்கொட பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவராவார், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் பொலிஸாரால் தெரிவித்தனர்.

பெண் உயிரிழந்த வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக ஆண் ஒருவர் வருகை தந்துள்ளதாகவும், சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.” – பேராசிரியர் சரித ஹேரத்

நாட்டில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இளைஞர்கள் தமது ஆக்கப்பூர்வமான நுண்ணறிவுடன் டிஜிட்டல் துறையில் தொழில்களை ஆரம்பிக்கும் வகையில் காப்புரிமைச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வணிக வளர்ச்சிக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த பெரிதும் பயனடைவார்கள் என சரித ஹேரத் குறிப்பிட்டார்.

அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை மீதான வலுவான சட்ட கட்டமைப்பை நாம் கொண்டிருக்க முடியாவிட்டால் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தாய் வெளிநாட்டில் – வவுனியாவில் சிறுமி கர்ப்பம் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை !

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் குடும்பம் ஒன்றின் கணவன் விட்டு சென்ற நிலையில், பெண் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தார்.குறித்த பெண் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுள்ள நிலையில் இரு பிள்ளைகளும் சிறிய தந்தையாருடன் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் 17 வயது சிறுமி உடல் நிலை சுகவீனமுற்ற நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தாயின் இரண்டாவது கணவனரான சிறிய தந்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேருந்தை இடைமறித்து சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டிய நபர் – யாழில் சம்பவம் !

யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை – ரணில்விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு என்ன..?

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சஆகியோருடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நிராகரித்துள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளன.

தனிப்பட்ட ரீதியில் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய நெருக்கடிகள் குறித்து பிரதமருடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டுள்ளார் என முன்னாள் பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதியுடனோ அல்லது பிரதமருடனோ அவர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவை தெரிவித்துள்ளன. எனினும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைகளிற்கான அடிப்படை காரணங்களை கண்டறியமுயலவேண்டும் அதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணலாம் என தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தேசிய கொள்கையொன்று குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் அதன் மூலம் நாட்டை 15 வருடங்களிற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தேசிய கொள்கையை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டவுடன் தேர்தலைநடத்தவேண்டும்,அதன் மூலம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய கொள்கை மூலம் நாடு இன்னுமொரு நெருக்கடிக்குள் சிக்காத நிலையை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்,அடுத்த அரசாங்கம் எதுவாகயிருந்தாலும் அவர்கள் இந்த கட்டமைப்பை அடிப்படையாக வைத்து செயற்படவேண்டும். அல்லது கொள்கைகள் தொடர்ந்தும் மாறும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என ரணில்விக்கிரமசிங்க தனது கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

“கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி !

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நேற்று (8) பாராளுமன்ற விவாதத்தின் போதே இதை தெரிவித்தார்.

மேலும், கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதற்கு சில நாடுகள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,“கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளின் கருவில் உள்ள சிசுவை (கருவை) அகற்றும் நடைமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது முக்கியம்” எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர்,

கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.